Showing posts with label உயிர்மை. Show all posts
Showing posts with label உயிர்மை. Show all posts

Monday, July 15, 2013

புத்தகக்கடை பல்புகள்!


ப்பப்போ உயிர்மை வாங்கிப் படிக்கிறது வழக்கம். வெள்ளவத்தையில் பூபாலசிங்கம் புத்தகசாலையில்தான் கிடைக்கும் - அதுவும் குறித்த எண்ணிக்கைதான் வரும்! இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சும் 'பல்பு' வாங்கியே தீரணும்னு அடம்பிடிச்சா என்ன பண்றது?

அன்று நண்பனோட அறைக்குப் போயிட்டிருந்தேன். பக்கத்தில இருக்கிற பெரிய புத்தகக் கடைகள்ல சிலவேளைகளில் கிடைக்கலாம்னு நம்பி போனேன். அந்தக் கடைல ரெண்டு அங்கிள்ஸ் இருந்தாங்க. ரொம்ப நாகரீகமா, அன்பா 'தம்பி நாங்க உயிர்மை எடுக்கிறதில்ல. பூபாலசிங்கத்தில கிடைக்கும்!' - இது பேச்சு! மனிதத் தன்மை! அடிப்படை நாகரீகம்! 

ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கடைக்குப் போனேன் பாருங்க! அங்கே ஒரு இளம் பெண்மணி இருந்தார். அப்பவே தோணிச்சு 'தப்பான இடத்துக்கு வந்துட்டடா ஜீ' 

நம்ம ஊர்ல பெரும்பான்மையான பெண்மணிகள் தமிழ்கூறும் நல்லுலகின் மிகச்சிறந்த ஒரே இலக்கியவாதி ரமணிசந்திரன் என்று எந்த சந்தேகமுமின்றி உணர்ந்துகொண்டவர்கள் என்பதால், திரும்பி ஓடிடலாம்னு நினைச்சேன்..அதுக்குள்ள அவர் என்னைக் கண்டு,

"என்ன பாக்கிறீங்க?"
"உயிர்மை இருக்கா?"
"அப்பிடீன்னா?"

சொன்னேன்! படு கேவலமா என்னை ஒரு லுக் விட்டு கொஞ்சம் யோசித்தவருக்கு வந்துச்சு பாருங்க கோபம், 
"அக்கா...அக்கா!"- என்று கத்தினார்.(யார்ரா இவன் எங்க வந்து என்ன பேச்சுப் பேசறான்? என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறானா? இருடி)

அக்கா விவரமானவங்க போல என்று நினைத்தேன். வந்து,
'என்ன கேட்டீங்க?'
"உயிர்மை"
"என்னது?"
"உயிர்மை"
"......???"
'நான் சரியாத்தான் பேசுறனா?' சந்தேகத்தில் மாறி மாறிச் சொன்னேன் 

உயிர்ர்ர்ர்மை
ஊ...ரிமை
உய்ய்ர்ர்ர்மை
உய்ய்ய்..

யூ நோ! ஐ கேன் ஸ்பீக் ஃபைவ் லாங்குவேஜஸ் இன் டமில்!

ஒருவழியா நம்மள டயர்டாக்கி, கொஞ்சம் வருந்துகிறமாதிரியான 'வெளங்காதவனா இருப்பான் போலிருக்கே'முகபாவனையோடு, சிறுபுன்னகையுடன் சொன்னார்,

"இங்க அதெல்லாம் இல்ல!"

ஆனா மற்றப் பெண்மணிக்கு அப்பவும் கோபம் அடங்கல! விரோதமாக முறைத்துக் கொண்டிருந்தார், 'அதெப்புடிறா என்னப்பாத்து நீ அந்தக் கேள்வியக் கேக்கலாம்?'
தேவையா எனக்கு?

நேகமான எல்லாப் புத்தகக் கடைகளிளுமே அதிகமாக விற்பனையாபவை பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களே. இலக்கியம் என்று வரும்போது மட்டும் ரமணிச்சந்திரன்!

