Saturday, March 14, 2015

மச்சி இருக்கிறியாடா?

"மச்சி இருக்கிறியாடா?"

நீண்ட நாட்களின் பின்னரான சஞ்சய்க்கும் எனக்குமான செல்பேசி உரையாடல் இப்படித்தான் ஆரம்பிக்கும்.

அதென்னவோ தெரியவில்லை. உரையாடலின் ஆரம்பத்தில் இருவருக்குமே நாம் உயிருடன் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. நண்பர்களுக்கிடையே தொடர்புகளைப் பேணிக் கொள்வதில் நான் மிகுந்த சோம்பேறி. நம் நண்பர்களும் அப்படியே இருப்பதால் பிரச்சினையேயில்லை. மிக நெருக்கமான நண்பர்களாயிருந்தாலும் அடிக்கடி என்றில்லை, அவ்வப்போதுகூடப் பேசுவதில்லை. நேரில் சந்திக்கும்போது பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலும் விட்ட இடத்திலிருந்து அதே பழைய தொனியில் பேசிக் கொள்வோம்.

‘மச்சி இருக்கிறியாடா?’ என்பது பின்னர், ‘மச்சி வேலையை விட்டுட்டியாடா?’ என்பதாக மாறிவிட்டது. பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை சடுதியாக விட்டுவிடுவது, வேறு வேலைக்குத் தாவுவது என்பதெல்லாம் இப்போது அவ்வளவு அதிர்ச்சி கொடுக்கும் விஷயங்கள் எனில், நீங்கள் முப்பது வருஷம் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்ந்த அரசாங்க உத்தியோகத்தர் அல்லது ஒரே வேலையில் உறுதியாக நின்று வாழ்ந்துவிட முடிவெடுத்துவிட்ட இலட்சிய இளைஞர். சடுதியாக வேலையை உதறிவிடும் சாகசங்களை இருவரும் மாறி மாறி நிகழ்த்திக் கொண்டிருந்ததால் மச்சி வேலையை விட்டுட்டியா? அதே வேலையா? என்பதெல்லாம் சாதாரண விசாரிப்புகள் மட்டுமே!

சில நாட்களுக்குமுன் அவனுடன் எப்படியும் பேசிவிடவேண்டும் என நினைத்தேன்.  அது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. அவன் பெயரில் குறைந்தது நான்கு தொலைபேசி எண்கள் என் செல்பேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதைவிட ஆறு இலக்கங்களை அவன் மாற்றியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை. நாங்கள் இருவரும் பேசி மூன்று வருடங்களாகியிருந்தது. இது மிகப்பெரிய இடைவெளிதான். 

திருகோணமலையில் அலுவலகத்தில் நான் மட்டுமே தனியாக இருந்த இனிய காலைப் பொழுது. சுழல் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து அருகிலிருந்த இன்னோர் இருக்கையில் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன். ரிசர்சன் காரணமாக வேலையிழந்து, வழமைபோல பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததில் நீண்ட இடைவெளியாகி, வாழ்க்கையில் அடிபட்டு நொந்து நூடுல்ஸாகி பிறகு கிடைத்திருந்தது வேலை.

இனியொருதரம் அப்படி ஒரு சம்பாவிதம் நிகழ அனுமதிக்கக் கூடாது என நினைத்துக் கொண்டேன். விளையாட்டுத்தனம் இல்லாமல் இந்த ப்ராஜெக்ட் முடியும்போது இன்னொன்றில் இணைந்துவிட வேண்டும். இந்த நினைப்பும் கடையில் சாப்பிட்ட முட்டை பரோட்டாவும் அந்தக் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்தையும் ஒருவித மமதையையும், கிறக்கத்தையும் ஒருங்கே கொடுத்தது. அப்படியே தலையை நன்கு பின்னுக்குச் சாய்த்து வலது பக்கமாக முப்பது டிகிரி கோணத்தில் சரித்து மேலே சீலிங்கைப் பார்க்கையில், மனதில் பறவைகள் கிரீச்சிட்டன. ஒரு கிட்டார் ஒலிக்க, தொடர்ந்து வயலின்கள் ரட்ரட்ரா ரட்ரட்ரா .. 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலின் ஆரம்ப இசை தொடங்கவும் என் செல்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது. சஞ்சய் காலையிலேயே அழைத்தான்.
"---" 
"மச்சி வேலைய விட்டுட்டியா?"
"டாய்.... ^%@&#%^&#** ^$%#&#^@#$&&" 

