Friday, April 22, 2011

Spring, Summer, Fall, Winter... and Spring

Spring
ஓர் அழகான ஏரி, அதில் மிதக்கும் மரவீடு அல்லது ஆசிரமம், ஏகாந்தமான அந்த சூழலில் வசிக்கிறார் அந்த துறவி. அவருடன் ஒரு சிறுவன். அந்த வீட்டிலுள்ள பிரார்த்தனை செய்யும் இடத்திற்கு இரு புறமும் இரண்டு சிறிய படுக்கை அறைகள். அறைகள் என்றால் சுவர்கள் இல்லை, இரண்டு நிலைகளுடன் கூடிய கதவுகள் மட்டுமே. அந்த கதவினூடாகவே இருவரும் காலையில் எழுந்து வருகிறார்கள். துறவி மூலிகைகள் சேகரிப்பதற்காக ஏரியை அடுத்துள்ள மலைப்பிரதேசத்துக்கு செல்ல சிறுவனும்  உடன் வருகிறான். இருவரும் படகின் மூலம் ஏரியைக் கடந்து, அங்கும் வீட்டிலுள்ளது போன்ற அதே மாதிரியான நிலைகளுடன் கதவு மட்டுமே கொண்ட நுழைவு வாயிலைக் கடந்து இருவரும் தனித்தனியாக செல்கிறார்கள். 

குறும்புகார சிறுவன் சில மூலிகைகளைப் பறித்த பின் ஆற்றிலுள்ள ஒரு மீனைப் பிடித்து அதன் உடலுடன் ஒரு சிறு கல்லை கட்டிவிட்டு அது நீந்த முடியாமல் தவிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறான்.அவ்வாறே ஒரு தவளை, பாம்பு என்பவற்றுக்கும் செய்கிறான்.


இவை எல்லாவற்றையும் துறவி, அவனுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். எதுவும் பேசாமல் அங்கிருந்து ஒரு கல்லை எடுத்துக்கொண்டு திரும்புகிறார் அதிகாலையில் அந்தக்கல்லை தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவனின் முதுகுடன் சேர்த்துக்கட்டி விடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் நடக்கமுடியாமல் துறவியிடம் கல்லை விடுவிக்குமாறு முறையிட , அவர் முதல் நாள் சிறுவன் மீன், தவளை, பாம்புக்கு என்ன செய்தான் என்பது பற்றிக்கேட்க அவன் தனது தவறை  ஒப்புக்கொள்கிறான். ' நீ இப்படியே சென்று அவைகளைத்தேடி கண்டுபிடித்து நீ கட்டிய கல்லிலிருந்து விடுவித்தபின், உனது முதுகிலுள்ள சுமையையும் விடுவிக்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை, அவை இறந்து விட்டிருக்குமானால் வாழ்நாள் முழுவதும் அந்த சுமையை உன் மனதில் சுமப்பாய் ' என்கிறார். 

சிறுவன் அவசரமாக சுமையுடன் படகில் சென்று அருவியில் தேடுகிறான். தவளையை மட்டுமே காப்பாற்ற முடிகிறது, மீனும் பாம்பும் ஏற்கனவே இறந்து கிடக்க கண்டு தேம்பியழுகிறான். 

Summer
சிறுவன் வளர்ந்து பருவ வயதை அடைந்து விட்டான். தன் குருவிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்து தங்கியிருக்கும் அவன் வயது பெண்ணிடம் ஆசை கொள்கிறான். இருவரும் குருவுக்கு தெரியாமல் (அப்படி நினைத்துக்கொண்டு) தனிமையை உருவாக்கி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

குருவிடம் நேரடியாக மாட்டிக்கொண்டதும், தான் தவறு செய்துவிட்டதாக கூறி  மன்னித்து விடுமாறு கேட்க, அது இயல்பானது, இயற்கையாகவே நடந்தது என கூறுகிறார். தனது சிகிச்சை பயனளித்து விட்டதை அவளிமே கேட்டு தெரிந்துகொண்டு 'நாளை நீ போகலாம் ' என்கிறார். சீடன் மனம் குழம்புகிறான். மறுநாள் காலை அவளை குரு படகில் ஏற்றிச்செல்ல அவள் போக மனமின்றி திரும்பி பார்த்தவாறே செல்கிறாள். அவள் பிரிவைத்தாங்க முடியாத சீடன் அதிகாலையில் எழுந்து, தான் வைத்திருக்கும் விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு குருவிடமிருந்து பிரிந்து வெளியேறுகிறான்.
    