அனுபவங்கள் காரணமாக அவ்வப்போது புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதெல்லாம் அங்கிருக்கும் பெண்களைக் கண்டவுடன் பீதியாகிவிடுகிறது. பொறுப்பாக இருக்கும் பெரியவர்கள் எப்போதும் நாம் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு, பக்குவமாகப் பதில் சொல்வார்கள். வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் எல்லோருமே நல்லவிதமாகப் பேசக் கூடியவர்கள். உரிமையாளர் (அவரென்றுதான் நினைக்கிறேன்) நல்ல வாசகராகவும் இருப்பார் எனத் தோன்றுகிறது.

ஏனைய கடைகளில் இளம்பெண்கள்தான் முதலில் எதிர்கொள்வார்கள். முதலாம் வகுப்புக்கான கணிதப்பயிற்சி, சுற்றாடல் வினாவிடை என்று வருபவர்களுக்கு கொடுக்கும் மரியாதையும், முக மலர்ச்சியும் தனியானது.

அங்கே போய் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவாத புத்தகங்களைக் கேட்பவர்களுக்கு காட்டும் எதிர்வினை, ஏற இறங்க கேவலமாகப் பார்த்து, 'போய்யா யோவ்...நாடிருக்கிற நிலைமைல காமெடி பண்ணிட்டு' என்பதாகவே இருக்கும்.

சமீபத்தில், நண்பர் தான் பங்குக்கு 'பல்ப்' வாங்க முடிவு செய்திருந்தார். ஒரு பெரிய புத்தகக் கடைக்குள் நுழைத்தார். முடிவு தெரிந்திருந்ததால் நான் வெளியிலேயே நின்று கொண்டேன்.

அங்கே நின்ற அக்காவிடம் "ராஜூமுருகன்ர வட்டியும் முதலும் இருக்கா?" என்றார்.
மிகுந்த முக மலர்ச்சியுடன் "ஓ! வாங்க" என்று அழைத்துச் சென்றார்.
'என்னடா இது? நான் எங்க இருக்கேன்?' அதிர்ச்சியடைந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
நண்பர் உள்ளே சென்று பார்த்தவர் பிரகாசமாக சிரித்துக் கொண்டு வெளியில் வந்தார்.

அப்பிடியே கூட்டிப் போய் வர்த்தகவியல் பாடப் புத்தகங்கள் இருந்த ஏரியாவைக் காட்டியிருக்கிறார் அந்தக்கா.

ஷோபாசக்தியின் புத்தகங்கள் இலங்கையில் விற்பனை செயப்படுவதில்லை என்றே நம்புகிறேன். அவர் ஒரு தமிழினத் துரோகி எனத் தமிழினத் தியாகிகளால் கூறப்படுவது காரணமாக இருக்கலாம்.

இந்த விஷயம் ஒன்றும் தெரியாத ஒரு பொழுதில்  கடைகளில் விசாரித்திருக்கிறேன். பெரியவர்கள் உள்ளிட்ட பலர், அப்படியொரு பெயரையே முதன்முதல் கேட்டதுபோல பார்த்தார்கள். 

நம்ம வழமையான பிரபல கடையில் ஒரு பெண்ணிடம் வேறுவழியில்லாமல் கேட்க, புரியாமல் யோசித்தார்.
"யாரது?" என்றார்.
"ஒரு ரைட்டர் , நாவல், சிறுகதை.."
"ஓ.. அவ கதை எல்லாம் எழுதுவாவா?"

அவவா?அடப்பாவிங்களா!

அப்போதுதான் புரிந்தது ஷோபா என்றதும் நடிகர் விஜயின் அம்மா என அந்தப்பெண் யோசித்திருப்பார் போல.அதனால்தான்,அவர் பாட்டுத்தானே பாடுவார், கதையும் எழுதுவாரா? என ஆச்சரியப்பட்டிருக்கிறார் போல.

எனக்கும் குழப்பமாவே இருந்தது ஒருவேளை, நான் ஷோபாசக்தி என்று சொன்னது ஷோபா சந்து என்று கேட்டிருக்குமோ?