Wednesday, March 25, 2015

திரைக்கதை எழுதலாம் வாங்க - ராஜேஷ்



ராஜேஷின் 'திரைக்கதை எழுதலாம் வாங்க' புத்தகம் கடந்தமாதத்தின் காலைப்பொழுதொன்றில் கைகளில் கிடைத்ததில், அது இந்த ஆண்டின் மிக மகிழ்ச்சியான நாளானது. இதில் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் எதுவுமில்லை. சமீப காலத்தில் இல்லை என் வாழ்க்கையிலேயே ஒரு புத்தகத்திற்காக நீண்டநாட்களாய் இவ்வளவு எதிர்பார்ப்புடன் காத்திருந்தது கிடையாது. ஆச்சரியமாக இருந்தது. 

அதற்காக நான் திரைக்கதை எழுதப்போகிறேன் என்று யாரும் பயந்துவிடாதீர்கள். சினிமா பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது.  ஆனால் துரதிருஷ்டவசமாக நான் சிறுவயதில் அவ்வளவாக சினிமா பார்த்ததோ, தற்போதும் நிறைய சினிமா பார்ப்பதோ கிடையாது. கருந்தேள் தனது வலைத்தளத்தில் எழுதத் தொடங்கியபோதே எதிர்பார்த்திருந்தேன். உண்மையில் பத்துவருடமாகக் காத்திருந்தேன் என்றுகூடச் சொல்லலாம். டெக்னிக்கலாகத் தமிழில் சினிமா பற்றி எழுதியதைப் படிக்கவேண்டும் என்கிற ஆவலில் சுஜாதாவின் 'திரைக்கதை எழுதுவது எப்படி' புத்தகத்தை 2005 இல் யாழ்ப்பாணத்தில் தேடி, பின்னர் கொழும்புவந்து தேடியும் கிடைக்கவில்லை. ராஜேஷ் எழுதிய இந்தப்புத்தகம் சுஜாதா எழுதியதைவிடவும் விரிவாக, தெளிவாக இருக்கும் என நம்பினேன்.

ஏனெனில் சுஜாதா சினிமா டெக்னிக் பற்றிப் பேசும்போதெல்லாம் ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் படங்களில் இருந்துதான் உதாரணம் காட்டுவார். அவற்றில் ஷங்கர் படம் தவிர, மற்றதெல்லாம் படுமொக்கையான உதாரணமாகத்தான் இருக்கும். தமிழின் ஏனைய சிறந்த திரைக்கதையமைப்புள்ள படங்கள் பற்றியெல்லாம் பேசியதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் தமிழ்சினிமா உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கும் இந்தப்புத்தகம் நிச்சயம் புதிதாகவே இருக்கும். சுஜாதா இருந்திருந்தால்,  இந்தப்புத்தகம் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்.

இந்தப்புத்தகத்தைப் பெற்றுக்கொடுத்த தோழிகளுக்கு நன்றி. தேர்தல், நாட்டுநிலைமை தபால்துறையின் தாமதங்களால் ஒருமாதம் காத்திருந்து, பார்சலைப் பிரித்துப் புத்தகத்தைப் பார்த்தபோது முதலில் ஏமாற்றமாக இருந்தது, 'என்னடா புத்தகம் சின்னதா இருக்கே?' என்று தோன்றியது.  ஆனால் வாசிக்கத் தொடங்கியதும் அப்படித் தோன்றவில்லை.

சினிமாவிற்கான கதை என்பது சினிமாத்துறை சார்ந்தவர்களிடமிருந்து மட்டும் வரவேண்டியதில்லை. அது சாதாரணமாக என்னிடமிருந்தோ, உங்களிடமிருந்தோ, யாரிடமிருந்தும் வரலாம். நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள், சாதாரணமாக நாம் பார்க்கும் சம்பவங்களிருந்தோ ஒரு சிறந்த கதை உருவாகலாம். நம்மைச்சுற்றி ஏராளம் கதைகள் இருக்கின்றன. அவற்றை நல்ல திரைக்கதையாக மாற்ற முடிந்தால் நாங்களும் திரைக்கதை ஆசிரியர்களே. அப்படித்தான் 'சூது கவ்வும்' பட இயக்குனர் நலன் குமாராசாமி எழுதியிருக்கும் சிறப்புரையும் சொல்கிறது. 'ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள்' என்ற தலைப்பில் திரைக்கதை எழுதுவதிலுள்ள சிக்கல்களையும், ஒரு திரைக்கதையாசிரியருக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு பற்றியும் சொல்கிறார்.

