Tuesday, March 29, 2011

Malena

ஒரு பெண்ணால் ஆண்துணையின்றி தனித்து வாழ்வதென்பது எப்போதுமே பெரும் சவாலாகவே இருக்குமா? அதிலும் மிக அழகான ஒரு பெண் விதவையாகவும் இருந்துவிட்டால் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்? இதற்கு நாடு, காலம், மொழி என்ற வேறுபாடுகள் கிடையாதா? 


இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலப்பகுதி. இத்தாலியின் சிசிலி நகரப்பகுதியின் ஒரு காலைவேளை.மேலே விமானங்கள் பறந்துசெல்கின்றன. போர் பற்றிய செய்திகள் வீதிவழியாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் ரெனாட்டோவுக்கு தந்தையிடமிருந்துஒரு புதிய சைக்கிள் கிடைக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், வேகமாக ஓட்டிச் செல்கிறான். ஒரு கட்டைச் சுவரில் பள்ளிச்சீருடையில் அவனைவிட வயது கூடிய மாணவர்கள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ரெனாட்டோ தனது சைக்கிளைக் காட்டி, தானும் இப்போது பெரியவனாகிவிட்டேன். உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக்கூற, அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

சற்றுத் தொலைவிலுள்ள வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் விசிலடித்து சிக்னல் கொடுக்கிறான். எல்லோரும் அவசரமாக ஓடிவந்து உட்கார்ந்து கொள்ள, கூடவே ரெனாட்டோவும் அவர்களுடன்! அமைதியாக, மிகுந்த எதிர்பார்ப்புடன் அப்படி யாருடைய வருகைக்காகக் காத்திருகிறார்கள்?


மெலீனா! - ஊரின் மிக அழகான பெண். அந்தப்பகுதி ஆண்கள் அனைவராலும் வயது வேறுபாடின்றி ரசிக்கப்படும், பெண்களனைவரும் பொறாமைப்படும் பேரழகி. அவள் யாரையும் கவனிப்பதில்லை. அவள் கணவன் ஒரு ராணுவ வீரன். உலகப்போரில் பங்குகொண்டிருப்பவன். 

அவள் கடந்து சென்றதும் சிறுவர்கள் மீண்டும் தமது சைக்கிள்களில் விரைவாக ஓடிச்சென்று இன்னொரு வீதியில் அவளுக்காகக் காத்திருக்கிறார்கள். அவள் போகும் வழியெங்கும் ஒருகணம் ஆண்கள் ஸ்தம்பித்து நிற்க, பெண்களின் பொறாமைப்பார்வைகளும் கிசுகிசுப்புகளும் தொடர  சலனமின்றி, எதையும் கவனிக்காமல் செல்கிறாள்.


பருவ வயதுகளின் ஆரம்பத்திலுள்ள ரெனாட்டோவைப் பெரிதும் ஈர்க்கிறாள் மெலீனா. அவளின் நடத்தையைப் பற்றிய ஊரவர்களின் வதந்திகளை ரெனாட்டோவும் கேட்கிறான். தனது கனவுக்கன்னியைப் பற்றிய தவறான பேச்சுக்கள் அவனுக்கு எரிச்சலூட்டுகின்றன. இரவுவேளைகளில் அவளது வீட்டினை மறைந்திருந்து கண்காணிக்கும் அவனுக்கு அவளைப்பற்றிய வதந்திகள் பொய்யானவையென்றும், அவள் தன கணவனைமட்டுமே காதலிக்கிறாள், அவன் நினைவகாவே இருக்கிறாள் என்பதும் புரிகிறது. அதன்பின் யாரும் மேலீனாவைத் தவறாகப் பேசுவது கேட்டால் ஆத்திரம் கொள்கிறான். 

இந்நிலையில் மெலீனாவின் கணவன் இறந்துவிட்டதான செய்தி, அவள் மீதான ஒரு பொய்யான ஜோடிப்பு வழக்கு, அவளது செலவுகளுக்குப் பணம் தந்துகொண்டிருந்த ஆசிரியரான அவளது தந்தையின் இறப்பு எனத்தொடரும் நிகழ்வுகளால் அவளது வாழ்க்கை என்னவாகிறது? என்பதை ரெனாட்டோவின் பார்வையில் சொல்கிறது படம். 


எப்போதுமே என்னால் மெலீனாவை மறக்க முடியாது என ரெனாட்டோ கூறுவதோடு படம் நிறைவடைகிறது.

படம் முழுவது சிறுவன் ரெனாட்டோ தன்னை ஒரு வளர்ந்த மனிதனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பிரயத்தனங்கள் சுவாரஸ்யமானவை.

