Friday, February 3, 2017

சுதந்திரம்!

'கப்பலேறிப் போயாச்சு' பாடலின் ஆரம்பத்தில் உச்சஸ்தாயியில் ஒலிக்கும் புல்லாங்குழலும் தொடரும் கோரஸ் இசையும் இப்போதும்கூட புதிதாகச் சுதந்திரத்தைப் பெற்றுவிட்ட புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அடிமைத் தழையிலிருந்து விடுதலை பெறுவதை இசையூடாக உணரச் செய்த பாடல். முதன்முதலாக படம் பார்த்தபோது, அந்தப் பாடல் ஒருவித புல்லரிப்பை, சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அப்போது கொடுத்த மனவெழுச்சியை இப்போது கேட்கும்போதும் உணரமுடிகிறது. 

அது ஏனோ தெரியவில்லை சுதந்திரம் என்பதை இந்திய சுதந்திரத்தோடு மட்டுமே பொருந்திப்பார்க்க முடிகிறது. முதன்முதலாக எதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் மனநிலையில், வயதில் 'இந்தியன்' படத்தைப் பார்த்ததால் அப்படியா? இந்தியன் படத்தில் மட்டுமே சுதந்திரம் பற்றிய முழுமையான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாலும்  இருக்கலாம். அப்படியானால் சுதந்திரம் என்பதையே படம் பார்த்து உணரவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமா?  சரியாகச் சொல்ல முடியவில்லை.

எப்படியோ இந்திய சுதந்திரத்துக்கும் இலங்கையின் சுதந்திரத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. சுதந்திரப் போராட்டம் என்ற ஒன்று இலங்கையில் நடந்ததாக எமக்கு யாரும் சொன்னதில்லை. இந்தியா இனித் தேவையில்லை என்று வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தபோது, இனி இலங்கை தேவையில்லை என்பதால் விட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பள்ளி நாட்களில், வரலாற்றுப் பாடத்தில் 'இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள்' என்று ஏராளமானோரின் பெயர்கள் கூறபட்டிருந்தன. பரீட்சையில் புள்ளிகளைப் பெறுவதற்காகத் தேவைப்படும் என்பதைத் தவிர்த்து யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் தவிர வரலாற்றுப் பாடத்தில் யாருக்கும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏதோ கதை சொல்கிறார்கள் என்ற வகையில் கேட்டுக் கொள்வதில் தடையேதுமிருக்கவில்லை. ஆனால் அதிலிருந்து கேள்விகள் கேட்டது மட்டுமே கடுமையான உபாதையாக இருந்தது.

சுதந்திரதினம் என்பது பள்ளிவிடுமுறை நாள் என்பதைத் தவிர வேறெந்த முக்கியத்துவமும் இல்லாதிருந்தது. கடந்த சில வருடங்களில் கடுப்பேற்றும் நாள் என்பதாகவும் மாறியிருந்தது. தொண்ணூற்று எட்டாம் ஆண்டின் சுதந்திர தினம் என்று நினைவு. வவுனியாவில் இருந்தபோது அப்போது பரீட்சார்த்த ஒலிபரப்பிலிருந்தது 'வானம்பாடி' என்றொரு வானொலிச் சேவை. அதில் சுதந்திரதின விசேட உரை அல்லது வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பலர். அவர்கள் எல்லோரும் இலங்கையின் சுதந்திரத்துக்க்காகப் போராடிய தலைவர்கள், தியாகிகள் பற்றி நினைவுகூர, நன்றி தெரிவிக்கவும் தவறவில்லை. 

மறைந்த அமைச்சர் ஒருவர். அவர் பேச்சைக் கேட்பதே மிகவும் சுவாரசியமானது. என் நண்பர்கள் பலரைப்போலவே எனக்கும் மிகப்பிடித்த பேச்சாளர், தமிழ் ஆளுமை. அதிரடியாகப்பேச்சை ஆரம்பித்தார். இங்கே பலரும் என்னமோ பல தியாகிகள் போராடிச் சுதந்திரத்தைப் பெற்றதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெலாம் எதுவுமில்லை. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தபோது துரதிருஷ்டவசமாக இலங்கைக்கும் கொடுத்துவிட்டார்கள் என்றார். அன்றிலிருந்து அவர்மேல் மேலும் மரியாதை அதிகரித்திருந்தது.

லங்கைக்கு துரதிருஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்தது பற்றி எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் இருக்கவில்லை. யாழ்ப்பணத்தில் 2002 இல் சமாதான உடன்படிக்கை ஏற்படும் வரையில் ஊரடங்கு இரவு எட்டரை மணிக்கு அமல் படுத்தப்படும் காலப்பகுதி. ஆகவே, இரவு எட்டு மணிவரை நீடிக்கும் எங்கள் வீதியோர அரட்டைப் பேச்சுக்களில் சுதந்திரம் குறித்தும் பேசியிருக்கிறோம். 