சிட் ஃபீல்டிடம் முறையாக அனுமதி பெற்று, அவரது ‘Screenplay: The Foundations of Screenwriting’ என்ற புத்தகத்தை மையக்கருத்துக்களை எடுத்துக்கொண்டு, புத்தகத்திலுள்ள 55 அத்தியாயங்களும் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை கோட்பாட்டை விளக்கியும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சினிமா காட்சியமைப்பை விவரிக்கிறார். தவிர்க்கமுடியாத, தெளிவான காட்சியமைப்புகளுக்காக மட்டும் ஹொலிவூட். 312 பக்கங்களில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் (வண்ணப் படங்களெனில் இன்னும் நன்றாக இருந்திருக்கும்)  அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கக்கூடிய வகையில் தெளிவாக அச்சிடப்பட்டிருந்தாலும் சில பக்கங்கள் அநியாயத்துக்கு நெருக்கமாக இருப்பதாக எண்ணவைக்கிறது. பொருளடக்கம் இல்லாதது சிறுகுறையே, அடுத்தபதிப்பில் சரிசெய்யப்படலாம்.

புத்தகம் சிட் ஃபீல்டின் 3 Act Structure முறையிலமைந்த திரைக்கதையமைப்பை அடிப்படையாகக் கொண்டது. முதல் அத்தியாயத்தில்  Setup, Confrontation, Resolution பற்றியும் திரைக்கதையை ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு நகர்த்தும் இரண்டு Plot point கள் பற்றியும் சுருக்கமாக கூறிவிட்டு, 'ஆரண்ய காண்டம்' படத்தின் காட்சிகளூடாக விவரிக்கப்படுகிறது.  ஷொட், ஸீன், சீக்வென்ஸ், சப்ஜெக்ட், சப்ஜெக்டின் இரண்டு அம்சங்களான கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் போன்ற அடிப்படை விஷயங்களைப்பேசி - பின்னர் கதாபாத்திரந்தின் இயல்புகளைக் கட்டமைத்தல், பிரதான கதாபாத்திரத்தின் குறிக்கோளை இனங்காணுதல், குறிக்கோளை அடைவதற்கான இடையூறுகளை உருவாக்குதல் பற்றி விரிவாக உதாரணங்களுடன் விவரித்துவிட்டு, ஆசிரியர் நம்மிடம் கேட்டுக்கொள்வது - திரைக்கதை ஆர்வமுள்ளவர்கள் படம் பார்க்கும்போது இந்த அடிப்படை விதிகள் எப்படிப் பயன்படுத்தப்படிருக்கின்றன, அவற்றை இனங்கண்டு கொள்ளுங்கள், கவனியுங்கள் என்கிறார்.

திரைப்படமொன்றைப் பார்க்கும்போதே, அதன் திரைக்கதை கட்டமைக்கப்பட்டிருக்கும் முறையையும் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள். என்னால் அப்படி முடிந்ததில்லை. படம் பார்க்க ஆரம்பிக்கும்போது ‘தெளிவாக’ இருந்தாலும் ஓரிரு காட்சிகளில் அப்படியே ஒன்றிப்போய் விடுவேன். உண்மையில் ஒரு நல்ல படம் அப்படித்தான் இருக்கவேண்டும். பார்வையாளனைத் தன்னுள் ஈர்த்துக் கொள்வதாக! திரைக்கதை அமைப்பு பற்றிப்படித்து தெரிந்து கொள்வதைவிட, நிறையப்படங்கள் பார்த்து அதன்மூலம் கட்டமைப்பைப் புரிந்துகொண்டு அதன்பின்னர் கோட்பாடுகள் பற்றி ஆராய்வது நல்லது. ஆசிரியர் ராஜேஷ் அப்படித்தான். 

அண்ணன் செங்கோவியும் அப்படியே! அவர் எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதை சூத்திரங்கள் தொடரில் சொல்கிறார். "ஒரு படத்தை முதல் இரண்டுமுறை பார்க்கும்போது, கதையில் இன்வால்வ் ஆகிவிடுவோம். அதன்பிறகு பார்க்கும்போதே, அதில் உள்ள விஷயங்கள் பிடிபடத்துவங்கும்" இந்தத் தொடரும் புத்தகமாக வெளிவந்தால் மகிழ்ச்சி. தமிழில் சினிமா தொடர்பான புத்தகங்களின் தேவை இருக்கிறது.

