Friday, December 19, 2014

மச்சான் (2008)



ஜெர்மனியின் Bavaria நகரில் நடைபெறும் 2004 ஆம் ஆண்டுக்கான Hand Ball Tournament இல் ஜேர்மனியும் இலங்கையும் மோதிக் கொள்ளும் போட்டி ஆரம்பமாகிறது. முற்றிலும் வித்தியாசமான போட்டி அது. இலங்கை அணி புதிதாகத் திகைத்து நின்று வேடிக்கை மட்டும் பார்த்துகொண்டிருக்க, ஜெர்மனி விளையாடி வென்றுவிடுகிறது. ஏதோ சந்தேகம் தோன்ற, ஜெர்மன் போட்டி அமைப்பாளர்கள், இலங்கை ஒலிம்பிக் கமிட்டியிடம் விசாரிக்கிறார்கள். கமிட்டியின் பதில், இலங்கையில் Hand Ball டீம் என்ற ஒன்றே கிடையாது. தவிர, Hand Ball விளையாட்டுக்கென்று ஒரு கழகம் கூட நம்நாட்டில் கிடையாது'.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இத்தாலிய இயக்குனர் Uberto Pasolini இயக்கிய படம் சிங்களத் திரைப்படம் 'மச்சான்'

அதிகாலைப்பொழுது. ஆளரவமற்ற கொழும்பு நகரப்பகுதி. மனோஜ், ஸ்டான்லி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அருகில் கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் இன்னொரு நண்பன் விஜித். அவன்மூலம் கிடைத்த பகுதிநேர வேலை அது. மனோஜ் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பரிசாரகனாக வேலை பார்க்கிறான். அவனை நம்பியிருக்கும் குடும்பம், படிக்கும் தம்பிகள், தங்கைகளுக்காக மேலதிகமாக இந்த வேலை. ஸ்டான்லி வீதியில் தோடம்பழம் விற்பது தொடக்கம் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்கிறான். கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் வந்திருக்கும் அக்கா, வயதான இரு பாட்டிகள், பள்ளிக்குப் போகாமல் சொல்பேச்சுக் கேட்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் சின்ன வயதுத்தம்பி என்று ஏராளம் பிரச்சினைகளுடன் வாழ்பவன். மேலதிகமாக படகில் வெளிநாடு செல்வதற்காக அக்காவின் கணவர் சுரேஷிடம் பணம்பெற்று முகவரிடம் மூன்றுலட்சம் கொடுத்துவிட்டு அவருக்கு ஒழித்துத் திரிகிறான்.

காலை ஜெர்மன் தூதரகத்திற்கு செல்வதுபற்றிப் பேசுகிறார்கள். வேலைக்காக ஜெர்மனி செல்வதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் மனோஜ், ஸ்டான்லி. விஜித்திற்கு அந்த யோசனையில் உடன்பாடில்லை. அது சாத்தியமில்லை என்கிறான். "வெளிநாட்டவருக்கு நம் நாட்டிலிருந்து மருத்துவர்கள், தாதிகள்தான் வேண்டும். எங்களைப் போன்றவர்களல்ல" என்கிறான். மனோஜ் சொல்கிறான், "நல்ல நாடு, நல்ல மக்கள். வேலை வாய்ப்புகள் அதிகம். நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்" என்கிறான்.

"என்ன இருந்தாலும் அங்கே நாங்கள் அங்கே இண்டாம்தரப் பிரஜைகள்தானே?" - விஜித்.
ஸ்டான்லி தன் அழுக்கான பழைய டி ஷர்ட், காற்சட்டையைக்காட்டி, "பார் இங்க மட்டும் நாங்கள் என்ன முதல் தரப் பிரஜைகளாகவா வாழ்கிறோம்?" - நண்பர்கள் மூவரும் சிரித்துக் கொள்கிறார்கள்.

ஜெர்மன் தூதரகத்தில் மனோஜும் ஸ்டான்லியும் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லியின் சட்டைப்பையிலிருந்த பேனா மை கசிந்து, இதற்காகவே அவன் வாங்கியிருந்த புதுச் சட்டையில் ஊறியிருப்பதைக் கவனிக்கிறார்கள். அதேநேரம் அவர்கள் பெயர் அழைக்கப்பட, அவசர அவசரமாக அங்கிருந்த ஒரு பேப்பரால் துடைத்து விடுகிறான் மனோஜ்.

அதிகாரி கேட்கிறார், "நீங்கள் அரசியல் ஜெர்மனியில் தஞ்சம் கோருகிறீர்களா?"
"இல்லை நாங்கள் உங்கள் கருணையை எதிர்பார்க்கவில்லை. அங்கு சென்று உழைக்கவே விரும்புகிறோம்"
விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஆயாசமாக வெளியே செல்லும்போது மனோஜ் இயலாமையுடன், ஏமாற்றமுமாக "எங்களைப் போன்றோருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துதவ மாட்டீர்களா?" என்கிறான்.
வீடு வரும் ஸ்டான்லியைப் பார்த்துவிட்டு அவன் அக்கா கேட்கிறாள், "இப்போ இருக்கிற நிலைமையில் உனக்குப் புதுச்சட்டை அவசியம்தானா?"