இயக்குனர் டொர்னாடோ குசாபேயின் படங்களின் வழக்கமான நகைச் சுவையுணர்வு படம் முழுவதும்!
- ரெனாட்டோவும், அவனது தந்தையும் பேசிக்கொள்ளும் காட்சிகள்.  

மெலீனாவாக மோனிகா பெலூசி! (Monica Bellucci) - இதுக்கு மேலே சொல்ல என்ன இருக்கு? 

இயக்கம் - Giuseppe Tornatore 
மொழி - Italian



டிஸ்கி: ஈரானிய சினிமா தவிர்ந்த ஏனைய உலக சினிமாக்களை அலுவலகங்களில், குடுபத்தினரோடு பார்ப்பதைத் தவிர்த்து, தனியாகவே பார்ப்பது நல்லது! அப்புறம் ஏதாவது கிக்கிலிபெக்கிலி (நன்றி: சூப்பர்ஸ்டார், படிக்காதவன்) ஆயிடும் அவ்வளவுதான்!

Monday, March 21, 2011

Tare Zameen Par


இந்தி சினிமாவில் வழமையான வர்த்தக ரீதியான மசாலாப் படங்களைத் தாண்டிய மாற்று சினிமாக்கள் சத்தமில்லாமல் ஒரு புரட்சியை ஏற்படுத்திக் கொண்டுவருகின்றன.

தமிழில் எப்போதாவதுதான் பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், வெயில் போன்ற முயற்சிகள். ஆனால் இந்தியில் எங்களுக்குத் தெரியாமலேயே தொடர்ந்து வெளிவருகின்றன. அதற்குக் காரணம் இவ்வாறான படங்களுக்கு, மசாலா படங்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், வரவேற்பு இல்லாமையாக இருக்கலாம்.

ஆனாலும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் எடுக்கப் படும் இப்படங்கள் அதிகளவிலான பார்வையாளர்களைக் கொண்ட இந்தி சினிமாவில் வியாபார ரீதியாக தோல்வியடைய சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுவும், இம்மாதிரியான முயற்சிகள் தொடர ஒரு காரணமாக இருக்கலாம். தமிழில் அப்படி அல்ல.


இந்தியின் வர்த்தக ரீதியான படங்களில், வித்தியாசமான முயற்சிகளை செய்து வருபவர் அமீர்கான். அவரது இயக்கத்தில் வெளியான முதலாவது படம் இது. அவருக்குள் இருக்கும் இன்னொரு புதிய ஆளுமையைக் கண்டு பிரமிக்க வைக்கிறது. புதிய கதைக்களம், சலிப்புத் தட்டாத தொய்வில்லாத திரைக்கதையமைப்பு,முதல் முயற்சியிலேயே அத்தனை விருதுகளுக்கும் தகுதியான ஒரு படைப்பைத் தந்திருக்கிறார்.

அதுவும் ஒரு பெரிய நடிகர் தனது சொந்தப்படத்தில் தன்னை முன்னிலைப் படுத்தாமல், ஒரு சிறுவனை ஹீரோவாக்கி, தான் ஒரு சாதாரண வேடத்தில்...நம்ம தமிழ் சினிமாவில எந்தக் காலத்தில்தான் நடக்குமோ?

ஆனால் அமிர்கானின் லகான், 3 idiots அளவுக்கு மக்களிடையே வரவேற்பைப் பெற்றதா எனத் தெரியவில்லை. (படத்தின் DVD யைப் பெற்றுக் கொள்ள அலைந்ததை வைத்து சொல்கிறேன்)


வசதியான குடும்பத்தில் தந்தை, அம்மா, அண்ணனுடன் எட்டு வயதுச் சிறுவன் இஷான். இஷானால் எழுத்துக்களை வேறு பிரித்தறியவோ, நினைவில் கொள்ளவோ,வாசிக்கவோ முடிவதில்லை. ஒரு பந்தை ஒழுங்காக எறிய முடிவதில்லை. எழுத்துக்கள் எல்லாம் இடம் மாறுகின்றன. மாயத் தோற்றங்களாகத் தெரிகின்றன. பிறகு எழுதுவது? பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் மிக மோசமான மதிப்பெண்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் அவன் ஒரு இயல்பான, துடிப்பு மிக்க, குறும்புத்தனமான பையன்.

பள்ளியில் அவனைத் தொடர்ந்து அடுத்த வருடம் படிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறுகிறார்கள். அவன் தனது விளையாட்டுத் தனத்தால் தான் படிக்காமல் இருப்பதாகவும், அவனுக்கு அளவுக்கு மீறி செல்லங்கொடுத்து இப்படியாகி விட்டதாக நினைக்கும் தந்தை, அவனைத் தனியாக வேறொரு ஊரிலிருக்கும் பள்ளியில் சேர்க்க முடிவு செய்கிறார். அங்கேயே ஆசிரியர்களின் கண்காணிப்பில் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமென்பதால் அவனது நிலையில் நிச்சயம் மாற்றம் வரும் என நம்புகிறார்.

