Thursday, March 13, 2014

தற்கொலை முனைப்பு!


‘தற்கொலைக்கான முடிவுகள் உணர்ச்சிவசப்பட்ட  அந்தக் கண நேரத்தில் சடுதியாக எடுக்கப்படுகின்றன’ என்கிற கருத்து என்னளவில் தகர்ந்து கொண்டே செல்கிறது. மிகச்சரியாகத் திட்டமிட்டு நிறைவேற்றப்படுகின்றன. சமயங்களில் அது பல நாட்களாகவும் இருக்கலாம். சில மரணங்கள் அதைத்தான் சொல்லியிருக்கின்றன. நான் பார்த்த, துயரத்தையுணர்ந்து கொண்ட என் பால்யகால நண்பன் சாரங்கனின் மரணமும்; அதைத்தான் சொன்னது. மிகத் தெளிவாகத் திட்டமிருந்தான்.

தற்கொலை மரணமொன்று கொடுக்கும் துயரத்தை, வலியை விட அதிகம் வலியைக் கொடுப்பது அதற்கான திட்டமிடல்களே. அதுவும், நெருங்கிய நண்பர்களின் வலி சொல்ல முடியாதது. “கடைசியாக என்னுடன் தானே சுற்றிக் கொண்டிருந்தான்? பேசிக்கொண்டிருந்தான்? அப்போதெல்லாம், இது குறித்த திட்டமிடலுடன் தான் இருந்திருக்கிறான்” என்னும் நினைப்பே பலநாள் நிம்மதியைத் தொலையச் செய்துவிடும். காரணமற்ற ஒரு குற்றவுணர்வையும் ஏற்படுத்தும். அநியாயமாக நண்பனைத் தொலைத்துவிட்ட வலி வாழ்நாள் முழுமைக்கும் தொடரும்.

தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் நண்பனாய் இருந்தவர்களுக்குத் தெரியும். “உன்கூடதானடா இருப்பான்?” “என்னடா பாத்துட்டிருந்தீங்க?” பார்வைகள் வார்த்தைகளின்றிய கேள்விகளாக மாறித் துளைத்தெடுக்கும். மரணித்தவன் உறவுகளின் பார்வையையை எதிர்கொள்ள முடியாமல், கண்களைத் தவிர்க்க வைக்கும். ஆனாலும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாங்களே, அதே கேள்விகளுடன் இன்னொருவனைப் பார்க்கிறோம்.

அகால மரணமடைந்தவனின், தற்கொலை செய்துகொண்டவனின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க நேரிடுவது கொடுமையானது. அது மட்டும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதோ என்கிற எண்ணத்தை கொடுக்கிறது. இடையிடையே அங்கே சென்று பார்த்துக் கொள்ளும் வழக்கம் எங்களில் யாருக்கேனும் இருக்கலாம். என்றோ ஒருநாள் அவர் அதில் நிலைத்தகவலிடுவார் என விபரீதமாக எமக்கே தெரியாமல் ஒரு மறைமுக எதிர்ப்பார்ப்பு ஆழ்மனதில் இருக்கிறதா?

இதனைத் தவிர்த்துக் கொள்ள இறந்து போனவரை எங்களில் யாரேனும் ஒருவர் நட்புப் பட்டியலிலிருந்து நீக்கியிருக்ககூடும். இப்போதுகூட யாரோ ஒருவர் அதனைச் செய்யக் கூடும். அது, இறந்து போனவரோடு விரோதம் பாராட்டுவது போலாகிவிடும் என்ற ஒரே காரணத்துக்காக அந்த யோசனையைக் கைவிட்டுமிருக்கலாம்.

தற்கொலை செய்து கொண்டவரின் ஃபேஸ்புக் பக்கம் சடுதியாக அதீத கவனத்தைப் பெற்றுக் கொள்கிறது. இறுதி நிலைத்தகவலை அறியத் தூண்டுகிறது. தற்கொலைக்கான அறிவிப்பை, திட்டமிடல்களை அந்த நிலைத்தகவல்களூடாக தெரிவித்திருப்பது மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்துவிடுகிறது. சமீபத்தில் என் நட்புப் பட்டியலிலில்லாத, அறிமுகமல்லாத ஒரு பெண்ணின் மிகக் கச்சிதமாகத் திட்டமிட்ட இறுதி நிலைத்தகவல் ஒருநாள் முழுவதும் மன உளைச்சலைக் கொடுத்தது. அது, ஒரேயொரு 'முற்றுப்புள்ளி' மட்டுமே!

அதுவே பின்னர், தற்கொலை கோழைத்தனமானது, முட்டாள்தனமானது என்கிற நிலைத்தகவல்களையிட்டு எங்களை வீரர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் காட்டிக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. என்றோ ஒருநாள் அதே நிலையில் நாமும் இருந்திருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிட்டு!