சின்ன வயதில் முத்திரை சேகரித்தது, ஸ்டிக்கர் சேகரித்ததுபோல தொலைபேசி இலக்கங்களைச் சேகரிக்கும் வினோதமான பழக்கம் ஏற்பட்டிருக்குமோ எனச்சந்தேகிக்கும் வகையில் சஞ்சய், அவ்வப்போது நடந்துகொள்வான்.

வெள்ளவத்தையில் ஐபிசி ரோட்டைக் கடந்து வருகிற நண்பனை, இங்கே கொமர்ஷல் வங்கிக்கு அருகே நின்று தூரப்பார்வையிலேயே கண்டுபிடித்து, உற்சாகமாகக் கையசைத்து இடையில் நடந்துசெல்லும் ஏராளமானோரைக் குழப்பி, சடுதியாக வீதியின் குறுக்காக ஓடிக்கடந்து கார்கில்ஸ்க்கு முன்னால் வழிமறித்து...உஸ்ஸ் மூச்சு வாங்கி.... "மச்சி உன்ர நம்பரை மிஸ் பண்ணிட்டன்டா ஒருக்கா சொல்லு!" என்பான்.

இரவு ஏழு மணிக்கு, தூரத்தில காட்டி கேட்பான்.
"மச்சான் அவன தெரியுமாடா? எங்கயோ பாத்த மாதிரி இருக்கு"
"கேர்ள் ஃபிரண்டோட வர்றாண்டா எப்பிடிறா எங்களுக்குத் தெரிஞ்சவனா இருப்பான்?" 
சொல்லி முடிக்கமுதலே வந்தவனை வழிமறித்து, "மச்சான் நீ மணில படிச்சனிதானே?"
யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம். இரவு. திடீரென ரோட்டில் ஒருத்தன் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு வழிமறித்து சம்பந்தமில்லாமப் பேசுறானே என அவன் பீதியாகி முழிச்சிட்டிருப்பான்.

சஞ்சய் கன்டினியூ பண்ணுவான், "ஏழாம் ஆண்டில... மணி டியூஷன்.... விடிய ஆறு மணி.... வேலாயுதத்திட்ட மத்ஸ்.. சிவப்புக் கலர் முக்காச் சைக்கிள்ள நீ வருவ இல்ல.."
"ஆமால்ல"

இப்போ அவனுக்குள்ளயும் ஒரு லாலாலா மியூசிக் கேட்டு, வளையம் வளையமா ஃபிளாஷ்பாக் ஒப்பினாகி சீனுக்குள்ள போயிருப்பான். தொடர்ந்து ஃபீலிங்க்ஸ்லயே பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஐந்துநிமிடங்கள் கடக்கும். அதுவரைக்கும் இன்முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காதலியின் பார்வை இப்போது வன்முகமாக மாறுவது போலிருக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் கண்டுக்காமலே, 'மச்சி கார்த்திக் இப்ப எங்க?', 'டேய் ரமணன் அப்பவே போயிட்டான்ல?' பசங்களின் வழக்கப்படி லிங்க் பண்ணி லிங்க் பண்ணி பேசிக்கொண்டே போவார்கள். திடீரென்று ஓரிடத்தில ஸ்ட்ரக் ஆகி இப்போ எதுக்கு இந்தக் கதை வந்திச்சுன்னு யோசிக்கிறவரைக்கும்.