சுதந்திரம் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால்..? என்பது பற்றிய கனவு அது. 

'மச்சி நாங்களெல்லாம் இங்க்லீஷ் மீடியத்திலேயே படிச்சிருப்போம். வெள்ளைக்காரன் புண்ணியத்தில இங்க்லீஷ் மீடியத்தில படிச்சுட்டு, ஓட்டை உடைசல் இங்க்லீஷ் பேசிக்கொண்டு, கணக்குப் பாடத்தில் கூட  கிராமர் மிஸ்டேக் கண்டுபிடிக்கும் இந்த அப்பன்காரன்களை ஸ்டைலா இங்க்லீஷ் கதைச்சு தெறிச்சோட வைக்கலாம்' 

'ஓமடா பேப்பர்ல எழுதினத அப்பிடியே வாசிக்கிறமாதிரி ஒரு இங்க்லீஷ். இதில படிச்சவங்களாம் எண்டொரு பெருமை'. 

'எங்கள் எல்லாரிட்டையும் சைக்கிளுக்குப் பதிலா ஆளுக்கொரு கார் இருக்கும். இந்த நேரத்தில இப்பிடியெல்லாம் வெட்டியா நிக்காம டிஸ்கோ, நைட்கிளப் என்று பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடலாம்' 

இப்படியாகப் பல 'காத்திரமான' கருத்துக்கள் முன்வைக்கப்படும்.

அதைவிட மிக முக்கியமான ஒரு விஷயமிருந்தது. எங்களுக்கெல்லாம் குறைந்தபட்சம் ஆளுக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இருப்பார்கள் என்பதுதான் அது.

எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக அதையே கருதினோம். எங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட் கிடைக்காமல் போனதற்கான ஒரே காரணம் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததுதான் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. இதே நம்பிக்கையுடன் பலரும் இருந்ததாகத் தெரிகிறது.

டந்த முறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது சந்தித்த நண்பன் ராகுல், அடிக்கடி செல்பேசியில், 'இப்ப வெளிக்கிட்டு வந்துட்டிருக்கேன்', 'இப்ப அங்கதான் போயிட்டிருக்கேன்', 'அரைமணித்தியாலத்தில வீட்ட நிப்பன்'
- மனைவியிடம் ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தான்.

கட் செய்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக தலையை அசைத்தவன் (அது என் பிரமையாக இருக்கலாம்)

"என்ன மச்சான் பாக்கிற?" என்றான்.
"இல்ல மச்சி அந்தக்காலத்தில இரவு பத்துமணி வரைக்கும் ரோட்ல சுத்திட்டிருந்த பயபுள்ள... அப்பல்லாம் வீட்டில ஒருவார்த்த சொல்லியிருப்பியா? இப்ப ஆறுமணிக்கே.."
"விடுறா விடுறா"
"என்ன ஆட்டமடா போட்டீங்க...இந்தச் சந்தீல ஒருமணித்தியாலம் நிப்பாங்களாம்.. அப்பிடியே வீட்ட போறமாதிரியே வெளிக்கிட்டு அந்தச் சந்தீல போய் ரெண்டு மணித்தியாலம் நிப்பாங்களாம்.. வெளீல கொட்டிட்டு சாமத்தில வீட்ட போய் பாவம் மினக்கெட்டு அம்மா சமைச்சு வச்சத சாப்பிடாமலே படுப்பாங்களாம் என்னா அராஜகம்.."
"கதைப்பீங்கடா கதைங்க"  
"இல்ல மச்சி அப்பிடிப்பாத்த உன்ன, இப்ப இப்பிடி....மனசுக்கு ரொம்பக்க்க் கஷ்டமாயிருக்குடா"
"சரி சரி விடு காணும்"
"மச்சி எப்பவாவது சுதந்திரத்த இழந்துட்டம்னு ஃபீல் பண்ணியிருக்கியா?"
"அப்பிடியெல்லாம் இல்லடா... முதல்ல வெளிலருந்து யோசிச்சா அப்பிடித்தானிருக்கும் ஆனா அப்பிடியில அது ஒரு சுதந்திரம் இதுவுமொரு சுதந்திரம்தான்... நல்லாருக்கு"
"அத ஏண்டா அழுறமாதிரியே சொல்றே"

புதிதாகத் திருமணமான நண்பன் சில நாட்களோ, மாதங்களோ எதையோ பறிகொடுத்த மாதிரி கண்களுடன், சோகமாக இருப்பதுபோலத் தோன்றுவதெல்லாம் - உண்மையில் அவன் அப்படி இருக்கிறானா, இல்லை நாங்கள் அப்படி ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்க்கிறோமா என்பது சரியாகத் தெரிவதில்லை. திருமணமானால் சுதந்திரம் அவ்வளவுதான் என்றொரு நம்பிக்கை நம்மிடையே எப்போதுமுண்டு. நினைத்த நேரத்தில் ஊர்சுற்ற முடியாது என்பதுதான் பிரதான கவலை. நண்பர்களிடமிருந்து தவிர்க்க முடியாமல் விலக நேரிடும். ஏதோ ஒரு மாட்டிக்கொண்ட உணர்வு வந்துவிடும்.