மாலைநேரம். கடற்கரையில் மனோஜும், ஸ்டான்லியும் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லிக்கு சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தேடும் மனோஜ், காற்சட்டைப் பையிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துப் போடுகிறான். அப்போது ஜெர்மன் தூதரகத்தில் ஸ்டான்லியின் சட்டை மைக்கறையைத் துடைத்த பேப்பர் இருக்கிறது. எடுத்துப் பார்க்கிறான் ஸ்டான்லி. அது ஒரு விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பு அறிவித்தல். Handball tournament 2004 - Bavaria என்றிருக்கிறது.



Handball அது என்ன விளையாட்டு? அப்படியொன்றை அவர்கள் அதுவரை கேள்விப்பட்டிருக்கவில்லை. சற்றுத் தொலைவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை. புதிதாக இருக்கிறது.

ஸ்டான்லி கேட்கிறான், "நாங்கள் போலியாக ஒரு handball டீம் அமைத்து ஏன் ஜெர்மனி செல்லக் கூடாது?"
"ஆனால் எங்களுக்கு அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாதே!". வெளிநாட்டு நண்பிகள் அதிகம் கொண்ட இன்னொரு நண்பனான பியலிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிவு செய்கிறார்கள். அவன் மனோஜ் பணிபுரியும் ஹோட்டலிலேயே கிகிளோவாக இருப்பவன்.

ஸ்டான்லி, மனோஜ், பியல், விஜித் நால்வரும் கடற்கரையில் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லி சொல்கிறான், "சிம்பிள் நாங்கள் ஜெர்மன் விளையாட்டுத்துறைக்கு கடிதம் அனுப்புகிறோம். அவர்கள் அழைப்புக் கடிதம் அனுப்புவார்கள். விசா கிடைத்துவிடும்". விஜித் மட்டும் அதெல்லாம் சாத்தியமில்லை என்பதுபோல் சிரித்துக் கொண்டே மறுக்கிறான்.

சரி விளையாட்டுக் குழுவிற்கு என்ன பெயர் வைப்பது? "மட்டக்குளி எருமைகள்' (mattakkuli  Buffaloes) என்று வைக்கலாமா?" என்கிறான் ஸ்டான்லி. "இலங்கையில்தான் handball என்பதே கிடையாதே. Srilanka National Hand Ball Team என்று வைத்துவிடலாம்" மனோஜ் சொல்ல, அப்படியே முடிவாகிறது.

ஜெர்மன் விளையாட்டுத்துறையிடமிருந்து பியலுக்குத் தொலை பேசி அழைப்பு வருகிறது. சீருடையுடன், முகாமையாளர், மருத்துவர் உள்ளிட்ட 'டீம்' புகைப்படம் அனுப்புச் சொல்கிறார்கள். பரபரப்பாகிறார்கள் நண்பர்கள். ஸ்டான்லி தனது தம்பியுன் உதவியுடன் பேரம்பேசி, வீதியோர நடைபாதைக் கடையொன்றில் இலங்கை கிரிக்கட் சீருடையை ஒத்த டி ஷர்ட்டுகள் தெரிவுசெய்து வாங்குகிறான். Srilanka National Hand Ball Team எனப் பெயர் பொறித்து சீருடைகள் இப்போது தயார்.

ஸ்டான்லி தனது பணத்தேவைக்காக முகவர் றுவானிடம் சென்று தனது பணத்திலிருந்து கொஞ்சம் பெற்றுக் கொள்கிறான். வெளிநாட்டுக்குச் செல்ல முகவர்களிடம் பணம்கட்டி ஏமாந்த பலரது கதை நமக்குத் தெரிந்திருக்கும். அப்படியொரு ஏமாற்றுப் பேர்வழி முகவர்தான் றுவான். ஸ்டான்லி போலவே, அவனிடம் ஆஃகானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் பிரயாணிகள் படகில் செல்வதற்குபோ பணம்கட்டிவிட்டு அலைந்துகொண்டிருக்கிறார்கள். 'இதோ படகு வந்துகொண்டிருக்கிறது', 'வழியில் மூழ்கிவிட்டது' என்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறான். உபரியாக அறிவுரை வேறு வழங்குகிறான், 'இங்கே வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள், போலீஸ் கைதுசெய்துவிடலாம்!'