ஆனால் அதற்கு முயற்சிக்காத, அல்லது வாய்ப்புகள் அமையாத என்போன்றவர்களுக்கு ஒரு படத்தை அதன் கட்டமைப்பு தொடர்பில் எப்படி அணுக வேண்டும் எனச்சொல்கிறது இந்தப்புத்தகம்.

எல்லாவற்றையும் விவரித்துவிட்டு இறுதியில், திரைக்கதை எழுதும்போது உண்டாகும் சோர்வு மன உளைச்சல் பற்றிச் சொல்கிறார். ஒருகட்டத்தில் சிக்கி, முற்றிலும் தடைபட்டுப்போய் நமக்கு இதெல்லாம் சரிப்படாது என்கிற நிலை வரும் - அது இயல்பாக எல்லோருக்கும் நேர்வதுதான், அதையெல்லாம் கடந்து வாருங்கள் என்கிறார்.

என்வரையில், இது வழமையாக நாம் சொல்லிக் கொள்வதுபோல ஒரே மூச்சில் வாசிப்பதுபோன்ற புத்தகமல்ல. சில பக்கங்கள் கடந்து போவது அவ்வளவு கடினமானது. ஆசிரியர் உதாரணங்காட்டும்தமிழ்சினிமாக் காட்சிகளை, கட்டமைப்புகளை நாமும் யோசித்துப் பார்க்கபோய் அப்படியே ஒரு சுற்று போய்வர.... சவாலாகவே இருந்தது. திரைக்கதை எழுத, கட்டமைப்பைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்கு நல்லதோர் தோழனாக இருக்கும்.  

Go Write your  Screenplay எனக்கூறி முடிக்கும் ராஜேஷ், திரைக்கதை எழுத விரும்பும் ஒருவருக்கேனும் இந்தப்புத்தகம் உபயோகப்பட்டால எழுதப்பட்ட லட்சியம் ஈடேறிவிட்டது என்கிறார். இப்படியொரு புத்தகத்தை எழுதியதற்காக மகிழ்ச்சியுடன் நாமும் அவர் பாணியில் சொல்லிக் கொள்ளலாம்..... Cheers!

Saturday, March 14, 2015

மச்சி இருக்கிறியாடா?

"மச்சி இருக்கிறியாடா?"

நீண்ட நாட்களின் பின்னரான சஞ்சய்க்கும் எனக்குமான செல்பேசி உரையாடல் இப்படித்தான் ஆரம்பிக்கும்.

அதென்னவோ தெரியவில்லை. உரையாடலின் ஆரம்பத்தில் இருவருக்குமே நாம் உயிருடன் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. நண்பர்களுக்கிடையே தொடர்புகளைப் பேணிக் கொள்வதில் நான் மிகுந்த சோம்பேறி. நம் நண்பர்களும் அப்படியே இருப்பதால் பிரச்சினையேயில்லை. மிக நெருக்கமான நண்பர்களாயிருந்தாலும் அடிக்கடி என்றில்லை, அவ்வப்போதுகூடப் பேசுவதில்லை. நேரில் சந்திக்கும்போது பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலும் விட்ட இடத்திலிருந்து அதே பழைய தொனியில் பேசிக் கொள்வோம்.

‘மச்சி இருக்கிறியாடா?’ என்பது பின்னர், ‘மச்சி வேலையை விட்டுட்டியாடா?’ என்பதாக மாறிவிட்டது. பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை சடுதியாக விட்டுவிடுவது, வேறு வேலைக்குத் தாவுவது என்பதெல்லாம் இப்போது அவ்வளவு அதிர்ச்சி கொடுக்கும் விஷயங்கள் எனில், நீங்கள் முப்பது வருஷம் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்ந்த அரசாங்க உத்தியோகத்தர் அல்லது ஒரே வேலையில் உறுதியாக நின்று வாழ்ந்துவிட முடிவெடுத்துவிட்ட இலட்சிய இளைஞர். சடுதியாக வேலையை உதறிவிடும் சாகசங்களை இருவரும் மாறி மாறி நிகழ்த்திக் கொண்டிருந்ததால் மச்சி வேலையை விட்டுட்டியா? அதே வேலையா? என்பதெல்லாம் சாதாரண விசாரிப்புகள் மட்டுமே!

