Friday, October 29, 2010

எந்திரன்

08 -10 -2010 வெள்ளி இரவு மணி 10.00௦௦
சவோய் சினிமா.  நல்ல கூட்டம். 


வழமையாக ஆங்கில மற்றும் படு மொக்கையான ஹிந்தி, சிங்களப் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். 


இலங்கையிலேயே வசதியான இருக்கைகள், சிறந்த ஒலி, திரையமைப்புக் கொண்ட திரையரங்கு. 
இலேசான மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசை. 
குடும்பமாக, நிறையப் பெண்களும். சகோதர மொழி பேசுபவர்களும் பலர் இருந்தார்கள்.
இப்போ நாங்களும்.


முக்கால்வாசி அரங்கு நிறைந்திருந்தது.
படம் ஆரம்பித்தபோது ஒன்றிரண்டு விசில் சத்தங்கள் மட்டுமே!


கதை?

Artificial Intelligence கொண்ட ரோபோ ஒன்று கெட்டவன் கையில் சிக்க, என்னவாகிறது?
மேலோட்டாமாக இப்படித்தான் தோன்றும். இப்படித்தான் சொல்லப் படுகிறது.


ஆனா கொஞ்சம் உட்ட்கார்ந்து யோசிச்சவாறே (!?)  பார்த்தா,


Artificial Intelligence கொண்ட ரோபோவுக்கு ஒரு பெண்ணின் மேல் காதல் வர, என்னவாகிறது?


ஆக, என்னதான் ஹாலிவுட் ல கிராபிக்ஸ் செய்தா என்ன...சுஜாதா எவ்வளவுதான் யோசிச்சு எழுதினா என்ன...நாங்கள் காதலையும், காதல் தோல்வியையும் தாண்டி யோசிக்க மாட்டோம்.


ஆனா வழமையான ரஜினி படங்களின்போது ஏற்படும் தாத்தா பேத்தியுடன் ஆடுவதுபோன்ற எண்ணங்கள் ஏற்படவில்லை. அவர் ஒரு விஞ்ஞானியாக இருப்பதால், வயது தோற்றம் எல்லாம் ஒக்கே.


ஒரு விஞ்ஞானியை கல்லூரி மாணவி லவ் பண்ணலாம் தப்பே இல்லை. ஆனா கொடுமையைப் பாருங்க கல்லூரி மாணவியாக ஒரு ஆன்டி (ஐஸ்).


ஐஸ் இன்னொரு ரோபோ போலவே வருகிறார். அனாவசியமாக நெளிந்து நெளிந்து நடக்கிறார். வளைந்து ஆடுகிறார். முழுக்க முழுக்க செயற்கைத்தனமாக இருக்கிறார்.
'காதல்ரத்து' செய்யப்போவதாகக் கூறும்போது அவரது முகபாவம்,...'தம்பி டீ இன்னும் வரல!'


'காதல் அணுக்கள்' பாடல் விஷூவலாக பார்த்ததுமே பிடித்துக் கொண்டது. பின்னணி இசை படு சொதப்பலாக, பிற்பாதியில் இரைச்சல், எரிச்சல். 


ஒரு விஞ்ஞானியின் அசிஸ்டெண்டுகளாக அறிவு முதிராத சந்தானமும், கருணாசும்....முடியல!


படுமொக்கையான வில்லன் விஞ்ஞானி. ஒரு மாசம் டைம் கொடுங்க ரோபோவை செய்து, பார்சல் கட்டித் (!?) தர்றேன்னு சொல்றார்!...என்ன கொடுமை சார்!


வில்லன் ரோபோ அசத்தல். ஏனோ எனக்கு மூன்று முகம் 'அலெக்ஸ் பாண்டியன்' ஞாபகம் வந்திச்சு.


ரஜினி தவிர யாராலும் நடிக்க முடியாது மீறி நடித்தால் ஊத்தியிருக்கும். நல்லவேளை அஜித் நடித்திருந்தால்..? அதுவும்  ஆடு மாதிரி கத்துற அந்த சீன்?


நாட்டின் பாதுகாப்பிற்காக ஒரு ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானி...தனது காதலிக்குப் பொழுது போகவில்லை என்பதற்காக அவளுடன் அனுப்பி வைக்கிறார். 


இது போல் சிந்திக்க ஒரு தமிழனால் மட்டுமே முடியும். பெருமையா இருந்திச்சு.


