Friday, June 27, 2014

எர்வா மார்டின், கேர்ண், இன்டுலேகா ; பல்பு!

"அண்ணே உங்களுக்கு முடி ஓவராக்கொட்டுது. இப்பிடியா விட்டா நல்லதில்ல. மிஷின் போட்டு ஒட்ட அடிப்பமா?"
அடிக்கிற வெயிலுக்கு நன்றாயிருக்கும் என்பதால் சம்மதித்தேன்.

முடிந்ததும் 'அவ்வளவு மோசமாக இல்லை' என நம்பிக் கொண்டு வீடு திரும்பினேன். வழியில் ஓரிருவர் விநோதமாகப் பார்த்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் வழமையாக வீதியில் என்னைக் கடந்துசெல்லும் பெண்மணி ஒருவர் பார்த்ததும் சிரிப்பை மிகுந்த பிரயத்தனத்துடன் அடக்கிக் கொண்டு சென்றார். அதுதான் உறுத்தியது.

வீட்டில், அக்காவின் ஒருவயது மகள் வைத்த கண் வாங்காமல் அதிர்ச்சியா, பயமா, ஆச்சரியமா? இன்னதென்று தெரியாத ஒரு பார்வை பார்த்தது. 'இப்பிடியும் மனுஷர் இருக்கிறாங்களா?'

பாத்ரூம் கண்ணாடியில் பார்த்தபோது, வழக்கம்போல சலூன் கண்ணாடி ஏமாற்றிவிட்டது தெரிந்தது. லயன் காமிக்ஸ் ஸ்பைடர் மாதிரி இருந்தேன். மறுநாளிலிருந்து குட்டீஸின் பார்வை ஆச்சரியத்திலிருந்து விடுபட்டுவிட்டது. என்னைப் பார்க்கும்போதெல்லாம் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தது.

இரண்டுவாரம் கழித்து, கொஞ்சம் பரவாயில்லாமல் அல்லது பழகிப் போய் இருந்தது. சலூனுக்கு ஷேவிங்குக்கு சென்றேன்.
கடை உரிமையாள நண்பர் கேட்டார் "என்ன பாஸ் இது? யார் உங்களுக்கு இப்பிடி வெட்டினது?"
"அது ரெண்டு கிழமையாச்சு பாஸ்.... இப்பப்போய் அதிர்ச்சி அடையுறீங்க?"
"இப்பவே இப்பிடி இருக்குன்னா... அப்ப எப்பிடி இருந்திருக்கும்?"
"விடுங்க பாஸ்"
"ஹி ஹி சொல்றனேன்னு தப்பா எடுக்காதீங்க... ஹி ஹி இப்பிடி சொல்லக்கூடாது..."
"என்னய்யா? ஹொஸ்பிட்டல்ல இருந்து தப்பி ஓடிவந்த மாதிரி இருக்கா?"
"ஹி ஹி ஆமா"
நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அவர் எதை நினைத்தாரோ. 'எங்கே செல்லும் இந்தப்பாதை' பாடல்வேறு அந்த அநேரத்தில் டீவியில் போய்க்கொண்டிருந்தது.


மூன்று வருஷத்துக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த நண்பன் ஏராளமான கோத்ரேஜ் ஹெயார் டை பெட்டிகளை வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தான்.

"ஏண்டா இது? உனக்கு நரை இல்லையே"

"எனக்கில்லடா... இது நரைக்கில்ல..  இது பாவிச்சா முடி வளருதாம் அதான் நிறையப் பேர் வாங்கிட்டு வரச்சொன்னங்க"
"உண்மையாவா?"

"அப்பிடித்தாண்டா சொல்றாங்க யாரோ கண்டுபிடிச்சிட்டாங்க இப்ப எங்கட சனம் நம்பி வாங்குது ...மச்சி மண்ணெண்ணைல பைக் ஓடலாம்னு கண்டு பிடிச்சதிலருந்து நம்மாளுங்க கண்டுபிடிப்பு அலப்பரை தாங்க முடியலடா!"


மேசன் காட்டில் கண்டெடுத்த அரிய மூலிகையில் செய்த தலைமுடித் தைலத்தை ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்திய அண்ணன் ஒருவர் சொன்னார்,

"நல்லா இருக்கு ஜீ இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது"
எனக்கும் தெரிந்தது பார்க்கும்போதே முடி கிசுகிசுவென வளர்ந்தது, டீ.வி.விளம்பரத்தில்.

சிரித்து வைத்தேன். நம்பிக்கைதானே வாழ்க்கை?
"வைங்கண்ணே உங்களுக்குத்தான் வயசே தெரியலயே..இன்னும் ரெண்டு செட்டாகும் பாருங்க!"அண்ணி காதில் விழும்படியாக நம்பிக்கை வார்த்தை  சொல்லிவைத்தேன். ஏதோ நம்மால் முடிந்தது.


"இது யார் பாவிக்கிறது?"

வாங்கி பலமாதமாகிவிட்ட, வெற்றிகரமாக இரண்டுமுறை மட்டும் என் தலைக்கு வைக்கப்பட்ட எண்ணெய்ப் போத்தல் பெட்டி முழுவதும் தூசி படர்ந்திருந்தது. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் என்கிற உத்தரவாதத்தில், அல்லது புதிதாகவும் முளைக்கக்கூடும் என்கிற மிகுகற்பனையின் பேரில் பலராலும் பாவிக்கப்பட்ட/படும் Kern  என்கிற ஜெர்மன் தயாரிப்பு எண்ணெய்.

