Monday, December 13, 2010

ஒரு கமல் ரசிகனாக..


கமலை எனக்கு எப்போதிலிருந்து பிடிக்கத் தொடங்கியது? நான் முதன்முதல் பார்த்த கமல் படம் எது? அநேகமானோரைப் போல் எனக்கும் சின்னஞ்சிறு வயதில் ரஜினியைத்தான் பிடித்தது. பிறகு விவரம் (!?) தெரிந்ததும்...(அப்போ ரஜினியைப் பிடித்தவர்களுக்கு இன்னும் விவரம் தெரியலையா என்று கேட்கக் கூடாது! நான் என்னைப்பற்றி சொன்னேன் )

எனக்குத் தெரிந்து நான் முதன்முதலாக முழுதாக ரசித்த கமல் படம் 'ஒரு கைதியின் டைரி'. அந்தப் படத்தில் ஒரு வில்லனிடம் கமல் பேசும் 'கேட்கிற நிலைமைல நீ இல்ல. ஆனா சொல்ற நிலைமைல நான் இருக்கேனே!' என்ற வசனம் மிகவும் பிடித்துக் கொண்டது.

ராஜபார்வை படத்தில் கமல் கண் தெரியாதவர் எனத் தெரியவரும் அறிமுகக் காட்சி சின்ன வயதில் என்னைக் கவர்ந்து கொண்டது.

கமலின் படங்களில் நாயகன், மகாநதி, குணா, இந்தியன் என்னை மிகவும் கவர்ந்தவை. நாயகனும், இந்தியனும்தான் என்னால் திரும்பத் திரும்பப் பார்க்க முடிந்தவை. ( அன்பே சிவம்? அதற்குத் தனிப் பதிவே போடலாம் )

டீன் ஏஜில் ஒரு தீவிர கமல் ரசிகனாகிப் போனேன். இந்தியன் வந்ததிலிருந்து அவர்தான் தலைவர்! அப்போது கமல் ரசிகன் என்றாலே நண்பர்கள் ஒரு மாதிரித்தான் பார்ப்பார்கள்.
ஏதாவது வித்தியாசமாக(?!) கருத்துக் கூறப் போனால், நீ கமலோட ஆள்தானே?' என்று ஏடாகூடமாக கேட்பார்கள்.

அதிலே இன்னோர் அர்த்தமும் இருக்கும். இப்பிடித்தான் எதையாவது உளறுவான் கண்டுக்காதிங்க! ஏனெனில் அப்படித்தானே திரையுலகிலும் கமல் பேச்சுக்கு கிடைக்கும் மரியாதை. எவ்வளவோ நல்ல விஷயங்களை கமல் செய்து செயற்படுத்தியும், அறிமுகப்படுத்தியும் எத்தனை பேர் அவற்றைப் பின்பற்றுகிறார்கள்? அவர்களும் 'கமல் இப்படித்தான் எதையாவது சொல்லிட்டிருப்பார். நாம நம்ம வழிலயே போவோம்' 

தமிழ் சினிமாவில் மிகை நடிப்பில்லாமல் இயல்பான நல்ல நடிப்பை முதன்முதலாகத் தந்தவர் கமல் என்றே நான் நினைக்கிறேன். அதற்குமுன் (நாகேஷ் இருந்தும்கூட) சிவாஜியைத்தான் நடிப்பில் சிறந்தவரென்று(?!) (ஏன் இப்போதும்கூட) நம்புகிறார்கள் பலர்.

எல்லாரும் பழைய படங்களையே திரும்பத் திரும்ப copy பண்ணிட்டிருக்க, சிலர் ஹாலிவுட்ல இருந்து 'சுடும்'போது அது புதிய விஷயமாகப் பேசப்படும். அதையே கமல் செய்து விட்டால் போதும் ஒரு பெரிய கூட்டமே துப்பறியக் கிளம்பி எங்கேயிருந்து கமல் 'சுட்டார்' என்று புள்ளி விபரமெல்லாம் வெளியிடும்.

அதில முக்கியமான விஷயம், மற்றவர்கள் 'சுடும்'போது அப்படியே அப்பட்டமாகத் தெரியும். ஆனால் கமல் அப்பட்டமாகச் 'சுட்டாலும்' உடனே தெரியாது. அதற்கும் ஒரு திறமை வேண்டும். அதைவிடத் திறமை வேண்டும் கமல் சுட்டதைக் கண்டுபிடிக்க! அது அந்தக் காலத்தில், இப்போது அப்படி அல்ல!