Fall
முதுமையடைந்துவிட்ட துறவி தனது உணவு பொதி செய்து வந்த தினசரியை பார்க்கும்போது அதில் அவருடைய சீடனின் புகைப்படத்துடன், அவன் மனைவியைக்கொன்றுவிட்டு தப்பித்துவிட்ட செய்தியையும் காண்கிறார். அவன் தன்னிடம் வருவானென்பதை உணர்ந்தறிந்து, அவனுக்கான உடையையும் தைத்து வைக்கிறார். அவன் இன்னும் கோபம் அடங்காதவனாகவும், பதட்டத்துடனும் வருகிறான். அவளுடன் களித்த இடங்களைப்பார்த்து வெறிபிடித்தவன் போல கத்துகிறான். தனது வாழ்வை முடித்துக்கொள்ள தற்கொலைக்கு முயல, அவனை கடுமையாக அடித்து, அமைதிப்படுத்துகிறார் துறவி.


அவன் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியைக்கொண்டே தான் எழுதிய எழுத்துக்களை செதுக்கச் சொல்கிறார். அது அவனை அமைதிப்படுத்துகிறது, அவனை கைது செய்யவந்த போலீசும், அவனது பணி முடியும் வரை காத்திருந்து, அவர்களும் அவனுக்கு உதவியாய் அதில் பங்கெடுத்து மறுநாள் அழைத்துச்செல்கிறார்கள். துறவி தனது வாழ்வினை முடித்துக் கொண்டு , படகில் அமர்ந்தபடியே சமாதி அடைகிறார்.

Winter
தனது தண்டனைக்காலம் முடிந்து திரும்பி வருகிறார் இளம் துறவி. தனது குரு சமாதியடைந்த இடத்திற்கு சென்று வணங்கிய பின், குரு தனக்காக வைத்திருக்கும் ஆடையையும், குறிப்புகளையும் எடுத்துக்கொள்கிறார். ஒரு பெண் தனது குழந்தையை அவரிடம் வளர்ப்பதற்காக ஒப்படைக்கிறாள்.


இப்போது இளம் துறவி ஒரு கல்லை கயிறால் கட்டி அதை தனது இடுப்பில் பிணைத்த நிலையில் கையில் விக்கிரகத்துடன் எதிரே தெரியும் மலையுச்சியை நோக்கி நடந்து செல்கிறார். அவர் சிறுவயதில் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வது போல அல்லது இது நாள் வரை மனதில் சுமந்த பாரத்தை இறக்கி வைப்பது போல ( மீன், தவளை, பாம்புக்கு கல் கட்டி விட்ட காட்சி மீண்டும் வருகிறது ). அங்கு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்கிறார்.

and Spring 
இளம் துறவியிடம் ஒப்படிக்கப்பட்ட குழந்தை இப்பொழுது வளர்ந்து சிறுவனாக, அதே குறும்புத்தனத்துடன், மீண்டும் மீன், தவளை, பாம்புடன் கல் கொண்டு விளையாட, படம் நிறைவடைகிறது.

வழமையான கிம் கி டுக் படங்கள் போலவே அமைதியாக ஒரு கவிதை போல அழகாக நகரும் காட்சிகள்.
நான்கு பருவ காலங்களிலும் வெவ்வேறு விதமாகத் தோன்றும் அந்த ஏரியின் அழகு. 
கிம் கி டுக் படங்களின் வழமையான குளிர்மையான நாங்களும் சேர்ந்து பயணிப்பதுபோல் உணரும்படியான ஒளிப்பதிவு, 
கதையின் போக்குக்கு ஏற்ப பெரும்பாலும் அமைதியாகவும்  உறுத்தாததுமான இசை.
வயதான துறவியின் அமைதியான முகம், கருணையை வெளிப்படுத்தும் கண்கள், எதையும் நேரடியாகப் பார்க்கமலே அறிந்துகொள்ளும் அவர், பூனையின் வாலை மையில் நனைத்து எழுதும் காட்சி, சேவலின் காலில் கயிறு கட்டி படகை கரைக்கு இழுக்கும் காட்சி மிக அழகு.
படம் பார்க்கும்போது நிச்சயம் மனதில் ஒரு வார்த்தைகளில் விவரிக்க முடியாத அமைதியான உணர்வு ஏற்படும்.


இயக்குனர் - Kim Ki-duk 
மொழி - Korean 

டிஸ்கி 1 :- இது ஒரு மீள்பதிவு! கவனிக்கப்படாததால்.....! (நிறையப் பேர் பார்க்கவேண்டுமென்பதால்!
டிஸ்கி 2 :- முடிந்தால் நிச்சயம் இப்படத்தைப் பாருங்கள்! ஒரு நல்ல அனுபவத்தை இழந்து விடாதீர்கள்!