நண்பன் ஜோதி கொழும்பு வரும்போதெல்லாம் நாங்கள் தங்கியிருந்த பெரிய வீட்டில் வந்து தங்குவான். வேலைக்குப் போய்விட்டு வந்து இரவு கட்டாக்காலிகள் போல கேட்பாரின்றிச் சுற்றிக் கொண்டிருந்த எங்களை ஏதோ விசித்திர ஜந்துகளைப் பார்ப்பது போலவே பார்த்துக் கொண்டிருப்பான்.

கொழும்பில் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிலவிய காலகட்டம். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். பார்ட்டி, குடி, வீதியில் அரட்டை என ஒன்பது, பத்து, பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நாள் தவறாமல் 'நைட் கிளப்' சென்று அதிகாலை மூன்று மணிக்கு வீடு திரும்புவான் இன்னொருத்தன். யாருக்காவது பிறந்தநாள் வந்துவிட்டால் வீடே அமர்க்களப்படும். ஷைல் தனக்குத் தெரிந்த சாப்பாட்டுக்கடை நண்பனிடம் சொல்லி பெருமெடுப்பில் கோழிகள் பொரித்து, முட்டைகள் அவித்து (அது சைவக்கடை என்பது முக்கியமானது) இன்னும் என்னென்ன முடியுமோ அதெல்லாம் செய்வித்து, இரவு ஏழுமணிக்கு த்ரீவீலரில் கொண்டுவந்து இறக்கும்போது, சயந்தன் இன்னொரு த்ரீவீலரில் போத்தல்களைக் கொண்டுவந்திருப்பான். கௌரி, வெள்ளை, சங்கர், எனக்கெல்லாம் ஆளாளுக்கு ஒருவேலை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். எல்லாம் கச்சிதமாக ஆரம்பித்தால் விடிகாலைவரை திருவிழாதான்! யாரும் கேள்வி கேட்க இல்லாத கொண்டாட்டம் அது!

இதெல்லாம் அவனுக்குப் புதிதாக, பிரமிப்பாக இருந்திருக்க வேண்டும். பாவம், அவன் பள்ளியில் படித்து, உயர்கல்வி முடித்து வேலையில் சேர்ந்து முதல் மாதச் சம்பளம் வாங்கும்போதே வீட்டில் அவனுக்கு மனைவி! நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருந்தது. இதுகுறித்து ஒருநாள் மிகவும் கவலைப்பட்டு, தீவிர சோகத்தில் ஆழ்ந்து அதை மறக்க ஒரு சோகப் பார்ட்டி வேறு!

"டேய் முப்பது வயதுக்கு மேலதான் கட்டவேணும் என்னடா?" 
ஒருமுறை மிகுந்த ஏக்கத்தோடு கேட்டான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
வாழ்க்கையில் சுதந்திரத்தையே அனுபவிக்காத ஒரு அபலை(?) ஆணின் அத்தனை சோகமும் அவன் கண்களில் தெரிந்தது.

ண்மையில் இந்த சுதந்திரம் என்பது கூட ஒரு கற்பிதமாக இருக்கலாம். அல்லது அதுவும் ஒரு நம்பிக்கைதான் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என உணர்வதுதான் சுதந்திரம். பத்துவருடம் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்கிற நிர்ப்பந்தம் இருக்கும்போது சுதந்திரம் பறிக்கப்பட்டதாய் உணர்வோம். ஆனால் பத்து வருடமாக ஒரேநாட்டிலேயே எங்கும் போகாமல் இருப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. நாம் எப்போதும் எந்தநாட்டுக்கும், ஏன் எந்தக் கிரகத்துக்கும் போகலாம், வரலாம் என்கிற மனநிலைதான் சுதந்திரமாய் இருக்கிறது.

கடுமையான கெடுபிடிகள் இருந்த யுத்த காலம். அலுவலகத்தில் உடன் வேலைபார்த்த இரண்டு நண்பர்களைப் போலீஸ் தவறான தகவலின் அடிப்படையில் கைது செய்துவிட்டது. உடனடியாகத் தகவல் தெரிந்து அலுவலகமே பரபரப்பானது. உயர்மட்டத்தில் செல்வாக்குள்ள நிர்வாகி இரண்டே நாட்களில் நேரில் சென்று அவர்களை அதிரடியாக விடுவித்து அலுவலகம் அழைத்து வந்தார். நடந்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.