வெறும் மசாலாக் காதல் படங்களிலேயே பல காலமாக நடித்துக் கொண்டிருந்த கமல் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதுமே, பெரும்பாலான பெண்களுக்கு கமலைப் பிடிக்காமல் போய்விட்டது!

அநேகமாக இப்போது எங்கள் நண்பர்கள் அனைவருமே கமல் ரசிகர்களே! அதில் அனைவர்க்கும் பிடிக்காத மோசமான படம் என்று நாங்கள் கருதுவது 'வாழ்வே மாயம்'. ஆனால் கமலைப் பிடிக்காத பல பெண்களுக்குப் பிடித்த படமும் அதுவே!

பெண்கள் விஷயத்திலும் 'வித்தியாசமான' முயற்சிகளை அவர் மேற்கொண்டதும் பெண்கள் பலருக்கு கமலைப் பிடிக்காமல் போக ஒரு முக்கிய காரணம்.

நடிப்பு வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்று எமது தமிழ்ச் சமுதாயத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. நடிகன் என்பவன் சமுதாயத்திற்கே வழிகாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க, அவர்களும் ( ஒழுங்கா நடிக்கவே....வராது ) உடனே நாற்காலிக் கனவு காண ஆரம்பித்து விடுகிறார்கள் ( இந்த நடிப்பைவிட அது கஷ்டம்னு தெரியாமல் ).

இதுல என்ன கொடுமைன்னா..பெண்கள் விஷயத்தில் தலைவர் வாங்கிக் கட்டிக்கொண்ட கெட்ட பெயர், ரசிகர்களான எங்களையும் விடாது தொடர்ந்தது. அந்த நிலையைக் கமல் ரசிக நண்பர்கள் பலரும் சந்தித்திருப்பார்கள்.

கமல் கெட்டவன், மோசமானவன். அப்போ கமல் ரசிகனும் அப்படித்தானே? அதுவும் கமல் சரிகாவைப் பிரிந்ததும் இன்னும் நிலைமை மோசமாக, கமல் ரசிகனென்று வெளில தெரிந்தாலே கேவலமான 'லுக்' ஒன்று விடுவார்கள். ஆனா யாருகிட்ட?
( விடுறா..விடுறா... சூனா.. பானா.. போ போ போயிட்டேயிரு...! ) இது கூட ஒரு பெருமையாதான் இருந்திச்சு! ( பார்ரா! )

ஆனாலும், யாரென்றே தெரியாத ஒரு பெண், கமல் ரசிகனென்று தெரிந்து என்னைப் பார்த்த பார்வை இருக்கே.....இன்னும் முடியல! மறக்க!!

கிஸ்கி 1 - தீவிர கமல் ரசிகனாக ஆறு வருடங்களுக்கு முன் நான் இருந்த அப்போதைய மன நிலையை பிரதிபலித்து எழுதிய பதிவு இது.

கிஸ்கி 2 - அப்போது எனக்கு உலக சினிமா பரிச்சயமே இல்லை (தமிழ் , ஹாலிவுட் மட்டும்தான்) அப்போது கமல் 'உலகநாயகன்' என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை!

கிஸ்கி 3 - இப்போதும் கமலை எனக்குப் பிடிக்கும்!

Sunday, December 12, 2010

Saving Private Ryan


ஒரு கடல்வழித் தரையிறக்கத்திற்கு தயாராக இராணுவ வீரர்கள் துருப்புக்காவி கடற்கலங்களில். இன்னும் கொஞ்ச நேரத்தில் கரையை நெருங்கப் போகிறார்கள். பரிச்சயமில்லாத புதிய களமுனை. கரையில் இவர்களை எதிர்கொள்ள, தயாராகக் காத்திருக்கும் எதிரிகள். என்ன நிகழுமோ எனத்தவிப்புடன் நிலைகொள்ளாமல் சிலர். பயணம் ஒவ்வாமல் வாந்தி எடுத்தவாறு சிலர்.


கரையை நெருங்கி கடற்கலத்தின் கதவு திறக்கப்பட, சரமாரியாகத் தாக்கத் தொடங்குகிறார்கள் எதிரிகள். சிலர் கலத்திலேயே உயிரைவிட, கடலில் இறங்கிய உடனே சிலர், தண்ணீருக்குள் மூழ்கி மேலேவரும்போது பிணமாக. குண்டு மழையிலிருந்து தப்பிய சிலர் தட்டுத் தடுமாறி, பாதுகாப்பாக நிலை எடுத்து பதுங்கிக் கொள்கிறார்கள்.

