Monday, January 30, 2017

Living Together - காதல் தாண்டிய நம்பிக்கை!


த்து ஆண்டுகளுக்குமுன், கொழும்பு வந்த புதிது. வெள்ளவத்தையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சற்றுத்தள்ளி எதிரிலிருந்த வீட்டில் அறுபது வயதைக் கடந்த தம்பதிகள் இருவர். ஆங்கிலம் பேசும் சிங்களவர்கள். அநேகமான காலைப்பொழுகளில் அலுவலகம் புறப்படும்போது அந்த வீட்டுப் பெண்மணி கடற்கரைக்கு நாயை அழைத்துக்கொண்டு செல்ல, கையசைத்து விடைகொடுத்துவிட்டுப் பூக்கன்றுகளுக்கு நீரூற்றிக் கொண்டிருப்பார் அந்த அங்கிள்.

ஒருநாள் நண்பன் சொன்னான், 'டேய் இதுகள் ரெண்டும் கல்யாணம் கட்டேல்ல லிவிங் டுகெதரில இருக்குதுகள்' என்றான். சொல்லும்போதே அவன் தொனியில் ஒரு ஒவ்வாமை கலந்திருந்தது. லிவிங் டுகெதர் என்பதை ஒரு வித கெட்ட வார்த்தைபோல ஆக்கிவிட்டார்களோ என்று தோன்றியது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தியது அந்தத் தம்பதியரின் வயது. அதுவரை நாங்கள் பேசிக் கொண்டிருந்த லிவிங் டுகெதர் இளமைப் பருவத்தை மட்டுமே கருத்திற்கொண்டிருந்தது. முதுமைப் பிராயம் பற்றிச் சிந்தித்ததில்லை.


பள்ளி இறுதிநாட்களில், வீதியோர அரட்டைகளில் நண்பர்கள் அவ்வப்போது லிவிங் டுகெதர் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். அதுதான் சிறந்த வாழ்க்கைமுறை என்பதில் அப்போதெல்லாம் எங்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. அதற்கான அப்போதைய பிரதான் காரணம் திருமணம் நமக்கு ஒத்துவராத பெண்ணிடம் மாட்டிக்கொண்டால் என்னாவது? காலம் முழுக்கக் கண்ணீரோடு(?!) வாழ்ந்து தொலைக்க வேண்டுமே என்கிற பயம்தான். கூடவே, நம் சுதந்திரம் பறிபோய்விடும். ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டுவிடுவோம். மற்றையது பொறுப்பெடுத்துக் கொள்ளுதல் பற்றிய பிரச்சினை. அதிலும் நாம் - அதாவது ஆண்கள் புதியதொரு பந்தத்துக்குள் பிணைத்துக் கொள்வதற்கு ஒருவித பயமும் தயக்கமும் எப்போதும் இருக்கிறது.

பெரும்பாலான ஆண்கள், பெண்களுடன் ஒப்பிடுகையில் மனதைரியம் குறைந்தவர்களாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவான நம் தமிழ்ச்சமூகத்தில் விடலைப் பையன்களாக இருக்கும் காலத்திலிருந்து திருமணம் செய்துகொள்ளும் காலம்வரை எதையும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத, பொறுப்புகள் ஏதுமற்ற  விளையாட்டுத்தனமான விடலைப் பையன் மனநிலையோடே இருப்பதில் யாருக்கும் எந்தப் புகார்களும் இருப்பதில்லை. திடீரென்று திருமணம் என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போது நம் சுதந்திர வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விடுவோமோ என்கிற அச்சம் பீடித்துக் கொள்கிறது. இப்போதும்கூட இதே பிரச்சினைகள், பயம் இருக்கத்தான் செய்கிறது. 


யக்குனர் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகப்போவதை அண்மித்த நாட்களில் லிவிங் டுகெதர் பற்றி பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டிருந்தன. படம் அதுபற்றியது என்று சொல்லப்பட்டது. Living Together சரியானதா? அது நம் சமூகத்துக்கு ஒத்துவருமா? போன்ற கேள்விகள் சமீப காலத்தில் நண்பர்களிடையே, ஃபேஸ்புக்கில் பேசப்பட்டன.  கவிஞர் வைரமுத்து வேறு இந்தப்படம் கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும் எனக் கூறியிருந்தார். திருமணம் செய்துக்கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழ்வதை நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது முற்றிலும் காமம் சார்ந்ததாகவே பார்க்கப்படும் என்பது உண்மைதான். நம் சமூகத்தில் திருமணம் நிச்சயமான காதலர்கள் சேர்ந்து வாழ்வதைப் பெற்றோரே அனுமதித்தாலும் மற்றோருக்குப் பிரச்சினைதான். ஆனால் லிவிங் டுகெதர் பற்றி இப்போதுதான் தமிழ்ப் படம்பார்த்துக் கலாச்சார அதிர்ச்சியடையும் நிலையில் நம்சமூகம் இல்லை என்றே நம்புகிறேன்.

