Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Saturday, March 14, 2015

மச்சி இருக்கிறியாடா?

"மச்சி இருக்கிறியாடா?"

நீண்ட நாட்களின் பின்னரான சஞ்சய்க்கும் எனக்குமான செல்பேசி உரையாடல் இப்படித்தான் ஆரம்பிக்கும்.

அதென்னவோ தெரியவில்லை. உரையாடலின் ஆரம்பத்தில் இருவருக்குமே நாம் உயிருடன் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. நண்பர்களுக்கிடையே தொடர்புகளைப் பேணிக் கொள்வதில் நான் மிகுந்த சோம்பேறி. நம் நண்பர்களும் அப்படியே இருப்பதால் பிரச்சினையேயில்லை. மிக நெருக்கமான நண்பர்களாயிருந்தாலும் அடிக்கடி என்றில்லை, அவ்வப்போதுகூடப் பேசுவதில்லை. நேரில் சந்திக்கும்போது பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலும் விட்ட இடத்திலிருந்து அதே பழைய தொனியில் பேசிக் கொள்வோம்.

‘மச்சி இருக்கிறியாடா?’ என்பது பின்னர், ‘மச்சி வேலையை விட்டுட்டியாடா?’ என்பதாக மாறிவிட்டது. பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை சடுதியாக விட்டுவிடுவது, வேறு வேலைக்குத் தாவுவது என்பதெல்லாம் இப்போது அவ்வளவு அதிர்ச்சி கொடுக்கும் விஷயங்கள் எனில், நீங்கள் முப்பது வருஷம் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்ந்த அரசாங்க உத்தியோகத்தர் அல்லது ஒரே வேலையில் உறுதியாக நின்று வாழ்ந்துவிட முடிவெடுத்துவிட்ட இலட்சிய இளைஞர். சடுதியாக வேலையை உதறிவிடும் சாகசங்களை இருவரும் மாறி மாறி நிகழ்த்திக் கொண்டிருந்ததால் மச்சி வேலையை விட்டுட்டியா? அதே வேலையா? என்பதெல்லாம் சாதாரண விசாரிப்புகள் மட்டுமே!

சில நாட்களுக்குமுன் அவனுடன் எப்படியும் பேசிவிடவேண்டும் என நினைத்தேன்.  அது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. அவன் பெயரில் குறைந்தது நான்கு தொலைபேசி எண்கள் என் செல்பேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதைவிட ஆறு இலக்கங்களை அவன் மாற்றியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை. நாங்கள் இருவரும் பேசி மூன்று வருடங்களாகியிருந்தது. இது மிகப்பெரிய இடைவெளிதான். 

திருகோணமலையில் அலுவலகத்தில் நான் மட்டுமே தனியாக இருந்த இனிய காலைப் பொழுது. சுழல் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து அருகிலிருந்த இன்னோர் இருக்கையில் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன். ரிசர்சன் காரணமாக வேலையிழந்து, வழமைபோல பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததில் நீண்ட இடைவெளியாகி, வாழ்க்கையில் அடிபட்டு நொந்து நூடுல்ஸாகி பிறகு கிடைத்திருந்தது வேலை.

இனியொருதரம் அப்படி ஒரு சம்பாவிதம் நிகழ அனுமதிக்கக் கூடாது என நினைத்துக் கொண்டேன். விளையாட்டுத்தனம் இல்லாமல் இந்த ப்ராஜெக்ட் முடியும்போது இன்னொன்றில் இணைந்துவிட வேண்டும். இந்த நினைப்பும் கடையில் சாப்பிட்ட முட்டை பரோட்டாவும் அந்தக் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்தையும் ஒருவித மமதையையும், கிறக்கத்தையும் ஒருங்கே கொடுத்தது. அப்படியே தலையை நன்கு பின்னுக்குச் சாய்த்து வலது பக்கமாக முப்பது டிகிரி கோணத்தில் சரித்து மேலே சீலிங்கைப் பார்க்கையில், மனதில் பறவைகள் கிரீச்சிட்டன. ஒரு கிட்டார் ஒலிக்க, தொடர்ந்து வயலின்கள் ரட்ரட்ரா ரட்ரட்ரா .. 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலின் ஆரம்ப இசை தொடங்கவும் என் செல்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது. சஞ்சய் காலையிலேயே அழைத்தான்.
"---" 
"மச்சி வேலைய விட்டுட்டியா?"
"டாய்.... ^%@&#%^&#** ^$%#&#^@#$&&" 

சின்ன வயதில் முத்திரை சேகரித்தது, ஸ்டிக்கர் சேகரித்ததுபோல தொலைபேசி இலக்கங்களைச் சேகரிக்கும் வினோதமான பழக்கம் ஏற்பட்டிருக்குமோ எனச்சந்தேகிக்கும் வகையில் சஞ்சய், அவ்வப்போது நடந்துகொள்வான்.

வெள்ளவத்தையில் ஐபிசி ரோட்டைக் கடந்து வருகிற நண்பனை, இங்கே கொமர்ஷல் வங்கிக்கு அருகே நின்று தூரப்பார்வையிலேயே கண்டுபிடித்து, உற்சாகமாகக் கையசைத்து இடையில் நடந்துசெல்லும் ஏராளமானோரைக் குழப்பி, சடுதியாக வீதியின் குறுக்காக ஓடிக்கடந்து கார்கில்ஸ்க்கு முன்னால் வழிமறித்து...உஸ்ஸ் மூச்சு வாங்கி.... "மச்சி உன்ர நம்பரை மிஸ் பண்ணிட்டன்டா ஒருக்கா சொல்லு!" என்பான்.

இரவு ஏழு மணிக்கு, தூரத்தில காட்டி கேட்பான்.
"மச்சான் அவன தெரியுமாடா? எங்கயோ பாத்த மாதிரி இருக்கு"
"கேர்ள் ஃபிரண்டோட வர்றாண்டா எப்பிடிறா எங்களுக்குத் தெரிஞ்சவனா இருப்பான்?" 
சொல்லி முடிக்கமுதலே வந்தவனை வழிமறித்து, "மச்சான் நீ மணில படிச்சனிதானே?"
யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம். இரவு. திடீரென ரோட்டில் ஒருத்தன் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு வழிமறித்து சம்பந்தமில்லாமப் பேசுறானே என அவன் பீதியாகி முழிச்சிட்டிருப்பான்.

சஞ்சய் கன்டினியூ பண்ணுவான், "ஏழாம் ஆண்டில... மணி டியூஷன்.... விடிய ஆறு மணி.... வேலாயுதத்திட்ட மத்ஸ்.. சிவப்புக் கலர் முக்காச் சைக்கிள்ள நீ வருவ இல்ல.."
"ஆமால்ல"

இப்போ அவனுக்குள்ளயும் ஒரு லாலாலா மியூசிக் கேட்டு, வளையம் வளையமா ஃபிளாஷ்பாக் ஒப்பினாகி சீனுக்குள்ள போயிருப்பான். தொடர்ந்து ஃபீலிங்க்ஸ்லயே பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஐந்துநிமிடங்கள் கடக்கும். அதுவரைக்கும் இன்முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காதலியின் பார்வை இப்போது வன்முகமாக மாறுவது போலிருக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் கண்டுக்காமலே, 'மச்சி கார்த்திக் இப்ப எங்க?', 'டேய் ரமணன் அப்பவே போயிட்டான்ல?' பசங்களின் வழக்கப்படி லிங்க் பண்ணி லிங்க் பண்ணி பேசிக்கொண்டே போவார்கள். திடீரென்று ஓரிடத்தில ஸ்ட்ரக் ஆகி இப்போ எதுக்கு இந்தக் கதை வந்திச்சுன்னு யோசிக்கிறவரைக்கும்.

இப்போது காதலி கணிசமான அளவு கடுப்பாகியிருப்பார். தனியாகப் போனதும் காதலனுக்கு கண்டபடி திட்டு விழலாம். குட்டுக் கூட விழலாம். அது அவன் பிரச்சினை. ஆனால் இப்போ? லைட்டா எங்களப் பார்க்கிற பார்வையிலேயே அப்பிடியே மைண்ட் வொயிஸ் கிளியராக் கேட்கும்.

‘யார்ரா நீங்கெல்லாம்? எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க? இருந்திருந்து எப்பவாவது இப்பிடி ஒண்ணாச் சேர்ந்து வெளிக்கிட்டா சந்திக்குச் சந்தி நிண்டு தொலைக்கிறீங்க... உங்களுக்கெல்லாம் வாழ்க்கைல கேர்ள் ஃபிரண்டே கிடைக்க மாட்டாடா....காலம் முழுக்க மொட்டப் பசங்களாவே சந்தில நிப்பீங்கடா!’. நாங்களும் பழைய பாரதிராஜா படங்களில் வருவதுபோல, சின்னப்பையன் அறிவுபூர்வமாகக் கேள்விகேட்டதும் ஞானம் பிறந்து, மானசீகமாக கன்னத்தில் சப் சப்பென்று அறை வாங்கும் ஊர்ப்பெருசு போல போஸ் கொடுப்போம்.

இது எதையுமே கவனிக்காம பேசிட்டிருந்த நம்மாளுங்க ஒரு மாதிரியா நிகழ்காலத்துக்கு வந்து, 'மச்சி உன் நம்பர சொல்லுறா' சின்சியராக பரிமாறிக் கொள்வார்கள். அப்பதான் ஒரு சந்தேகம் வரும். உண்மையிலேயே சஞ்சய் அவனுக்கு ஃபோன் பண்ணுவானா? இல்ல அவன்தான் இவன் நம்பர வச்சிருப்பானா? கொஞ்ச தூரம் போனதும் அவன் காதலியே அந்த நம்பர கடுப்பில டிலீட் பண்ணிடுவாளா? ஆனா ஒண்ணு நம்மாளு புதுசா ஒரு நம்பர கலக்சன்ல சேர்த்துட்டான். அங்கதான் நிக்கிறான்.

ஆனால் சஞ்சய் தொலைபேசி இலக்கங்களை அப்படியே வைத்திருப்பான் என்பது நேற்றுத்தான் தெரிந்தது. அவன் ஒன்றரை வருடங்களாக லண்டனில் இருக்கிறானம். விடுமுறையில் வந்திருக்கிறான். இந்தமுறை வித்தியாசமாக பேசினான்,
"மச்சி எங்க இருக்கே?"

Tuesday, January 27, 2015

பேசும் கலை!


ழகாக, சுவாரசியமாகப் பேசுவது ஒரு கலை. அப்படிப்பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசுவது அதைவிடப் பெரிய கலை. சிலர் பேசும்போதே 'நான் சுவாரசியமாகப் பேசக் கூடியவன்' என்று குறிப்பிடுவார்கள். அங்கே இங்கே பராக்குப் பார்த்தவர்கள் எல்லோரும் உடனே சீரியசாகக் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் கவனித்திருக்கக்கூடும். ஆனால் அந்தப் பெண் பேசியது உண்மையிலேயே கேட்க நன்றாக இருந்தது.

"ஒரு டிக்கட் எடுத்தால் போதுமானது.. உங்கள் கேர்ள் ஃபிரண்டையும் அழைத்துச் செல்லலாம்" 

கடந்த புதுவருடத்திற்கு நான்கைந்து நாட்கள் முன்பாக, நடைபாதையில்.
கடற்கரை உணவுச்சாலை ஒன்றின் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான டிக்கட்களை  வைத்திருந்தார்.

அந்தப்பெண்மணி 'பேரழகி'யாக இருந்தார். நீங்கள் சாருநிவேதிதாவை வாசிப்பவர்களாக இருந்தால் இந்த இடத்தில் குபீரென்று சிரித்துவிடலாம். அது உங்கள் தவறல்ல. ஆனால் இது ஒன்றும் அவர் சொல்வது போலல்ல. உண்மையிலேயே அந்தப் பெண் உண்மையிலேயே அழகி. 

அதைவிட அழகு, அந்தப்பெண் என்மீது வைத்திருந்த நம்பிக்கை. நான் கேர்ள் ஃபிரண்டை அழைத்துக் கொண்டு வருவேன் என்று நம்புகிறாரே! அந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய விஷயம்? அவரிடம் நான் ஓரிரு வார்த்தைகள் பேசுவதுதானே மரியாதை? பேசினேன்.

"சரி டிக்கட் நான் எடுக்கிறேன் அந்த கேர்ள் ஃபிரண்ட் எப்பிடி? நீங்கள் அரேஞ்ச் பண்ணுவீங்களா?" 

அவ்வளவுதான் நான் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டதுபோல முறைத்துக்கொண்டே விலகிச் சென்றுவிட்டார்.


ன்னதான் நாம் அமைதியாக இருந்தாலும் சமயங்களில் எங்களையும் மீறி நம் பேச்சுத்திறன் காரணமாக வோன்டட்டாக வடைச்சட்டிக்குள் வாயை வைத்துவிடுவோம்.   

எனது ஆரம்பகால அலுவலகம். என் இரு பக்கத்திலும் இரண்டு அழகான பெண்கள் ஒருவர் கருப்பாக மெல்லிய உடல்வாகுடன் இருந்தார். மற்றையவர் மிக வெள்ளையாக முதலாமவருடன் ஒப்பிடுகையில் சற்றுப் பருமனான இருந்தார். தீவிரமாக ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

"நீ நல்ல ஸ்லிம்மா இருக்கே"
"உன்னோட பொடி செம்ம ஷேப்பா இருக்கு"
"இல்லடி உன்னோட ஹிப் கேவ்ஸ் எல்லாம் நல்லா இருக்கு ஜிம் போறமாதிரி"
"எனக்கு உன்னோட.."

"டாய்ய்ய்...! என்ன நடக்குதிங்க.. நடுவில ஒருத்தன் இருக்கான்னு பாக்காம கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லாம மாத்தி மாத்தி புளுகிட்டு.."  - தீர்ப்பைக் கூறிவிடலாம் என்கிற யோசனையுடன் ஆரம்பித்தேன்.

சரி சரி இப்ப என்ன... ரெண்டு பேரும் கொக்காகோலா போத்திலும், ஹோர்லிக்ஸ் போத்திலும் மாதிரி இருக்கிறீங்க போதுமா?"

கொக்காகோலா சிரிக்க ஆரம்பித்தார். ஹோர்லிக்ஸ் முறைத்துக் கொண்டிருந்தார்.

"இல்ல..வெள்ளையா கோக்காகோலா இருக்காதா..எம்ப்டி கோக் போத்தில்னும் சொல்ல ஏலாது..ஒரு டைமிங்கா, ரைமிங்கா வந்திச்சா அதான்"


செல்பேசி உரையாடல்கள் நம் பேசும் கலையையை வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றுபவை. ஆனால் என்னதான் நாம் சுவாரசியமாகப் பேசினாலும் சமயங்களில் தோழிகள் சடுதியில் கட் செய்துவிடுகிறார்கள்.

செல்பேசியில் தோழி, "விண்ணைத்தாண்டி வருவாயா படம் பிடிக்குமா உனக்கு?"
"ம்ம்ம்...ஆங் ஒரு மாதிரியா... பிடிக்கும்.."
"அதில உனக்கு பிடிச்ச ஸீன் எது?"
"அது...வந்து..பொதுவா கவுதம் மேனன் படம்னா ஸீன் எல்லாமே..."
"உனக்கு ரொம்பப் பிடிச்ச ஸீன் எது?"
"ம்ம்ம்...அந்த கணேஷ், சிம்புகிட்ட சொல்லுவாரே ஒரு பிரச்சினைல இருக்கும்போது ஒரு பஸ் வரும். அது சரியான இடத்துக்கு கொண்டுபோகும்னு... அது ரெண்டுபேரையும் திரும்ப கொண்டுவந்து மாட்டிவிடும்ல அந்த ஸீன் பிடிக்கும்"
"ம்..."
"ஹலோ என்னாச்சு"
"ஒண்ணுமில்ல.. வேற எந்த ஸீன்?
"ஆங்..அந்த போலீஸ் ஸ்டேஷன்ல எவ்ளோ பொண்ணுங்க இருக்க ஏன் நீ இந்தப்பொண்ண லவ் பண்ணினேன்னு சிம்பு டயலாக்கையே கணேஷ் மாத்தி சொல்றது செம்மையா இருக்கும்ல"
"ம்"  
"அப்புறம் அந்த..."
"போதும்....அப்ப உனக்கு விண்ணைத்தாண்டி வருவாயால சிம்புவும் கணேஷும் வர ஸீன்ஸ்தான் பிடிச்சிருக்கு?"
"ம்ம்ம் ஆமா நல்லாருக்கும்ல"
"ம்"   
"ஏதும் தப்பா சொல்லிட்டனா?
"இல்ல..நான்தான் தப்பா கேட்டுட்டேன்"
"??"
"அப்புறம் நான் 'என்றென்றும் புன்னகை' பாத்தேன் நீ பாத்தியா?
"ஓ! அப்பவே பாத்திட்டேன்"
"அதில எந்த ஸீன் பிடிச்சிருந்துது?"
"அந்த..சந்தானம் தண்ணியடிச்சுட்டு வீட்ட வர்ற ஸீன் செமையா இருக்கும்ல ஹா ஹா ஹா... ஹலோ ஹல்லோ... ஹல்லல்லோ..."

Monday, August 25, 2014

பரோட்டாவும் சமகாலவாழ்வும்!



மா பரோட்டாவாகிறதா இல்லை சமோசா ஆகிறதா என்பது மாவுக்குத் தெரிவதில்லை. மாறாக பிசையும் மாஸ்டருக்கே தெரியும். ஆனால் எந்தப் பரோட்டாவை யார் சாப்பிடப் போகிறார்கள் என்பது அந்த மாஸ்டருக்கே... தெரிவதில்லை. உலக மயமாக்கலில் கடைக்கோடி ஏழைக்கும் சாத்தியமான ஒரே நுகர்பொருள் பரோட்டாதான் என்பதில் உண்மையில்லாமலில்லை. ஏதோ ஒரு தருணத்தில் பரோட்டா மாஸ்டர் அய்யாச்சாமிகூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகத்தான் தெரிகிறாராம் என்பார் தோழர் பொன்னுஸ்க்கி என்கிற பொன்னுச்சாமி

இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. வெட்டிவைத்த முட்டை பரோட்டா போல கச்சிதமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு வெந்தும் வேகாமலும் அமைகிறது. பலருக்கு காய்ந்து காலாவதியாகிவிடுகிறது. இன்னும் சிலருக்கோ ஓவர் குழம்பு ஊற்றிய கொத்துப்பரோட்டா போல கொழ கொழவென்று கலவரமாகிவிடுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்கிற உண்மையை மெக்கானிக் திருமலை அண்ணனுக்கு முதலே கண்டறிந்து சொன்னவர் எங்களூர் பரோட்டா மாஸ்டர் ஐன்ஸ்டீன்தான் என்பதில் எங்களுக்கு எப்போதும் பெருமை.

'நாபியிலிருந்து கிளம்பும் அமிலச்சுனையொன்று நெஞ்சை அடைத்துக் கண்டம்வரை எரிந்து சாமம்கடந்தும் ஓயாத ஏப்பங்களாக ஒரு பரோட்டா மாஸ்டரின் கைவண்ணத்தைப் பேசியபடி காற்றில் கரைகிறது' - 'பரோட்டா உண்ட ராவுகள்'  தொகுப்பில் கவிஞ்ஞர் சங்கூவின் கவிவரிகள் நினைவுக்கு வருகின்றன.ஒரு பரோட்டா என்பது வெறும்பரோட்டா மட்டுமல்ல....வாழ்க்கையின் தத்துவமே... சரிவிடுங்கள், வெறும் பரோட்டா மட்டுமே வெறும்பரோட்டா! மற்றபடி, சேர்க்கையைப் பொறுத்து முட்டைப்பரோட்டா, கொத்துப்பரோட்டா, ஆளுப் பரோட்டா...

பரிசாரகர் வந்து ஈ மற்றும் சிந்தனையைக் கலைத்தார்.
"சொல்லுங்க"
"பரோட்டா"

வெளிப்பார்வைக்கு சாதுவாக, அழகாக மனதைப் பரபரப்படைய வைக்கும் பரோட்டாக்கள் உண்ணும்போது, அவ்வாறிருப்பதில்லை. தாடைகளின், பற்களின் கடும் உழைப்பைக் கோருபவையாகவும், சமயங்களில் கன்னத்தின் உட்தசைகளைப் பதம் பார்ப்பவையாகவும் அமைந்துவிடுநின்றன. ஒரு பரோட்டாவைப் போல வாழ்வியலைச் சொல்லிக் கொடுப்பது...

'டொக்' பரிசாரகரின் அன்பும், தண்ணீரும் ஏக காலத்தில் தெறித்தன.
ஆரம்பிக்க வேண்டியதுதான்.

வெளியே பதமாக இருந்தது, உள்ளே பசையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டது. பற்களிலும், மேலண்ணத்திலும் (கீழண்ணம் என்று இருக்கிறதா?) வெகுவாக ஒட்டிக் கொண்டது. இனி, கோக்காகோலா போட்டுத்தான் கழற்றியெடுக்க வேண்டும். நிச்சயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிதான். இதையெல்லாம் வெளியே சொல்ல முடியுமா? அப்படியே முயன்றாலும் ஒட்டிக்கொண்ட பரோட்டாதான் அனுமதிக்குமா? மூடிக் கொண்டே சாப்பிட வேண்டியதுதான். அப்படியே கேட்டாலும் நீதி கிடைத்துவிடுமா? மேலதிகமாக இரண்டு பரோட்டாக்கள் கிடைக்கலாம். நல்ல பரோட்டா தருகிறேன் என்று சொல்லிக் கொடுப்பார்கள். அதையும் நாங்கள் அல்லவா காசு கொடுத்துத் தின்று தொலைக்கவேண்டும்?

ஏதோ நம்மால் முடிந்தது. பல்லுக் குத்திக் கொண்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடலாம். யாரேனும் ஆறுதல் சொல்லலாம். அந்தப் பரோட்டக் கடைக்காரனின் சொந்தக்காரன்போல யாராவது வந்து கமெண்டில் விளக்கம் சொல்லக்கூடும்.
'சூடா இருந்திருக்கில்ல அதான் தலைவா!'
'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டாவ அவசரப்பட்டு முழுங்கிட்டீங்க பாஸ்!'

எனக்குப் புரிவதே இல்லை. பரோட்டான்னா சுட்டு, உடனே சுடச்சுட சாப்பிடவேண்டும். அதற்காகத்தானே கடைக்குப் போகிறோம்? அதென்னய்யா அது.. 'பத்து நிமிஷம் கழிச்சு'? வித்தியாசமான ரெசிப்பியோ? தனக்குப் பிடிச்சவன் அரைகுறையாச் சமைச்சத பிடிச்சு சாப்பிட்டவன் எவனைப் பாத்தாலும் 'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டா', 'பத்து மணித்தியாலம் கழிச்சு சுட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்', 'பார்சல் கட்டி பத்து நாளைக்கு அப்புறம் சாப்பிட்டிருந்தா கலக்கியிருக்கும் ' என்கிறார்கள்.

அதுகூடப் பரவாயில்லை. யாரோ ஒருவர் வந்து 'தமிழர்களின் நாக்கு இன்னும் சரியா வளரலைய்யா' என்று ஒட்டுமொத்தமாக அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். என்னய்யா கதை விடுறீங்க? இப்ப கேவலமா இருக்கிறது பத்து நாளைக்கு அப்புறம் நல்லாயிருமா? இன்னும் கேவலமாயிடாதா? என்ன, இப்ப கழுவி ஊத்துறவன்..அப்ப ஊத்தி ஊத்திக் கழுவ மாட்டானா?

இதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மார்க்கின் கைங்கரியத்தைப் பாருங்கள். ஒரேயொரு ஃபேஸ்புக்! அப்பப்பா! ஊரில் உள்ள அத்தனை பேரையும் நல்லவர்களாக்கி விட்டதைப் பாருங்கள். இந்த உலகமே அன்பால், மனித நேயத்தால், நிறைந்து மலர்ந்து கிடப்பதைப் பாருங்கள். எங்கும் ஏராளமான புத்தன், யேசுகள் எல்லாரும் கையில் லேப்டாப், செல்பேசிகள் சகிதம் ஸ்டேட்டஸ் மூலம் அன்பைப் போதிக்கும் சமகாலத்தில், ஒரு பரோட்டா குறித்து கண்டபடி சமூகப் பிரக்ஞையற்றுப் பேசிவிட முடியுமா?

'ஒரு பரோட்டாக்குப் பின்னால இருக்கிற உழைப்பைப் பற்றி உங்களுக்கு என்னய்யா தெரியும்? எத்தனை பேரோட வியர்வை, உணர்வு கலந்திருக்கு தெரியுமா? ஒரு பரோட்டா மாஸ்டர் காலைல அஞ்சு மணிலருந்து இரவு பதினோரு மணிவரைக்கும் அடுப்புக்கு முன்னால நின்னுட்டே இருக்கிறத கூட இருந்து பாத்திருக்கியா? ஒவ்வொரு பரோட்டாலயும் அசுர உழைப்பு கொட்டிக் கிடக்கு தெரியுமாய்யா? அந்த உழைப்பைப் பாருங்கைய்யா' என்கிறார்கள்.

“ஆ... ஊ... என்றாலே உழைப்பைப் பாருங்கள் என்கிறார்கள். பிறகு இன்னொன்று வைத்திருக்கிறார்கள். என்னாது... ஆங்க்.. மனசைப்பாருங்கள். செண்டிமெண்டல் பிளாக்மெயில்!

'அந்தா பாருங்க மாவைத் தொட்ட கையால நெஞ்சைச் சொறிஞ்சுக்கிட்டே நிக்கிற பரோட்டா மாஸ்டரைப் பாருங்க. அவர் சொறியிற நெஞ்சைப் பாருங்க.. அதில வளர்ந்திருக்கிற முடிதாண்டி, தோல் தாண்டி, நாடி நரம்பு தாண்டி உள்ள ஒரு மனசு இருக்கு! அந்த மனசைப்பாருங்க! அந்த மனசுக்குள்ளயும் ஒரு உணர்வு' அப்பிடி இப்பிடீன்னு ஆரம்பித்துவிடுவார்கள். மனிதாபிமானம் இல்லாத பயல் என்று முத்திரை குத்திவிடுவார்கள். நமக்கெதற்கு வம்பு?

ஆனால் ஒன்று மட்டும் புரியவேயில்லை. பசியில் காசு கொடுத்துச் சாப்பிட போகிறவன் பரோட்டா நன்றாக இருக்கிறதா என்றுதானே பார்ப்பான்? அதுதானே அவன் தேவை? பரோட்டா மாஸ்டரின் உழைப்பையோ, மனதையோ பார்ப்பதற்காக யாரும் சாப்பாட்டுக் கடைக்குப் போகிறார்களா என்ன!

Friday, August 15, 2014

மாலைநேர மயக்கம்!



அலுவலகத்திலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தேன். பிரதான வீதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள்ளேயே இப்படியொரு கிராமப்புறத்தை யாராலும் கற்பனை செய்ய முடியாது. நானும் செய்யவில்லை. நேரில் பார்த்தபிறகு எதற்குக் கற்பனை? ஆனாலும் இங்கும் பென்ஸ், ஜாக்குவார் கார்கள்தான் திரிகின்றன.

வாழ்க்கையின் விசித்திரங்களை எண்ணி வியந்தபடியே நடந்தேன். சிக்கன் பிரியாணியை ஃபுல் கட்டு கட்டியபின், இரவு சாப்பிட முடியாது என்கிற மந்தமான வயிற்றுநிலையில் வாழ்வின் அபத்தங்கள், ஏற்றத் தாழ்வுகள் குறித்த திடீர் சமூகப் பிரக்ஞையை அடைபவரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் என் தோழனே! வாருங்கள் இணைந்து நடப்போம்!

'டொக்.. டொக்'  - சீரான குளம்புச்சத்தம்..அல்ல, குதியுர்ந்த காலணிச் சத்தம் என் சிந்தனையைக் கலைத்தது. சேலை கட்டிய ஒரு பெண்மணி எனக்கு இருபதடி முன்னால் சென்று கொண்டிருந்தார். பெரும்பாலும் சிங்களப் பெண்மணிகள்தான் பொருத்தமாக, மிகத்திருத்தமாக, அழகாக, கச்சிதமாகச் சேலை உடுத்துகிறார்கள் என்கிற உண்மையைச் சொன்னால் தமிழினத் துரோகியாகச் சித்தரித்துவிடக் கூடும் என்கிற அச்சத்திலேயே பலரும் சொல்வதில்லை எனத் தெரிகிறது. நானும் அதுபற்றி ஒன்றும் சொல்வதாக இல்லை.

என்போலவே வேகமாக நடந்துகொண்டிருந்தார். ஆக, அவரை ஓவர் டேக் செய்வது சாத்தியமில்லை என்பதால் முயற்சிக்கவில்லை. ஒரு பெண்மணி நம் முன்னால் சென்றால் அவரை ஓவர்டேக் செய்து விடவேண்டும், அல்லாவிடில் அவரைப் பின்தொடர்வது போலாகிவிடும் என்கிற ஒழுக்கவியல் சார்ந்த உயரிய கொள்கை உங்களுக்கும் இருக்கிறதா? அப்படியானால் நீங்களும், நான் வளர்ந்த யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் செல்லும் பெண்மணியை ஓவர்டேக் செய்து பழகியதால் ஏற்பட்ட சிந்தனை என்பேன். ஆனால் பாருங்கள், சரியாக நாம் கடந்து செல்ல முற்படும் நேரம்தான் அவர்களும் நமக்கு இணையான வேகத்தில் செல்வர்கள். 'அடியே எடுபட்ட சிறுக்கி..' என பாரதிராஜா பட அப்பத்தா போல உங்கள் மனமும் அப்போதெல்லாம் அலறியிருக்கலாம்.

அந்தப் பெண்மணி அழகானவராக இருக்கக்கூடும். சிங்களவர்களின் பாரம்பரிய கண்டிய நடனம் பயின்றிருப்பார் என்று தோன்றியது. சிலரைப் பார்க்கும்போதே உங்களுக்கும் அப்படி உறுதியாகத் தோன்றுகிறதா? கலைக்கண்கள் உங்களுக்கு. எந்த நேரத்திலும் அந்தப்பெண்மணி பின்னோக்கி, பின்புறமாகவே, கால்களை நாலைந்து அடிகள் எட்டி வைத்து, இடையை ஒடித்து, ஒரு அரை வட்ட U Turn அடித்து, ஒரு கண்டிய நடன ஸ்டெப் போடுவார். கண்டிப்பாக அந்தக் காட்சியை நான் தவற விட்டுவிடக் கூடாது என எண்ணிக் கொண்டேன்.

தூரத்தே குதிரையின் கனைப்பொலி கேட்டது! ச்சே! என்ன இது பிரமை! இந்தத் தமிழ்சினிமாதான் நம் மனதை எந்த அளவுக்குக் கெடுத்து வைத்திருக்கிறது பாருங்கள். கலாச்சாரக் காவலர்கள் சினிமா சமுதாயத்தைச் சீரழிக்கிறது எனப்பொங்குவதில் நியாயம் இருக்கிறதுதான் போலும். சடுதியாக என் சமூக சிந்தனை விழித்துக் கொண்டது.

மீண்டும் சிதறவிட்ட என் சிந்தனையைக்கூட்டிப் பொறுக்கிப் பிரக்ஞை பெற்று நிகழுலகைக் கவனித்தேன். அப்பெண்மணி எனக்கு ஏழடி தூரத்தில் செல்வதைக்கண்டு திடுக்குற்றேன். 'உண்மையிலேயே அந்த கண்டிய நடன ஸ்டெப் போட்டிருப்பாரோ? ச்சே மிஸ் பண்ணிவிட்டோமே!' என் சமூக சிந்தனை செய்த சதியை நொந்து கொண்டே எதிரில் பார்த்தால் இரண்டு குதிரைகள் வந்துகொண்டிருந்தன. இருங்கள் குதிரைகள் என்றால் உண்மையான குதிரைகள். கடற்கரையில் பரிதாபமாக, நன்கு வளர்ந்த மனிதத் தடிமாடுகளை வயிற்றுப் பிழைப்புக்காகச் சுமந்து ஓடுகின்றனவே அதே குதிரைகள்.

பெண்மணி பயந்து போய் பின்னடைந்திருக்கிறார். நான் இன்னும் பயந்துபோய் வீதியின் அடுத்த கரைக்கு கடந்து போய்விடலாமா எனத்தீவிரமாக யோசித்தேன். வாய்ப்பிருக்கவில்லை. குதிரைகளை இப்படியா வளர்ப்பார்கள்? மாடுகள் வீதியில் திரிவது போல தனியாக வரும் குதிரையை எங்கேயும் பார்த்ததில்லையே! மனதிற்குள் பீதி பீடித்துக் கொண்டது. நான் தனியாக என்றால் பரவாயில்லை. அந்தப்பெண்மணி குறித்து இன்னும் பீதியடைந்தேன். அவரும் நான் பயந்தமாதிரியே பயந்தாரா? இல்லை, வேறுமாதிரிப் பயந்தாரா எதுவும் புரியவில்லை. அந்தக் குதிரைகள் என்ன நினைக்கின்றனவோ? மனிதர்கள் நினைப்பதையே புரிந்து கொள்ள முடியாதபோது குதிரை நினைப்பதை எங்ஙனம் புரிந்துகொள்வது?

மீண்டும் என் சிந்தனை கலைந்து பார்க்க, குதிரைகள் நெருங்கியிருந்தன. அந்தப் பெண்மணியைக் காணவில்லை. 'எங்கடா?' ஆச்சரியப்பட்டு தேடினால் என்பின்னால் நின்றுகொண்டிருந்தார். 'அய்யய்யோ இது எப்படா நடந்திச்சு?' மனம் அலறியது. இப்போது கலவரம் அதிகமாகியிருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு மெதுவாக நடந்தேன்.

அப்படி எந்த விபரீதமும் இடம்பெறவில்லை. என்னை மெதுவாகக் கடந்த குதிரை, "நான் பயந்துபோய்விட்டேன்" பதற்றமான சிரிப்புடன் கூடிய குரலில். ஆச்சரியமாக இருந்தது. 'அந்தப் பெண்மணியைப் பார்த்து குதிரை எதற்குப் பயந்து போயிற்று?' 'அதைவிட குதிரை சிங்களம் பேசுமா?' 'பெண்குதிரையா அது?' துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்தேன்.

அந்தப் பெண்மணி சிரித்தார். குதிரைகள் கண்டுகொள்ளவில்லை. தம்பாட்டில் வீதியோரமாக் இருந்த புற்களை மேய்ந்துகொண்டு சென்றன. குதிரைகள் பாவம். அவை, குதிரைகளையே குதிரைகளாகப் பார்க்கின்றன. தவறாக நினைத்ததற்காகக் குதிரைகளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டே நடந்தேன்.

Wednesday, July 23, 2014

மெரூன் கலர் ஜட்டி!

வாழ்வின் துன்பங்களுக்கு உயிரின், உடைமைகளின் இழப்புகள் மட்டுமே காரணமாக அமைவதில்லை. மாறாக ஒரு மெரூன் கலர் ஜட்டியின் வரவு கூட காரணமாக அமைந்துவிடலாம்.

நெடுந்தூரப் பேரூந்துப் பிரயாணங்கள் எனக்குப் புதிதல்ல. கொழும்பு - யாழ் குறைவாகவே இருந்தாலும், கொழும்பு - திருகோணமலை வாரம் இருமுறை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் பயணித்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் குளிரூட்டப்பட்ட கொகுசுப் பேரூந்துகளின் பாதுகாப்பான பிரயாணங்கள். உடைமைகள் விஷயத்தில் எந்தக் கவலையுமின்றி, எல்லாவற்றையும் இருக்கைக்கு மேலே வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கிவிடலாம். வசதி வாய்ப்புகள் கவலையீனத்தையும் சேர்த்தே பழக்கப்படுத்திவிடுகின்றன போலும்! பாருங்கள் என் தவறை நியாயப்படுத்த எவ்வளவு பேச வேண்டியிருக்கிறது?

கொழும்பிலிருந்து வவுனியா பகலில் செல்ல வேறுவழியில்லாமல் ஒரு சாதா பேரூந்தில் ஏறி, யன்னலோரம் அமர்ந்து மேலே இடமில்லாததால் மடியில் பயணப்பையை வைத்திருந்தேன். அருகில் அதே போல ஒரு சிங்கள இளைஞனும் அமர்ந்திருந்தார். அர்ஜூனின் மொக்கைப் படம் ஒரு டிவியில் போய்க்கொண்டிருந்தது. படம் முடிந்து பாதித்தூரத்தில் குழந்தையுடன் வந்த முஸ்லிம் பெண்மணிக்கு தன் இருக்கையைக் கொடுத்துவிட்டு எழுந்து நின்றுகொண்டார் அந்த சிங்கள இளைஞன். பின்னர் வேறு இருக்கை கிடைக்க, என்னிடமிருந்த அவரது பையையும் பெற்றுக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

பிறருக்கு உதவி செய்வது எனக்கு உவப்பானதுதான். ஆனால் அதன் பின் விளைவுகள் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை என்பது என் அனுபவம். இருந்தாலும் ஒரு சமூக அக்கறையாளனாகவோ, ஃபேஸ்புக் போராளியாகவோ மாறும் முனைப்போ, மமதையோ என்னவோ ஒன்று. என் ராசி தெரிந்தும் ரிஸ்க் எடுத்துவிடுகிறேன். இடையில் இறங்கி விட்டு திரும்ப அமரும்போது அந்தப் பெண்மணி எனக்காக வழிவிட்டு நகர்வது கஷ்டமாக இருக்க, "உங்களுக்கு ஈசின்னா அந்த சைட்ல இருங்க" என்றேன். சிறு புன்முறுவலோடு 'தாங்க்ஸ்'.

அந்தக் குழந்தை சிரித்துக்கொண்டே என்கையைப் பிடித்து விளையாடியது. மறுபக்கத்தில் மூவர் அமரும் இருக்கையின் கரையில் இருந்த தாடிவைத்த அண்ணன் குழந்தையோடு அவ்வப்போது கதைகேட்டு சிரித்தபடியே வந்தார். அந்தப்பெண்மணியின் கணவர். "இதில வரப்போறீங்களா?" மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி அமர்ந்துகொண்டார். நான் அவரது இடத்தில் அமர்ந்துகொண்டேன். மேலே பையை வைக்க இடமிருந்தது. வைத்தேன். அவ்வளவுதான். இறங்கும்போது இருக்கவில்லை.

தெரியாமலோ, தெரிந்தோ, மாறியோ, மாறாமலோ யாரோ எடுத்துக் கொண்டு மதவாச்சியில் இறங்கிவிட்டார்கள். எனது பயணப்பை இருந்த இடத்திற்கு அருகில் இன்னொரு சிறிய பை இருந்தது. ஒருவேளை  மாறியிருக்கக் கூடும் என நம்ப விரும்பியபடி இறங்கினேன். கண்டக்டர் கேட்டார். இல்லை என்றேன். "தூங்கிட்டா இருந்தீங்க?" ஒற்றைக் கேள்வியுடன் நேரம் அனுமதிக்காததால் யாழ் விரைந்தது பேரூந்து.

'தூங்கிட்டா இருந்தீங்க?' - அப்போதைக்கு அதுதான் தமிழின் ஆகச்சிறந்த கெட்ட வார்த்தையாக தோன்றியது.

ஒருகணம் எதுவும் தோன்றாமல் வெறுமையாக இருந்தது, ஓர் பயணத்தின்போது பையைத் தொலைத்துவிட்டு  வெறுங்கையுடன் நிற்கும்போது ஏற்படும் உணர்வே வெறுமை எனப் புரிந்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக வவுனியாவில் எங்கள் வழமையான சஹானாஸ் துணிக்கடை நோக்கி பஜார் வீதியூடாக நடந்தேன். கடையில் தெரிந்த முகம் ஒன்றையும் காணவில்லை. 'ஒருவேளை ஒரே பெயரில் வேறு கடையோ?' நீளமான உட்பகுதிக்குச் செல்கையில் முதலாளி எதிர்ப்பட்டார்.
"ஹாய் நானா! எப்பிடி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் தம்பி வாங்க.." குத்துமதிப்பாக குழப்பமாக பேசினார்.

எட்டு வருஷத்துக்கு முதல் பார்த்தது. அவர் தம்பிகளுக்கு அடையாளம் தெரியும். யாரையும் காணவில்லை. அவசரமாக என்னென்ன தேவையென்று சொல்லி, அவசரமாக தெரிவு செய்து, எனக்கு உதவிய கடைத்தம்பி சிவப்பு நிறத்தில் அண்டர் வெயார் எடுத்துக் காட்டினான். "சரிய்யா ஆனா லைட் கலர்ல வைங்க பாஸ் ப்ளூ, வைட், ஆஷ் இப்பிடி..." "ஒக்கே பாஸ்" பவ்வியமாக சொன்னான்.

இடையில் ஒருவர் வந்து, "உங்களை நான் பார்த்திருக்கேன். எங்க இருந்தீங்க?" என்றார். சொன்னேன். விலை பார்க்க அவகாசம் இருக்கவில்லை. சஹானாசில் எனக்கு இதற்கு முன்னர் பேரம் பேச எப்போதும் அவசியம் இருந்ததில்லை. அதே ஞாபகத்தில் கவுண்டருக்கு வந்தேன்.
"உங்களுக்கு குறைச்சுப் போட்டிருக்கேன்"அதே தம்பி பவ்வியமாக சொன்னான். ஆறாயிரம் ரூபாய் வந்தது.
வரும்போது முதலாளி "தம்பி எங்கடா இப்ப?" சொன்னேன். "இந்தப்பக்கம் வந்தா வாடாப்பா!" என்றார் வழமைபோல அடையாளம் தெரிந்தவராக.

கொஞ்சம் ஓய்வானதும், மனம் தொலைந்துபோனவை பற்றிய கணக்கு போட்டது. அதிகமில்லை இரண்டு ஷேர்ட், இரண்டு பாண்ட்ஸ், இரண்டு ஜட்டி, ஃபோன் சார்ஜர், பயணப்பை என மொத்தம் இருபதாயிரத்துக்கு கணக்கு வந்தது. ஆயாசமாக இருந்தது. பணம் என்பதை விட தேடி வாங்கியது என்பதும், ஒருமுறை மட்டுமே அணிந்தவை என்பதும் சற்றே உறுத்தியது. எடுத்தவனுக்கு லக் என்று ரணகளத்திலும் யோசிக்கத் தோன்றியது. மற்றபடி அலட்டிக் கொள்ளவில்லை.

உறவுகளைச் சந்தித்ததும் அளவளாவியதும் மகிழ்ச்சியை, மனநிறைவைக் கொடுத்தது. அது ஓரிரு நாட்களோ, ஓரிரு மனித்தியாலங்களோ என்பது பொருட்டல்ல!

ஆனால் இந்தச் சம்பவம் என்னை நினைத்து மிக ஆச்சரியப்பட வைக்கிறது. வழக்கமாக சிறு சம்பவங்களுக்கே மனம் குழம்பி அதிகம் யோசிக்கும் நான், ஓரளவு பெருசம்பவமான இது குறித்து அலட்டிக் கொள்ளாமல் விட்டதுதான். என்னமோ போனது போகட்டும் என்கிற மனநிலையா? எவ்வளவோ பாத்திருக்கோம் இது என்ன என்கிற மனப்பக்குவத்தை காலம் கற்பித்து விட்டதா? அல்லது எது நடந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒருவித ஜென் மனநிலைக்கு வந்துவிட்டேனா? புரியவில்லை!

காலையில் கடைப்பையைத் திறந்து பார்த்ததும் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. மெரூன் கலரில் இரண்டு ஜட்டிகள் இருந்தன. மேற்கண்ட சம்பவத்தின் ஆகப்பெரிய சோகமாகத் தோன்றுவது, நான் மெரூன் கலர் ஜட்டி அணிந்ததே. வாழ்க்கைல இப்படியொரு சோகத்தை உணர்ந்ததே இல்லை என்பதுபோல, அந்த மெரூன் கலர் ஜட்டி அந்தத் துன்பியல் சம்பவத்தை நினைவூட்டிக் கொண்டே இருப்பது போலப்படுகிறது.

சந்தர்ப்பம் என்பது சமயங்களில் மோசமான எதிரி. அது சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்து மிக மோசமாகப் பழிவாங்கிவிடுகிறது. எந்த அளவு மோசமானது என்றால்... மெரூன் கலர் ஜட்டி அணியவைத்துவிடும் அளவுக்கு!

Friday, June 27, 2014

எர்வா மார்டின், கேர்ண், இன்டுலேகா ; பல்பு!

"அண்ணே உங்களுக்கு முடி ஓவராக்கொட்டுது. இப்பிடியா விட்டா நல்லதில்ல. மிஷின் போட்டு ஒட்ட அடிப்பமா?"
அடிக்கிற வெயிலுக்கு நன்றாயிருக்கும் என்பதால் சம்மதித்தேன்.

முடிந்ததும் 'அவ்வளவு மோசமாக இல்லை' என நம்பிக் கொண்டு வீடு திரும்பினேன். வழியில் ஓரிருவர் விநோதமாகப் பார்த்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் வழமையாக வீதியில் என்னைக் கடந்துசெல்லும் பெண்மணி ஒருவர் பார்த்ததும் சிரிப்பை மிகுந்த பிரயத்தனத்துடன் அடக்கிக் கொண்டு சென்றார். அதுதான் உறுத்தியது.

வீட்டில், அக்காவின் ஒருவயது மகள் வைத்த கண் வாங்காமல் அதிர்ச்சியா, பயமா, ஆச்சரியமா? இன்னதென்று தெரியாத ஒரு பார்வை பார்த்தது. 'இப்பிடியும் மனுஷர் இருக்கிறாங்களா?'

பாத்ரூம் கண்ணாடியில் பார்த்தபோது, வழக்கம்போல சலூன் கண்ணாடி ஏமாற்றிவிட்டது தெரிந்தது. லயன் காமிக்ஸ் ஸ்பைடர் மாதிரி இருந்தேன். மறுநாளிலிருந்து குட்டீஸின் பார்வை ஆச்சரியத்திலிருந்து விடுபட்டுவிட்டது. என்னைப் பார்க்கும்போதெல்லாம் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தது.

இரண்டுவாரம் கழித்து, கொஞ்சம் பரவாயில்லாமல் அல்லது பழகிப் போய் இருந்தது. சலூனுக்கு ஷேவிங்குக்கு சென்றேன்.
கடை உரிமையாள நண்பர் கேட்டார் "என்ன பாஸ் இது? யார் உங்களுக்கு இப்பிடி வெட்டினது?"
"அது ரெண்டு கிழமையாச்சு பாஸ்.... இப்பப்போய் அதிர்ச்சி அடையுறீங்க?"
"இப்பவே இப்பிடி இருக்குன்னா... அப்ப எப்பிடி இருந்திருக்கும்?"
"விடுங்க பாஸ்"
"ஹி ஹி சொல்றனேன்னு தப்பா எடுக்காதீங்க... ஹி ஹி இப்பிடி சொல்லக்கூடாது..."
"என்னய்யா? ஹொஸ்பிட்டல்ல இருந்து தப்பி ஓடிவந்த மாதிரி இருக்கா?"
"ஹி ஹி ஆமா"
நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அவர் எதை நினைத்தாரோ. 'எங்கே செல்லும் இந்தப்பாதை' பாடல்வேறு அந்த அநேரத்தில் டீவியில் போய்க்கொண்டிருந்தது.


மூன்று வருஷத்துக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த நண்பன் ஏராளமான கோத்ரேஜ் ஹெயார் டை பெட்டிகளை வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தான்.

"ஏண்டா இது? உனக்கு நரை இல்லையே"

"எனக்கில்லடா... இது நரைக்கில்ல..  இது பாவிச்சா முடி வளருதாம் அதான் நிறையப் பேர் வாங்கிட்டு வரச்சொன்னங்க"
"உண்மையாவா?"

"அப்பிடித்தாண்டா சொல்றாங்க யாரோ கண்டுபிடிச்சிட்டாங்க இப்ப எங்கட சனம் நம்பி வாங்குது ...மச்சி மண்ணெண்ணைல பைக் ஓடலாம்னு கண்டு பிடிச்சதிலருந்து நம்மாளுங்க கண்டுபிடிப்பு அலப்பரை தாங்க முடியலடா!"


மேசன் காட்டில் கண்டெடுத்த அரிய மூலிகையில் செய்த தலைமுடித் தைலத்தை ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்திய அண்ணன் ஒருவர் சொன்னார்,

"நல்லா இருக்கு ஜீ இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது"
எனக்கும் தெரிந்தது பார்க்கும்போதே முடி கிசுகிசுவென வளர்ந்தது, டீ.வி.விளம்பரத்தில்.

சிரித்து வைத்தேன். நம்பிக்கைதானே வாழ்க்கை?
"வைங்கண்ணே உங்களுக்குத்தான் வயசே தெரியலயே..இன்னும் ரெண்டு செட்டாகும் பாருங்க!"அண்ணி காதில் விழும்படியாக நம்பிக்கை வார்த்தை  சொல்லிவைத்தேன். ஏதோ நம்மால் முடிந்தது.


"இது யார் பாவிக்கிறது?"

வாங்கி பலமாதமாகிவிட்ட, வெற்றிகரமாக இரண்டுமுறை மட்டும் என் தலைக்கு வைக்கப்பட்ட எண்ணெய்ப் போத்தல் பெட்டி முழுவதும் தூசி படர்ந்திருந்தது. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் என்கிற உத்தரவாதத்தில், அல்லது புதிதாகவும் முளைக்கக்கூடும் என்கிற மிகுகற்பனையின் பேரில் பலராலும் பாவிக்கப்பட்ட/படும் Kern  என்கிற ஜெர்மன் தயாரிப்பு எண்ணெய்.

என்வழக்கப்படி இரண்டு நாட்கள் உபயோகித்து பலன் தெரியவில்லையாதலால் 'இது ஆவுறதில்லை' எனக் கைவிட்டிருந்தேன்.

"நான்தான் அப்போ பாவிச்சது" அசடு வழிந்தேன்.
"நானும் பாவிச்சனான்"

அவர் தலையைப் பார்த்தேன். நன்கு துடைக்கப்பட தோசைக்கல் போல பளபளவென்று ஒரு மாசு மயி.. மன்னிக்கவும் மறு இல்லாமல். முடி உதிர்வது எப்போதோ சுத்தமாக நின்று போயிருந்தது!

"நான் ஏலெவல் படிக்கேக்க இருந்து யூனிவெர்சிட்டி முடிக்கும் வரைக்கும் பாவிச்சேன்"
"அப்பவே வந்திட்டுதா?" - அடப்பாவீங்களா? புதுசுன்னு சொன்னீங்களேடா! சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி வாங்க வைத்த என் வழமையான சிகையலங்கார நிபுணர் மனசுக்குள் வந்துபோனார்.

"எவ்வளவு காலம் எண்டு பாரும். எவ்வளவு காசு. இதெல்லாம் பொய்" என்றார்.
"உண்மைதான் இப்ப நம்புறேன்" உறுதியாகச் சொன்னேன்.

"இதுபற்றி ஒரு தியரம்  இருக்கு தெரியுமா?"

அய்யய்யே ஆரம்பிச்சுட்டாங்கப்பா! இந்தக் கன்சல்டண்டுகளுக்கே ஒரு கெட்ட பழக்கம். எப்போதும் துறை சார்ந்தே சிந்திப்பார்களாம். சிலர் சோறு, கறி, குழம்பைக்கூட வேளையைப் பொறுத்து 6:3:1, 4:2:1 என வேறுவேறு கலவைகளில் குழைத்துத்தான் சாப்பிடுவர் என்றால் பாருங்கள். இந்த என்ஜினியரிங் வெறி காரணமாக சமயங்களில் நிம்மதியாகச் சாப்பிடக் கூட முடியாது. இந்த உரையாடல்கூட டைனிங் டேபிளில்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. துயரம் இப்போது தியரம் வடிவில் வந்தது.

"உடம்பில இருக்கிற மொத்த முடிகளின் எண்ணிக்கை மாறாது. ஓரிடத்தில கொட்டினா இன்னோரிடத்தில முளைக்கும்" சொன்னார்.
"அப்பிடியா நான் கேள்விப்பட்டதே இல்லை"

அவரைப் பார்த்தால் நம்பலாம் எனத் தோன்றியது. தலையை மட்டும் ஷேவ் செய்த பெரிய சைஸ் கரடிக்குட்டி போல இருந்தார். ஆனால், அவர் நேரத்தைப் பாருங்கள். சரியாக இன்னொரு கன்சல்டண்ட் அங்கிள் குளித்துவிட்டு இடுப்பில் டவலைக் கட்டிக் கொண்டு எங்களைக் கடந்து போனார். அவரைக் கண்ணைக் காட்டினேன். அவர் தலையில் சுத்தமாக ஒன்றுமில்லை. கைகளில், நெஞ்சில் கண்ணுக்கெட்டிய எல்லாப்பகுதியும் ஒரு முடியும் இல்லை.

"இப்ப சொல்லுங்க உங்க தியரம் பொய்ன்னு ஒத்துக் கொள்றீங்களா? இல்ல வேறமாதிரி ப்ரூஃப் பண்ணுற ஐடியா..."

அதற்குப் பிறகு அவர் என்னுடன் பேசவில்லை.
'அடப்பாவீங்களா முடியலன்ன முடியலன்னு ஒத்துக்கணும்.. அதென்ன சின்னப்புள்ளத்தனமா பேசாம இருக்கிறது?'


"பா
ஸ் இன்டுலேகா வச்சுப் பாருங்க.. நிறையப் பேருக்கு முளைச்சிருக்கு" - நேற்று நம் சலூன் நண்பர்.
"ஆள விடுங்க பாஸ்"
"சரி விடுங்க...உங்களுக்கு எப்ப பாஸ் கல்யாணம்?"
"ஏன்யா.. எதுக்கு.. திடீர்னு?"
"இல்ல பக்கத்தில லேடீஸ் சலூன் ஒப்பன் பண்ணியிருக்கோம்..பாத்தீங்களா?"
"யோவ்...அதுக்கு....? நல்லா வருவீங்கய்யா"

Tuesday, March 4, 2014

நோயுற்ற நாளின் பகற்பொழுது!

இன்றைய எனக்கான காலை எட்டு மணிக்குப் புலர்ந்தது. நோயுற்ற நாளொன்றின் பகற்பொழுதுகள் சுற்றிலும் புதிதாக உணரச் செய்கின்றன. தூரத்தில் ஏதேதோ பறவைகளின் சத்தம் கேட்கிறது. இதுநாள்வரை கவனிக்கவில்லையே? இங்கே பறவைகள் எல்லாம் இருக்கின்றனவா? நான்கைந்து வீடுகள் தாண்டி எங்கோ சிறுவர்கள் விளையாடும் சந்தோஷக் கூச்சல். அவ்வப்போது தெருநாய்களின் குரைப்பு. எப்போதும்போல வாகன இரைச்சல். மின்விசிறியின் சத்தம். சரியாக மூடப்படாத குழாயில் நீர் சொட்டும் ஓசை. இதோ ரயிலொன்று ஹோர்ன் ஒலியுடன் புறப்படுகிறது. காய்கறி வண்டிக்காரனின் குரல் தெருமுனையில் கேட்கிறது.

நோயுற்ற நாளொன்றின் பகற்பொழுதுகள் எனக்கும் புத்தகங்களுக்குமான இடைவெளியைச் சுருங்கச் செய்திருக்கின்றன. ஏராளமான புத்தகங்களை நான் வாசித்தது அந்தப் பகற்பொழுதுகளிலும் என் பள்ளிக் காலத்தின் விடுமுறை நாட்களிலும்தான். என் நினைவு தெரிந்து முதல் நோய்வாய்ப்பட பொழுது கிறீம் கிரேக்கர் பிஸ்கெட்டும், நெஸ்டோமோல்டோடும் கரைந்து போன பொழுதுகளில் மாறுதலளிக்க சில புத்தகங்களும். அன்றைய ஒருநாளின் மாலைப் பொழுதில்தான் முதன்முதலாக 'வேங்கையின் மைந்தன்' என்ற புத்தகத்தைப் பார்த்தேன். ஒடுக்கமாக, நீளமாக, தடித்த அந்தப் புத்தகத்தில் படங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். கோகுலத்தை மட்டுமே எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டிருந்த வயது அது.

உடல்நிலை தேறியதும் செய்யப்போகும் காரியங்கள் பற்றி மனம் மட்டும் உற்சாகமாகத் திட்டமிட்டுக் கொள்கிறது. அதுவரை கவனிக்காமல், அக்கறையில்லாமல் உட்கொண்ட அன்றாட உணவு வகைகளின் மேல் உணவின் மீதான ஆர்வம் புதிதாக அப்போதுதான் ஏற்படுகிறது. உதட்டின் வெடிப்புகளோடும், வாய்க் கசப்போடும் சப்புக் கொட்டிக் கொள்கிறது, வருத்தம் மாறிய பிறகு அருந்தப்போகின்ற அந்த முதற்சாப்பாடு பற்றிய மனதின் எதிர்ப்பார்ப்பு. இந்தமுறை மறந்துவிடாமல் அதன் சுவையை முழுமையாக ரசித்து உள்வாங்கிவிடவேண்டும் தீர்மானம் போட்டுக் கொள்ளும். ஆனாலும் பின்னர் வழமை போலவே கவனிக்கப்படாமல் கடந்து போய்விடும்.

வெம்மையும், அயர்ச்சியும் நிறைந்த அந்தப் பொழுதுகளில் பள்ளிக்கு விடுமுறை பொட்டுவிட்டு மெக்சிக்கோவின் பாலைவனத்திலும், டெக்சாஸ் மாநிலத்தின் வீதிகளிலும் குதிரைகளின் கனைப்பொலியுடன், குளம்புகள் புழுதி கிளப்ப, தொப்பியணிந்து, வின்செஸ்டர் துப்பாக்கியும் ஏந்தியவாறு பயணித்துக் கொண்டிருந்தேன்.  பின்நாளில் சிலவருடங்களுக்கு முன்புவரை மொஸ்கோவின் பனிச்சாரல்களில், முழங்கால்வரை காலணிகளும், கம்பளித் தொப்பியும், நீண்ட குளிர்தடுப்பு அங்கியும் தரித்தவாறு  சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். இரண்டு ஆண்டுக்கு முன் ஒரு நோய்ப்போழுதில் 'சூதாடி' அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் 'கசாக்குகள்'. அதற்கும் முன்பொருமுறை 'புத்துயிர்ப்பு' இப்போது 'போரும் அமைதியும்' கையில் எடுக்கலாமா என யோசித்து அவ்வளவு நாட்கள் தங்காது, தாங்காது என வழக்கம்போலக் கைவிடுகிறேன்.

ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள் வேண்டாமென்றே முடிவெடுத்துவிட்டேன். சமயத்தில் அவ்வளவு படுத்திவிடுகின்றன ஒரு வழி பண்ணிவிடும் முடிவில் எழுதப்பட்ட அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதைக்கடந்து படிக்கும்போது நன்றாயிருந்திருக்கின்றன என்பது உண்மை. ஆனாலும் வர்ணனைகள்? புததாகப் படிக்கும் ஒருவர் காலையில் சூரியன் உதிப்பதற்கான வர்ணனைகளை காலை ஆறுமணிக்கு வாசிக்கத் தொடங்கினால் அந்தச் சூரியன் உதிப்பதற்குள் நம் சூரியன் உச்சிக்கு வந்துவிடலாம். சில புத்தகங்கள் ஒரே வாரகாலத்தில் பலவருடங்கள் நிகழும் கதையைப் படித்து கூட வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கின்றன. மாறாக ஒருவாரம் நிகழும் கதையைப் படிப்பதற்கே மாதக்கணக்கில் உழைத்த சலிப்பை ஏன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்? அதுவும் உடல் நிலை சரியில்லாத பொழுதில்.

மேலும் இன்றைய பகலில் நான் தூங்கி விடக் கூடாது. நேற்றைய இரவின் தூக்கமின்மை இன்னும் கண்களில் கனக்கிறது. எரிகிறது. நான் தேர்ந்தெடுக்கும் ஒரு புத்தகம் முதல் இரண்டு பக்கத்திலேயே தூங்க வைத்துவிடக் கூடாது. நோயுற்ற நாளொன்றின் இரவுப் பொழுதுகள் கொடியவை. கொடுமையானவை. இரக்கமில்லாமல் வளர்ந்து செல்பவை. முழு இரை கொண்ட மலைப்பாம்பு போல நகர மறுத்து முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்பவை. தூக்கம் பிடிக்காமல் உடலும் மனமும் உழன்று கொண்டிருக்கும். மிகுந்த பிரயத்தனத்துடன் தூங்கினாலும் துரத்தும் கொடுங்கனவுகள் நடுநிசியில் தூக்கம் கலைத்துவிடுகின்றன. இனம்புரியாத பயத்தைக் கொடுத்துவிடுகின்றன. ஆக, இன்றைய இரவை நான் தூங்கியே கடந்தாக வேண்டும்.

இன்றைய பகலில் தூக்கத்தை விரட்டியடித்துவிட நான் தேர்ந்தெடுக்கும் புத்தகம் ஒரு வேளை இன்றிரவுத் தூக்கத்தையும் தொலைத்திடச் செய்துவிடலாம்! வேறுசில இரவுகளிலும் கூட! எனினும் கையிலெடுக்கிறேன், யோ. கர்ணனின் 'கொலம்பஸின் வரைபடங்களை!'

Saturday, December 28, 2013

டக்கு எனப்படுவது யாதெனில்...


ங்கள் ப்ராஜெக்ட்காக சைட் விசிட் சென்றிருந்த சமயம். புத்தளையிலிருந்து மொனராகல போகும் வழியில் வீதியின் ஓரத்திலிருந்தே ஆரம்பித்தது ஓர் மலை. அதைக்காட்டி, சிங்கள அங்கிள் 'மலை வந்த கதை' பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

துட்டகெமுனுவுக்கும் (தமிழ் மன்னனான எல்லாளனை வென்றதால் சிங்களவர்களின் ஹீரோவாகக் கொள்ளப்படுகிறவன்) அவனுடைய தம்பிக்கும் இராஜ்ஜியம் தொடர்பாக சண்டை மூண்டிருந்ததாம். இரண்டுபேரும் பெரும் படையுடன் மோதிக் கொள்ளத் தயாராக இருந்தார்களாம். இவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பெரும் அழிவைத் தவிர்க்க வேண்டும். உடனே ஒரு பௌத்தத் துறவி தனது சக்தியால் இருவரும் இருந்த பகுதிகளுக்கு நடுவில் ஒரு மலையை உருவாக்கினாராம். அந்த மலைதான் இதுவாம்!

இதைக்கேட்டதும் உடனே என் பகுத்தறிவு விழித்துக் கொண்டது.
'இல்ல... பௌத்தத் துறவிகளெல்லாம் இந்த மாதிரி மாஜிக் வேலைகள் செய்வார்களா? சைவத் துறவியாக இருந்திருக்கலாம். இவனுங்க வழக்கம்போல மாத்தியிருப்பானுங்க!' நான்  ஆழ்ந்து சிந்திப்பதைப் பார்த்ததும் அங்கிள்  ஒரு முடிவுக்கு வந்திருப்பார் போல.

இந்தக் கதை நிச்சயமாக என் சிந்தனையில் அன்பு, மனிதநேயம் குறித்த நல்லதோர் மாற்றத்தை கொண்டுவந்திருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். கிட்டத்தட்ட புத்தருக்கு ஈக்குவலானது என்று நம்ப்பி ஒரு புன்னகை பூத்தவாறே கேட்டார், "என்ன யோசிக்கிறே?"

"ம்ம்ம்.. இந்த மலை இருக்கிறதால ரோட் சைட்ல எக்ஸ்கவேட் பண்ணி பைப் லேயிங் செய்ய வாய்ப்பில்லை. பாறைல ஸ்ட்ராப் அடிச்சுத்தான் கொண்டு வேணும். இதால நிறையப் பிரச்சினை. கஷ்டம்! எதிர்காலத்தை யோசிக்காம ஒரு மலையை அவசரப்பட்டு உருவாக்கிட்டார். அவர் தேவை என்ன? அந்த யுத்தத்தை நிறுத்தியிருக்க வேணும் அவ்வளவுதானே?"

"பேசாம அந்த துட்டகெமுனவையும் மற்ற கெமுனுவையும் போட்டுத் தள்ளியிருக்கலாம்ல?"


**********

பாடசாலையின் பழையமாணவர் சங்க வருடாந்த ஒன்றுகூடல்! பேசிக் கொண்டிருந்தோம். என் பின்னால் இருந்த இருக்கையில் ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார். திரும்பிப் பார்த்துவிட்டு 'இந்த அக்காவும் எங்க ஸ்கூல்லதான் படிச்சிருக்காங்க போல'. இடையில் பேசும் போது ரூபன் அண்ணன் "டீச்சர் உங்களுக்கே தெரியும்தானே" என்றார்.

'டீச்சரா?' மறுபடியும் திரும்பிப்பார்த்தேன். லேசாகச் சிரித்த மாதிரி இருந்தது. தெரிஞ்ச மாதிரியும் இருக்கு..ஆனா தெரியல.. பார்த்திருக்கிறேனே பெயர் ஞாபகப்படுத்த முயன்றேன். முடியலை. 'ஒகே இப்ப படிப்பிக்கிற டீச்சர்னா எனக்குத் தெரிய வாய்ப்பில்லை' நினைத்துக் கொண்டேன்.

பின்பு கேட்டேன், "டீச்சர் நீங்க எப்பலேருந்து படிப்பிக்கிறீங்க?"
"93 லருந்து எங்கட ஸ்கூல்தான்"
"நான் 96 ல வந்தேன். அப்பிடின்னா எனக்கு உங்களைத் தெரியுமா?" அறிவுபூர்வமாகக் கேட்க,
"உன்னை எனக்குத் தெரியுதுடா... அப்பிடியே இருக்கே நான் விக்கி டீச்சர்டா" தமிழ் டீச்சர்.
"அய்யய்யோ நீங்களா மிஸ்? அப்பவே யோசிச்சேன் எங்கயோ பாத்திருக்கேன்னு பேர் ஞாபகம் வரல்ல" அசடு வழிந்து சமாளித்தேன்.

இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு ஞாபகம் வைத்திருக்கும் அளவிற்கு அப்படி என்ன சம்பவம் நிகழ்ந்தது? என யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பாருங்கள் ஸ்கூல் லீவ் பண்ணி சரியா ஒரு வருஷம்கூட ஆகாத நேரம். ஒரு டீச்சர் என்னைக் கண்டதும் மிகுந்த உற்சாகமாகி ஏதோ கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்ட மகிழ்ச்சியுடன்,

"தம்பி உம்மட அண்ணா என்னட்டைப் படிச்சவரல்லோ?"
"அந்த அண்ணாவே.. நான்தான் மிஸ்!"

இந்த ஒன்றுகூடல் சம்பவத்தைப் பகிர்ந்ததும் நண்பன் கேட்டான், "அதெப்பிடி அவ்வளவு பேர் படிச்ச இடத்தில இத்தனை வருஷம் கழிச்சு உன்னை ஞாபகமிருக்கும்? "

"அதே டவுட்தான் மச்சி எனக்கும்" பிறகு யோசிக்கும்போது தோன்றியது இரண்டு சாத்தியங்கள்.

"முதலாவது, ஒரு ஸ்கூலில், அல்லது எங்கேயுமே 'ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு'கள்தான் பெரும்பான்மை. ஆக, இதில எந்தக் குமாரைப் பார்த்தாலுமே தெரிந்த குமாராகத் தோன்றலாம்"

"இரண்டாவது சாத்தியம்,  ஒரே இனத்தை, ஒரே வயதைச் சேர்ந்த இருபது குரங்குகளுக்குப் பெயரிட்டு, 'இதில் ராமுவைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம்' என்று யாரவது கூறினால் எங்களால் வித்தியாசப்படுத்த முடியாது. எல்லாமே ஒரே மாதிரித்தான் தெரியும்.அதே நேரம் எங்கேயோ காட்டில நாம் பார்க்கும் குரங்குகூட 'அட நம்ம ராமுல்ல இது?' என்று பார்த்தமாதிரியே தோணும்"

"இப்ப நீ என்ன சொல்ல வர்றே?"

"இல்ல மச்சி டீச்சர் உன்னைப் பார்த்திருந்தாலும் தெரியும்னுதான் சொல்லியிருப்பாங்க"

**********

க்கு எனப்படுவது யாதெனில்...
நண்பர்களிடையே தொடர்புகளைப் பேணிக் கொள்வதில் எங்களை யாருமே அடிச்சுக்க முடியாது. ஒரு மதிய நேரத்தில் நண்பன் தொலைபேசினான்.

"மச்சி எப்பிடிரா இருக்க?"
"மச்சி நீ எங்க இருக்க? வேலைலயாடா? இப்ப நீ பிசியா மச்சி?"

நான் மிக அக்கறையாகக் கேட்டதும், புரிந்து கொண்டு சிரித்தான்,
"ஒக்கே மச்சி நீ பிசியா இருக்கேன்னு தெரியுது.." இல்லாட்டி என்ன நண்பன்?

"நான் நைட் கோல் பண்றேண்டா!" என்றேன். 
"ஓக்கேடா!"

அவ்வளவுதான். அன்றிரவு பேசவில்லை. அதற்குப்பிறகு இடையிடையே 'இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும்' நினைத்துக் கொள்வேன். பிறகு வழமைபோல மறந்து விடுவேன்.

இரண்டு நாளைக்கு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன். 
பேசும்போது மேற்கண்ட அந்தச் சம்பவத்தை நினைவூட்டினேன். அவனும் மறந்து போயிருந்தான். பிறகுதான் நினைவு வந்து அந்த அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னான்.

சம்பவம் நடந்தது போன வருஷம் டிசெம்பர் மாதமாம்!

**********

ரியான நேரத்தில சரியான முடிவை எடுக்கிறதுதான் புத்திசாலித்தனம்!

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இலேசாக மழை தூறல் போட ஆரம்பித்தது. வீட்டுக்கு இன்னும் ரெண்டு நிமிஷ நடைதான். மழை பிடித்துக் கொண்டால் எப்போது விடும் என்று சொல்லமுடியாது. ஒதுங்கி நிற்கவேண்டாம் எனப் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தேன்.

எதிர்பாராமல் தூறல் சற்றுப் பலமானது. வேகத்தைக் கூட்ட, மழையும் இணைய ஓட்டமும் நடையுமாக வீட்டையடைந்தபோது, அரைநிமிடத்துக்கும் குறைவான அடைமழையில் தெப்பலாக நனைந்து விட்டேன்.

படியேறும்போது கவனித்தேன். சுத்தம்! மழை சுத்தமாக நின்றுவிட்டிருந்தது.

அதைவிட சோகம், வீட்டிலிருந்த ஆத்துமா ஒன்று "மழையே பெய்யல எப்பிடிடா நனைஞ்சே?" கையை வேறு பால்கனிக்கு வெளியே நீட்டி, அண்ணாந்து பார்த்தது.
"மழை பெய்யுதான்னு சினிமா ஹீரோயின் மாதிரி மேலே மட்டும்தான் பாப்பீங்களாடா? கீழ பாருங்கடா ரோட் நனைச்சிருக்கு"

நல்லார் ஒருவருக்காக மழை பெய்யுமாம். சமயத்தில், ரொம்ப நல்லவன் ஒருத்தன மட்டும் நனைக்கக்கூட பெய்யுமாம்!

Thursday, October 3, 2013

ராஜாராணி - சமகால யதார்த்த சினிமா!



ன்றைய இளைஞர்களின் வாழ்வியலை இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்த படைப்பொன்று சமீபகாலத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. காதல் என்பதை வெறும் கச்சாப் பொருளாக மட்டும் உபயோகித்து எடுக்கப்படும் அபத்தக் குப்பைகளுக்கு மத்தியில், இருவருக்கிடையிலான உணர்வுச் சிக்கலை மைய இழையாகக் கொண்டு யதார்த்த நிலையிலிருந்து சற்றும் விலகாமல் வெளிவந்திருக்கும் 'ராஜாராணி' தமிழின் புதிய அலை சினிமாவின் ஆரோக்கியமான நல்வரவு!

ஒரு பார்வையாளனாக மனதுக்கு நெருக்கமாகவும் உன்னதமான அனுபவத்தை எனக்களித்த ஓரிரு காட்சிப் படிமங்களை விபரிப்பதேயன்றி, படத்தின் கதையைக் கூறுவதோ, விமர்சனம் செய்வதோ அல்ல என்பது என் துணிபு.

ந்தவகையில் முதற்காட்சி...
தேவாலயத்தில் ஒரு திருமணம் நிகழவிருக்கிறது. திருத்தந்தை அந்தப்பெண்ணை மணமுடிக்க சம்மதமா? என அறைகூவுகிறார். நாயகன் மெதுவாக திரும்பி தயக்கத்துடன் நண்பனைப் பார்க்கிறான். நண்பன் 'பயப்படாமல் சம்மதி பார்த்துக் கொள்ளலாம்' எனப் பார்வையாலேயே தைரியம் (குணச்சித்திரம்) சொல்கிறான். நாயகன் தெளிந்து சம்மதிக்கிறான். இன்றைய இளைஞர்கள் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறு காட்சியிலேயே உணர்த்திவிடும் நுட்பமான 'இயக்குனர் தொடுகை' அது என்பேன்.

முன்னைய காலங்களில் மணமக்களின் விருப்பத்தை, சம்மதத்தைப் பெற்ற பின்புதான் திருமணத்தையே நிச்சயிப்பர் பெற்றோர். தேவாலயத்தில் கேட்கப்படும் சம்மதம் என்பது ஒரு சம்பிரதாயம் அல்லது சடங்கு மட்டுமே. ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்ப அவசரகால யுகத்தில் அதெல்லாம் சாத்தியமாவதில்லை என்கிற உண்மை போகிறபோக்கில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னர் பார்த்தோ, பேசியோ இராத இருவரை நேரடியாக மணநிகழ்வில் வைத்து  சம்மதம் கேட்டு முடிவெடுக்கக் கோரும் இந்தநிலை ஆரோக்கியமானதா என ஆராயப்படவேண்டியது ஒருபுறமிருக்க, சமகாலச் சினிமாவில் முதன்முறையாக இது சரியாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இப்போது சம்மதத்தைப் பெண்ணிடம் கேட்கிறார். நாயகி மிக மிக மெதுவாகத் தந்தையை நோக்கி முழுவதுமாகத் திரும்பி நிற்கிறாள். வசனங்கள் ஏதுமில்லை. அல்லது பார்வையாளனின் கற்பனைக்கே விடப்படுகிறது. நாயகியின் பார்வை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' என்பது போலிருக்கிறது. திருமணத்திற்கு வந்தவர்கள் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கிறார்கள். மகளைப் புரிந்து கொண்ட, அவள் உணர்வுகளை மதிக்கும் நவீன தந்தை புன்னகைக்கிறார். உனக்கு சம்மதம் என்றால் சரி திருமணத்தை முடித்துவிடலாம். இல்லை என்றாலும் சரி ஒரு கேக்கோ, ஐஸ்கிரீமோ வாங்கிக் கொடுத்து அந்தப் பையனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்பதான உணர்ச்சியை வெளிபடுத்துகிறார்.

இதுவே முன்னையகால சினிமாவாக இருக்கும்பட்சத்தில், திருத்தந்தை அவசரப்பட்டு "என்ன மிஸ்டர் டேவிட், பொண்ணு சம்மதமில்லாமல்தான் இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்தீர்களா?" என அறிவுபூர்வமாக பேசுவதாக நினைத்து அதிகப்பிரசங்கித்தனமாக கேள்விகேட்டு,காரியத்தையே கெடுத்துவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் 'காலத்தோடு புதுப்பித்து வாழ்ந்துவரும்' (Up to date) இந்த திருத்தந்தை அவ்வாறு நடந்துகொள்வதில்லை.

நாயகி மீண்டும் புன்னகையுடன் மிக நிதானமாகத் திரும்புகிறாள். அவள் முடிவு செய்துவிட்டாள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது, பெண்கள் தம் வாழ்க்கை பற்றி மிக நிதானமாக ஆழ்ந்து யோசித்தே முடிவு செய்வதென்பதில் எப்போதும் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.

'இவ்வாறு தெளிவாக இருக்கும்' நாயகி, "சூர்யாவைத் திருமணம் செய்ய சம்மதம்" என்கிறாள். துரதிருஷ்டவசமாக அங்கே சூர்யா என யாரும் இருப்பதில்லை!

இந்த இடத்தில் ஒவ்வொரு பாத்திரமும் வெளிப்படுத்தும் உணர்வுகள் மிக முக்கியமானவை. உடனேயே நாயகி தன் தவறை உணர்கிறாள். வருத்தப்படுகிறாள்.

நாயகனின் நண்பனோ அதிர்ச்சியுடன் தலையில் கை வைக்கிறான். 'ஒரு வேளை அவன்தான் சூர்யாவோ' எனப் பார்வையாளன் குழம்பி, 'இருக்கமுடியாது, அவனுக்கும் ஏற்கனவே சூர்யாவைத் தெரிந்திருக்கலாம் ' எனத் தெளிகிறான்.

மணமகனான நாயகனோ ஒருகணம் மிகுந்த மகிழ்ச்சி பொங்க புன்னகைக்கிறான். அதுவரை ஏதோ ஒரு குழப்பத்தினால் பீடிக்கப்பட்டிருந்த அவனுக்கு, 'தான் தனியாக இல்லை' என்ற ஓர் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத் தென்படுகிறது. இது தேவாலயத்தில் நிகழ்வதுதானே முறை? - இன்னுமோர் நுட்பமான 'இயக்குனர் தொடுகை' 

கா.பு.வா. திருத்தந்தை அதிர்ச்சியடைவதில்லை. 'இங்கே திருமணம் செய்துகொள்ளும் பெரும்பாலான பெண்கள் சமபந்தமில்லாதவன் பெயரைத்தான் சொல்கிறார்கள், இதெல்லாம் இங்கே சகஜம்' என்பதுபோல அமைதி காக்கிறார்.

ஆனால் மணப்பெண்ணின் தந்தை ஏனோ அதிர்ச்சியடைந்து நெஞ்சைப் பிடித்துகொண்டு சாய்கிறார். பார்வையாளனுக்கும் அதிர்ச்சி! நாம் அவர்மீது கட்டமைத்த பிம்பம் போல அவர் நவீன தந்தை கிடையாது. பழைய தலைமுறையை, சற்றேறக்குறைய 'மௌனராகம்' காலத்தைச் சேர்ந்த, அந்தக் காலகட்டத்திலேயே தேங்கிவிட்ட மனநிலையோடு வாழ்பவர் என்பது புரிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி!

படத்தில் மணப்பெண், நாயகனின் நண்பன் தவிர, மணப்பெண்ணின் தந்தைக்காக யாரும் அங்கே அதிர்ச்சியடைவதில்லை. 'இதைவிட இன்னும் ஏதாவது சுவாரஸ்யமாக  நடைபெறலாம்' என்பதுபோல கூட்டம் அசையாமல், ஆர்வமாக வேடிக்கை பார்க்கிறது. 'அப்படியொன்றும் அசம்பாவிதம் நடைபெற திரைக்கதை அனுமதிக்காது'என்பதுபோல மணமகனும் அலட்டிக் கொள்வதில்லை. திருத்தந்தையும் 'ஆறுதலாகக் கலந்து பேசி ஒருமுடிவுக்கு வாங்கப்பா' என்பது போல காத்திருக்கிறார். இவ்வாறு இனிதே நடைபெறுகிறது திருமணம்.

கைச்சுவைக் காட்சி பற்றி அவசியம் கூறவேண்டும். நமக்குப் பிடிக்காதவர்களை விட்டு விலகிவிடுவது, தவிர்த்துவிடுவது என்ற பழமைவாத சிந்தனைகளை விடுத்து 'கூடவே இருந்து குடைச்சல் கொடுப்பது ' என்ற புதிய நாகரீகமான படித்த இளைஞர்களின் தாற்பரியத்தின்படி, நாயகன் படுக்கையறையில் சத்தமாக தொலைக்காட்சி பார்க்கும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்காட்சிகளை,இன்றைய நகரமயமாக்கலின் விளைவான அடுக்குமாடிக்குடியிருப்புகளின் ஒற்றைப் படுக்கையறையும்,அங்குள்ள ஒற்றைக் கட்டிலையும்,அதில் ஒரேயொரு போர்வையை மட்டுமே அனுமதிக்கும் கடும் நெருக்கடிமிகுந்த அவல வாழ்வைச் சொல்லும் 'கறுப்பு நகைச்சுவை' எனலாம்.  தமிழர்களின் நகைச்சுவையுணர்வு குறித்த கவலையினை வெளிப்படுத்திவரும் ஆர்வலர்களுக்கு, இனி அதுபோன்ற சந்தேகங்கள் வரச் சாத்தியமில்லை என்றே நம்புகிறேன்.

ருகட்டத்தில் தன் மனைவியின் பெயர் தெரியாது என்கிறான் நாயகன். பெண் மருத்துவர் அதிர்கிறார். ஆனால், யதார்த்த நிலை அறிந்த பார்வையாளன் யாரும் அதிர்ச்சியடைவதில்லை. இந்தக் காட்சி மிக முக்கியமான விடயத்தைக் கூற விழைகிறது. அதுதான் காதல்! 

காதல் தொடர்பான சமகால இளைஞர்களின் நிலை, மதிப்பீடு பற்றிச் சொல்கிறது. எவனொருவன் முதன்முறை காதல் வயப்படுகிறானோ அப்பொழுதே அவன் மனம் முழுதும் காதலி வந்து நிரம்பிக் கொள்கிறாள். அந்த இடத்தை பின்பு வேறு யாராலும் பிரதியீடு செய்ய முடிவதில்லை. மரணப் படுக்கைவரை மறக்க முடிவதில்லை. பத்து இருபது வருடத்திற்குமுன்னர் காதலித்தவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம். ஆனால் இதுதான் இன்றைய யதார்த்தம்.

சூழ்நிலை கருதி வேறொரு பெண்ணை போனால் போகிறதென்று திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் மனைவி பெயரைத் தெரிந்துகொண்டோ, அலைபேசி இலக்கம் பகிர்ந்துகொண்டோ தம் தனித்துவத்தை இழக்கவோ, காதலின் புனிதத்துவத்தை களங்கப்படுத்தவோ யாரும் சம்மதமாயில்லை. சந்தேகமிருந்தால் சோதித்துக் கொள்ளுங்கள். மனைவி பெயர் தெரியாது. ஆனால் காதலி பெயரை உடனடியாகச் சொல்லிவிடுவார்கள். அதுபோலவே பெண்களும், கவனம் ஒருமுறைதான் கேட்கவேண்டும்.

க, 'முழுக்க முழுக்க திரைப்படம் கூறும் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேனா?' என என்னை நானே நேர்மையாகக் கேட்டுகொள்ளுமிடத்து, 'இல்லை! நான் இயக்குனரோடு ஓரிடத்தில் கடுமையாக முரண்படுகிறேன் ' என்பதைச் சொல்லியேயாக வேண்டியிருக்கிறது.

தன்மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது மனித நேயத்துடன் நடந்துகொள்ளும் நாயகன், அதற்கு முற்றிலும் முரணாக முன்பொருமுறை அவள்மீது படுக்கையறையில் உச்சகட்ட வன்முறையைப் பிரயோகித்திருக்கிறான். ஆம், டி.ராஜேந்தர் என்பவரது திகில் காணொளியை சத்தமாக வைத்துப் பார்க்கிறான். இதுபோன்ற அதிர்ச்சியான காட்சியை இயக்குனர் பாலா படத்தில்கூட நான் பார்த்ததில்லை.

நல்ல சினிமாக்களுக்கு மக்களிடம் எப்போதுமே அமோக வரவேற்புக் கிடைத்தே வருகிறது. 'தெய்வத்திருமகள்', 'கண்ணா லட்டு திங்க ஆசையா?' சிவாவின் 'தில்லுமுல்லு', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தேசிங்குராஜா', வரிசையில் இந்தப்படத்துக்கும் அமோக ஆதரவையளித்தமையானது மேலும் இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்தும் வருவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது.

********

இந்தக் கட்டுரைக்கான ஆய்விற்காக (மனைவியின் பெயர் தொடர்பாக) நேற்று நண்பனுக்குத் தொலைபேசினேன். நேரம் இரவு 11.55.

"தங்கள் மனைவியின் பெயரை உடனடியாகக் கூற முடியுமா?"
"@#%^#$$&"
"அடைமொழியா மச்சி?"
#^$@%##  #$#$%^  #@%#$%  #$#%#^$ 
"ரைட்டு விடு!"
(தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லித் தொலைங்கடா!)

Friday, July 26, 2013

இந்த வாய் இருக்கே...



லுவலகத்தின் டைனிங் ஏரியாவில் ஓரிருவர் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். 
பக்கத்திலிருந்த சிங்களப் பெண், "என்ன சொல்றாங்க?" 
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். உடனே கேட்டாள் 
"உனக்கு சிங்களம் தெரியுது. தெரியாதுன்னு சொல்லிட்டிருக்கே?" ஆகா நமக்கு டெஸ்ட் வச்சிருக்காளா இது தெரியாம..
"அப்பப்ப கொஞ்சம்...வேலை சம்பந்தப்பட்ட விஷயம்னா புரியும்"
"அப்போ நாங்க பேசுறது எல்லாம் கேப்பியா?"
"என்னாதிது? அஃபீஸ்ல இருந்து நீ பேசினா……  ஏதோ ஒட்டுக் கேட்ட மாதிரி ரியாக்ட் பண்றே?"

அவள் சிரிச்சுட்டுத் தன்பாட்டுக்குதான் இருந்தாள். நம்ம வாய் இருக்கே வச்சுட்டு சும்மா இல்லாமல்,

"ஹே நீ ஒண்ணும் கவலைப்படாதே நீ boy  ஃபிரெண்ட் கூடப் பேசுறது எனக்குப் புரியாது. அந்த டெக்னிக்கல் டெர்ம்ஸ்(?!) எல்லாம் எனக்குத் தெரியாது" - அவ்வளவுதான்!

அப்படியே சிரிப்புடன் என்பக்கம் திரும்பி, "உனக்கு கேர்ள் ஃ பிரண்ட் இருக்கா?" 
"இல்ல.." - தேவையா எனக்கு? 
ரோலிங் செயார பக்கத்தில மூவ் பண்ணி 
"பொய் சொல்லாதே! ப்ளீஸ் சொல்லு! ஏன நீ எப்பப் பார்த்தாலும் பொய் சொல்றே?" 
"அடங்கொன்னியா இது வேறையா? ஏய் இது இப்ப ரொம்ப முக்கியம் போ போய் வேலையைப் பாரு வேலையப்பாரு!"  

தேவையிலாத நேரத்தில வாயத் திறக்காம இருந்தாலே வில்லங்கத்தை  தவிர்க்கலாம். அதுக்காக தேவையான நேரத்தில மட்டும் வாயத் திறந்தா வில்லங்கம் வராதுன்னு இல்லை. அப்பவும் வரும்
 - ஆனா தவிர்க்கமுடியாது. 

சரி தேவையிலாத நேரத்திலயும், தேவையான நேரத்திலயும் வாயை திறக்காம இருந்தா வில்லங்கம் வராதா? அப்பிடின்னு கேட்டா…அப்பகூட வரும்! 
ஏன்னா நாமதான் வாய மூடிட்டு இருப்பமே தவிர, நம்ம நண்பர்கள் எங்காவது இசகு பிசகா வாயத் திறந்திருக்கலாம்.

ண்பன் நைனா எதையும் வெளிப்படையாக, யோசிக்காமல் பேசும் நல்லவன். அவன் என் இன்னொரு நண்பனைப் பார்த்திருக்கிறான். அவன் ரொம்ப நல்லவன். சென்சிடிவ்வான பேர்வழி. சின்ன விஷயத்துக்கும் நிறைய ஃபீல் பண்ணுவான்.

நண்பனுக்கு நைனாவை முதலில் சரியாக அடையாளம் தெரியல. அப்பிடியிருக்க, நைனா கீழ்க்கண்டவாறு நலம் விசாரித்திருக்கிறான்.

"என்ன மச்சான் வேலையை விட்டுட்டியா?"
"ஓமடா..யார் சொன்னது?"
"ஜீ சொன்னான்டா"

எல்லாத்தையும் பண்ணிட்டு சின்சியரா எனக்குத் தொலைபேசி,
"மச்சான் Sorryடா இப்பிடிக் கேட்டுட்டன் என்ன நினைச்சானோ? பக்கத்தில வைஃப் வேற..."
"அடப்...பாவி!"

எப்பிடிடா இருக்கே? நல்லா இருக்கியா? இப்பிடித்தானே நலம் விசாரிப்பாங்க? அதானேய்யா உலக வழக்கம்? ‘வேலையை விட்டுட்டியா’- இது புதுசால்ல இருக்கு!

ண்பனைக் கண்டா நலம் விசாரிக்கிறது தப்பில்ல. ஆனா இன்னொரு நட்பைக் கோமா ஸ்டேஜில படுக்க வைக்கிற அளவுக்கு நலம் விசாரிக்கிறதுதான் தப்பு!

தை விட இன்னொரு டைப் இருக்கு. வோன்டட்டா போய் வடைச்சட்டிகுள்ள வாயை வைக்கிறது. வில்லங்கத்தை விலைக்கு வாங்கிறதைவிட நாமளே உருவாக்கினா என்ன? அப்பிடீன்னு யோசிக்கிற விஞ்ஞானிகள் கோஷ்டி!

"ச்சே! செம்ம பல்பு மச்சி! என்ன நினைச்சிருப்பான்... ச்சே"
நண்பன் ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தான்.
"என்னடா?"
"இல்ல மச்சான் அஃபீஸ்ல ஒருத்தி பயங்கர ஓவரா டிரஸ் பண்ணிட்டு வருவாள்"
"தமிழா?".
"ஒரு தமிழ் அப்பிடி வந்தாத்தானடா நியூஸ்?
"ஆமால்ல"

"அவளுக்குச் சம்பந்தமே இல்லாம டைட்ட்ட்டா என்னமோ கவர்ச்சிப் புயல் மாதிரியே வருவாள். சிங்கள கேர்ள்ஸ் கூட அங்க அப்பிடி வர்ரதில்ல. எல்லாரும் ஒரு மாதிரியா, கேவலமா பார்ப்பாங்க. பாக்க எங்களுக்கே அந்தரமா, எரிச்சலா இருக்கும். அண்டைக்கு ஆக ஓவரா வந்தாள் செம்ம காண்டாகி, பக்கத்தில இருந்த ஒரு அண்ணன்கிட்ட புலம்பிட்டேன். இதுகளை மாதிரி ஒண்டு ரெண்டுதான் எல்லாரையும் கேவலப்படுத்துதுகள். தமிழாக்களின்ர மானத்தை வாங்குறதுக்குன்னே வந்திருக்குதுகள். இதை எல்லாம் எங்கிருந்து பிடிச்சுக்கொண்டு வந்தாங்களோ? அப்பிடீன்னு"

"சரி அவன் என்ன சொன்னான்?"
"அவன் ஒரு நல்ல பெடியன் மச்சான். நெத்தியில வீபூதி வச்சுட்டு வாற பழம். அவனும் ஓமோம் எண்டு சீரியஸா கேட்டுக் கொண்டிருந்தான்"

"மச்சி இது நல்லால்ல! ஒருத்தி எப்படி வந்தா என்ன? அவள் டிரெஸ்ல அவளுக்கும், வீட்டுக்காரருக்கும் இல்லாத அக்கறை எங்களுக்கெதுக்கு? உனக்கு பிடிச்சிருந்தா சைட் அடி! பிடிக்கலன்னா கண்டுக்காத! நீங்க கலாச்சாரத்தைக் காப்பாத்துறீங்களா? அதென்ன திடீர்னு தமிழாக்களின் மானம், தமிழன் பெருமைன்னு, நல்லாத்தானே இருந்தே? டீவில ஏழாம் அறிவு பார்த்தியா?"

அவசரமாக இடைமறித்தான், "டேய் அவள் வர்றாள்டா....இங்கதாண்டா இருக்கிறாள் நேற்றுத்தான் தெரியும்" 

இன்னொரு நண்பனின் ஃபிளாட்ஸ்க்கு எதிரில்தான் நின்றுகொண்டிருந்தோம். அவள் கண்டுக்கல! கூட வந்தவர் நண்பனைப் பார்த்துச் சிரித்து "பார்ட்டி ஒண்டுக்குப் போறம்" சொல்லிட்டுப் போனார்.

"பாரு மச்சி! அந்தப் பொண்ணு பார்ட்டிக்கே பவ்வியமா மாரியம்மன் கோயில் குடை மாதிரி பச்சைக்கலர்ல ஒரு சிங்குச்சா சுடிதார் போட்டுட்டுப் போகுது அதப்போய் தப்பா பேசியிருக்க ராஸ்கல்.... ஆனா ஒண்ணு மச்சி இந்தப்பொண்ணு நீ சொன்னமாதிரி டிரஸ் பண்ணும் அப்பிடின்னு யோசிச்சா எனக்குக்கூட  லைட்...டா கோபம் வரத்தான் செய்யுது. அத விடு இப்ப என்ன பிரச்சினை?"

"தேவையில்லாம கதைச்சு... அவளுக்கும் தெரிஞ்சுதோ?"
"அதெப்பிடிறா தெரியும்? அந்தப் பழம் இதைப்போய் சொல்றானா?"
"டேய் அவன்தாண்டா இப்ப அவளோட போனது"

"....??"

"அந்தப்பழம் அவளின்ர அண்ணன்டா நேற்றுத்தான் தெரியும்!"

Friday, January 25, 2013

காதல் தியாகிகள்!


தியாகம் என்பதும் ஒருவகை போதைதான். நான் தியாகி என்று சொல்லாமல், அல்லது அவையடக்கத்துடன்(?!) சொல்லிக் கொள்வதில் ஒரு அளவு கடந்த மகிழ்ச்சி கிடைப்பதாகத் தெரிகிறது. ஆனால் பாருங்கள், பலருக்கு தியாகம் செய்வதற்கு வசதியான சுதந்திரப் போராட்டங்கள் அமைவதில்லை. 'நான் ஒரு தியாகி' என்று உயிருடன் இருந்து சொல்லக்கூடிய உத்தரவாதமான சுதந்திரப் போராட்டம் எங்கேயும் நடப்பதில்லையே!

அந்தக் குறையைக் காதல் தீர்த்து வைக்கிறது. காதல் தியாகிகள் பலர் நம்மிடையே பரவலாக வாழ்கிறார்கள். இருப்பினும் காதலில் தியாகம் செய்கிறார்களா?தியாகம் செய்யப்படுகிறார்களா என்பது ஆராயப்படவேண்டியது.

அலுவலகத்தில் காதல் தியாகியான நண்பன் ஒருவன். அவனின் தியாகம் தொடர்பில் அவனுக்கு எக்கச்சக்கமான பெருமை இருந்தது. தன் காதல் வரலாற்றை அன்றைக்கும் யாருக்கோ புதுசா, உருக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் கெட்ட நேரம் நானும் அங்கே  இருந்து தொலைத்துவிட்டேன்.

"ரெண்டுபேரும் மூணு வருஷம் சின்சியரா லவ் பண்ணினோம். அவளுக்கு திடீர்னு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்தாங்க. எனக்கு அப்போ வேலையில்ல. எனக்கொரு வேலை கிடைச்சா அவள் வீட்ல சொல்லியிருக்கலாம். நானும் வேலைக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினேன். கிடைக்கல. இப்ப பார் எல்லாம் இருக்கு. அவ கட்டிப் போன அடுத்த வருஷமே எனக்கு வேலை கிடைச்சிட்டுது. கொஞ்சநாள் எல்லாமே வெறுத்துப் பொய் இருந்தேன். ஏதோ அவள் நல்லா இருந்தாச் சரின்னு.... அவள் நிறைய பீல் பண்ணினாள். என்ன செய்யிறதுன்னு கேட்டாள்.  நான்தான் பிரிஞ்சிடலாம்னு சொன்னேன்.நான் சொன்னதாலதான் அவள் அந்த மாப்பிள்ளையைக் கட்டினாள்"

"இரு இரு என்னமோ உதைக்குதே" என்றேன். ஃபீல் பண்ணிக்கொண்டிருந்த பயபுள்ளைகள் எல்லாம் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தர்கள்.

'தேவையா இது எனக்கு?ஏழு வருஷமா தியாகிங்கற நினைப்பில , மிதப்புல இருக்கிறவனை எதுக்கு குழப்பிவிடணும்?' ஆனாலும், ஒருவனின் அறியாமையைப் போக்க வேண்டிய சமூகப் பொறுப்பு(?!) இருக்கே!

"சரி மாப்பிள்ளை பாக்கேக்க அவள் என்ன கேட்டாள்ன்னு சொன்னே ?"

"என்ன செய்யிறதுன்னு"

"இது.. இது.. என்ன செய்யறதுன்னு கேட்டாளே அங்கயே உன் லவ் பணால் ஆயிடுச்சு! லவ் பண்ணிட்டு, என்ன செய்யிறதுன்னு கேட்கிறதே போங்காட்டம். அப்பவே அவள் என்ன செய்யிறதுன்னு ஒரு முடிவு எடுத்துட்டாள்ன்னு அர்த்தம்.."

"அதெப்பிடி எனக்கு வேலையில்ல நாங்க எப்பிடி?"

"ரெண்டு வருஷம் வெயிட் பண்ண முடியாதா? இருபத்திரண்டு வயசுதானே அப்போ! சரி விடு லவ் பண்ற விஷயத்தை அவங்க வீட்ல யாருக்காவது சொன்னாளா?"

"இல்ல எப்படி சொல்றது?"

"அது! அங்கதான் இருக்கு மேட்டர்! எங்கே வீட்ல சொன்னா அவங்க வீட்டுக்காரரே வெயிட் பண்றோம்னு சொல்லிட்டு, வெளிநாட்டு மாப்பிள்ளைய வேணாம்னு சொல்லிடுவாங்களோன்னு.."

"அப்பிடியானவளா இருந்தா எதுக்கு என்கிட்டே வந்து என்ன செய்யிறதுன்னு கேட்டிருப்பாள்?"

"இது பொயிண்ட்! ஏன்னா ஒருத்தனை ஏமாத்திட்டோம்னு உறுத்தாம வாழணுமில்ல. இப்பிடிக் கேட்டதால அவளும் உன்னை ஏமாத்தல! நீயும் தியாகியாகிட்டே! அத வேற பெருமையா சொல்றே. இதத்தான் ஒரு சொல்லு பல மாங்காய்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க ...நாட்டில மாங்காய்களுக்கா பஞ்சம்?

"சரி நீ சொல்ற மாதிரியே வச்சுப்போம் சப்போஸ் நான் இல்லைன்னு சொல்லியிருந்தா?"

"சொல்ல மாட்டேன்னு தெரியும்"

"அதெப்பிடி?"

"தப்பா எடுத்துக்காத மச்சி! மூணு மாசம் பழகின எனக்கே தெரியுது, மூணு வருஷம் லவ் பண்ணின அவளுக்குத் தெரியாதா.....நீ ஒரு கேணைன்னு..."

"சரி சரி முறைக்காத ஆக்சுவலா நீ தியாகியே இல்ல. மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலை ஆண்.."

"ஆனா ஒண்ணு மச்சி! ஏமாந்ததே தெரியாம ஏழு வருஷமா தியாகிங்கிற மிதப்போட வாழ்ந்திருக்க பாரு  ச்சே! அத நினச்சாதாண்டா என்னால தாங்க முடியல!"

"..."

"இத இப்பிடியே விடக் கூடாது மச்சி நைட் நீ  பார்ட்டி வைக்கிறே.. எல்லாரும் தண்ணியப் போட்டுத் துக்கத்தை அனுஷ்டிக்கிறோம்!"

"அப்புறம் வேற யாராவது காதல் தியாகிங்க இருந்தா லைன்ல வந்து உங்க கதையச் சொல்லுங்க"

Thursday, January 10, 2013

நீ.எ.பொ.வ.- சமந்தாவும், மூக்குத்தியும்!


நீதானே என் பொன் வசந்தம் – நேற்று எதுவும் செய்ய முடியாத ஒரு வெறுமையான, வெறுப்பான பொழுதில் சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன். 'ஒரு பொண்ணையாவது வாழ்க்கைல லவ் பண்ணினவங்களுக்கு படம் பிடிக்கும்'னு கௌதம் மேனன் சொல்லியிருந்ததால் நான் முதலில் டீசண்டா பார்க்காமல் தவிர்த்திருந்தேன்.

போற போக்கில ஒரு வார்த்தைய தெரிஞ்சோ தெரியாமலோ சொல்லிட்டுப் போறது எவ்வளவு வில்லங்கத்தைக் கொண்டு வந்திடுது பாருங்க.

யாழ்ப்பாணத்தில் நம்மாளுங்க சிலர் கூடவே படிக்கிற ஒரு பொண்ணை 'ச்சூஸ்' பண்ணுவானுங்க. அப்புறம் அது டியூஷன் போகும்போது வீட்டுக்கும் டியூஷனுக்கும், சில பேர் ஸ்கூலுக்கும் ஃபாலோ பண்ணுவானுங்க. அந்தப் பொண்ணு சைக்கிள்ல போகும் இவனுங்க பின்னாடி நாற்பதடி தூரத்தில நாலு கிலோமீற்றர் தூரம் சைக்கிள்ல பின்னாடியே வீடுவரைக்கும் கொண்டுபோய் விடுவாங்க. அத வேற காவியக் காதல்னு அளந்துக்கிட்டிருப்பாங்க. இதில கொடுமை என்னான்னா அந்தப் பொண்ணுக்கு இந்த விஷயம் தெரிஞ்சே இருக்காது.

தெரிஞ்சாலும் அதை ஒரு காவல் நடவடிக்கையா பார்ப்பாங்களே தவிர காதலா பார்க்க மாட்டாய்ங்க. ஏன்னா, அவங்க வீட்டிலருந்து மெயின் ரோடு வரைக்கும் ஏற்கனவே அவங்க வீட்டு நாய் பின்னாடியே வந்து காவல் டியூட்டி பார்த்திருக்கும். அப்புறம்தான் அந்த நாய் டியூட்டிய இவனுங்க வான்டட்டா போயிப் பார்ப்பானுங்க. 

இப்ப என்னடான்னா நீ.எ.பொ.வ. படம் பார்த்ததும் இந்த 'டியூட்டி' பார்த்த பயபுள்ளைங்களுக்கு எல்லாம் பழைய 'காதலிச்ச' ஞாபகம் வந்துட்டுதாம். ஃபீல் பண்ணுறாங்களாமாம். என்ன கொடுமை சமந்தா இது?


பெண்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கும்போது, தாங்கள் எதிர்பார்த்த ஒரு சின்ன விஷயம் கூட எதிர்பாராத ஒரு தருணத்தில் நிகழ்ந்துவிடும்போது அவர்களின் ரியாக்சன் அவர்களின் நடை மிகச் சின்னச் சின்ன காலடிகளை மிக  வேகமாக வைத்து  கைகளைப் பக்கவாட்டில் உடலோடு இறுக்கிக்கொண்டு, சற்றே பம்மிக்கொண்டு ஒரு சிரிப்பு.. இதையெல்லாம் ஞாபகப்படுத்தியது காபி சாப்பிட ஜீவா அழைத்ததை சமந்தா தன் தோழிகளிடம் சொல்லும் காட்சி.

ஆனா ஒண்ணு, அடிக்கூந்தலில் ஒரு இன்ச் வெட்டிட்டு, அது முகத்தில தெரியும்னு நம்பி 'ஒரு வித்தியாசம் கண்டு பிடி பார்ப்போம்'னு கேட்பாங்க பாருங்க அந்தக் கொடுமைய லவ் பண்ணின பல பேர் அனுபவிச்சிருக்கலாம்.

முதன்முதல் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்தபோது தோன்றியது சமந்தாவின் மூக்குத்தி, ஆமா அது மூக்குத்திதானே? அவ்வளவு அழகு! மூக்குத்தி ஒரு பெண்ணுக்கு அவ்வளவு அழகாக இருக்குமா? சமந்தா அழகாக இருப்பதால் மூக்குத்தி அழகாகியதா இல்லை..... ஆச்சரியமாக இருந்தது. மூக்குத்தி சில வேளைகளில் தெய்வீகமான ஒரு அழகைக் கொடுத்துவிடுவது உண்மைதான்.

மூக்குத்தி இப்போதெல்லாம் யாரும் அணிவதில்லைப் போலும். பெண்களிடம் மிக அருகிப்போன சமாச்சாரமாகிவிட்டது இல்லையா? என்றேன் நண்பரிடம். "அடப் போங்க பாஸ் மூக்கு என்கிறதே இப்பல்லாம் பெண்களிடம் அருகிப் போயிட்டுது" என்கிறார்.

ஒருவேளை விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசி மாதிரி நித்யாவும் எல்லோரிடமும் நல்லா ரீச் ஆகியிருக்கும் பட்சத்தில், நம் பெண்களிடையே வெகுவாக அருகிப்போன மூக்குத்தி அணியும் கலாச்சாரம் மீண்டும் துளிர்த்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அதில் ஓர் ஆபத்துமிருக்கிறது.  அது சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகக் கூட அமைந்துவிடக்கூடும். சமந்தாவைப் பார்த்து மூக்குத்தி அணிந்து கொள்வதென்பது பேஸ்புக் ப்ரோபைல் ல சமந்தா போட்டோ போடுறது போல ஈசியான விஷயமல்ல. நமக்கிருப்பது கூட மூக்குத்தானா என்பதை ஒருமுறை உறுதிப் படுத்திக் கொள்வது மிக அவசியம்.

Saturday, November 3, 2012

காதல், ஜீ, பெண்ராசி - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!


பஸ்ல காதல் படம் போட்டிருந்தாங்க. 
பரத்! - நல்ல நடிகரா இருந்தார். பாய்ஸ்ல வந்த பசங்கள்ளயே முதல்ல தேறி வந்தவர் அவர்தான்.

Tuesday, September 18, 2012

ஃபேஸ்புக் அலப்பறைகள்!



வேலைன்னு வந்துட்டா நமக்கு வேற எதுவுமே நினைப்புல இருக்காது அவ்ளோ சின்சியரான ஆளுங்க! அக்கம்பக்கத்தில என்ன நடக்குதுன்னே பாக்காம சமயத்தில கீ போர்டை விட்டுட்டு மேசைல தட்டிட்டு இருப்போம்னா பாருங்க!

Friday, August 31, 2012

சிங்களப் பாடல்கள் - ஓர் இசை அற்புதம்!



"உனக்கு சிங்களப்பாட்டு பிடிக்குமா?"

அலுவலகத்தின் உணவு வேளையின்போது சிங்களப் பொண்ணு ஒண்ணு கேட்டது.

Thursday, April 19, 2012

என்னா பார்வை!

என்ன பார்வைடா சாமி! இப்படியொரு பார்வையை நான் வாழ்க்கைல சந்திச்சதேயில்ல!

பொதுவா பொண்ணுங்க நம்மளைப் பார்த்தாலே முறைச்சுத்தான் பாப்பாய்ங்க அதெல்லாம் நமக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல! ஆனாலும் இந்த வாட்டி ரொம்ப கொலவெறியோட, கொடூரமா!

Wednesday, December 14, 2011

யாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்! - நம்மவர்!



'யாழ்ப்பாணம் இப்ப ரொம்ப மோசமாமே?' 

பொண்ணுங்களுக்கும் நமக்கும் எப்பவுமே ஆவுறதில்ல!நாம இருக்கிற ஏரியாலயே பொண்ணுங்களைக் காண முடியிறதில்ல!எப்பவாவது அலுவலகத்தில ஒன்றிரண்டு பேரைப் பார்த்தாலும் நாம அவங்க வழிக்கே போறதில்ல! ஆனா பாருங்க நம்மளப் பார்த்த உடனேயே கட்டம் கட்டிடுவாய்ங்க போல! வலிய வம்பிழுக்கிறதுன்னு முடிவு பண்ணிடுவாய்ங்க! நம்ம ராசி அப்பிடி!

Monday, October 31, 2011

ஏழாம் அறிவும் தமிழன் தாஸும்!


பேரூந்தில் கண்டக்டரிடம் பத்து ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிச் சில்லறை சிங்களம் தெரியாததால்,  தெரிந்தும் கேட்க முடியாமல்...தயக்கம், பயம் ....இந்த அனுபவத்தை ஒரு முறையாவது சந்திக்காத தமிழன் கொழும்பில் உண்டா?

Friday, August 26, 2011

'நாய்'மொழி!



'டோன்ட் கோ அவுட்... டோன்ட் கோ!'

சொல்லிக்கொண்டே வெளியில் வந்தது ஒரு சிறிய ஹை-கிளாஸ் நாய்.

என்னைப்போலவே நண்பனும் கலவரமானான். அவனும் இதுவரை நாய் பேசியதைப் பார்த்ததில்லை போலும்! நாயா பேசிச்சு? சரியாக குரல் பொருந்தினாலும் இந்த நாயால் இவ்வளவு சத்தமாக..ஆக்ரோஷமாக..?

இந்த நாயா பேசிச்சு?

Thursday, April 21, 2011

பிரபஞ்சத் தளபதி ஜீ..! (பெயர்க்காரணம் -தொடர்பதிவு)


கண்களைத் திறக்க முயன்று... முடியவில்லை..மெதுவாக மிக மெதுவாக..!
பேரொலியுடன் மின்னல் வெட்டி, வானம் கிழிந்து திடீரெனப் பொழியும் பெருமழை! முன்னாள் ஒரு ஜோடிக்கால்கள்.... விழிகள் விடிய ஒன்று, இரண்டு, நான்கு பத்தாகிப் பலவாகி...! மெல்லத் தரையில் கையூன்றி, அண்ணாந்து வான்பார்த்து எழமுயல... சூழ்ந்த மக்கட்கடலின் குரலொலி அலையென ஆர்ப்பரிக்கிறது 'ஜீ...! ஜீ...!! ஜீ...!!!'

ஒக்கே கட் கட்! இத்தோட நிறுத்திக்குவம்!

என்ன பாக்கிறீங்க? புரியலையா? எனக்கு அப்பிடி ஜீ...ன்னு பேர் வந்ததுன்....
ஏய் ஏய் ஏய்! நோ பேட் வேட்ஸ்! அமைதியா இருக்கணும் கொந்தளிக்கப்படாது!

அது பாத்தீங்கன்னா ஆக்சுவலா மக்களா எனக்கு விரும்பக் கொடுத்....
டாய்..! அழப்படாது! அசிங்கமா இல்ல? ? என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

எப்பவுமே நாலு பேருக்கு நல்லது...

யாரப்பா கல்லைத்தூக்குறது? வேணாம். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்! 
கல்லைத் தூக்கினவங்க எல்லாம் கீழ போடுங்க....!

நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் எல்லாரும் கல்லோட தானைத் தலைவன், பதிவுலக விடிவெள்ளி எனது அருமை அண்ணன் செங்கோவியப் போய்ப்பாருங்க! (நா இல்லீங்க எல்லாம் அவருதான்!)

அண்ணன்தாங்க சும்மாருந்த என்னை தொடர்பதிவுக்கு கூப்புட்டாருங்க!

இப்ப ஒரு பிளாஷ் பேக்! (எல்லாரும் மேல பாருங்க!)

முதல்ல என்னை ஜீன்னு நண்பன் எபி தான் கூப்டுட்டு இருந்தான். ஏன்னு தெரியல ஒரு மருவாதை (சான்சே இல்ல!..ஒருவேளை அப்பிடித்தானோன்னு ஒரு நப்பாசை?) 
அப்புறம் தமிழ்ப்படங்கள்ல தாதாவை, ரௌடிங்க, கேடிங்க தலைவனை அப்பிடி கூப்டுறத பாத்ததும்தான் புரிஞ்சுது! (நண்பேன்டா!)

கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பேர் நண்பர்சிட்ட பரவி, அதாவது நம்ம ஏரியால உள்ளவர்களிடம்.மற்றவர்களுக்கு தெரியாது நம்ம மறுபக்கம்! (எப்பூடி பில்டப்பு? பில்டப் புயல் எஸ்.ஏ.சி. எல்லாம் கிட்ட நெருங்க முடியுமா? ) 

ஒருடைம்ல (அது என் போதாத காலம்! கொழும்பிலருந்து யாழ் போய் சிக்கி சீரழிஞ்சு..வேணாம் அந்தக்கதை சொன்னா தாங்கமாட்டீங்க!) பாத்தீங்கன்னா எங்கவீட்டுப்பக்கம் என்னோட ஒரிஜினல் பேர் தெரியாம ஜீ என்றால்தான் தெரியும். ஆனா நம்ம வீட்டில தெரியாது! 

ஒருநாள் எங்க பக்கத்து வீட்டு ஆன்டி ரோட்ல என்னப்பாத்து ஜீன்னு கூப்புட்டுக் கதைக்க அந்தநேரம் பாத்து அந்தப்பக்கமா வந்த அப்பா என்னை ஒரு மாதிரியா ஆச்சரியமா பாத்தார்! (அது ஆச்சரியமா இல்லை வழக்கம்போல அப்பாக்கள் மகனைப்பார்க்கும்....சரி விடுங்க பாஸ் இதெல்லாம் நமக்குப் புதுசா?) 

அப்புறம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நானும் என்னால முடிஞ்ச்ச்ச்ச அளவுக்கு ஏதாவது பண்ணிடணும்னு முடிவுபண்ணி பதிவுலகத்துக்கு வந்தப்போ பெயர் வைக்கிறதுல சின்ன குழப்பம்!

அதுல பாருங்க நான் ரொம்ப நல்லவனா இருக்கிறதால (அப்பாடா சொல்லிட்டோம்ல...அட நம்புங்கப்பா!) உண்மைய எல்லாம் எழுதிடுவேன்கிறதால ஒரு பாதுகாப்பான பேர் தேவைப்பட, நம்ம ஒரிஜினல் பேரையும் சேர்த்து உமாஜீ ன்னு யோசிச்சு, அப்புறம் அதவிட ஜீ நல்லாருக்கோன்னு எனக்குத் தோணிச்சு! (உங்களுக்கு கேவலமாத் தோணினா அத அண்ணனிடம் சொல்லவும்!)

அப்பிடியே காமெராவைப் Pan பண்ணிக் கீழே கொண்டுவாங்க...

இதுதாங்க நடந்தது!

ஆனா ஒண்ணு ஒரு வரலாற்றுப் பதிவ எழுத வைச்ச, வாய்ப்புக்கொடுத்த அண்ணனுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் என்ன இருந்தாலும் வரலாறு முக்கியம் இல்லையா? 

அப்புறம் என்ன நண்பர்ஸ்...அப்பிடியே அண்ணனைப் போய்ப் பாருங்க முக்கியமான விஷயம்..... கல்லை மறந்துடாதிங்க!