- Saving Private Ryan படத்தில் வரும் உண்மையில் நடைபெற்ற சம்பவம்.


இரண்டாம் உலகப்போர். ஜூன் 6 , 1944 . ஆங்கிலக் கால்வாயூடாக பிரான்சின் Omaha கடற்கரையைக் Normandy,France)  கைப்பற்றும் நோக்கில் பாரிய தரையிறக்க நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவுக்கும், அங்கு நிலைகொண்டிருந்த ஜெர்மனுக்கும் நடந்த பாரிய சண்டை. அரைமணி நேரம் மட்டுமே நடந்த அந்த சண்டையில் அண்ணளவாக 3000 அமெரிக்க படையினரும், 1200 ஜெர்மன் படையினரும் கொல்லப்பட, அமெரிக்கா வெற்றிகொள்கிறது.


இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்டு எத்தனையோ ஹாலிவுட் படங்கள் வெளிவந்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த படம் இது.

படத்தின் கதை....
நான்கு சகோதரர்கள் கொண்ட ரின் குடும்பத்தில் (நால்வரும் அமெரிக்க இராணுவத்தில்) மூன்று பேர் சண்டையில் இறந்துவிட, இறுதியாக உள்ள Private James Francis Ryan ஐ சேவையிலிருந்து விடுவித்து, சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். ரோந்துப் படையணியில் பிரான்சில் இருக்கும் Ryan (Matt Damon) தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில். அவனைத்தேடி , Omaha தரையிறக்கத்தில் பங்கு கொண்ட கப்டன் ஜோன் எச்.மில்லர் (Tom Hanks) தலைமையில் ஒரு சிறிய குழு புறப்படுகிறது. பின்பு என்னவாகிறது?


இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கப் படையில் பணியாற்றிய Niland Brothers என்ற நான்கு சகோதரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டது.

1998 இல் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் வெளியான இப்படம், ஸ்பில்பேர்க் இற்கு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குனருக்கான Oscar விருது உட்பட, ஐந்து Oscar விருதுகளைப் பெற்றுக் கொண்டது.

     Nornmandy, France இலுள்ள அமெரிக்கப்படையின் கல்லறை.


கத்தி முனையில்  சூயிங்கம் ஒட்டி, அதில் மிரர் பொருத்தி, எதிரிகளை கண்காணிக்கும் இந்தக் காட்சியை அப்படியே ஆளவந்தானில் 'சுட்டு' இருப்பார் கமல்.


படத்தின் ஆரம்பத் தரையிறக்கக் காட்சிகள் போரின் உக்கிரத்தையும், வலியையும் கண்முன் நிறுத்துகின்றன. நிச்சயம் இதைவிடப் பெரிய ஒரு சண்டை நிகழ்ந்திருக்கிறது எமது நாட்டிலும்....எந்த ஆவணப்படுத்தலும் இல்லாததால் வெளியே தெரியாமல்!   

 

Friday, December 10, 2010

இதயம் ஒரு கோவில்..

சில பாடல்கள், 'சோப்' வாசனைகள் எமது கடந்த காலத்தை நினைவூட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா? குறிப்பாக சிறு வயதில் நாம் கேட்டு ரசித்த பாடல்களை இப்போது கேட்கும்போது, அந்தக் காலத்திற்கே ஒரு காலயந்திரம்போல் உடனடியாக எம்மைக் கூட்டிச் சென்றுவிடுகின்றனவே! 

தொலைந்து போன சிறுவயது நினைவுகள் கிளறப்பட்டு மனதிலோர் ஏக்கம் உண்டாவதை உணர்ந்திருக்கிறீர்களா?


கார்த்திகை மாதம், மழை விட்டிருந்த முன்னிரவு நேரம், மின்சாரமில்லாத காலப்பகுதி,  சற்றே தூரத்தில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் தாத்தா. எரியும் தணலும், புகையும்...மெலிதான வெளிச்சத்தில்...சைக்கிள் டைனமோவைச் சுற்றி, வானொலிப் பெட்டியை உயிரூட்டிக் கொண்ருக்கும் என்னிலும் எட்டு வயது மூத்த அண்ணன் ஒருவனின் அருகில் அமர்ந்திருக்க...சன்னமான குரலில் எஸ்.பி.பி.' கேளடி கண்மணி பாடகன்...' 