கைது செய்யப்பட்ட விதத்தைப் பார்த்தபோது மீண்டும் வெளியில் வருவோம் என்றே நம்பவில்லையாம். இரவு முழுவதும் தூங்காமல் ஒருவரியோருவர் பார்த்து அழுதுகொண்டிருந்திருக்கிறார்கள். அன்று அவர்கள் உணர்ந்ததுதான் உண்மையான் சுதந்திரம் என்று தோன்றுகிறது. அப்படியொரு மலர்ச்சியை அவர்கள் முகத்தில் என்றும் பார்த்ததில்லை. அதே காலப்பகுதியில் ஒருவித பயத்துடன் கொழும்பிலிருந்த நண்பர்கள் சிலர் இந்தியா சென்றிருந்தார்கள். அவர்கள் பின்பு இங்கு வந்தபின் சொல்வது தாம் தமிழனாக சுதந்திரமாக, எந்தவித பயமுமின்றி உணர்ந்தது சென்னையில்தான் என்பார்கள்.

ங்களுக்கே எந்த அளவிற்குச் சுதந்திரம் இருக்கிறது என்கிற கேள்வி ஏதுமில்லாமலே, யாருக்காவது சுதந்திரம் வழங்கிவிடும் ஆர்வம் மட்டும் எல்லோருக்குமிருக்கிறது. அது ஓர் போதை. நாங்களும் வழங்கியிருந்தோம். எங்களால் வெள்ளைக்காரன் மாதிரி நாட்டுக்கா வழங்கமுடியும். ஒரு வீட்டுக்குச் சுதந்திரம் வழங்கியிருந்தோம்.

நண்பன் ஒருவன் யாழ்ப்பாணத்தில் வந்து தங்கிப் படித்துகொண்டிருந்த  வீடு அது. கடும் கண்டிப்பான உரிமையாளர் மனைவியுடன் கொழும்புசெல்ல, வீடு ஒருவாரம் எங்கள் கட்டுப்பாட்டில்! முதல்நாள் மாலையே ஒரு குறூப் டீவி, விசிடி பிளேயர் சகிதம் தரையிறங்கியது. இன்னொரு குறூப் அட்டைப் பெட்டிகள், நீலாம்பரி ஹோட்டல் அசைவ உணவு வகைகளுடன் முன்னிரவு நேரத்தில் களத்தில் இறங்கியது.

அயலவர்கள் இரண்டே நாட்களில் மிக்க மகிழ்ச்சி தெரிவித்தார்கள். "தம்பி இந்த வீடு இப்பதான் இவ்வளவு கலகலப்பா இருக்கு. எனக்குத் தெரிஞ்ச நாள் துவக்கம் ஒரு விறுத்தமில்லாமத்தான் இருந்திருக்கு" - உண்மையாகவே பாராட்டினார் பக்கத்து வீட்டு அங்கிள்.
பின்னர் தெரிந்தது  - நீண்டநாள் பகையாம்! 

அங்கேயொரு நாய் இருந்தது. அதை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை, பாவம். நண்பன் கேற்றை திறந்து வைத்தான். நாய் பொருட்படுத்தவில்லை. அதை வெளியே அழைத்துச் சென்றான். அடக்குமுறையிலேயே வளர்ந்ததில் வெளியே வந்தால் ஓடித் தப்பலாம் என்கிற பொது அறிவெல்லாம் அதற்கு இருக்கவில்லை. 'உச்சு வா' என்று கூட்டிக் கொண்டே நண்பன் ஓட, அதுவும் சேர்ந்து ஓடியது. அப்படியே ஓடிப்போனது, நாய்க்கும் சுதந்திரம்! ஏதோ எங்களால் முடிந்தது.

நம் மக்கள் எப்போதெல்லாம் சுதந்திரம் கிடைத்ததைப் போல மகிழ்ந்திருக்கிறார்கள் என்று யோசித்தால்?
எனக்குத் தெரிந்து 87 ஆம் ஆண்டில் ஒருமுறை. அப்படி ஒரு மகிழ்ச்சி எல்லோருக்கும். இந்திய அமைதிப்படை வந்தது அப்போது. பின்பு 94 ஆம் ஆண்டில். சந்திரிகா இலங்கையின் ஜனாதிபதியானார். துரதிருஷ்டவசமாக இந்த சுதந்திர மனநிலை எல்லாம் சில நாட்களுக்குத்தான் நீடித்தது. அதன்பின் தெளிந்துவிடார்கள். மற்றபடி, சுதந்திரம் என்கிற உணர்வை முழுமையாய் அனுபவித்தில்லை. அதற்கு அளவுமுறையும் கிடையாது. சமயங்களில் அடக்குமுறையின்போதுதான் நாம் அதுவரை அனுபவித்த சுதந்திரத்தை உணர்ந்துகொள்கிறோம். 

கடுமையாக நோயுற்று படுக்கையிலிருந்து எழுந்து வெளியே உலாவச் செல்லும் அந்த முதல் மாலைப்பொழுதில் முடிகலைத்து வீசுவதுதான் மீண்டெழுந்த ஒருவனின் சுதந்திரக் காற்று!  நான் சமீபத்தில் உணர்ந்ததும் அதுதான். சமயங்களில் மனதிற்கு பிடிக்காமல் போய்விட்ட நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு வெளியே வரும்போது இருப்பதும்கூட ஒரு சுதந்திர உணர்வே! இன்னும்கூட சுதந்திரம் எப்படியிருக்கும்? என்றுகேட்டால் மறுபடியும் 'கப்பலேறிப் போயாச்சு' பாடலுக்குத்தான் போகவேண்டும்.