வாசிப்புப் பழக்கமுள்ள வீடுகளில் பழைய கல்கி, குமுதம் இதழ்களில் வெளிவந்த தொடர்கதைகளை பக்கங்களைப் பிரித்து பைண்ட் செய்து வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அப்படி பொன்னியின் செல்வனை வாசித்தபோது கூடவே, குமுதம் இதழ்களில் வெளிவந்த 'நியூ வேவ் கதைகள்' என்கிற உபதலைப்புகளுடன் வெளியான நாவல்கள் அந்தக்காலத்துக்குக் கலாச்சார அதிர்ச்சி கொடுக்கக்கூடியவைதான். பதின்ம வயதுகளில் பெரியவர்கள் கண்ணில் படாமல் படிக்கவேண்டிய நாவல்களாக இருந்தது கூடுதல்சிறப்பு!

ரேஸ்கிளப், நைட் பார்ட்டி, டிஸ்கோ, போதை ஊசி தாராளமாகப் புழங்கும். கைகளில் புகையும் சிகரெட்டுடன், பெல் பொட்டம் அணிந்திருக்கும் ஸ்டைலான பெண்கள். ஷேர்ட் அணிந்து கீழ் மூன்று பட்டங்கள் பூட்டாமல் அப்படியே வயிற்றுக்கு மேலே முடிச்சிட்டிருப்பார்கள். 'இப்படியா இருந்திருக்கிறார்கள்?'  ஓவியங்களைப் பார்க்கும்போதே ஆச்சரியமாக இருக்கும். அந்தக் கதைகளிலுள்ள வாழ்க்கை இன்னும் தமிழ்ப்படங்களில் வந்ததாகத் தெரியவில்லை. முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னரே தமிழ் வெகுசன இதழ்களில் லிவிங் டுகெதர் பற்றிப்பேசும் கதைகள், நாவல்கள் வந்திருக்கவேண்டும். ஆக, நம் சமூகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. நடைமுறையில் மிக அரிதாகவேயிருந்தாலும் இந்த வாழ்க்கை முறை தெரிந்ததுதான்.


லிவிங் டுகெதர் நம்பிக்கையின் அடிப்படையிலானது. நம்பிக்கைக்குக் கால எல்லை கிடையாது. ஒரு வருடத்திற்கு ஒன்றாக வாழ்ந்து பிரிந்து விடுவோம் என்கிற ஒப்பந்த அடிப்படையில் செய்துகொண்டால், அது லிவிங் டுகெதரில் சேருமா? அப்படியாயின் பின்னர் ஆறு நாட்கள் லிவிங் டுகெதர் அப்படியே இன்னும் விவரமாக ஆறு மணித்தியாலம் லிவிங் டுகெதர் என்று அபத்தமாகிவிடும். லிவிங் டுகெதர் என்கிற வார்த்தையை ஒவ்வொருவரும் தம் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்வதில் ஒட்டுமொத்தமாகத் தவறாகவே பார்க்கப்படுகிறது.

லிவிங் டுகெதர் ஒரு கோட்பாடோ, நெகிழ்வுத் தன்மைகளற்ற கடும் விதிகளுடன் கடைப்பிடிக்கப்படுகிற கொள்கையோ அல்ல. அது ஒரு முடிவெடுத்தல் நிலை என்பதே எனது புரிதல். அது பின்னர் ஒருகட்டத்தில் திருமணத்தில் முடியலாம். அல்லது இறுதிவரை அப்படியே சேர்ந்து வாழலாம். துரதிருஷ்ட வசமாக இடையில் ஒத்துவராமல் பிரிந்தும் செல்லலாம். இந்த 'பிடிக்காவிட்டால் பிரிந்து சென்றுவிடலாம்' என்பதை மட்டும் பிரதானப்படுத்தி, லிவிங் டுகதர் என்பதே இடையில் விட்டுவிட்டு ஒடுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. முழுமையாகக் காமம் சார்ந்தது. பெண்களைப் பயன்படுத்திவிட்டு விலகிச் செல்ல வழிசமைப்பது என்பதாக மட்டுமே நம் சமூகத்தில் நம்பப்படுகிறது. அதற்கேற்றாற்போலவே நாம் அன்றாடம் கேள்விப்படும் காதல் கதைகளும் அமைந்துவிடுகின்றன. லிவிங் டுகெதர் குறித்துச் சார்பான கருத்துக்களைக் கொண்டவர்களே அவ்வளவு நல்லவர்களாக இருக்கமுடியாது என்கிற கருத்து இன்றைய இளையோரிடமே இருக்கிறது. ஆக பெரியவர்கள் பற்றிப் பேச வேண்டியதில்லை.

"உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா?"
பொதுவாக அலுவலகத்தில் கூட வேலைசெய்யும் சிங்களவர்கள், பெரியவர்கள் அப்படித்தான் ஒருவித அக்கறையுடன் கேட்பார்கள். அது அவர்கள் வழக்கம்.

அது ஒரு அவுட்சோர்சிங் நிறுவனம். அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கானது. அங்கு எங்களுக்கு பயிற்சியளித்த சிங்களப் பெண்மணியும் அதே கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொள்ளவார், 'பயிற்சிக்காலம் முடிந்ததும் ஒரு நண்பியைத் தேடிக்கொள்' என்கிற மேலதிக அறிவுரையையும் வழங்குவார். 


ஒருமுறை திருமணம் பற்றி ஏதோ பேச்சு வந்தது. எப்போது செய்துகொள்வதாக உத்தேசம் என்றார் பயிற்சியாளர். 'யாழ்ப்பாணத்தில் நாங்கள் முப்பது வயது கடந்துதான் திருமணம் பற்றி யோசிப்போம். அதுதான் எங்கள் வழக்கம்' என்றான் நண்பன். கூடவே யாழ்ப்பாணத்தின் சீதன விவரம் பற்றித் தான் தெரிந்துகொண்டதையும் விழிகள் விரிய ஆச்சரியமாகச் சொல்லிக் கொண்டார். என்னைப்பார்த்து '
உனக்கு எப்போ திருமணம்?'