சில நாட்களுக்குமுன் அவனுடன் எப்படியும் பேசிவிடவேண்டும் என நினைத்தேன்.  அது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. அவன் பெயரில் குறைந்தது நான்கு தொலைபேசி எண்கள் என் செல்பேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதைவிட ஆறு இலக்கங்களை அவன் மாற்றியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை. நாங்கள் இருவரும் பேசி மூன்று வருடங்களாகியிருந்தது. இது மிகப்பெரிய இடைவெளிதான். 

திருகோணமலையில் அலுவலகத்தில் நான் மட்டுமே தனியாக இருந்த இனிய காலைப் பொழுது. சுழல் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து அருகிலிருந்த இன்னோர் இருக்கையில் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன். ரிசர்சன் காரணமாக வேலையிழந்து, வழமைபோல பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததில் நீண்ட இடைவெளியாகி, வாழ்க்கையில் அடிபட்டு நொந்து நூடுல்ஸாகி பிறகு கிடைத்திருந்தது வேலை.

இனியொருதரம் அப்படி ஒரு சம்பாவிதம் நிகழ அனுமதிக்கக் கூடாது என நினைத்துக் கொண்டேன். விளையாட்டுத்தனம் இல்லாமல் இந்த ப்ராஜெக்ட் முடியும்போது இன்னொன்றில் இணைந்துவிட வேண்டும். இந்த நினைப்பும் கடையில் சாப்பிட்ட முட்டை பரோட்டாவும் அந்தக் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்தையும் ஒருவித மமதையையும், கிறக்கத்தையும் ஒருங்கே கொடுத்தது. அப்படியே தலையை நன்கு பின்னுக்குச் சாய்த்து வலது பக்கமாக முப்பது டிகிரி கோணத்தில் சரித்து மேலே சீலிங்கைப் பார்க்கையில், மனதில் பறவைகள் கிரீச்சிட்டன. ஒரு கிட்டார் ஒலிக்க, தொடர்ந்து வயலின்கள் ரட்ரட்ரா ரட்ரட்ரா .. 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலின் ஆரம்ப இசை தொடங்கவும் என் செல்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது. சஞ்சய் காலையிலேயே அழைத்தான்.
"---" 
"மச்சி வேலைய விட்டுட்டியா?"
"டாய்.... ^%@&#%^&#** ^$%#&#^@#$&&" 

சின்ன வயதில் முத்திரை சேகரித்தது, ஸ்டிக்கர் சேகரித்ததுபோல தொலைபேசி இலக்கங்களைச் சேகரிக்கும் வினோதமான பழக்கம் ஏற்பட்டிருக்குமோ எனச்சந்தேகிக்கும் வகையில் சஞ்சய், அவ்வப்போது நடந்துகொள்வான்.

வெள்ளவத்தையில் ஐபிசி ரோட்டைக் கடந்து வருகிற நண்பனை, இங்கே கொமர்ஷல் வங்கிக்கு அருகே நின்று தூரப்பார்வையிலேயே கண்டுபிடித்து, உற்சாகமாகக் கையசைத்து இடையில் நடந்துசெல்லும் ஏராளமானோரைக் குழப்பி, சடுதியாக வீதியின் குறுக்காக ஓடிக்கடந்து கார்கில்ஸ்க்கு முன்னால் வழிமறித்து...உஸ்ஸ் மூச்சு வாங்கி.... "மச்சி உன்ர நம்பரை மிஸ் பண்ணிட்டன்டா ஒருக்கா சொல்லு!" என்பான்.

இரவு ஏழு மணிக்கு, தூரத்தில காட்டி கேட்பான்.
"மச்சான் அவன தெரியுமாடா? எங்கயோ பாத்த மாதிரி இருக்கு"
"கேர்ள் ஃபிரண்டோட வர்றாண்டா எப்பிடிறா எங்களுக்குத் தெரிஞ்சவனா இருப்பான்?" 
சொல்லி முடிக்கமுதலே வந்தவனை வழிமறித்து, "மச்சான் நீ மணில படிச்சனிதானே?"
யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம். இரவு. திடீரென ரோட்டில் ஒருத்தன் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு வழிமறித்து சம்பந்தமில்லாமப் பேசுறானே என அவன் பீதியாகி முழிச்சிட்டிருப்பான்.