வசனம் - சுஜாதா, ஷங்கர் குழுவினர்
வழமையான ஷங்கர் படங்கள் போல் வசனங்களில் சுஜாதாவின் 'டச்' தெரியவில்லை. அப்போ டைட்டில்ல மட்டும்தான் சுஜாதாவா?
அவர் எழுதிய கதை, திரைக்கதை  இதுதானா?
அவர் பெயரை டைட்டில்ல போடாமலே விட்டிருக்கலாமோ?


இன்னொரு புதுமை, ஹீரோ சண்டைபிடிக்கும்போது, பஞ்ச டயலாக் பேசும்போது, ஆடும்போது விசிலடித்து காதுகளைப் பதம் பார்க்கும் ரசிக்கக் கண்மணிகள் கிராபிக்ஸ், விறுவிறுப்பு காரணமாக அதையெல்லாம் மறந்து, பேஸ்த்தடித்தும், என்ன நடக்குதென்றே தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தவாறும் இருந்தார்கள்.. 


இது சூப்பரா இருந்திச்சு!              

Friday, October 8, 2010

எந்திரனில் சுஜாதா?

'எந்திரன் படம் அமரர் சுஜாதாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கலாம்'

'ஆகக் குறைந்தது 'டைட்டில்' போடும்போது அவரது படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கும்'

இப்படியெல்லாம் எந்திரன் அறிவிக்கப்பட்டபோதே எதிர்பார்த்தேன், வரும்வரை. (அதெல்லாம் அவரது பங்களிப்புகளுக்கு போதாது என்பது வேறு விஷயம்)
அப்படி எதுவும் நடக்கவில்லையாம்.

அதனாலேயே எனக்கும் படம் பார்க்கும் ஆவல் போய்விட்டது. இன்னும் பார்க்கவில்லை.
ஷங்கருமா இப்படி?...சுஜாதா சார் எனக்கு அப்பா மாதிரி..எந்த நேரத்திலையும் எனக்கு எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு சொல்வார்..இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இறுதியாக இரங்கல் கூட்டத்திலும் கூட.

யாரைத்தான் நம்புறதோ?
அதைவிடக் கொடுமை...
வசனம் -  சுஜாதா-ஷங்கர்-கார்க்கி
அதிலயும் பங்கு போட்டாச்சா?
அப்போ நிறைய சொதப்பல் வசனங்கள் இருக்குமோ?

எந்திரன் ஹாலிவுட் ஐத் தாண்டிவிட்டது! மிஞ்சி விட்டது!
ஹாலிவுட் க்கே சவால்! தமிழர் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டது!
தமிழன் சாதித்து விட்டான்! தலை நிமிர்ந்து விட்டான்!

-என்றெல்லாம் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்! கத்துகிறார்கள்! கூவுகிறார்கள்! கதறுகிறார்கள்! புளகாங்கிதம் அடைகிறார்கள்! ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்!
அவர்களுக்காக...

எந்திரனின் கிராபிக்ஸ்,அனிமேஷன் துறைகளைகளில் பணியாற்றியது,
ஹாலிவுட் இன் முன்னணி நிறுவனமான Stan Winston Studio. 

இவர்கள் பணியாற்றிய படங்கள் சில,
Avatar, Batman returns,Terminator I & II, Aliens, Predator, Jurassic Park

பணத்தைக் கொட்டிக்கொடுத்தால், நம்ம ஊர் சிங்களப் படங்களைக் கூட ஹாலிவுட் படம் மாதிரி எடுக்கலாம். கதை? பார்த்துவிட்டு எழுதுவேன்.

ஒரு ஹாலிவுட் நிறுவனம் கிராபிக்ஸ் செய்தா..அது ஹாலிவுட் படம் மாதிரிஇல்லாம? இராம.நாராயணன் படம் மாதிரியா இருக்கும்?
     

Sunday, August 15, 2010

இதே பூமி....இதே நிலவு....அரிசிலாற்றங்கரையில்.....

நிலா வெளிச்சம், கருமை படர்ந்த மரங்களும், கிளைகளும், மெலிதாக வீசும் காற்றில் இலைகளின் சலசலப்பு - அழகான இந்தப் பொழுதில் உங்களுக்கு என்ன தோன்றும்?

எனக்கு மனதில் ஒரு மென்சோகம் படரும். ஏன்?
நிலவு வெளிச்சத்துக்கும் சோகத்துக்கும் என்ன சம்பந்தம்?

நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

நிலவொளி சோகத்தை ஏற்படுத்துகிறதா? இல்லை அந்த ஒளியில் எமது அடிமனதின் சோகங்கள் கிளறப்பட்டு பிரதி பலிக்கிறதா?

இதைவிட இன்னொன்றும்  கற்பனையில் தோன்றும்.
ஒரு ஆற்றங்கரை, குதிரையின் குழம்புச் சத்தம்.
இதே போன்ற ஒரு ராத்திரியில் தானே இதே பூமி, இதே நிலவில்தானே அரிசிலாற்றங்கரையில் வந்தியதேவன் குதிரையில் சென்றிருப்பான்.

நீங்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்தவரா? அப்படியானால் நிச்சயம் உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும், அல்லது இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.


ஆறாம் வகுப்பு முடித்து, பள்ளியின் ஆண்டிறுதி விடுமுறையின் போது எனக்கு வாசிக்கக் கிடைத்தது. சில தினகலாகத் தொடர்ந்து வாசித்தேன் என்று சொல்ல முடியாது, அதே தியானமாக இருந்தேன்.

நாளின் அத்தியாவசிய கருமங்கள் தவிர்ந்த ஏனைய பெரும்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பொன்னியின் செல்வன்.

மின்சாரமில்லாத அந்த இரவுகளில் மண்ணெய் விளக்கில் வெகு நேரம் விழித்திருந்து வாசித்தது இன்னும் பசுமையாய் என் நினைவுகளில்.

இடையிடையே வீட்டு முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் வந்து நிற்கும்போது, மனம் நூற்றாண்டுகள் கடந்து, கடல் கடந்து,

அரிசிலாற்றங்கரையிலும், பழையாறையிலும், தஞ்சை, கோடிக்கரை என சஞ்சரிக்கும்.

எனது நினைவிலும் , கனவுகளிலும் வாட்களும், வேல்களும், குதிரையின் குழம்பொலிகள், யானையின் பிளிறல்கள், வெற்றி முழக்கங்கள்.

வந்தியத்தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான், அருள்மொழி, வானதி, பூங்குழலி, சேந்தன் அமுதன், பார்த்திபன், பழுவேட்டரையர்கள், நந்தினி, சுந்தரச் சோழர், அநிருத்தர், கந்தமாறன், ரவிதாசன் எல்லோரும் என் சொந்தக்காரர், அயலவர்கள் ஆனார்கள்.

அவர்களின் உருவமும், குணவியல்புகளும் மனதில் ஆழமாக பதிந்து போய், பார்க்கும் மனிதர்களிளெல்லாம் அவர்களைத் தேட முயற்சித்திருக்கிறேன்.

கல்கியின் அளவுக்கு மீறாத வர்ணனைகள், நகைச்சுவை கலந்த எழுத்து, ஓவியர் மணியம் வரைந்த அருமையான, உயிரோட்டமுள்ள ஓவியங்கள் என்றும் மனதை விட்டகலாதவை.

குறிப்பாக ஆரம்பத்தில் வந்த அந்த ஓவியங்கள் பின்னாளில் எந்தப் பதிப்பிலும் நான் காணவில்லை. கல்கியில் தொடராக வந்தபின் முதல் பதிப்பான புத்தகங்கள் வைத்திருந்த வாசிக்கக் கொடுத்த கண்ணன் மாமாவும் மறக்க முடியாதவர்.

இதைத் திரைப்படமாகவோ, தொடராகவோ எடுத்தால் நிச்சயம் நன்றாயிருக்காது (வாசித்தவர்களுக்கு). கல்கியும், மணியமும் மனதில் பதித்துச் சென்ற பாத்திரங்களுக்கு யாருமே இணையாக முடியாது.

                  முன்பு எம்.ஜி.ஆர். திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இருந்தாராம். அவர் வந்தியத்தேவனாக? நடிப்பதை ஓரளவாவது ஜீரணிக்க முடிந்தாலும் (நிச்சயமாக என்னால் முடியாது), அதைவிடக் கொடுமை, எம்.ஜி.ஆர்.வந்தியத் தேவேனாக நடித்தால்,         குந்தவை? ஜெயலலிதாவோ, சரோஜாதேவியோ குந்தவையாக நடித்தால்?

அய்யய்யோ நினச்சாலே பயங்கரமா இருக்கு. நல்ல வேளை தஞ்சைப் பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றினார்.