சற்றும் யோசிக்காமல் 'எனக்கு அதிலெல்லாம் ஆர்வமில்லை.. லிவிங்டுகெதர்தான்' என்றேன்.

அவ்வளவுதான்! மிகுந்த அதிர்ச்சியடைந்துபோனவர் போல ஒரு பார்வை பார்த்தார். உண்மையிலேயே என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறி, 'இது நல்லதில்லை இப்பிடியிருந்தால் எப்படி? என்மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பமாட்டேன் என்றார். யாரும் அதைச்சரியாகக் கவனிக்கவில்லை என்று நினைத்தேன். பின்னர் நண்பன், "ஏண்டா அப்படிச்சொன்னே? மனிசி தன்ர மகளைக் கட்டிவைக்கிற ஐடியாவில இருந்திருக்கு நீ கெடுத்துட்ட" என்று சிரித்தான்.

'ஓ காதல் கண்மணி' படத்தில் நாயகன் ஆதி, நாயகி தாரா அறிமுகமாகி ஒருவர் பாலொருவர் ஈர்க்கபடுகிறார்கள். சிலமாதங்களில் இருவரும் அமெரிக்கா, பிரான்ஸ் செல்லவேண்டும். அதுவரையில் காதல், பிரிவு, வலி போன்ற உணர்வுகளுக்கு இடம்கொடுப்பதில்லை என்கிற நிபந்தனையுடன் தம்மைப் பகிர்ந்துகொள்ளச் சம்மதமாயிருக்கிறார்கள். இருவரும் ஒன்றாகத் தங்கிக் கொள்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல 2004 இல் வெளியான மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் சித்தார்த், த்ரிஷா டேட்டிங் செய்வார்களே அதேதான். என்ன ஒன்றாக ஒரே அறையில் தங்கிக் கொள்வது என்பது புதிதாக இருக்கலாம். இந்த உறவு முறையை எப்படி அழைப்பது? லிவிங் டுகெதர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

மற்றபடி படம் லிவிங் டுகெதர் பற்றிப் பேசவில்லை. பேச வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் அது லிவிங் டுகெதர் அல்ல. அப்படி அழைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். அவர்களிடயான ஈர்ப்பு அல்லது காமம் ஒருநிலையில் அன்பு, அக்கறையாக மாறுகிறது. அதைத்தானே காதல் என்கிறோம். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அழகான காதல் கதையாக, இந்த உறவுமுறை திருமணத்தில் முடிவதுதான் சரியானது என்று சொல்கிறது படம்.

லிவிங் டுகெதரில் இணைந்துகொள்ள, திருமணம் செய்துகொள்வதை விட மிகப்பெரிய பொறுப்புணர்வு, நம்பிக்கை தேவை. அது நம்மிடையே இருக்கிறதா? என்பது அவசியமான கேள்வி. திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துவிட்ட இருவர் ஒரிருமாதம் ஒன்றாகத்தங்கி ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பின்னர் திருமணம் செய்துகொள்ளுதல் அல்லது ஒத்துவராவிட்டால் நண்பர்களாகப் பிரிதல் என்கிற நடைமுறை மேலை நாடுகளில் இருக்கிறது. அதனை நம் தமிழர்களும் இப்போது செயற்படுத்துகிறார்களாம் என சில வருடங்களுக்குமுன் என் அலுவலகத் தோழி குறிப்பிட்டிருந்தார். 

'நாங்களும் வெள்ளைக்காரர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல' என்கிற கொள்கையுடைய அதிகார்வலரான லண்டனில் வாழும் அவரது உறவுக்காரப் பெண்மணி தன் மகளுக்குத் திருமணம் பேசியிருந்தார். அதுமுக்கியமல்ல, ஒருமாத கால புரிந்துகொள்ளும் 'லிவிங் டுகெதரில்' மகளை வாழ அனுமதித்திருந்ததைப் பெருமையாகக் கூறியிருக்கிறார். வீட்டிலிருந்த பழமைவாத அம்மம்மா 'அதெப்பிடி பிள்ள சரியாவரும்?' என ஆட்சேபனைக் குரல் எழுப்பியிருக்கிரார். 

"நீங்கள் சும்மா இங்க இருந்துகொண்டு பட்டிக்காடுகள்  மாதிரிக் கதைக்காதையுங்கோ மாமி.. அங்க இப்ப எல்லாம் அப்பிடித்தான்" என்று வாயை அடைத்துவிட்டார். தோழி இதனை ஆச்சரியமாகக் கூறிக்கொண்டிருந்தார். 

இந்த இடத்தில்தான் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது. அது காதல் திருமணம் அல்ல. இருவீட்டார் பேசிச் செய்வதுதான். நம் மக்களின் நேர்மையை நம்பி.... எனினும் இதுபற்றித் தோழியிடம் கேட்பது பட்டிக்காட்டுத்தனமாய் ஆகிவிடுமோ என்பதால் மௌனமாக இருந்துவிட்டேன்.

சில வாரங்கள் கழிந்து அந்தப்பெண்மணி மிகவும் மனமுடைந்து போய்விட்டார் என்றார். அந்தத்திருமண ஒப்பந்தம் ஏதோ சீதனப் பிரச்சினையில் ரத்தாகிவிட்டது. 

"மாமி நீங்க அப்பவே சொன்னீங்க நான்தான் அறிவில்லாமல் விட்டுடேன்" என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தாராம். 

நம் பெரியவர்கள் ஊர், சாதி பார்த்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து, சீதனப் பேரம்பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இப்படி ஒத்திகை பார்க்க ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைப்பது என்ன நடைமுறை என்பது புரியவில்லை. நிச்சயம் 'வெள்ளைக்காரன் தமிழர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய' முறை அது என்று தோன்றியது.

ண்மையில் லிவிங் டுகெதர் நம் சமூகத்தின் அடிப்படைச் சிந்தனைவாத முறையில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை முறைக்கு ஒத்து வராது என்றே நம்புகிறேன். ஆண்களைப் பொறுத்தவரை அதிகமான பொறுப்புகளை எடுத்துக்கொள்ள நேரிடும். இந்த வாழ்க்கை முறையில் ஆண், பெண் இருவரும்தம் உழைப்பில் தன்னிறைவு அடையக்கூடியவகையில் வேலைபார்ப்பவர்களாக இருப்பார்கள். பெண்கள் தம் சொந்த உழைப்பில் தனியாக வாழக்கூடியவர்களாக, ஆண்களிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்காது. அது அவர்களைச் சுதந்திரமாக உணரவைக்கும்.

அதே நேரத்தில் ஆண்களுக்கு அதிக பொறுப்பும், வேலைப்பழுவும் சேர்ந்துகொள்ளும். அதாவது வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்ய நேரிடும். மேலை நாட்டு ஆண்களுக்கு இதில் எந்தச் சிரமமுமில்லை. ஆனால் நம்மவர்? பெரும்பாலும் சமைலறைப் பக்கமே எட்டிப் பார்க்காமல், வீட்டு வேலைகள் செய்து பழக்கப்படாமல் தமிழ் அம்மாக்களால் வளர்க்கப்படும் ஆண்களுக்கு இதெல்லாம் ஒத்துவர வாய்ப்பில்லை.


இருவருக்கிடையில் ஆழமான அன்பும், நம்பிக்கையும் நேர்மையும் இருக்கும்போது காலம் முழுவதும் இணைந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரமும், சமய சடங்குகளும் அவசியமில்லை என்பது உண்மையே. மத நம்பிக்கையில்லாதவர்கள் தாலி கட்டிக் கொள்ளாமல் திருமணம் செய்து வாழ்வது இங்கே சாதாரணம். ஆனால் சட்டபூர்வமாகப் பதிந்து கொள்ளாமல் வாழ்வது பின்னர் நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதாலேயே அவர்களும் பதிந்துகொள்கிறார்கள் என நம்புகிறேன். குழந்தைகள்  பெற்றுக்கொள்வது, சொத்துச்சேர்ப்பது போன்ற விஷயங்களில் சட்ட, நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள திருமணத்தில் முடிவதாகவே இருக்கும். தவிர, சட்டபூர்வமான திருமணம் பெண்களுக்குப் பாதுகாப்பைக் கொடுப்பதாகவே உள்ளது.

நம் சமூகத்தில் ஆங்காங்கே பரவலாகக் காணப்படும் லிவிங் டுகெதர் எனச்சொல்லப்படும் வாழ்க்கை முறை குறுகிய காலத்திற்கான இடைக்காலத் தீர்வாகவே இருக்கிறது. பொறுப்புகளை எடுத்துகொள்ள விரும்பாத இரண்டுபேர் லிவிங் டுகெதரில் இணைந்துகொள்வது என்பது இளமை வேகத்திலான ஓர் அவசரகாலத் தீர்மானமாகவே இருக்க முடியும். முதுமைப் பிராயம் பற்றியே சிந்தனையே அதில் வருவதில்லை. அதுதான் அந்த வயதான லிவிங் டுகெதர் தம்பதிகளைப் பார்த்ததும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

'ஓ காதல் கண்மணி' படத்திலும் அப்படியேதான். தாராவும், ஆதியும் தமது நிகழ்காலத் தேவைகளுக்காகவே இணைந்துகொள்கிறார்கள். பின்னர் கணபதி, பவானி என்கிற தம்பதிகளின் இயல்பான வாழ்வு அவர்களின் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றுகிறது.


முதுமைப் பிராயம் குறித்த சிந்தனைதான் அவர்கள் மனதை மாற்றியிருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு இருவரும் மனதளவில் தயாராகிவிடும்போது,  தாரா, ஆதியிடம் கேட்பதும் அப்படித்தான் இருக்கிறது. 


'வயசானபிறகு என்னை இப்பிடிப் பார்த்துக் கொள்ளுவியா?'

4tamilmediaவில் 2015ல் வெளியானது.    

Wednesday, January 11, 2017

காதலும், நம் சமூகமும் மற்றும் இயக்குனர் விக்கிரமன் படங்களும்!