இப்போது காதலி கணிசமான அளவு கடுப்பாகியிருப்பார். தனியாகப் போனதும் காதலனுக்கு கண்டபடி திட்டு விழலாம். குட்டுக் கூட விழலாம். அது அவன் பிரச்சினை. ஆனால் இப்போ? லைட்டா எங்களப் பார்க்கிற பார்வையிலேயே அப்பிடியே மைண்ட் வொயிஸ் கிளியராக் கேட்கும்.

‘யார்ரா நீங்கெல்லாம்? எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க? இருந்திருந்து எப்பவாவது இப்பிடி ஒண்ணாச் சேர்ந்து வெளிக்கிட்டா சந்திக்குச் சந்தி நிண்டு தொலைக்கிறீங்க... உங்களுக்கெல்லாம் வாழ்க்கைல கேர்ள் ஃபிரண்டே கிடைக்க மாட்டாடா....காலம் முழுக்க மொட்டப் பசங்களாவே சந்தில நிப்பீங்கடா!’. நாங்களும் பழைய பாரதிராஜா படங்களில் வருவதுபோல, சின்னப்பையன் அறிவுபூர்வமாகக் கேள்விகேட்டதும் ஞானம் பிறந்து, மானசீகமாக கன்னத்தில் சப் சப்பென்று அறை வாங்கும் ஊர்ப்பெருசு போல போஸ் கொடுப்போம்.

இது எதையுமே கவனிக்காம பேசிட்டிருந்த நம்மாளுங்க ஒரு மாதிரியா நிகழ்காலத்துக்கு வந்து, 'மச்சி உன் நம்பர சொல்லுறா' சின்சியராக பரிமாறிக் கொள்வார்கள். அப்பதான் ஒரு சந்தேகம் வரும். உண்மையிலேயே சஞ்சய் அவனுக்கு ஃபோன் பண்ணுவானா? இல்ல அவன்தான் இவன் நம்பர வச்சிருப்பானா? கொஞ்ச தூரம் போனதும் அவன் காதலியே அந்த நம்பர கடுப்பில டிலீட் பண்ணிடுவாளா? ஆனா ஒண்ணு நம்மாளு புதுசா ஒரு நம்பர கலக்சன்ல சேர்த்துட்டான். அங்கதான் நிக்கிறான்.

ஆனால் சஞ்சய் தொலைபேசி இலக்கங்களை அப்படியே வைத்திருப்பான் என்பது நேற்றுத்தான் தெரிந்தது. அவன் ஒன்றரை வருடங்களாக லண்டனில் இருக்கிறானம். விடுமுறையில் வந்திருக்கிறான். இந்தமுறை வித்தியாசமாக பேசினான்,
"மச்சி எங்க இருக்கே?"

3 comments:

  1. மச்சி எங்க இருக்கே...?
    ரொம்ப நல்லாயிருந்தது.

    ReplyDelete
  2. :-) சில நண்பர்களுடைய எட்டு ஒன்பது நம்பர்கள்கூட போனில் வைத்திருக்கிறேன். Google Contacts sync இருப்பதால், நம்பரைத் தொலைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

    //‘யார்ரா நீங்கெல்லாம்? எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க? இருந்திருந்து எப்பவாவது இப்பிடி ஒண்ணாச் சேர்ந்து வெளிக்கிட்டா சந்திக்குச் சந்தி நிண்டு தொலைக்கிறீங்க... உங்களுக்கெல்லாம் வாழ்க்கைல கேர்ள் ஃபிரண்டே கிடைக்க மாட்டாடா....காலம் முழுக்க மொட்டப் பசங்களாவே சந்தில நிப்பீங்கடா!’.//

    பத்தினி சாபம் சும்மா விடாது பாஸ். பார்த்து நடந்துக்கங்க... :-)

    ReplyDelete
  3. வணக்கம்,ஜீ!///நலமா?//// சிரிப்புக்குப் பின்னர் வந்த சீரியஸ்னஸ்.......தேங்க்யூ,ஜீ!

    ReplyDelete