Thursday, February 2, 2017

அவர்களுக்குத் தெரியுமா?

"எப்பிடி போகுது...என்ன உங்கள் ஆட்சிதானே?" 

பெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்தமதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால் நல்லவர்.  

"ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அனுபவித்திருப்பார்கள்?" என பெரேரா அவ்வப்போது கவலைப்படுவார். அவரது நினைப்பெல்லாம் புலிகள் தமிழ் மக்களைக் காலங்காலமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், அரசாங்கம் அவர்களை மீட்டு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது என்பதுதான். இங்கே பலரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நவநீதம்பிள்ளை இங்கே வந்திருந்த சமயம், ஒருநாள் பெரேரா பரபரப்பாக,
"அவர் முள்ளி வாய்க்காலில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயன்றிருக்கிறார். அது எப்படி நியாயமாகும்?" என்றார்.

"அவர் புலிகளுக்குச் சார்பானவர் இல்லை. இறுதிப்போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள் அவர்களுக்குத்தான் அந்த அஞ்சலி"

"அவ்வளவு பொதுமக்கள் இறந்தி ருக்கிறார்களா? இந்த விஷயம் எனக்குத் தெரியாது " என்றார் அதிர்ச்சி படிந்த முகத்துடன். 

பாவம் பெரேரா படிப்பது ஒரு இனவாதப் பத்திரிக்கை. பார்ப்பது அரச தொலைக்காட்சி, நம்புவது முற்றுமுழுதாக அரசாங்கத்தை. எப்படி உண்மை தெரியும்? அவரைப் பொறுத்தவரை அரசாங்கம் அறிவித்தபடி, இறுதிப்போரில் இறந்தவர்கள் அனைவருமே புலிகள்தான். இன்றுவரை சிங்களவர்கள் பலரது நம்பிக்கையும் அதுதான்!

எங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா? என்பதுதான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருக்கிறது. எப்போதுமே அது அப்படித்தான். அவர்கள் எந்தளவிற்குப் தமிழர் பிரச்சினையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?

றுதிப்போர் ஆரம்பிக்கும் வரையில் இங்கேயுள்ள படித்த சிங்களவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலரும் யுத்தம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை - நான் சந்தித்த அனுபவங்களின்படி. புலிகள் குறித்து ஒரு பயம், பிரமிப்பு இருந்தது. விழிகள் விரியப் பேசிக் கொள்வார்கள். சமாதான காலத்தில் யாழ் சென்று வந்தவர்கள் சிலர் வன்னியில் புலிகளைச் சந்தித்தது பற்றியும் அவர்கள் தமக்கு உதவியது பற்றியும் கூறுவார்கள். சிலர் அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு, வீதி ஒழுங்கமைப்பு விதிகள் பற்றிச் சிலாகித்துப் பேசுவார்கள். யுத்தம் என்பது செய்திகளில் கேட்பது மட்டுமே.

அநேகமாக நான் வேலை பார்த்த அலுவலகங்களில் நான் மட்டுமே தமிழனாக இருப்பேன். மதிய உணவின்போது நான் எல்லோருடனும் சேர்ந்து கூட்டமாகச் சாப்பிடுவதை எப்போதும் விரும்புவதில்லை. அது ஏனோ ஒரு அசௌகரியம். ஒருவேளை ஆரம்பகால அனுபவமாகவும் இருக்குமோ என யோசித்ததுண்டு. கொழும்பு வந்த புதிதில் சாமாதான காலம் முடியப் போவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கின. அப்படியே நடந்து மாவிலாறு சம்பவமும் நடைபெற்றிருந்தது.

சாப்பாட்டு மேசை உரையாடல்களில் முக்கிய பேச்சே யுத்தமும் புலிகளும்தான். ஆரம்பத்தில் யுத்தம் பற்றிய எனது பார்வை, தமிழர்களின் நிலை பற்றி என்னிடம் ஆர்வமாகப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் என்ன நினைத்தார்களோ, புலிகள் தரப்பில் 'பேசவல்ல அதிகாரியாக' என்னைப் பாவித்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். நானும் முடிந்தவரை பதிலளிப்பேன். சிலநாட்களில் அநேகமான என் பதில்கள், 'இந்தக் கேள்வி எனக்குப் பிடிச்சிருக்கு', 'இந்தக் கேள்வி சுத்தமாகப் பிடிக்கவில்லை'.