தற்கொலை முனைப்புக்கு பெரிதாகக் காரணங்கள் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட எண்ணம். நம் இருப்புக்கு எந்தக் காரணமோ, அவசியமோ இல்லை என்பதே போதுமானது.  நம்மீது திணிக்கப்பட்ட தனிமையுணர்வு, எதிலுமே ஈடுபாடற்ற வெறுமை போதும். சமயங்களில் நாம் விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட, எமக்கு வரமாகத் தோன்றிய தனிமை கூட!

தற்கொலை முனைப்பில் சிலர் கட்டுண்டு போகிறார்கள். ஏராளமானோர் கடந்து செல்கிறார்கள். இதைவிட இன்னொரு வழியும் இருக்கிறது, கடத்தி விடுவது! எமக்குத் தோன்றும் தற்கொலை செய்துகொள்ளும் உணர்வை அப்படியே மற்றவர்களிடம் கடத்தி விடுவது. இன்னொருவரைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுவது குற்றமெனினும், எல்லோருமே அப்படி யோசித்தால் அதுவே சிறந்த வழி.

மூன்று வருடங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொள்ள சகல தகுதிகளும் கொண்டவனாக என்னை உணர்ந்து கொண்டபோது, நான் மற்றவர்களிடம் கடத்தி விடுவதைத்தான் சிந்தித்தேன். சிந்தித்தது மட்டுமன்றி செயற்படுத்தவும் ஆரம்பித்தேன். உடனேயே இந்தத் தளத்தை திறந்து எழுத ஆரம்பித்துவிட்டேன்…!!

Tuesday, March 4, 2014

நோயுற்ற நாளின் பகற்பொழுது!

இன்றைய எனக்கான காலை எட்டு மணிக்குப் புலர்ந்தது. நோயுற்ற நாளொன்றின் பகற்பொழுதுகள் சுற்றிலும் புதிதாக உணரச் செய்கின்றன. தூரத்தில் ஏதேதோ பறவைகளின் சத்தம் கேட்கிறது. இதுநாள்வரை கவனிக்கவில்லையே? இங்கே பறவைகள் எல்லாம் இருக்கின்றனவா? நான்கைந்து வீடுகள் தாண்டி எங்கோ சிறுவர்கள் விளையாடும் சந்தோஷக் கூச்சல். அவ்வப்போது தெருநாய்களின் குரைப்பு. எப்போதும்போல வாகன இரைச்சல். மின்விசிறியின் சத்தம். சரியாக மூடப்படாத குழாயில் நீர் சொட்டும் ஓசை. இதோ ரயிலொன்று ஹோர்ன் ஒலியுடன் புறப்படுகிறது. காய்கறி வண்டிக்காரனின் குரல் தெருமுனையில் கேட்கிறது.

நோயுற்ற நாளொன்றின் பகற்பொழுதுகள் எனக்கும் புத்தகங்களுக்குமான இடைவெளியைச் சுருங்கச் செய்திருக்கின்றன. ஏராளமான புத்தகங்களை நான் வாசித்தது அந்தப் பகற்பொழுதுகளிலும் என் பள்ளிக் காலத்தின் விடுமுறை நாட்களிலும்தான். என் நினைவு தெரிந்து முதல் நோய்வாய்ப்பட பொழுது கிறீம் கிரேக்கர் பிஸ்கெட்டும், நெஸ்டோமோல்டோடும் கரைந்து போன பொழுதுகளில் மாறுதலளிக்க சில புத்தகங்களும். அன்றைய ஒருநாளின் மாலைப் பொழுதில்தான் முதன்முதலாக 'வேங்கையின் மைந்தன்' என்ற புத்தகத்தைப் பார்த்தேன். ஒடுக்கமாக, நீளமாக, தடித்த அந்தப் புத்தகத்தில் படங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். கோகுலத்தை மட்டுமே எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டிருந்த வயது அது.

உடல்நிலை தேறியதும் செய்யப்போகும் காரியங்கள் பற்றி மனம் மட்டும் உற்சாகமாகத் திட்டமிட்டுக் கொள்கிறது. அதுவரை கவனிக்காமல், அக்கறையில்லாமல் உட்கொண்ட அன்றாட உணவு வகைகளின் மேல் உணவின் மீதான ஆர்வம் புதிதாக அப்போதுதான் ஏற்படுகிறது. உதட்டின் வெடிப்புகளோடும், வாய்க் கசப்போடும் சப்புக் கொட்டிக் கொள்கிறது, வருத்தம் மாறிய பிறகு அருந்தப்போகின்ற அந்த முதற்சாப்பாடு பற்றிய மனதின் எதிர்ப்பார்ப்பு. இந்தமுறை மறந்துவிடாமல் அதன் சுவையை முழுமையாக ரசித்து உள்வாங்கிவிடவேண்டும் தீர்மானம் போட்டுக் கொள்ளும். ஆனாலும் பின்னர் வழமை போலவே கவனிக்கப்படாமல் கடந்து போய்விடும்.

