Wednesday, December 30, 2015

தீவிரவாதம்!

புடைப்பாளி நண்பர் சொன்ன தகவல் ஆச்சரியமளித்தது. நண்பர் தீவிர புடைப்பாளி. இந்த 'தீவிர' என்பது சமயத்தில் மிகுந்த பீதியைக் கொடுத்துவிடுகிறது. 

தீவிர பத்திரிகை மரண அறிவித்தல் வாசகர், தீவிர டீவி சீரியல் பார்க்குநர், தீவிர குத்துப்பாட்டு பொழிப்புரை அறிஞர், தீவிர பஜனை பாடுநர் என இப்போதெல்லாம் எங்கும் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது கவலைக்குரியது.

ஒருவருக்குள் தீவிர தேடல், தீர்க்கமான கொள்கை, அறிவு இருக்கும்பட்சத்தில் அது முகத்தில், இயல்பில் தெரியும் என்பர். ஆனால் வலுக்கட்டாயமாக பொருத்தமில்லாத தீவிர முகமூடி அணிந்துகொண்டு, விறைப்பாக முறைப்பாக இருத்தல், வடிவேலு நகைச்சுவைக்காட்சியைக்கூடச் சிரிக்காமல், நுண்மையாக அவதானிக்கும்பொருட்டு(?) பூதக் கண்ணாடியூடு முறைத்துக்கொண்டே பார்ப்பதெல்லாம்.... பள்ளிக்கூட நாடகம் போல அதாவது பாகுபலி படத்தில் தமன்னா புரட்சிப்பெண்ணாக முறைத்துக் குபீர்ச்சிரிப்பை வரவழைத்தது போலாகிவிடும்.

உண்மையில் தீவிரம் முகத்தில் தெரிய வேண்டியதில்லை. தீவிர புடைப்பாளி நண்பரின் முகம் காட்டிக் கொடுக்காது. உடல் சமரசம் செய்து கொள்வதில்லை. ஃப்ரீ சைஸ் ஷர்ட்டும், 40 சைஸ் பாண்டும் அணிந்துகொண்டு அப்படி என்னதான் சமரசம் செய்வது?

நண்பர் சொன்ன அதிர்ச்சியான தகவல் - எடை குறைக்க நடைப்பயிற்சி செய்யப்போகிறாராம்.

'நம்மூர் நாய்களுக்கு நடைப்பயிற்சி பரிச்சயமானதா?' என்கிற காத்திரமான கேள்வியை முன்வைத்தேன்.

நடைப்பயிற்சியின்போது கைகளை வேகமாக வீசிக் கொண்டு, எட்டு அல்லது பத்துக் கிலோமீட்டர் வேகத்தில் சீராக நடக்கவேண்டும். ஒரு ஊக்கத்திற்கு நாய் சீரான வேகத்தில் துரத்துவதாக நினைத்துக் கொள்ளலாம். 

கவனிக்க; நடக்கவேண்டுமே தவிர ஓடக்கூடாது. ஓடினால் உண்மையான நாய்கள் துரத்த ஆரம்பித்துவிடலாம். நாய்கள் ஓடினால்தான் துரத்துமாம் என்கிறார்கள். (நாய்கள் அப்படி உறுதிமொழி கொடுத்ததாகத் தகவல்களில்லை. எனினும் அது இப்போது இங்கே முக்கியமல்ல)

என் கவலை எல்லாம் நடைப்பயிற்சி பற்றித் தெரியாத நாய்கள், நண்பர் ஏதோ வினோதமான முறையில் ஓடுகிறார் என்று நினைத்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தால் நிலைமை தீவிரமாகிவிடுமல்லவா?

No comments:

Post a Comment