எல்லோரும் நல்ல நண்பர்களாக, உதவி செய்பவர்களாக இருந்தாலும், ஒரிருவரிடம் மட்டும் 'இனத்துவேஷம்' அவ்வப்போது பேச்சில் கிண்டலாக வெளிப்படும். ஒருமுறை காலி சென்றிருந்தபோது, கடலில் தூரத்தில் தெரிந்த படகொன்றைக்காட்டி ஒருவர் கேட்டார், "உமா அது எல்டிடி படகுதானா என்று பார்த்துச் சொல்!"

பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் சந்தித்த யுத்தத்தை கொழும்பிலும், வேறு இடங்களிலும் பேரூந்துக் குண்டுவெடிப்புகளூடாகத்தான் நேரடியாகத் தெரிந்துகொண்டார்கள். அது நிச்சயமாக எம்மைப் புரிந்துகொள்ளும் அனுபவமாக இருக்கவில்லை.

பேரூந்துக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு காலைப்பொழுதில், ஹர்ஷா சோகமும் கோபமுமாக என்னிடம் வந்தான். 'நீங்கள் எங்கள் ஜனாதிபதியைக் கொல்லுங்கள், அமைச்சர்களைக் கொல்லுங்கள்.. ஏன் அநியாயமாகக் குழந்தைகளை எல்லாம் கொன்றிருக்கிறீர்கள்?' என்றான். உடனே புள்ளி விபரங்களை எடுத்துக்கூறி, நீங்கள் கொல்கிறீர்கள், அதனால் நாங்களும் என்று சொல்வதைப் போன்ற அபத்தம் வேறேதும் இருக்க முடியாது என்பதால் அன்றைய பொழுது மௌனமாகவே கடந்துபோனது. அன்று யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

எங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா? எந்த அளவிற்கு அவர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ளார்கள்? அதைத் தெரிவிப்பதற்கான வழிவகைகள் ஏதேனும் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை, ஆனால் சிங்களவர்கள் சிலர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

திருகோணமலையில் வேலை செய்த அலுவலகத்தில் ஒரு சிங்கள அங்கிள். நல்ல மனிதர்தான். ஆனால் பாருங்கள் ஓர் புத்தகம் வைத்திருந்து அவரைச் சந்திக்க வரும் சிங்கள நண்பர்களுக்கு அன்பளிப்பது வழக்கம். எழுதியது அவரது நண்பராம். இனப் பிரச்சினையைப் பற்றிப் புரிந்துகொள்ள கட்டாயம் படிக்கவேண்டும், வரலாறு தெரியவேண்டும் என்பதற்காக அதனை வழங்குவதாகக் கூறினார். அந்தப்புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினரைப் புலிகள் கொன்றதிலிருந்துதான் இனப்பிரச்சினை ஆரம்பிக்கிறது. அதுதான் தோற்றுவாயாம். இப்படி ஆளாளுக்கு தங்கள் விருப்பப்படி வரலாற்றை எழுதிப் பரப்பிக் கொண்டுள்ளார்கள். அலுவலகங்களில் பேசிப்பழகிய வரையில் எங்காவது ஓரிருவர் தவிர, அவர்கள் யாருக்கும் எந்தப் புரிதலும் இல்லை என்பதுதான் உண்மை. அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லை. படித்தவர்கள், இணையத்தை நாள்தோறும் பயன்படுத்துபவர்கள் நிலைமையே இப்படி.

சிங்களவர்களில் பலருக்கு இன்னும் தமிழர்கள் யார் என்பது தெரியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் இருந்தோ, ஆபிரிக்காவில் இருந்தோ வந்தவர்களாக இருக்கலாம். அல்லது செவ்வாய்க் கிரகத்திலிருந்துகூட வந்திருக்கலாம். பலர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என நம்புகிறாரகள். ஆனால் தமிழர்கள் வந்தேறிகள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படித்தான் அரசியல்வாதிகளால் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களின் வரலாற்றுப் பாடப்புத்தகம்கூட அப்படிச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வக்குடிகள் அல்ல. அவர்கள் இங்கே வாழலாம் ஆனால் நாட்டைப் பிரிக்க, அதிகாரத்தில் உரிமை கோர எல்லாம் முடியாது என்பதுதான் இனவாத அரசியல்வாதிகளின் பேச்சாக இருந்துவருகிறது. 

எதற்காக இந்த யுத்தமெல்லாம்? அடிப்படையில் என்னதான் பிரச்சினை? என்கிற விவரமெல்லாம் சாதாரண ஒரு சிங்களப் பிரஜைக்குத் தெரியாது. அல்லது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அதனைச் சிங்கள அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ தெரியப்படுத்த விரும்பியதில்லை. நன்கு படித்த சிங்களவர்களுக்கே இனப் பிரச்சினை பற்றிய தெளிவில்லை எனும்போது சாதாரண ஒரு சிங்களப் பிரஜை, எங்கோ கிராமத்தில்வாழும் பாமர மக்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் பார்வையில் இனப்பிரச்சினை என்பது, வந்தேறிகளான தமிழர்கள் புலிகள் மூலமாக நாட்டைத் துண்டாட முயற்சித்தார்கள். அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து, படையினரின் உயிர்த்தியாகத்தின்மூலம் தீவிரவாதிகளை ஒழித்து நாட்டைக் காப்பாற்றிவிட்டார்கள். புலிகள் ஒரு மோசமான தீவிரவாதிகள். அவர்கள் நம் நாட்டின் ஒருபகுதியைப் பிடித்து வைத்திருந்தார்கள். அரசாங்கம் அவர்களிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து அமைதியான வாழ்வுக்கு வழி செய்திருக்கிறது என்பதுதான் பலரது புரிதல்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் இப்பொது ஒரு அமைதியான, சுபீட்சமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பெரும்பான்மையானோரின் நம்பிக்கை.

