Wednesday, December 30, 2015

விவாதம்!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் தேவை கணபதி அங்கிள்களா? பவானி ஆன்டிகளா? - அருமையான விவாதத்தலைப்பு. சங்க காலத்திலேயே நின்றுகொண்டிருந்தால் எப்படி? சமகாலத்தையும் கவனிக்க வேண்டாமா?

நம் சமூகத்தில் கணபதி அங்கிள்கள் இல்லை என்றே படுகிறது. கணபதிபோல அங்கிள்கள் பரந்தளவில் நிறைந்திருந்தாலும் அவர்கள் கணபதி அங்கிள்களாக இல்லை. முன்னொரு காலத்தில் அங்கிள்கள் தாமுண்டு தம் நியூஸ் பேப்பர் உண்டு. கிரிகெட் உண்டு என்று வாழ்ந்தார்களாம். இப்போது உண்டு இல்லை என்று கேள்வி கேட்கிறார்களாம் - டீவி சீரியல்கள் அனுசரணையில்.

அப்படியே அரிதாக ஒரு கணபதி அங்கிள் சிக்கினாலும் அவருக்கு ஒரு அல்சைமர் பவானி ஆன்டி வாய்த்திருப்பது... வாய்ப்பே இல்லை. இதற்கு நேர்மாறாக நம் ஆண்டிகள் மிகக் கொடூரமான ஞாபகசக்தியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் கொடுமையைப் பாருங்கள். இளைஞர்களுக்கு - நம் நண்பர்களுக்கு, எனக்கு, உங்களுக்கு - எல்லோருக்குமே திடீரென்று தாக்கும் குறுகியகால அல்சைமர் ஒன்று அவ்வப்போது வந்து தொலைத்துவிடுகிறது. அதில் எந்தப் பாதகமுமில்லை. அசந்தர்ப்பத்தில் மீண்டும் நினைவு திரும்புவதுதான் பாதிப்பு - கூடவே இருக்கும் நண்பருக்கு.

நண்பருடன் வீதியில் நின்றுகொண்டிருக்கிரீகள். நண்பன் ஓர் பெண்ணைப் பார்த்து அல்சைமர் தாக்கி, விழித்தொடர்கிறான்.

இப்போது உங்களிருவர்முன் ஓர் கொடூர ஞாபகசக்தி ஆன்டி தோன்றுகிறார்.

"தம்பி என்னைத் தெரியுதே... ஆரெண்டு சொல்லும் பாப்பம்... சின்னனில பாத்தது வளந்துட்டீர் இப்ப நல்லா...!"
'அஞ்சாப்பு படிக்கேக்க பாத்திருப்பீங்க... வேற வழியில்லாம வளர்ந்துட்டேன்' 

ஆன்டியின் விடாத சொற்பொழிவுக்கு, அவ்வப்போது பு'ண்'னகையுடன் தலையசைத்து 'அருமை' கமெண்ட்!

இப்போது ஆன்டி முக்கியமான கேள்வியொன்றை முன்வைக்கிறார்.
"என்ன இங்க ரோட்டில நிக்கிறீர்... அலுவலோ?"

சரியாக இந்தநேரம் பார்த்து சுயநினைவுக்கு மீண்ட நண்பன், சுற்றுச் சூழலைக் கவனிக்காமல்,

"டேய்!!!! செம்ம ஃபிகர் மச்சி... கவனிச்சியா?"

சுபம்!

No comments:

Post a Comment