22 comments:

  1. வாழ்க்கையின் படி நிலைகளைக் கால நிலையுடன் ஒப்பிட்டு வெளிவந்துள்ள படம் பற்றிய விமர்சனம். அலசல் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  2. மன ஒருமைப் பாட்டின் அவசியத்தையும், மன அமைதியினை இழக்கும் நேரங்களில் நாமெல்லோரும் எப்படித் தடம் மாறுகிறோம் என்ப்தனையும் படம் அழகாகச் சொல்லியிருக்கிறது என்பதற்கு உங்கள் விமர்சனமே சான்று.

    ReplyDelete
  3. சினிமாவை விட உங்கள் விமர்சனம் அருமையா இருக்கே....

    ReplyDelete
  4. ரெண்டு ஓட்டும் போட்டாச்சு...

    ReplyDelete
  5. எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே-ன்னு யோசிச்சுக்கிட்டே படிச்சா...மீள்பதிவா? நல்லா இருக்கு!

    ReplyDelete
  6. மீள்பதிவாக கொடுத்தமைக்கு நன்றி
    படத்தின் அமைதியை நீங்கள் உண்ர்ந்ததை
    உங்கள் எழுத்தில் உணர முடிந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது ஜீ .நன்று.

    ReplyDelete
  8. உங்கள் விமர்சனமே அழகான சிறுகதையை படித்தது போல இருக்கிறது...படத்தை பார்த்த உணர்வை விமர்சனமே கொடுத்துவிட்டது

    ReplyDelete
  9. வாழ்க்கை ஒரு வட்டம் நு சொல்ற படமா இருக்கு

    ReplyDelete
  10. உங்களது விமர்சனம் முழுமையாக படம் பார்த்த திருப்தியை தருகிறது! நல்லதொரு படத்தை தேர்வு செய்துள்ளீர்கள்!

    ReplyDelete
  11. ஓர் அழகான ஏரி, அதில் மிதக்கும் மரவீடு அல்லது ஆசிரமம், ஏகாந்தமான அந்த சூழலில் வசிக்கிறார் அந்த துறவி.

    ஆரம்பமே அட்டகாசம்! அந்த இடத்தில வசிக்கணும் போல இருக்கு

    ReplyDelete
  12. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. என்ன பாஸ் திரும்பிட்டீங்க போல பதிவுலக பக்கம்??
    வாங்க வாங்க..இன்னும் ஒராள் திரும்பாமா இருக்கார்..அவரையும் திரும்ப சொல்லுங்க!!
    வழமை போல பிரமாதம் கதை விமர்சனம்...பார்க்கணும் பார்ப்போம்

    ReplyDelete
  14. அருமை. மீள் பதிவோ என்னவோ வாசிக்க எழுத்துநடை அப்படியே படம் பார்த்த உணர்வு. வாழ்த்துக்கள் தொடருங்கள் ஜீ

    ReplyDelete
  15. மாப்ள அருமையா விமர்சிச்சு இருக்கீங்க.........
    அமைதியத்தேடின்னு இருக்கு படம்!

    ReplyDelete
  16. ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்.. மீள் பதிவா..? ரைட்டு..

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு. மீள் பதிவென்றாலும் நச்.

    ReplyDelete
  18. நேற்று உங்கள் பதிவை பார்த்து படத்தை தரவிறக்கி பார்த்துமாயிற்று

    மிக அழகாக, அதிகம் நடிகர்கள் இல்லாமல் ஒரு கவிதையை செதுக்கியுள்ளார்

    ஆனாலும் ...

    என்ன செய்தி சொல்ல வருகின்றார் என்று புரியவில்லை, அந்த பெண் யார் என்பதும் ...

    ஆனால் மிகுந்த அமைதி சூழ்ந்தது எங்களை இப்படம் பார்க்கையில்

    ReplyDelete
  19. உலக உருண்டைக்குள் வாழ்க்கை வட்டம்.

    ReplyDelete
  20. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

    ReplyDelete
  21. இந்த படம் மட்டும் அல்லகிம் கிடு டுக் இன் பல படங்கள் நம்மை கலங்க வைக்கும்

    கருந்தேள் கண்ணாயிரம் கிம் கிடு டுக் இன் தீவிர ரசிகர் முடிந்தால் அவரின் சில விமர்சனங்களை படியுங்கள்

    http://www.karundhel.com

    ReplyDelete
  22. இந்தப் பதிவை இப்போதுதான் வாசித்தேன், அழகான விமர்சனம்...! மனதில் காட்சிகள் விரிகின்றன, எப்படியாவது பார்த்துவிடுவேன். நன்றிகள்!

    ReplyDelete