அவனோ தன்னை அனுப்ப வேண்டாமென்றும் தான் இனி ஒழுங்காகப் படிப்பேன் என்றும் கூறிக் கெஞ்சுகிறான். அழுகிறான். அவன் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் அந்தத் தாயும் தந்தையும் அவனின் நன்மையைக் கருத்தில் கொண்டு தங்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனை அந்தப் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இஷான் இரவு முழுவதும்  அழுது கொண்டே இருக்கிறான்.


அவனால் அங்கு, முற்றிலும் புதிய சூழ்நிலையில் ஒன்ற முடியவில்லை. தாய்,தந்தை மேல் உள்ள கோபம், தனது இயலாமை காரணமாக தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறான். யார் பேச்சும்கேட்காமல் ஒரு முரட்டுப் பிடிவாதத்துடன் இருக்கிறான். வார விடுமுறையில் தனது குடும்பத்தினர் பார்க்க வரும்போது மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறான

வகுப்பறையில் அவனது இயலாமையை புரிந்து கொள்ளாமல், ஆசிரியர்களால் தண்டிக்கப் படுகிறான். கிண்டலடிக்கபடுகிறான், சக மாணவ னான கால் ஊனமுற்ற ஒருவன் மட்டும் அவனுக்கு ஆறுதலாக இருக்கிறான். இஷானும் அவனுடன் மட்டுமே கதைக்கிறான். வேறு யாருடனும் கதைப்பதில்லை. ஆசிரியர்கள் உட்பட. வகுப்பு தவிர்ந்த நேரங்களில் தனிமை.


இந்நிலையில் பள்ளிக்கு புதிய தற்காலிக ஓவிய ஆசிரியராக வருகிறார் நிகும்ப். (அமீர்கான்). கலகலப்பான இளைஞரான அவர் தனது அணுகுமுறையால் எல்லாச் சிறுவர்களையும் எளிதாக உடனேயே கவர்ந்து விடுகிறார். இஷான் மட்டும் அவருடன் ஒன்ற மறுக்கிறான். ஓவியமும் வரையாமல் ஒதுங்கிச் செல்லும் அவனுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது எனப் புரிந்து கொள்ளும் அவர், அவனுடைய புத்தகங்களை பார்க்கிறார்.

அவன் விடும் பிழைகளின் ஒழுங்கை வைத்து அவனுக்கு கற்றல் குறைபாடு (Dyslexia) இருப்பதை கண்டறிகிறார். அவனுக்கு இருக்கும் வேறு திறமைகளை கண்டுபிடித்து அந்த வழியில் அவனை ஊக்குவிக்க வேண்டுமென்பதை உணர்ந்து, அவனுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோரைச் சந்திக்கிறார். அங்கு அவன் வரைந்த படங்களைப் பார்த்து, அவனிடம் இருக்கும் ஓவியம் வரையும் திறனைக் கண்டு கொள்கிறார்.


ஒரு நாள் வகுப்பறையில் Dyslexia குறைபாட்டுக்கான அறிகுறிகளான தோற்றப் பிறழ்வுகளை விவரித்துக் கொண்டு செல்ல ஏனைய மாணவர்கள் அதனை நகைச்சுவையாக எண்ணி சிரிக்க, அவன் மட்டும் அதிர்ச்சியடைகிறான். சொல்லிவிட்டு இறுதியில் இப்படியெல்லாம் ஒருவனுக்குத் தோன்றியிருக்கு அவன் யார்? என்று கேட்க, அவன் தன்னைத்தான் கூறுகிறார் என்றெண்ணி திகைக்கிறான். அவர் உடனே ஐன்ஸ்டைனின் படத்தைக் காண்பிக்கிறார். ஆச்சரியத்துடன் அவனிருக்க, வரிசையாக டாவின்சி, எடிசன், அபிஷேக் பச்சன் போன்ற பிரபலங்களின் படங்களைக் காட்டுகிறார்.

இறுதியாக எல்லா மாணவர்களையும் அனுப்பி விட்டு, இஷானிடம் தனியாக 'இந்த பாதிப்புக்குள்ளான இன்னொருவனைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை' என, மீண்டும் இஷான் திகைக்க 'அது நான்தான்' என்கிறார் நிகும்ப்.