"இனி நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன?"

சந்தோஷமாக சிரித்துக்கொண்டே உடன் வேலை பார்க்கும் சிங்கள நண்பர்களால் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம். 'ஒக்கம இவறாய்' (எல்லாம் முடிந்தது) எனக் குறிப்பிடப்பட்ட இறுதி யுத்ததின்பின்னர் அவர்களின் விசாரிப்பு அது. அவர்களைப் பொருத்தவரை யாழிலும் யுத்தம் நடைபெற்றது. அதனால்தான் நாங்கள் போகமுடியாமல் கொழும்பில் இருக்கிறோம் என்றே நம்பிக்கொண்டிருந்தார்கள். பலருக்கு யாழ்ப்பாணம் வன்னியில்தான் இருக்கிறது அல்லது வன்னி யாழில் இருக்கிறது என்கிற நம்பிக்கை. யுத்த காலத்தில் இலங்கை இணையத்தளங்களில் இராணுவம் அப்போது முன்னேறிய நிலைகளை அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள். எனது அலுவலகத்தில் பலர் அப்போதுதான் இலங்கை வரைபடத்தையே முதன்முதல் பார்ப்பதுபோல பார்த்தார்கள். ஒரு நண்பருக்கு மதவாச்சி வவுனியாவுக்குக் கீழே இருந்தது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதுவரை அவர் மேலே இருந்ததாக நம்பிக் கொண்டிருந்தாராம்.

யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதை கிடையாது என்பதே அவர்களுக்குப் பேரதிர்ச்சி. கப்பலிலும், விமானத்திலும்தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது, தேவையுமில்லாதது. இவர்கள் எல்லோரும் நாளாந்தம் இணையத்தைப் பயன்படுத்தும் வசதியுள்ளவர்கள். அநேகமானோர் பொறியியல் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“இனி உங்களுக்கு எல் டி டி பயம் இல்லைத்தானே நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன?” என ஒரு படி மேலே சென்று அதி விவரமாகப் பேசுபவர்களிடம், 'ஙே' என்றொரு பார்வை பார்ப்பதே மிகச்சிறந்த பதிலாக இருந்திருக்கிறது.

பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறோமோ இல்லையோ ஆனால் தீர்வு சொல்வதில் எல்லோருக்குமே ஒருவித ஆர்வமிருக்கிறது.

றுதிப்போர் உச்சமடைந்திருந்த காலம். புதிய வீட்டுக்கு மாறிக் கொண்டிருந்தோம். பொருட்களை ஏற்றிக்கொண்டு Canter Lorry யின் முன்புறம் நானும் நண்பனும் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தோம். டிரைவர் சிங்களவர்தான். வாட்டசாட்டமாக இருந்தார். பேச்சுக் கொடுத்தவர் நாங்கள் யாழ்ப்பாணம் என்று தெரிந்ததும். நானும் அங்கே இருந்திருக்கிறேன் என்றார். மாதகல், காரைநகர், ஊர்காவற்துறை, காங்கேசன்துறை எல்லா இடமும் பரிச்சயம் அருமையான இடங்கள், எதுக்கு இந்தச்சண்டை என்றார். 

அவர் கடற்படையில் இணைந்திருந்தார் எனவும், பின்னர் வேலையை விட்டுவிட்டு மத்திய கிழக்கு சென்று சிலவருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். பணம் சேர்ந்ததும் வாகனத்தை வாங்கி இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். 

"ஒருவேளை ஓடிவந்திருப்பான்" என்றான் நண்பன் மெதுவாக. 
"ஓடி வரல தம்பி ரிட்டையர் பண்ணிட்டு வந்தது "
, இப்போது கொச்சையான தமிழில் பேசினார். அசடு வழிந்துவிட்டு நண்பன் தொடர்ந்தும் பேசினான்.

யுத்தம் அவருக்குப் பிடிக்கவில்லை. எதுக்கு இந்தச்சண்டை என அடிக்கடி சலித்துக் கொண்டார். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஓர் நல்லிணக்கத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தார். நாங்கள் வெலவெலத்துப் போனோம். இதுவரை யாருமே அப்படியொரு யோசனை சொன்னதாகத் தெரியவில்லை. அவர் சர்வசாதரணமாகக் கூறிவிட்டார். 