என்வழக்கப்படி இரண்டு நாட்கள் உபயோகித்து பலன் தெரியவில்லையாதலால் 'இது ஆவுறதில்லை' எனக் கைவிட்டிருந்தேன்.

"நான்தான் அப்போ பாவிச்சது" அசடு வழிந்தேன்.
"நானும் பாவிச்சனான்"

அவர் தலையைப் பார்த்தேன். நன்கு துடைக்கப்பட தோசைக்கல் போல பளபளவென்று ஒரு மாசு மயி.. மன்னிக்கவும் மறு இல்லாமல். முடி உதிர்வது எப்போதோ சுத்தமாக நின்று போயிருந்தது!

"நான் ஏலெவல் படிக்கேக்க இருந்து யூனிவெர்சிட்டி முடிக்கும் வரைக்கும் பாவிச்சேன்"
"அப்பவே வந்திட்டுதா?" - அடப்பாவீங்களா? புதுசுன்னு சொன்னீங்களேடா! சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி வாங்க வைத்த என் வழமையான சிகையலங்கார நிபுணர் மனசுக்குள் வந்துபோனார்.

"எவ்வளவு காலம் எண்டு பாரும். எவ்வளவு காசு. இதெல்லாம் பொய்" என்றார்.
"உண்மைதான் இப்ப நம்புறேன்" உறுதியாகச் சொன்னேன்.

"இதுபற்றி ஒரு தியரம்  இருக்கு தெரியுமா?"

அய்யய்யே ஆரம்பிச்சுட்டாங்கப்பா! இந்தக் கன்சல்டண்டுகளுக்கே ஒரு கெட்ட பழக்கம். எப்போதும் துறை சார்ந்தே சிந்திப்பார்களாம். சிலர் சோறு, கறி, குழம்பைக்கூட வேளையைப் பொறுத்து 6:3:1, 4:2:1 என வேறுவேறு கலவைகளில் குழைத்துத்தான் சாப்பிடுவர் என்றால் பாருங்கள். இந்த என்ஜினியரிங் வெறி காரணமாக சமயங்களில் நிம்மதியாகச் சாப்பிடக் கூட முடியாது. இந்த உரையாடல்கூட டைனிங் டேபிளில்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. துயரம் இப்போது தியரம் வடிவில் வந்தது.

"உடம்பில இருக்கிற மொத்த முடிகளின் எண்ணிக்கை மாறாது. ஓரிடத்தில கொட்டினா இன்னோரிடத்தில முளைக்கும்" சொன்னார்.
"அப்பிடியா நான் கேள்விப்பட்டதே இல்லை"

அவரைப் பார்த்தால் நம்பலாம் எனத் தோன்றியது. தலையை மட்டும் ஷேவ் செய்த பெரிய சைஸ் கரடிக்குட்டி போல இருந்தார். ஆனால், அவர் நேரத்தைப் பாருங்கள். சரியாக இன்னொரு கன்சல்டண்ட் அங்கிள் குளித்துவிட்டு இடுப்பில் டவலைக் கட்டிக் கொண்டு எங்களைக் கடந்து போனார். அவரைக் கண்ணைக் காட்டினேன். அவர் தலையில் சுத்தமாக ஒன்றுமில்லை. கைகளில், நெஞ்சில் கண்ணுக்கெட்டிய எல்லாப்பகுதியும் ஒரு முடியும் இல்லை.

"இப்ப சொல்லுங்க உங்க தியரம் பொய்ன்னு ஒத்துக் கொள்றீங்களா? இல்ல வேறமாதிரி ப்ரூஃப் பண்ணுற ஐடியா..."

அதற்குப் பிறகு அவர் என்னுடன் பேசவில்லை.
'அடப்பாவீங்களா முடியலன்ன முடியலன்னு ஒத்துக்கணும்.. அதென்ன சின்னப்புள்ளத்தனமா பேசாம இருக்கிறது?'


"பா
ஸ் இன்டுலேகா வச்சுப் பாருங்க.. நிறையப் பேருக்கு முளைச்சிருக்கு" - நேற்று நம் சலூன் நண்பர்.
"ஆள விடுங்க பாஸ்"
"சரி விடுங்க...உங்களுக்கு எப்ப பாஸ் கல்யாணம்?"
"ஏன்யா.. எதுக்கு.. திடீர்னு?"
"இல்ல பக்கத்தில லேடீஸ் சலூன் ஒப்பன் பண்ணியிருக்கோம்..பாத்தீங்களா?"
"யோவ்...அதுக்கு....? நல்லா வருவீங்கய்யா"

5 comments:

  1. //துயரம் இப்போது தியரம் வடிவில் வந்தது.//
    //தலையை மட்டும் ஷேவ் செய்த பெரிய சைஸ் கரடிக்குட்டி போல இருந்தார்.//

    ROFL.... சிரிச்சு முடியல....

    ReplyDelete
  2. ஹீ ஹீ, ஒரு சீனியரின் அனுபவம் கீழே.....

    http://www.ssakthivel.com/2011/05/blog-post.html

    ReplyDelete
  3. கேர்ண், இது ஜேர்மேனியில் செந்வது என்பதே பொய் போல் உள்ளது.

    ReplyDelete
  4. வணக்கம்,ஜீ!நலமா?///துவங்கியதிலிருந்து ஆரம்பித்த கெக்கே,பிக்கே வாசித்து முடிந்தும் தொடர்கிறது!(நமக்கு 'உச்சி'யில்..........ஆரம்பித்திருக்கிறது,ஹி!ஹி!!ஹீ!!!)

    ReplyDelete
  5. இப்பமே முடி கொட்டுதா ? அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete