ஷன்னுக்கு காதல் வந்திருந்தது! எத்தனையாவது என்பது நமக்கு அவசியமாகப் படவில்லை! கூடவே காதலின் வலியும்! காதல்வலி என்றதுமே சட்டென ஒரு முடிவுக்கு வந்து விடலாம் அது ஆண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று. ஏன் அது பெண்களுக்கு வருவதில்லை? இல்லை வெளிக்காட்டிக் கொள்வதில்லையா? இல்லை எதையும் 'லைட்'டாகத்தான் செய்வார்களா? இது டீப்பா ஆராய வேண்டிய விஷயம் என்றாலும் இப்ப அது நமக்கு வேணாம்.
இந்தக் காதல் வலியைப் பற்றித்தான் எத்தனை கவிதைகள், கதைகள். எத்தனை பேர் அனுபவிச்சு, உருகி,உருகி எழுதியிருக்கிறார்கள். ஆனா நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒருவன் காதலிக்கத் தொடங்கியதுமே அவனது நண்பர்களுக்கு ஏற்படும் வலி இருக்கிறதே, அதைப் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா? அந்தக் கொடுமைய அனுபவிச்சுப் பார்த்தா தான் தெரியும். ஒரு பய நிம்மதியா இருக்க முடியுமா?
எனது முதல் காதல்வலி...! டீன் ஏஜின் நடுப் பகுதி, அப்பல்லாம் ஜக்கு ஒழுங்காகக் கோவிலுக்குச் செல்வான். அவனின் கடவுள் பக்தி பற்றி எனக்கு எந்தவித சந்தேகமுமில்லாததால் என்னால் உறுதியாகக் கூறமுடியும், சைட் அடிக்கத்தான் போறான் என்று!
திரும்பி வந்ததுமே ஆரம்பிச்சுடுவான்.
'மச்சான் கோயில்ல ஒரு பொண்ண பாத்தேண்டா'
'நீ போனதே அதுக்குத் தானேடா'
'சூப்பரா இருந்திச்சுடா' , 'அப்பிடியா?' (உனக்கு காமாலைக் கண்தானே)
'நான் பாத்திட்டே இருந்தேண்டா' (இத சொல்ல வேற வேணுமா?)
'அவளும் பாத்தாள்டா' , 'ஓ' (பார்ரா)
' நான் சிரிச்சேண்டா', 'ம்ம்' (நீ இழிச்சவாய் தானேடா)
'அவளும் சிரிச்சாள்டா', 'ஓ' (அவளும் லூசா)
'நீ என்ன நினைக்கிறே?' , 'என்னது?' (எல்லா இழவையும் நீ பண்ணிட்டு என்னைக் கேட்டா?)
இனி அவள் தான் ஜக்குவின் கதை நாயகி, அதாவது இன்னொரு நாள் வேறு ஒருத்தியைச் சந்திக்கும்வரையில்.முதல் ஒன்றிரண்டு கதைகளில் நானும் ஆர்வம் காட்டினேன். ஆனா இதே வேலையா ஒருத்தன் இருந்தா என்ன பண்ண முடியும்? அதுக்குப் பிறகு எப்பவுமே நண்பர்களுக்கு எனது 'அட்வைஸ்' முடிவு பண்ணிட்டா உடனேயே அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்லி விடுங்கள் என்பதாகத்தான் இருக்கும்! இல்லாட்டி நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே!
நாங்களும் கதை கேட்டுட்டே. ஒரு கட்டத்தில வெறுத்துப் போய் நானே லவ் பண்ணலாமான்னு கூட யோசிச்சிருக்கேன்னா பார்த்துக் கொள்ளுங்க எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பேன்னு.
காலங்காலமாக யாராவது ஒருத்தன் காதலை வாழ வைத்தே தீருவேன் ன்னு கங்கணம் கட்டிட்டுத்தான் இருந்தாங்க. இப்பக்கூட நம்ம ஜேப்பி இருக்கானே, அவனுக்கு ஒரு ராசி அவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளி, லவ் பண்ணப் போறேன்னு எங்ககிட்ட சொன்னான்னு வையுங்க, இவன் இங்க முடிவு பண்ணேக்க, அது யாரையாவது லவ் பண்ண ஆரம்பிச்சிடும்! இவன் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னா, அதுக்கு வெளிநாட்டுல மாப்பிள்ளை கிடைச்சிடும்! இல்லேன்னா யாரோடாவது ஓடிப்போயிடும்! அவனால எத்தனை பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கிடைச்சிருக்கு! எவ்வளவு பெரிய சமூக சேவைய சத்தமில்லாம செய்திட்டு இருக்கிறான்! ஆனா கொடுமையைப் பாருங்க, இந்த விஷயம் எதுவுமே அந்தப் பொண்ணுங்களுக்கு தெரியாது!

இரண்டு
வகையான காதல் இருந்திச்சு! இரண்டுமே ஒருதலைதான்!
ஒரு பெண்ணைப் பார்த்து, பிடித்துப் போய் காதலிப்பது.
இது முதல் வகை. சாதாரணமானது.
சிலபேருக்கு, காதல் முதல்லயே வந்திடும். பிறகுதான்
காதலிக்க ஆள் தேடுவானுகள்.
ஷன்னின் காதல்கள் இரண்டாம்
வகை. அவன் தனது அனுபவங்களை, சாகசங்களை ஒவ்வொரு முறையும் 'புதுசா' சொல்றமாதிரியே.. விறுவிறுப்பு
குறையாமல் விவரிக்க, நாங்களெல்லாம் பிரமித்துப்
போய் ( நாங்களெல்லாம் எப்பதான் இதெல்லாம் தெரிஞ்சு கொள்ளப் போறமோ?) கேட்டிட்டு இருப்போம்.
இந்த முறை ஷன் மிகத் தீவிரமாக
இருந்தான் அல்லது எங்களுக்கு அப்படித் தோன்றியது. இந்த மாதிரி சமயங்களில
எல்லாப் பசங்க 'குறூப்' புக்குமே ஒரு அட்வைசர்
இருப்பார்.எங்களுக்கும். அநேகமாக தொடர் தோல்வியை சந்தித்து, விளையாட்டிலிருந்து ஓய்வு
பெற்று 'கோச்' ஆன
மாதிரி. அண்ணன் பல களங்கள், விழுப்புண்கள் கண்ட
அனுபவத்திலிருந்து, (அநேகமாக
நான்கைந்து வயது பெரியவராக வேறு இருப்பார்) ஆழ்ந்த
சிந்தனையுடன், நிதானமாக 'இப்பிடித்தான்
நானும் ஒரு நாள்...' என்று ஆரம்பிக்கும்போது, நாங்களெல்லாம் அமைதியாகி....
எங்களில் பலர் நாம லவ்
பண்ணலையே தவிர அடுத்தவன் காதல பீல் பண்ற நல்ல மனசு வாய்க்கப் பெற்றிருந்தோம்.
அண்ணனின் சந்தோஷ தருணங்களில், சந்தோஷித்து, துக்கத்தில் பீலாகி, 'டச்' ஆன சமயங்களில் ஒருவரை ஒருவர்
பார்த்து, (அண்ணன்
நிஜமாவே பெரிய ஆளுதாண்டா! நாங்களும் இருக்கிறம்?!..ம்ம்ம்ம்) சில நேரங்களில் அண்ணன் ரொம்ப
பீலாகி, குரல் தடுமாற
கதை சொல்லும்போது, எல்லாரும் அழுவாரைப் போல
உட்கார்ந்திருப்போம். ஆனா அப்போ, லவ்
பண்ணிடிருக்கிறவன் மட்டும் லூசுத்தனமா எதையோ நினச்சு சிரிச்சுட்டே கேட்டிட்டு இருப்பான்.கொஞ்ச நாள்ல தனியா அழப் போறது தெரியாமல்!
அதில எங்க எல்லோருக்கும் ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தது - அதாவது இப்ப இல்லாட்டியும்
என்றைக்காவது ஒருநாள் நாங்களும் லவ் பண்ணுவோம்! அப்ப எங்களுக்கும் இதெல்லாம் 'யூஸ்' ஆகும்னு!
அப்புறமென்ன 'அண்ணனின்' நேரடி வழிநடத்தலில், எங்காளு ஷன் போய்
காதலை கடிதத்தில வடிச்சுக் கொடுக்க, பொண்ணு கலவரமாகிக் கடாசி எறிய, எங்களின் பிரகடனப்
படுத்தப்படாத அந்தத் துக்கதினம். ஏன் ? நல்லா தானே போயிட்டிருந்திச்சு? அவளும்தானே பாத்திட்டிருந்தாள்?(உன்னத்தானா?) என்னப் பாக்கேக்க எல்லாம்
சிரிப்பாளே (எதுக்கு சிரிச்சாளோ?) அப்போ
இதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கு என்ன அர்த்தம்? ஏராளமான கேள்விகள் ஷன்னாலும்
மற்றவர்களாலும் மாறி மாறிக் கேட்கப்பட்டது.
விடை தெரியாத
பல கேள்விகளின் முடிவில் அண்ணன், 'இதுக்குத் தாண்டா
முதல்லயே சொன்னேன்...' ( என்ன ஒரு தீர்க்க தரிசனம்!
இதுதான் அண்ணன்! ) ஆரம்பிச்சு, தனது
சொந்த அனுபவங்கள், சில பல சம்பவங்கள், உதாரணங்களின் மூலம் அந்த
மாபெரும் உண்மையை(?!) முன்வைத்தார். 'பொண்ணுங்களே
இப்பிடித்தான்'.
அமைதி.
அண்ணன் 'இந்தப் பொண்ணுங்களையே நம்பக் கூடாதுடா' அந்த நிசப்த இரவில், 'ஆமாமா' எங்களின் கோரஸுடன், தூரத்தில் குறைக்கும் நாய்களின் பின்னணியுடன், பெண்களுக்கெதிரான அந்தத் தீர்மானம் மீண்டுமொருமுறை நிறைவேற்றப் பட்டது, எந்தப்பெண்ணுமே அறியாமல்!
ஷன்னும் இந்தமுறை ரொம்பப் பாதிக்கப்பட்டதால் மிகத்தெளிவாக தன் முடிவை அறிவித்துக் கொண்டான் 'இனி வாழ்கையில லவ் பண்ணக் கூடாது!' சில நாட்கள் அவனைக் காண முடியவில்லை! திடீரென்று ஒருநாள் , 'மச்சான் அவசரமா போறேண்டா பிறகு சந்திக்கிறேன்' சைக்கிளில் பேய் மாதிரி ஓடிட்டிருந்தான்!
சற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்தது ஒரு பெண்கள் கூட்டம்!
சற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்தது ஒரு பெண்கள் கூட்டம்!