அந்தப் பாடலை முதலிலேயே கேட்டிருந்த போதும், இப்படிக் கேட்டது மறக்க முடியாத அனுபவம். இப்போது கண்கள் மூடி அதைக் கேட்டாலும் உடனேயே அந்தக் காலப் பகுதிக்குச் சென்றுவிடுகிறது மனம்.


நீங்கள் முதன்முதல் கேட்டு ரசித்த பாடல் எது?
எங்களுக்கு நினைவு தெரிந்து, ஆகக் குறைந்தது எந்த வயதில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்திச் சொல்ல முடிகிறது?
அது போலதான் பாடல்களும்! 

அப்படி நான் சிறுவயதில் கேட்டு, ரசித்த பாடல்கள் 'இதயக் கோவில்' பாடல்கள்.
எங்கள் வீட்டிற்கருகே இருந்த சோதிலிங்கம் என்பவர், அப்போது இருபத்தி மூன்று  வயதிருக்கலாம் மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று வந்திருக்கவேண்டும். ஒரு பெரிய ரேடியோ Amplifier set எல்லாம் வைத்து, காலையில் விடிந்ததுமே ஆரம்பிக்கும் 'இதயம் ஒரு கோவில்'.

காலை நேரத்தில் அமைதியான அந்த இசையும், அதில் இழையோடியிருக்கும் ஒரு சந்தோஷமான உணர்வும் கேட்டவுடன் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எனக்கு/என்னைப் பிடித்துக் கொண்டது அந்தப் பாடல். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே.

அதிலிருந்து தொடர்ந்து பல இளையராஜா பாடல்கள்! பாடல்வரிகள், அர்த்தங்கள் எதுவுமே தெரியாமல்! 

'பாடியழைத்தேன் உன்னை ஏனோ..', 'ஏழிசை கீதமே' இரண்டும் எனது மிக விருப்பத்திற்குரிய பாடல்களாக்கிப் போனது! இன்று வரை அந்தப் பாடல் வரிகளை நான் சரியாகக் கவனித்ததில்லை! ஜேசுதாசின் குரலும், இசை, இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், இன்டலூட் மியூசிக் இவற்றுக்காகவே! அநேகமாக எனக்குப் பிடித்த எல்லாப் பாடல்களிலுமே பாடல் வரிகளைக் கவனிப்பதில்லை. இசைக்காகவே!

பாடல்களோடு கூடவே அவற்றை அறிமுகப்படுத்துகிற சோதிலிங்கம் மாமாவையும் பிடித்துக் கொண்டது.

அப்போதெல்லாம் இளைஞர்கள் எல்லோரும் அப்போதைய ரஜினி மாதிரியான ஒரு ஹேர் ஸ்டைலில் இருந்தார்கள். இன்னும் சரியாகச் சொன்னால் சுப்பிரமணியபுரம் ஸ்டைல். தலை, உடை எல்லாம் அப்படியே. அதனால் தானோ என்னவோ அந்தப் படம் பார்க்கும்போது கதைமாந்தர் எனக்கு நெருக்கமானவர் போன்றதோர் உணர்வு. நான் குழந்தையாக இருந்து கவனித்த முதல் மனிதர்கள்  சுப்பிரமணியபுரம் ஸ்டைலிலேயே இருந்தார்கள். சோதிலிங்கம் மாமாவும் அப்படித்தான் இருந்தார். எப்போதும் ஒரு புன்முறுவலுடன் அன்பாகப் பேசுவார்.

சூழ்நிலை காரணமாக எல்லோரும் எங்கெங்கோ சிதறிப்போய், யாரையும் சந்திப்போமா என்று தெரியாமலும், சந்திக்கவே முடியாதென்றே தெரிவானவர்களும்!

அப்படித்தான் அவரும்! பதினைந்து வருடங்களுக்கு முன்னரே காணாமல் போனோர் பட்டியலில் இணைந்து விட்டதாகக் கேள்வி.    


எப்பொழுதெல்லாம் எனக்கு என் பால்ய காலத்தைப் பார்க்க ஆசையேற்படுகிறதோ, உடனே MP3 ப்ளேயரில் பாடல்களை ஒலிக்க விட்டு, கண்களை மூடி...!

காலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்.இப்பொழுதும் எனக்கு இதயக்கோவில் பாடல்கள் கேட்கும்போது, எங்கள் சொந்த ஊர், எனது சிறு வயது கூடவே சோதிலிங்கம் மாமா.