"இப்ப பாருங்க மட்டக்களப்ப கருணா அம்மானிட்ட குடுத்தாச்சு அதேமாதிரி யாழ்ப்பாணத்த பிரபாகரனிட்ட குடுத்தா எல்லபிரச்சினையும் ஓவர்"

'யாழ்ப்பாணத்துக்கு ரயில் விட்டாச்சு', 'நல்ல ரோட் போட்டிருக்கு இதெல்லாம் இவ்வளவு நாளா இல்லாம சனம் எவ்வளவு கஷ்டப்பட்டிச்சு?', 'முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததால்தானே இதெல்லாம் சாத்தியமானது?' என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் மகிழ்ச்சி தெரிவிக்கும் பலர் இருக்கிறார்கள். 

இதெல்லாம் முப்பது வருஷத்துக்கு முதலே இருந்ததுதான் என்பதெல்லாம் பெரியவர்கள் சிலருக்கும் மட்டுமே தெரியும். இளைஞர்கள்? உண்மையில் நாங்கள் யுத்தம் ஆரம்பிக்கும்போது இருந்ததைவிட  இன்னும் பின்னோக்கி வந்துவிட்டோம். இவ்வளவுகால இழப்புகளும், வலியையும் கடந்து இப்போது யோசித்தால் முதலில் இருந்த நிலையை அடைவதேகூட சாத்தியமில்லையோ என்கிற அவநம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது.

போரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகள் மக்களிடம் திரும்பக் கையளிக்கப்பட்டதா? உடைமைகளை இழந்தவர்களுக்கு சரியானபடி ஈழப்பீடுகள் வழங்கப்பட்டனவா? பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள், தொழில் முயற்சிகள் பற்றியதெல்லாம் சம்பந்தப்படவர்களின் தனிப்பட்ட கவலைகள் என்பதில் எல்லோருமே தெளிவாக இருக்கிறார்கள். தொண்ணூறாம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு இன்னும் விடுவிக்கப்படவில்லை. எல்லாமே பயிர்ச்செய்கை நிலங்கள். அதே முல்லைத்தீவுப் பிரதேசத்திலும். பாதுகாப்புக் காரணங்கள்காட்டி உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் கையகப்படுத்தியதை முற்றாக விடுவிப்பார்கள் என்கிற நம்பிக்கையே பலரிடம் இல்லை. 

உண்மையில் 96 இல் யாழ்ப்பாணத்தில் இராணுவம் கைப்பற்றியபோதே வலிகாமம் வடக்கு பிரேதேசத்தை மக்களிடம் கையளித்திருக்க முடியும். அண்மையில் வலிகாமம் பகுதியில் ஒரு குறித்தபகுதி காணிகள் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக, அல்லது பார்வையிட அனுப்பதிப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதுவே சிங்களப் பெரும்பான்மையினரால் என்னவோ தமிழர்களுக்குப் பெரியதொரு தீர்வுத்திட்டத்தைக் கொடுப்பதுபோலவே ஒரு பரபரப்புச் செய்தியாகப் பேசப்பட்டிருக்கும். ஊடகங்கள் வாயிலாகச் சிங்களமக்கள் அப்படித்தான் உணரக்கூடும். மக்களின் சொந்தக் காணிகளைத் திருப்பிக் கொடுப்பதே என்னமோ அரசாங்கம் பெரியதொரு விட்டுக் கொடுப்பைச் செய்வதுபோல, என்னமோ தமிழீழத்தைப் பெறுவதைப்போல சிக்கலான விடயமாகிவிட்டது. இதற்காகத்தான் தமிழர்கள் போராடினார்கள் என்றுகூட ஒரு பெருங்கூட்டம் நம்பலாம்.

சமீபத்தில் ஒரு சர்ச்சை. இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவது பற்றியது. பாடலாம் அப்படித்தான் இருந்தது என்பது பலர் கருத்து. இல்லை தமிழில் பாடக்கூடாது என ஏதோ ஓர் அமைப்பு சர்ச்சையைக் கிளப்பியது. 

இன்னும் சொந்தமண்ணுக்குத் திரும்ப அனுமதிக்கப்படாமல் இருக்கும் ஓர் வன்னி விவசாயக் குடிமகனோ, யுத்தத்தில் அவயத்தை இழந்து வாழ வழியின்றிக் கஷ்டப்படும் ஓர் இளைஞனோ தேசிய கீதத்தைத் தமிழில் பாடியேயாக வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருப்பார்கள் என்றோ, தமிழில் பாடியே தீரவேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் என்றோ நான் நம்பவில்லை.

ஆனால் இதையெல்லாம் பார்த்து, தமிழர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்குத்தான் சண்டைபிடித்தார்கள் என நம்பும் ஒரு கூட்டம் தென்னிலங்கையில் இருக்கும் என நம்பலாம்.

4tamilmediaவில் 2015ல் வெளியானது.