சஞ்சய் கன்டினியூ பண்ணுவான், "ஏழாம் ஆண்டில... மணி டியூஷன்.... விடிய ஆறு மணி.... வேலாயுதத்திட்ட மத்ஸ்.. சிவப்புக் கலர் முக்காச் சைக்கிள்ள நீ வருவ இல்ல.."
"ஆமால்ல"

இப்போ அவனுக்குள்ளயும் ஒரு லாலாலா மியூசிக் கேட்டு, வளையம் வளையமா ஃபிளாஷ்பாக் ஒப்பினாகி சீனுக்குள்ள போயிருப்பான். தொடர்ந்து ஃபீலிங்க்ஸ்லயே பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஐந்துநிமிடங்கள் கடக்கும். அதுவரைக்கும் இன்முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காதலியின் பார்வை இப்போது வன்முகமாக மாறுவது போலிருக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் கண்டுக்காமலே, 'மச்சி கார்த்திக் இப்ப எங்க?', 'டேய் ரமணன் அப்பவே போயிட்டான்ல?' பசங்களின் வழக்கப்படி லிங்க் பண்ணி லிங்க் பண்ணி பேசிக்கொண்டே போவார்கள். திடீரென்று ஓரிடத்தில ஸ்ட்ரக் ஆகி இப்போ எதுக்கு இந்தக் கதை வந்திச்சுன்னு யோசிக்கிறவரைக்கும்.

இப்போது காதலி கணிசமான அளவு கடுப்பாகியிருப்பார். தனியாகப் போனதும் காதலனுக்கு கண்டபடி திட்டு விழலாம். குட்டுக் கூட விழலாம். அது அவன் பிரச்சினை. ஆனால் இப்போ? லைட்டா எங்களப் பார்க்கிற பார்வையிலேயே அப்பிடியே மைண்ட் வொயிஸ் கிளியராக் கேட்கும்.

‘யார்ரா நீங்கெல்லாம்? எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க? இருந்திருந்து எப்பவாவது இப்பிடி ஒண்ணாச் சேர்ந்து வெளிக்கிட்டா சந்திக்குச் சந்தி நிண்டு தொலைக்கிறீங்க... உங்களுக்கெல்லாம் வாழ்க்கைல கேர்ள் ஃபிரண்டே கிடைக்க மாட்டாடா....காலம் முழுக்க மொட்டப் பசங்களாவே சந்தில நிப்பீங்கடா!’. நாங்களும் பழைய பாரதிராஜா படங்களில் வருவதுபோல, சின்னப்பையன் அறிவுபூர்வமாகக் கேள்விகேட்டதும் ஞானம் பிறந்து, மானசீகமாக கன்னத்தில் சப் சப்பென்று அறை வாங்கும் ஊர்ப்பெருசு போல போஸ் கொடுப்போம்.

இது எதையுமே கவனிக்காம பேசிட்டிருந்த நம்மாளுங்க ஒரு மாதிரியா நிகழ்காலத்துக்கு வந்து, 'மச்சி உன் நம்பர சொல்லுறா' சின்சியராக பரிமாறிக் கொள்வார்கள். அப்பதான் ஒரு சந்தேகம் வரும். உண்மையிலேயே சஞ்சய் அவனுக்கு ஃபோன் பண்ணுவானா? இல்ல அவன்தான் இவன் நம்பர வச்சிருப்பானா? கொஞ்ச தூரம் போனதும் அவன் காதலியே அந்த நம்பர கடுப்பில டிலீட் பண்ணிடுவாளா? ஆனா ஒண்ணு நம்மாளு புதுசா ஒரு நம்பர கலக்சன்ல சேர்த்துட்டான். அங்கதான் நிக்கிறான்.

ஆனால் சஞ்சய் தொலைபேசி இலக்கங்களை அப்படியே வைத்திருப்பான் என்பது நேற்றுத்தான் தெரிந்தது. அவன் ஒன்றரை வருடங்களாக லண்டனில் இருக்கிறானம். விடுமுறையில் வந்திருக்கிறான். இந்தமுறை வித்தியாசமாக பேசினான்,
"மச்சி எங்க இருக்கே?"