அதன் பின் இஷான் நிகும்ப் உடன் நட்பாகி விடுகிறான். அவனுக்கு நம்பிக்கை பிறக்கிறது.அவரே அவனுக்கு தலைமை ஆசிரியர் அனுமதிபெற்று, எல்லாப் பாடங்களையும் கற்பிக்கிறார். அவனால் இப்பொழுது வாசிக்க, எழுத முடிகிறது. அதில் அவன் முழுதாக ஈடுபட வழிகாட்டுகிறார். அவனும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறான்.


பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் ஓவியப் போட்டி ஒன்றை நடாத்துகிறார் நிகும்ப். அதில் அவனுக்கு முதலிடம் கிடைக்கிறது. பள்ளியின் ஆண்டு இதழில் முகப்பு அட்டையில் அவன் வரைந்த படம். பள்ளியே அவனைக் கொண்டாடுகிறது. விடுமுறைக்காக அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வந்த அவனின் பெற்றோர் அவனைப் பற்றி ஆசிரியர்கள் பெருமையாகப் பேச, ஆச்சரியப் படுகிறார்கள். பெரு மகிழ்ச்சியுடன் அவனை அழைத்துச் செல்ல முற்பட, அவனோ மறுத்து திரும்பி நிகும்பிடம் ஓடிவர, அவர் அவனித் தூக்கிக் கொள்ள படம் நிறைவடைகிறது.

ஆசிரியர் அவனைப் பற்றி கதைக்கும்போது, ஒரு குறைபாடு என்பதை விளங்கிக் கொள்ளாது அவனின் தந்தை அவர்மேல் கோபப்பட்டு 'என் மகனை மெண்டல் எனக்கூறுகிறீர்களா? அவன் படிப்பில் அக்கறையின்றி இருக்கிறானே தவிர, மெண்டல் இல்லை' எனக் கூறும் காட்சி, சரியான புரிதலின்றிய ஒரு பாசமிக்க தந்தையின் மனக்குமுறல்.


சிறுவனின் பிடிவாதம் , கோபம், இயலாமை, சோகத்தை வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பு, புதிய பள்ளியில் சேர்ந்த அன்று குடும்பத்தைப் பிரிந்து அவன் மனங்குமுறி அழும் காட்சிகள், மனதை உருகச்செய்யும் பாடல் வரிகள் (English subtitles), அமீர்கானின் அலட்டலில்லாத நடிப்பு எல்லாமே மிகச்சிறப்பானவை.

நிச்சயம் இது அமீர்கானின் master piece

இப்படத்தில் குறைந்தது ஒருகாட்சியிலாவது எம்மால் கலங்காதிருக்க  முடியுமாக இருந்தால்,
நாங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுக வேண்டியிருக்கும்.

இப்படத்தை எனக்கு அறிமுகம் செய்த நண்பன் 'நம்பா' விற்கு நன்றிகள் பல.

Saturday, March 5, 2011

வணக்கம் நண்பர்களே!


கடந்த சிலநாட்களாக இடமாற்றம் (திருகோணமலையில்), கடும் உடல்நலக்குறைவு காரணமாக பதிவுலகப் பக்கம் வரமுடியவில்லை.  இடையில் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு விசாரித்த ஏராளமான (3 பேர் ) அன்புள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, 

நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம தான் பதிவெழுதவே வந்தவய்ங்க என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கூறிக்கொள்ளும் அதேவேளை, தற்போது மீண்டும் வேலை கிடைத்துவிட்டது என்பதை சற்றே மனவருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அது ஒரு புதிதாக நிறுவப்பட்ட திட்டப் பணிமனை (Project Office) என்பதால் இன்னும் சரிவர இணையம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படவில்லை.

நாம வேற அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமா ஆர்வக் கோளாறுத்தனமா இணையம் இருக்கான்னு அங்கே இருந்த சிங்கள அக்காவைக் (அலுவலக உதவியாளினி) கேட்க, அவ என்னை ஒருமாதிரியா ஏற இறங்கப் பார்த்து (வந்த உடனேயே எதைக் கேக்குது பாரு! வெளங்கிரும்! - நாம கண்டுக்கல விட்றா விட்றா இதெல்லாம் புதுசா நமக்கு?) மிக விரைவில் என்றார்.

அப்படியே வந்தாலும் ஆணி அதிகம் இருக்கும்போல தோன்றுவதால், சனி ஞாயிறுகளில் வீட்டிலிருந்தே (கொழும்பில்) நண்பர்களின் தளங்களுக்கு வர முடியும் என நினைக்கிறேன். அப்படியே முடிந்தால் நானும் அப்பப்ப ஏதாவது எழுதுவேன்! (அப்பாடா! ஒழிஞ்சாண்டா!)

அப்புறமென்ன நண்பர்களே! வார இறுதிகளில் சந்திக்கிறேன்!