Horror sentiment Family Drama
பாணியிலான திரைப்படங்கள் முன்னொரு காலத்திலே தமிழில் சரமாரியாக வெளிவந்து கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்தவரையில் தொண்ணூறு ஆறு தொடக்கம் இரண்டாயிரம் வரையிலான காலப்பகுதி அவ்வகைத் திரைப்படங்களின் பின்னைய பொற்காலம் எனலாம்.

ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமா கேட்சி ஊடகமாக இருந்தது. பின்னர்தான் காட்சி ஊடகமாக மாறியது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பார்க்காமலேயே கேட்டுணரும் பாணியிலானவை அவை. ஊரின் சிறுவயது ஞாபகம் உங்களுக்கும் இப்போதும் இருக்கக் கூடும். "இஷைத்தமிழ் நீ ஷெய்த அரும் ஷாதனை.." பாடல் முடிந்ததும் "டிர்ர்ர்ர்ர்ர்..றி...ய்ங்.." என்கிற இசையில் திருவிளையாடல் படத்தின் காட்சி மாறிவிட்டதை நாம் கோவில் திருவிழா குழாய் ஸ்பீக்கரில் கேட்டே அறிந்துகொண்டோமல்லவா?

பின்னைய காலத்தில் தமிழ்சினிமாவும் காட்சி ஊடகமானாலும் மறுபடியும் அவ்வப்போது யாராவது வந்து பழையபடி கையைப் பிடித்து இழுத்துச் செல்வதுண்டு. ஹொரர்  செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா அநேகமாக அந்தப் பணியைச் செய்தவை.

யாழ்ப்பாணத்தின், வன்னியின் மின்சாரமில்லா காலங்கள், வவுனியாவின் 96,97 களின் இடம்பெயர் இடநெருக்கடிக் காலங்கள், யாழ்ப்பாணத்தின் 97 களுக்குப் பின்னைய 2000 வரையான மின்சாரப் பற்றாக்குறை காலகட்டங்களில் படம் பார்ப்பது என்பது ஒரு சடங்கு. அது போலவே படம் கேட்பது என்பது அதனோடு இணைந்த ஒரு சம்பிரதாயம். ஒருவீட்டில் படம் ஓட்டுவித்தால் சுற்றுச் சூழலில் ஆறேழு வீடுகளுக்கு படம் கேட்கும். அந்தப் படங்களில்  படங்கள் இப்படங்கள் முக்கியமானவை. இப்போது இந்தப் படங்களின் இசை குறித்த முக்கியத்துவம் புரிந்திருக்கும்

.தமிழின் ஹொரர் செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா பாணியிலான திரைப்படம் உங்கள் அயல் வீடுகளில் ஒளிபரப்பிய காலத்தைச் சற்று நினைவு கூருங்கள். ஓரிரு குரல்கள் தொடர்ச்சியாக இடைவிடாமல் பேசுகின்றன. வெவ்வேறு மாடுலேஷனில், ஏற்ற இறக்கங்களோடு, மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அழுதுகொண்டு, அரற்றிக் கொண்டு ..மொத்தத்தில் பேசிக்கொண்டே...யிருப்பார்கள். சிறிது இடைவெளி கிடைக்கும்போது இசையமைப்பாளர் 'லாலா லாலால லாலா லாலால' இசைக்கோர்வையை ஒலிக்க விடுவார். இப்போது நாம் புரிந்துகொண்டிருப்போம், அவை இயக்குனரின் விக்கிரமனின் படங்கள் என்பதை!

பின்னர் மீண்டும் பேச்சு. சில இடங்களில் பேச்சு சற்றுக் குறைவாக இசை அவ்வப்போது "டுடுடிய்ங்.." சற்று நேரம் கழித்து இன்னொரு "டுடுடிய்ங்.." - இது நகைச்சுவைக் காட்சி என்பதை நாம் நாலு வீடு தள்ளியிருந்தே புரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு வகை இசைக்கோர்வைகள் இந்தப் படங்களின் இசையின் அடிநாதம். எஸ். ஏ. ராஜ்குமார் என்பவர் இதில் சிறந்து விளங்கினார். இரண்டு இசைக் கோர்வைகள், ஐந்து பாடல்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பத்து வருடங்களுக்கு மேலாக, பலபடங்களுக்கு இசையமைத்த அவர் திறமை அசாத்தியமானது என இப்போதும்கூட பலரும் வெகுவாகச் சிலாகிப்பதை நாம் பார்க்கிறோம்.

விக்கிரமன் சார்  படங்களின் மையக்கருவை 'உழைத்தால் நிச்சயம் உயர்வுண்டாகும்', 'நல்லவனுக்கு நல்லதே நடக்கும் கெட்டவன் அழிந்துபோவான்', 'ஒருவருக்குத் தீங்கு செய்தால் அவனைக் கடவுள் தண்டிப்பார்' என்கிற சிறுவர் நீதிக் கதைகளின் பெரியதிரை வடிவமாகக் கூடக் கொள்ளலாம். பார்ப்பவர்கள் யாரின் மனநிலைக்கும் தீங்கு விளைவிக்காத இவ்வகைத் திரைப்படங்கள் வெளிவந்தபோது டீவி சீரியல்களின் ஆதிக்கம் இப்போது போலில்லை. உண்மையில் பழக்கமில்லாமல் சடுதியாகப் பார்ப்பவர்களை மிக மோசமாக பாதிக்கும் இந்த வகை டீவி சீரியல்களை எப்போதாவது பார்க்க நேரிடுகையில் விக்கிரமன் சாரை  நன்றியுடன் நினைத்துக்கொள்வதுண்டு.

