Wednesday, April 3, 2013

பரதேசியும், இடலாக்குடி ராசாவும்!


"அப்பம் ராசா வண்டியை விட்டிரட்டா"

"ராசா வண்டியை விட்டிருக்கேன்"

பரதேசி பார்த்தேன். முதலில் பரதேசியின் முதல்ப் பாதிக் கதையின் மையவிழையும், பிரதான பாத்திரமுமான இடலாக்குடி ராசா சிறுகதை...


'பரதேசி' ராசா 'இடலாக்குடி' ராசா அளவுக்கு ரோசமானவனாக இல்லை என்று தோன்றுகிறது. சமயங்களில் பிதாமகன் சித்தனின் சற்றே மேம்பட்ட, நன்கு பேசத்தெரிந்த நாயகன் போலத் தோன்றுகிறான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவனின் சாப்பாட்டில் திடீரென்று கைவைத்துவிடுகிறான் - பாலா நாஞ்சில் நாடனின் சிறுகதையில் கைவைத்தது போலவே! சரி அவன்தான் அப்படியென்றால், சாப்பிடுபவனும் பாலாவைப் போலவே இருப்பதுதான் கொடுமை. எட்டி உதைந்துவிடுகிறான்.

கதையின் முடிவில், அந்தக் கல்யாண விருந்து. அதுதான் அந்தச் சிறுகதையை அவ்வளவு அழகாக்குகிறது. அந்தப்பந்தியில் இருப்பவர்கள் முழுக்க இளவட்டங்கள். அவர்கள் ராசாவுடன் கொஞ்சம் விளையாடிப்பார்க்க மட்டுமே விரும்புகிறார்கள். அந்த முடிவு அவர்கள் சற்றும் எதிர்பாராதது. அவ்வளவு சோகத்தைக் கொடுத்துவிடுகிறது. அவர்களின் ஒட்டுமொத்த கொண்டாட்ட மனநிலையையே மாற்றிவிடுகிறது. கதையின் எவ்வளவு முக்கியமான பகுதி இது?

படத்தில்? அந்த விருந்தில் இளவட்டங்கள், அனுபவப்பட்ட பெருசுகள், பாட்டிகள் எல்லோருமே இருக்கிறார்கள். ராசா அழுதுகொண்டு வெளியேறும்போதும் யாரும் உணர்ந்துகொள்ளவில்லை. கொஞ்சம்கூடச் சுரணையுணர்வின்றி, மந்தைக்கூட்டம் போலவே நடந்துகொள்கிறார்கள். விவஸ்தை கெட்டவர்களாக, மனநிலை பாதிக்கப்பட்ட கூட்டம்போலவே சிரித்துக் கொள்கிறார்கள். அசட்டுத்தனமாகப் பல்லிளிக்கிறார்கள்.

மிகுந்த எரிச்சலை மட்டுமே கொடுத்த காட்சி இது. சிலருக்கு உச்சபட்சமாக, 'இவனுங்களை எல்லாம் தேயிலைத் தோட்டத்தில கொண்டுபோய் விட்டாத்தான் புத்தி வரும்!' என்றுகூடத் தோன்றியிருக்கலாம்!

அவர்களைப் பார்க்கும்போது, பாலாமீது சிறு மாற்றுக் கருத்து கூறினாலும், என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாமல் உடனே அடித்துப் பிடித்து பொங்கி ஓடிவரும் ரசிகமணிகளைப் பார்ப்பதுபோலவே ஒரு பிரமை உண்டாகிறது.

இந்தக்காட்சி சிறுகதையின் கருவையே சிதைந்துவிட்டது. இடலாக்குடி ராசா கதையை அப்படியே பயன்படுத்தியிருக்கலாமே? அழகான அந்தக்கதையை ஏன் மாற்ற வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? என்று யோசித்தபோது தோன்றியது.

ஓர் நல்ல சிறுகதையைத் தேர்வு செய்து கருக்கலைப்பு செய்துவிட்டால் அதை எங்கள் சொந்தக்கதையாகப் போட்டுக் கொள்ளலாம்? கதை, திரைக்கதை, இயக்கம் - பாலா. வசனம் - நாஞ்சில் நாடன்.

ஆக, நாஞ்சில் நாடனின் இடலாக்குடிராசாவும் அதர்வாவின் சிகையலங்காரம் போலவே சிரைக்கப்பட்டிருக்கிறது.

வேதிகாவை அறிமுகக் காட்சியில் பார்க்கும்போது எங்கேயோ பார்த்ததுபோல இருக்கே என்று பயந்து, குழம்பிப் பின் தெளிந்தேன். அப்படியே சந்திரமுகி 'பேய்' ஜோதிகா போலவே இருந்தார். ஏனைய காட்சிகளில் - சகிக்கவில்லை!

அப்பத்தா பஞ்சாயத்து முடித்து வைத்துவிட்டுப் போகும்போது, அந்தக் கல்யாணப் பெண் வேதிகாவைப் பார்த்து சிரிப்பாரே..மனதில் நிற்கிறார். அந்த அப்பத்தாவும் மனதை அள்ளுகிறார்.

படத்தில் மிக மிக ரசிக்க முடிந்தது, 'பெரியப்பா' விக்கிரமாதித்யன்தான்! அந்தக் கதாபாத்திரத்தை கிராமம், நகரம் வித்தியாசமின்றிக்காண முடியும் - தோற்றத்தில் மட்டும் வேறுபாட்டுடன். மனிதர் அட்டகாசம் பண்ணியிருக்கிறார்.

3 comments:

  1. இனிய காலை வணக்கம்


    வேதிகாவை அறிமுகக் காட்சியில் பார்க்கும்போது எங்கேயோ பார்த்ததுபோல இருக்கே என்று பயந்து, குழம்பிப் பின் தெளிந்தேன். அப்படியே சந்திரமுகி 'பேய்' ஜோதிகா போலவே இருந்தார். ஏனைய காட்சிகளில் - சகிக்கவில்லை! :)


    படம் இன்னும் பார்க்கல ஜீ...

    ReplyDelete
  2. ஓர் நல்ல சிறுகதையைத் தேர்வு செய்து கருக்கலைப்பு செய்துவிட்டால் அதை எங்கள் சொந்தக்கதையாகப் போட்டுக் கொள்ளலாம்? கதை, திரைக்கதை, இயக்கம் - பாலா. வசனம் - நாஞ்சில் நாடன்.

    உண்மை உண்மை உண்மை உண்மை

    ReplyDelete
  3. >கொஞ்சம்கூடச் சுரணையுணர்வின்றி, மந்தைக்கூட்டம் போலவே நடந்துகொள்கிறார்கள். விவஸ்தை கெட்டவர்களாக, மனநிலை பாதிக்கப்பட்ட கூட்டம்போலவே சிரித்துக் கொள்கிறார்கள். அசட்டுத்தனமாகப் பல்லிளிக்கிறார்கள்

    All Balas movies are like this? Unwashed/unshaven people who move like semi zombies... And all look slightly/(or more) in sane. All wear dirty clothes..

    Why Bala? why?

    Everyone praised Sedhu, but for me I felt I should have gone to see 'Rajini movie.

    Bala should do either art film or commercial, not this type of half-baked art

    ReplyDelete