Tuesday, March 4, 2014

நோயுற்ற நாளின் பகற்பொழுது!

இன்றைய எனக்கான காலை எட்டு மணிக்குப் புலர்ந்தது. நோயுற்ற நாளொன்றின் பகற்பொழுதுகள் சுற்றிலும் புதிதாக உணரச் செய்கின்றன. தூரத்தில் ஏதேதோ பறவைகளின் சத்தம் கேட்கிறது. இதுநாள்வரை கவனிக்கவில்லையே? இங்கே பறவைகள் எல்லாம் இருக்கின்றனவா? நான்கைந்து வீடுகள் தாண்டி எங்கோ சிறுவர்கள் விளையாடும் சந்தோஷக் கூச்சல். அவ்வப்போது தெருநாய்களின் குரைப்பு. எப்போதும்போல வாகன இரைச்சல். மின்விசிறியின் சத்தம். சரியாக மூடப்படாத குழாயில் நீர் சொட்டும் ஓசை. இதோ ரயிலொன்று ஹோர்ன் ஒலியுடன் புறப்படுகிறது. காய்கறி வண்டிக்காரனின் குரல் தெருமுனையில் கேட்கிறது.

நோயுற்ற நாளொன்றின் பகற்பொழுதுகள் எனக்கும் புத்தகங்களுக்குமான இடைவெளியைச் சுருங்கச் செய்திருக்கின்றன. ஏராளமான புத்தகங்களை நான் வாசித்தது அந்தப் பகற்பொழுதுகளிலும் என் பள்ளிக் காலத்தின் விடுமுறை நாட்களிலும்தான். என் நினைவு தெரிந்து முதல் நோய்வாய்ப்பட பொழுது கிறீம் கிரேக்கர் பிஸ்கெட்டும், நெஸ்டோமோல்டோடும் கரைந்து போன பொழுதுகளில் மாறுதலளிக்க சில புத்தகங்களும். அன்றைய ஒருநாளின் மாலைப் பொழுதில்தான் முதன்முதலாக 'வேங்கையின் மைந்தன்' என்ற புத்தகத்தைப் பார்த்தேன். ஒடுக்கமாக, நீளமாக, தடித்த அந்தப் புத்தகத்தில் படங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். கோகுலத்தை மட்டுமே எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டிருந்த வயது அது.

உடல்நிலை தேறியதும் செய்யப்போகும் காரியங்கள் பற்றி மனம் மட்டும் உற்சாகமாகத் திட்டமிட்டுக் கொள்கிறது. அதுவரை கவனிக்காமல், அக்கறையில்லாமல் உட்கொண்ட அன்றாட உணவு வகைகளின் மேல் உணவின் மீதான ஆர்வம் புதிதாக அப்போதுதான் ஏற்படுகிறது. உதட்டின் வெடிப்புகளோடும், வாய்க் கசப்போடும் சப்புக் கொட்டிக் கொள்கிறது, வருத்தம் மாறிய பிறகு அருந்தப்போகின்ற அந்த முதற்சாப்பாடு பற்றிய மனதின் எதிர்ப்பார்ப்பு. இந்தமுறை மறந்துவிடாமல் அதன் சுவையை முழுமையாக ரசித்து உள்வாங்கிவிடவேண்டும் தீர்மானம் போட்டுக் கொள்ளும். ஆனாலும் பின்னர் வழமை போலவே கவனிக்கப்படாமல் கடந்து போய்விடும்.

வெம்மையும், அயர்ச்சியும் நிறைந்த அந்தப் பொழுதுகளில் பள்ளிக்கு விடுமுறை பொட்டுவிட்டு மெக்சிக்கோவின் பாலைவனத்திலும், டெக்சாஸ் மாநிலத்தின் வீதிகளிலும் குதிரைகளின் கனைப்பொலியுடன், குளம்புகள் புழுதி கிளப்ப, தொப்பியணிந்து, வின்செஸ்டர் துப்பாக்கியும் ஏந்தியவாறு பயணித்துக் கொண்டிருந்தேன்.  பின்நாளில் சிலவருடங்களுக்கு முன்புவரை மொஸ்கோவின் பனிச்சாரல்களில், முழங்கால்வரை காலணிகளும், கம்பளித் தொப்பியும், நீண்ட குளிர்தடுப்பு அங்கியும் தரித்தவாறு  சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். இரண்டு ஆண்டுக்கு முன் ஒரு நோய்ப்போழுதில் 'சூதாடி' அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் 'கசாக்குகள்'. அதற்கும் முன்பொருமுறை 'புத்துயிர்ப்பு' இப்போது 'போரும் அமைதியும்' கையில் எடுக்கலாமா என யோசித்து அவ்வளவு நாட்கள் தங்காது, தாங்காது என வழக்கம்போலக் கைவிடுகிறேன்.

ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள் வேண்டாமென்றே முடிவெடுத்துவிட்டேன். சமயத்தில் அவ்வளவு படுத்திவிடுகின்றன ஒரு வழி பண்ணிவிடும் முடிவில் எழுதப்பட்ட அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதைக்கடந்து படிக்கும்போது நன்றாயிருந்திருக்கின்றன என்பது உண்மை. ஆனாலும் வர்ணனைகள்? புததாகப் படிக்கும் ஒருவர் காலையில் சூரியன் உதிப்பதற்கான வர்ணனைகளை காலை ஆறுமணிக்கு வாசிக்கத் தொடங்கினால் அந்தச் சூரியன் உதிப்பதற்குள் நம் சூரியன் உச்சிக்கு வந்துவிடலாம். சில புத்தகங்கள் ஒரே வாரகாலத்தில் பலவருடங்கள் நிகழும் கதையைப் படித்து கூட வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கின்றன. மாறாக ஒருவாரம் நிகழும் கதையைப் படிப்பதற்கே மாதக்கணக்கில் உழைத்த சலிப்பை ஏன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்? அதுவும் உடல் நிலை சரியில்லாத பொழுதில்.

மேலும் இன்றைய பகலில் நான் தூங்கி விடக் கூடாது. நேற்றைய இரவின் தூக்கமின்மை இன்னும் கண்களில் கனக்கிறது. எரிகிறது. நான் தேர்ந்தெடுக்கும் ஒரு புத்தகம் முதல் இரண்டு பக்கத்திலேயே தூங்க வைத்துவிடக் கூடாது. நோயுற்ற நாளொன்றின் இரவுப் பொழுதுகள் கொடியவை. கொடுமையானவை. இரக்கமில்லாமல் வளர்ந்து செல்பவை. முழு இரை கொண்ட மலைப்பாம்பு போல நகர மறுத்து முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்பவை. தூக்கம் பிடிக்காமல் உடலும் மனமும் உழன்று கொண்டிருக்கும். மிகுந்த பிரயத்தனத்துடன் தூங்கினாலும் துரத்தும் கொடுங்கனவுகள் நடுநிசியில் தூக்கம் கலைத்துவிடுகின்றன. இனம்புரியாத பயத்தைக் கொடுத்துவிடுகின்றன. ஆக, இன்றைய இரவை நான் தூங்கியே கடந்தாக வேண்டும்.

இன்றைய பகலில் தூக்கத்தை விரட்டியடித்துவிட நான் தேர்ந்தெடுக்கும் புத்தகம் ஒரு வேளை இன்றிரவுத் தூக்கத்தையும் தொலைத்திடச் செய்துவிடலாம்! வேறுசில இரவுகளிலும் கூட! எனினும் கையிலெடுக்கிறேன், யோ. கர்ணனின் 'கொலம்பஸின் வரைபடங்களை!'

9 comments:

  1. மொழிப் பெயர்ப்பு நாவல்கள் பெரும்பாலும் சுவாரசியமாக இருப்பதில்லைதான் !
    த . ம 1

    ReplyDelete
  2. மிகவும் நுண்ணிய அவதானிப்புடன் கூடிய எழுத்து. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போதே இப்படி என்றால்...கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கலாய்க்காதீங்கண்ணே.. காய்ச்சல் கொடுமைல கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டுதுபோல! :-)

      Delete
  3. நுண்ணிய எழுத்துகள் ஆச்சர்யமாக இருக்கிறது ம்ம்ம்ம் அசத்தல் மக்கா !

    ReplyDelete
    Replies
    1. ஏன் பாஸ் ஏன்? இப்ப என்ன நடந்து போச்சு ஆளாளுக்கு இப்பிடி? :-))

      Delete
  4. அருமை!எதுகை,மோனை யுடன் அற்புதமான எழுத்து.கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பது சரி தான் போலிருக்கிறது!என்ன ஒரு ஆளுமை?கவியரசருக்குப் பின்னர் "ஜீ" தான்!

    ReplyDelete
    Replies
    1. புரியுது ..புரியுது! :-))
      விடுங்க பாஸ் ரெண்டு மூணு நாள்ல சரியாயிடும்.....அப்புறம் உளற மாட்டேன்! ;-)

      Delete
  5. காய்ச்சல் மிக நல்லது,சிறந்த சிறுகதை படித்த உணர்வு,நன்றி!

    ReplyDelete
  6. // இந்தமுறை மறந்துவிடாமல் அதன் சுவையை முழுமையாக ரசித்து உள்வாங்கிவிடவேண்டும் தீர்மானம் போட்டுக் கொள்ளும். ஆனாலும் பின்னர் வழமை போலவே கவனிக்கப்படாமல் கடந்து போய்விடும்// same feel :)

    ReplyDelete