நேர்மறைச் சிந்தனையை வளர்ப்பதில் அவர் படங்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. உதாரணமாக, புளியம்பட்டி டூ பொள்ளாச்சி தினமும் பேரூந்தில் ஏற்றிச் செல்லும் அவ்வளவு பிரயாணிகளுக்கும் மாதமுடிவில் பெரிய சில்வர்குடம் பரிசளிக்க முடியுமா? என்றால் முடியும். அந்தப் பழைய பேரூந்தை வந்தவிலைக்கு விற்றுவிட்டால் முடியும். ஆனால் பேருந்தையும் விற்காமல், சில்வர்குடமும் பரிசளித்து, பணக்காரராகவும் ஆகிவிடுவது எப்படிச் சாத்தியம்? (சூர்ய வம்சம்) இங்கேதான் இயக்குனரின் நேர்மறை அணுகுமுறையை உணர்ந்துகொள்ளலாம். அந்த நம்பிக்கைதான் விக்கிரமன் சார் படங்கள்!

அதனை விட விக்கிரமன் சாரின் படங்கள் நம் சமூகத்தில் தாக்கம் செலுத்தியது நம் அழுகுணிக் குமார்களின் அணுகுமுறையில் என்றால் அது மிகையல்ல!

நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் அழுகுணிக் குமார்களை நாமறிவோம். காலத்துக்குகேற்ப அவர்களின் அணுகுமுறைகள் மாறிக்கொன்டே இருந்தாலும் கொள்கையளவில் அவர்கள் எப்போதும் ஒரேமாதிரியானவர்கள்தான். 'இந்தப் பெண்களே இப்படித்தான்' என்பதே அவர்களின் ஏகோபித்த தாரக மந்திரம். 'பெண்கள் ஏமாற்றுப்பேர்வழிகள்' எனும் பொருள்பட ஃபேஸ்புக் உள்ளிடட சமூகவலைத்தளங்களையும் கண்ணீரும் கம்பலையுமாக பதிவிட்டு வரும் அவர்களின் அன்றைய காலத்து ஒரே ஆறுதலாக விக்கிரமன் சார் படங்கள்தான்  விளங்கின என்றே சொல்லலாம்.

அழுகுணிக் குமார்கள் காதலில் விழுந்துவிட்டதாக, அல்லது அப்படி அவர்களே நம்பத் தொடங்கும்போது, அவர்தம் கூட இருக்கும் நண்பர்களுக்கு ஏழரை ஆரம்பமாகிவிடும். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தம் நிலையைச் சொல்ல எதுவித முயற்சிகளும் எடுக்காமல் ஒருவகையினர். இவர்கள் இதயம் முரளியாகத் தங்களை பாவித்துக் கொள்பவர்கள். இன்னொருவகை காதலைச் சொல்லி செருப்படி வாங்காத குறையாக அல்லது நண்பர்களாக இருப்போம் என்கிற பதிலைப் பெற்றவர்கள். இது செருப்படியை விட வீரியமானது (அதாவது பிஞ்ச செருப்பை சாணியில் முக்கி அடித்ததுபோல) எனினும் குமார்கள் அதனைப் புரிந்துகொள்ளும் அறிவோடு இருப்பதில்லை. ஒரு கௌரவமாகவே கருதிக் கொள்வர். நண்பர்களும் அப்படியே விட்டு விடுவார்கள்.

அதெப்படி சம்பந்தமேயில்லாமல் ஒருவர் காதலைச் சொன்னவுடன் நண்பனாகி விடுவார்? குமார்களின் (இனி அழுகுணிக் குமார்களைக் குமார்கள் என்றே அழைப்போம்) தொண தொண தொல்லையிலிருந்து தப்பிக்க பெண்கள் கைக்கொண்ட ராஜதந்திர ரீதியான உத்தி அது! சமயங்களில் ஒரு விசுவாசமான வேலைக்காரனாகவும், சிறந்த எடுபிடியாகவும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவகையில் குமார்களின் நண்பர்களுக்கும் இந்த ஏற்பாடு ஆசுவாசத்தைக் கொடுத்தது என்பதே உண்மை.

இவ்வாறான குமார்களைப் புத்துணர்ச்சி கொள்ள வைத்தது விக்கிரமன் சாரின் 'பூவே உனக்காக' திரைப்படம். படம் வந்ததிலிருந்து குமார்களின் தோரணையே மாறிவிட்டது. தங்களைத் தியாகிகளாகவே நினைக்கத் தலைப்பட்டார்கள். ஆளாளுக்கு 'காதல்ங்கிறது ஒரு செடியில் பூத்த ரோஜா மாதிரி..அது ஒருமுறைதான்' என்று பேசிக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவுக்கு அணுக்கமான இன்னொரு நண்பர் குழுவிலிருந்த குமார் ஒருவர், தனது பதினெட்டாவது காதல் முயற்சி தோற்றபோதும் ‘காதல்ங்கிறது ஒருமுறைதான்’ வசனத்தை சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார்.

இது ஒருவிதமான புரட்சியையே ஏற்படுத்தியது. குமார்கள் தாங்கள் தியாகம் செய்ததாக நம்பிக் கொண்டதில் அவர்களுக்கு ஒருவித பெருமிதத்தையும், நண்பர்களுக்கு நிம்மதியையும் ஒருங்கே கொடுத்தன என்றால் அது மிகையாகாது.

இன்னும் சில குமார்களை நேரடியாக ‘எடுபிடி’ அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து வைத்திருப்பார்கள் பெண்கள். இந்தவகைக் குமார்கள் தம்மை ஒரு லட்சியக் காதலானாகவே கருதிக் கொண்டு ரகசியமாகக் காதல் செய்து வருவார்கள். காதலை தெரிவிக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தம் காதலியினதும்(?!) தமக்குமான ரசனைகள் ஒத்துப் போவதையும், போகாவிட்டாலும் வலுக் கட்டாயமாகப் போகவைத்தும் அவருக்குப் பிடித்ததெல்லாம் தனக்கும் பிடிப்பதான பிரமையிலும் -  அரிதாக உண்மையாகவும், அடிக்கடி இருவர் விருப்பங்களைச் சோதித்துப் பார்த்து, திருப்திப்பட்டு காதல் வளருவதான பிரமையுடன் - மொத்தத்தில் பிரமை பிடித்து வாழ்ந்து வருவார்கள்.

ஏதோ ஒரு துணிச்சல் பெற்ற, சுபயோக சுபதினத்தில் காதலைச் சொல்லி அசிங்கப்பட்டு வரும் குமார்கள் காட்டும் சோகத்தைவிட நண்பர்கள் காட்டும் அறச்சீற்றம் அளவிடமுடியாதது. அது ஏற்கனவே எங்கேயோ பட்டு உணர்ந்ததன் வெளிப்பாடாக இருக்ககூடும். இந்த வகையான சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடல் வெளிவந்தது. அது  'யுத்' படத்தின் 'சர்க்கரை நிலவே' என்பதாகும். பாடல் ‘உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்?’ என்கிற அறிவு பூர்வமான, காத்திரமான கேள்வியை முன்வைத்தது. குமார்கள் இந்தவரிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டார்கள். இதுவரை காலமும் ஆண்வர்க்கத்திற்கு நேர்ந்த அவலநிலையை தட்டிக் கேட்டதாக அப்போது கன்சல்டன்ட்ஸ் ஆகியிருந்த முன்னாள் குமார்களும் உவகையடைந்தார்கள். அந்த வரிகளை எழுதிய பிரகிருதி யாரெனத் தெரியவில்லை. என்னவொரு சிந்தனை பாருங்கள்! சாதாரணமாக இப்படி யோசிக்க முடியுமா? அபத்தமான இந்த வரிகளை மேற்கோள் காட்டியே குமார்கள் ஆக்ரோசமாக கேள்வி எழுப்பினார்கள். அதானே? ஏன்னா நியாம்பா இது? நியாயப்படி பிடிச்சுத்தானே ஆகணும்?

ஆனாலும் சமூக ரீதியில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் இந்தப்பாடல் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என குமார்கள் விசனமடைந்திருந்தார்கள். வழக்கம்போல ‘பெண்களே இப்படித்தான்’ என அதற்கும் நண்பர்களையே வதைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் விக்கிரமன் சாரின் படங்கள் குமார்களின் காயங்களுக்கு ஒருவித ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையல்ல. சமயங்களில் சில பெண்களும் சேர்ந்து குமார்களை ஆதரவளித்து உற்சாகப்படுத்தினர் என்பதுதான் இங்கே உச்சகட்ட நகைச்சுவை!

விக்கிரமன் சார் படங்களின் 'சோப்ளாங்கி' ஹீரோக்களாக (உதாரணமாக உன்னை நினைத்து) தங்களை நினைத்துக் கொண்டனர். தான் காதலிக்கும் பெண் வேறொருவரைக் காதலிப்பதாகத் தெரிந்த பின்னரும் அந்தக் குடும்பத்து உதவுவது போல குமார்கள் தம் காதலிகளுக்கு உற்ற நண்பனாக இருப்பர்கள். ஒருகட்டத்தில் நல்ல மனம்கொண்ட 'சோப்ளாங்கி' ஹீரோவை விட்டு மோசமான நபரைக் காதலித்துவிட்டதை எண்ணி காதலி மனம் வருந்துவார் என்பது குமார்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அத்தகைய சந்தர்ப்பத்தில் தாம் பெருந்தன்மையாக, ஒரு கனவானாக நடந்துகொள்ளவேண்டும் கூறி நட்பை மெய்ப்பிக்க வேண்டும். இதற்காகவே, நம் குமார்கள் தமது காதலிகளின் காதல் எப்போது ஊற்றிக் கொள்ளும் என உள்ளூர எதிர்பார்ப்புடன் எடுபிடியாகத் தமது பணியினை மேற்கொள்வர்.

ஆனால் நடைமுறை சினிமாவுக்கு சம்பந்தமில்லாதது. குமார்களின் எதிர்பார்ப்பின்படியே காதலிகளின் காதல்கள் ஊற்றிக் கொண்டாலும் அவர்கள் குமார்களைப் பொருட்படுத்துவதில்லை. விவரமாக வேறொரு காதலனோ, வெளிநாட்டு மாப்பிள்ளையோ கிடைத்து அவர்கள் பாட்டுக்குச் சென்றுகொண்டாயிருப்பார்கள். குமார்களும் அதே ஏக்கப் பார்வையுடன் அலைந்துகொண்டிருந்தார்கள். ஆனாலும் உள்ளூர குமார்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். அதனை விக்கிரமன் சாரின் 'சூர்யவம்சம்' போன்ற படங்கள் கொடுத்திருந்தன.

காதலனைக் கைவிட்டுச் செல்லும் காதலிகள் என்றோ ஒருநாள் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள். வருந்துவார்கள். அப்போது தாம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என அடுத்தகட்டத் தயார்படுத்தலில் இருப்பார்கள். எஞ்சினியரான அவள் புருஷனுக்கு வேலை போனால் உங்களைத் காண வருவாள். அவனுக்கு உங்கள் பஸ் கம்பனியில் டிகக்ட் கிழிக்கும் வேலை வேண்டி! உண்மையில், அவனுக்கு வேலை போனால் அவன் இன்னொரு கம்பெனியில் என்ஜினியராக வேலை தேடிக்கொள்வான். டிக்கட் கிழிக்க வரமாட்டான் என்பதுதான் யதார்த்தமாக இருந்தாலும், காதல்வயப்பட ஆரம்பத்திலிருந்து தமது மூளையை ஒருவித கொழுப்புப் பதார்த்தமாகவே பேணிக் கொள்வதால் குமார்கள் இதனை உணர்ந்துகொள்வதில்லை.

சமயங்களில் பெண்கள் மிகத் தெளிவானவர்கள். உண்மையில் ஒருபெண் பட்டுணர்ந்து தான் காதலிப்பவனை விட்டு விலகும்போதே அவள் வாழ்க்கை நன்றாகச் செல்ல ஆரம்பித்துவிடுகிறது என்பதே நாம் அனுபவத்தில் கண்டது. அதனைக் குமார்கள் அன்றும் இன்றும் என்றும் புரிந்துகொண்டதேயில்லை.

ஏதோ ஒருகட்டத்தில் எல்லாக் குமார்களும் ஒரு புள்ளியில் இணைந்துகொண்டுவிடுவார்கள். உண்மையில் காதலில் இருந்து ஒருகட்டத்தில் காதலிகள் சுதாகரித்து கழற்றிவிடப்படட குமார்கள், எடுபிடிகளாக நியமிக்கப்பட்டு தமக்குள்ள காதலை வளர்த்து கவிதை வரைந்து காவியக் காதலில் ஈடுபட்ட குமார்கள், காதல் விண்ணப்பப் படிவங்களை திரும்பத் திரும்ப அனுப்பிய குமார்கள் எல்லோருமே காதலியால் ஏமாற்றப்பட்ட பட்டியலில் விரும்பி இணைந்துகொள்வார்கள். இதில் இன்னொரு விசித்திர வகைக் குமார்களும் அடக்கம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் ஐம்பது மீட்டர் தூரத்தில் சைக்கிளில் துரத்திய குமார்கள்கூடாத் தாங்களும் ஏமாற்றப்பட்டதாக ஏதோ ஒரு புரியாத தர்க்கத்தின் அடிப்படையில் தாங்களும் வஞ்சிக்கப்பட்டதாக அவர்களே நம்பிக்கொண்டிருப்பார்கள். அவர்களும் இந்தப்புள்ளியில் இணைவதுதான் உச்சகட்ட அவலம் எனலாம்.

இவர்களுக்காகவே ஒருபாடல் உருவாக்கி வெளியிட்டார் விக்கிரமன் சார். பட்டி தொட்டியெங்கும் குமார்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. குமார்கள் புத்துணர்ச்சியுடன், முக மலர்ச்சியுடன் பாடித் திரிந்தார்கள். அது, 'பொம்பிளைங்க காதலைத்தான் நம்பி விடாதே!'. குமார்களின் தேசிய கீதமாகவே ஆகிப்போனது. அப்போதே பெரிய சந்தேகம் ஒன்றிருந்தது. பெண்களை நம்பாமல் வேறு யார் காதலை நம்புவது? ஒரு ஆண் பெண்ணின் காதலைத்தானே நம்ப வேண்டும்? என்ன அபத்தம் இது? கொஞ்சம் ஆழமாக யோசித்தால் வில்லங்கமாக அல்லவா வருகிறது? உண்மையில் அப்படி இருந்தால் குமார்கள்தான் எவ்வளவு பாவப்பட்டவர்கள்? ஆண் ஓரினச் சேர்க்கையாளருக்காக உருவாக்கப்பட்ட பாடலை குமார்கள் தமக்கான தேசிய கீதமாக வரித்துக்கொண்டதுதான் இந்த நூற்றாண்டின் மகத்தான சோகம் எனலாம்.

எது எப்படியோ இன்றைய  காலகட்டத்தில் டீவி சீரியல்கள் வரவேற்பறைகளை ஆக்கிரமிக்க, வன்மமும் குரோதமும் வஞ்சகமும் அதிர்வலைகளாக உருவாகி நிறைந்துள்ளதாகப் பலரும் அஞ்சுகிறார்கள். உண்மையில் நம் சமூகத்தில் அன்பும், நம்பிக்கையும் பாசமும் பெருக்கெடுக்க, ஒன்றாகக் குழுமியிருந்து படம் பார்த்துக் களித்த காலமொன்று உண்டெனில் அது இயக்குனர் விக்கிரமன் படங்கள் வெளிவந்த காலம் எனலாம். அதற்காகவே நாம் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்