வெம்மையும், அயர்ச்சியும் நிறைந்த அந்தப் பொழுதுகளில் பள்ளிக்கு விடுமுறை பொட்டுவிட்டு மெக்சிக்கோவின் பாலைவனத்திலும், டெக்சாஸ் மாநிலத்தின் வீதிகளிலும் குதிரைகளின் கனைப்பொலியுடன், குளம்புகள் புழுதி கிளப்ப, தொப்பியணிந்து, வின்செஸ்டர் துப்பாக்கியும் ஏந்தியவாறு பயணித்துக் கொண்டிருந்தேன்.  பின்நாளில் சிலவருடங்களுக்கு முன்புவரை மொஸ்கோவின் பனிச்சாரல்களில், முழங்கால்வரை காலணிகளும், கம்பளித் தொப்பியும், நீண்ட குளிர்தடுப்பு அங்கியும் தரித்தவாறு  சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். இரண்டு ஆண்டுக்கு முன் ஒரு நோய்ப்போழுதில் 'சூதாடி' அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் 'கசாக்குகள்'. அதற்கும் முன்பொருமுறை 'புத்துயிர்ப்பு' இப்போது 'போரும் அமைதியும்' கையில் எடுக்கலாமா என யோசித்து அவ்வளவு நாட்கள் தங்காது, தாங்காது என வழக்கம்போலக் கைவிடுகிறேன்.

ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள் வேண்டாமென்றே முடிவெடுத்துவிட்டேன். சமயத்தில் அவ்வளவு படுத்திவிடுகின்றன ஒரு வழி பண்ணிவிடும் முடிவில் எழுதப்பட்ட அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதைக்கடந்து படிக்கும்போது நன்றாயிருந்திருக்கின்றன என்பது உண்மை. ஆனாலும் வர்ணனைகள்? புததாகப் படிக்கும் ஒருவர் காலையில் சூரியன் உதிப்பதற்கான வர்ணனைகளை காலை ஆறுமணிக்கு வாசிக்கத் தொடங்கினால் அந்தச் சூரியன் உதிப்பதற்குள் நம் சூரியன் உச்சிக்கு வந்துவிடலாம். சில புத்தகங்கள் ஒரே வாரகாலத்தில் பலவருடங்கள் நிகழும் கதையைப் படித்து கூட வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கின்றன. மாறாக ஒருவாரம் நிகழும் கதையைப் படிப்பதற்கே மாதக்கணக்கில் உழைத்த சலிப்பை ஏன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்? அதுவும் உடல் நிலை சரியில்லாத பொழுதில்.

மேலும் இன்றைய பகலில் நான் தூங்கி விடக் கூடாது. நேற்றைய இரவின் தூக்கமின்மை இன்னும் கண்களில் கனக்கிறது. எரிகிறது. நான் தேர்ந்தெடுக்கும் ஒரு புத்தகம் முதல் இரண்டு பக்கத்திலேயே தூங்க வைத்துவிடக் கூடாது. நோயுற்ற நாளொன்றின் இரவுப் பொழுதுகள் கொடியவை. கொடுமையானவை. இரக்கமில்லாமல் வளர்ந்து செல்பவை. முழு இரை கொண்ட மலைப்பாம்பு போல நகர மறுத்து முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்பவை. தூக்கம் பிடிக்காமல் உடலும் மனமும் உழன்று கொண்டிருக்கும். மிகுந்த பிரயத்தனத்துடன் தூங்கினாலும் துரத்தும் கொடுங்கனவுகள் நடுநிசியில் தூக்கம் கலைத்துவிடுகின்றன. இனம்புரியாத பயத்தைக் கொடுத்துவிடுகின்றன. ஆக, இன்றைய இரவை நான் தூங்கியே கடந்தாக வேண்டும்.

இன்றைய பகலில் தூக்கத்தை விரட்டியடித்துவிட நான் தேர்ந்தெடுக்கும் புத்தகம் ஒரு வேளை இன்றிரவுத் தூக்கத்தையும் தொலைத்திடச் செய்துவிடலாம்! வேறுசில இரவுகளிலும் கூட! எனினும் கையிலெடுக்கிறேன், யோ. கர்ணனின் 'கொலம்பஸின் வரைபடங்களை!'