மிக இரகசியமாக இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முடிவு செய்திருந்தும், ஸ்டான்லி குழுவினர் ஜெர்மனி செல்லும் விடயம் மெல்ல வெளியே கசிந்து புதிது புதிதாக ஆட்கள் வந்து அவர்களுடன் சேர்கிறார்கள். ஸ்டான்லிக்கு வெளிநாடு செல்ல பணம் கடன் வாங்கி ஏற்பாடு செய்த, அவன் அக்காவின் கணவன் சுரேஷ் மிகவும் சிரமப்படுகிறான். 'இந்தவட்டியே எங்களைத் தின்றுவிடும்' எனக்கூறும் அவன்மனைவி மத்தியகிழக்கு நாடொன்றுக்குச் செல்ல தயாராகிறாள். சுரேஷ் அதை விரும்பவில்லையெனினும் வேறு வழியில்லை. இந்நிலையில் சுரேஷும் 'டீமில்' இணைந்து கொள்கிறான். ஜெர்மனுக்கு விண்ணப்படிவத்தை அனுப்பும்போது தபால் நிலையத்தில் சந்திக்கும் முஸ்லிம் பெண்ணொருவர் "என்ன ஸ்டான்லி ஜெர்மனிக்குக் கடிதமா?" எனக் கேட்க, ஸ்டான்லி பந்தாவாக "கடிதம் மட்டுமில்லை, ஜெர்மனிக்கே போகப் போகிறேன்" என்கிறான். அந்தப்பெண்மணி தன் கணவனிடம் இதுபற்றிக் கூறுகிறாள். அவள் கணவனும் அவர்களுடன் இணைந்துகொள்ள வருகிறார். 

"வெளியே விஷயம் தெரிகிறது ஆட்கள் அதிகரிக்கிறார்கள்" என மனோஜ் அலுத்துக் கொள்கிறான். ஒரு சிறிய மைதானத்தில் அனைவரும் கூடி நிற்கும்போது திடீரெனப் புதிதாக ஒருவன் வர, "யாரது?" பியல் சொல்கிறான் "என்னுடைய மச்சான்". "வேறு யாருக்கும் சொல்லவில்லைத்தானே" இல்லையென்கிறான். தூரத்தில் இன்னொருவன் சைக்கிளில் வருகிறான். "அது யார்?" இப்போது பியலின் மச்சான் சொல்கிறான் "அவன் என்னுடைய மச்சான்".

அப்போது, திடீரென ஒரு போலீஸ் ஜீப் அங்கே வருகிறது. 'டீமில்' சிலர் அங்கிருந்து கலைந்து ஓட முயல, யாரும் ஓடக்கூடாது என்கிறார் போலீஸ் அதிகாரி. டீம் உறுப்பினர்கள் அனைவரதும் விண்ணப்படிவங்கள் அடங்கிய ஃபைலை வாங்கிப் பார்க்கிறார். ஒவ்வொருவர் முகங்களையும் கவனித்துப் பார்க்க, 'அவ்வளவுதான் மாட்டிக் கொண்டோம்' என்ற மனநிலையில் சிலர் மறைத்து கொள்ள முனைகிறார்கள். போலீஸ் அதிகாரி நிதானமாகத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு நிரப்பிய விண்ணப்படிவத்தை எடுக்கிறார், கூடவே வந்த கொன்ஸ்டபிளினதும். இப்போது அவர்களும் டீமில்!

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்துவிட்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். நிராகரிக்கப்படுகிறது. ஸ்டான்லி மிகவும் சோர்வடைந்து விடுகிறான். சில நாட்களில் ஸ்டான்லியும் நண்பர்களும் சந்தித்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது அங்கே அவனது வெளிநாட்டு முகவர் றுவானும் இணைந்திருக்கக் காண்கிறான். மனோஜ் சொல்கிறான் "இவர் உதவியுடன் இன்னொருமுறை முயற்சி செய்யலாம்" என. முகவர் றுவான் தான் உள்ளிட்ட தனது பிரயாணிகளையும் டீமில் சேர்க்க வேண்டும் என்கிறான். இரண்டாம் முறை முயற்சிக்கிறார்கள். றுவான் தனது வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் சொல்கிறான், "எனக்கு இன்னும் கொஞ்சம் பணம் தரவேண்டும். படகு அல்ல விமானத்தில் உங்களை அழைத்துச் செல்கிறேன். தவிர, முதலில் உங்களுக்கு முதலில் ஸ்ரீலங்கன் பாஸ்போர்ட் தயார் செய்ய வேண்டும்". "வெளிநாட்டுக்காரரை நம்முடன் அழைத்துச் செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தாதா அவர்களுக்கு?" என்ற ஸ்டான்லியின் கேள்விக்கு, "இல்லை அவர்களுக்கு நாம் எல்லோருமே கறுப்பர்கள்தான்" என்கிறான் றுவான்.

அனுமதி மறுக்கபட்டமைக்கான காரணத்தை ஆராய்கிறார்கள். இலங்கை விளையாட்டுக் கமிட்டியின் கடிதம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் தேவை, முக்கியமாக இலச்சினைகளுடன். முகவர் றுவான் தனது அனுபவத்தின் மூலம் சரியான ஆட்களை இனங்கண்டு முக்கியமான கடிதங்கள், அரசாங்க இலச்சினைகளை பிரதியெடுத்து போலிகள் தயாரித்து இம்முறை மிகக் கச்சிதமாக திட்டமிடுகிறார்கள். இடையில் Handball விளையாடிப் பழகுவது என்றோர் திட்டமும். பந்தை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு மாதிரி விளையாடுகிறார்கள். அப்போது, முகவரின் பிரயாணிகளுடன் பிரச்சினையாகி அடிதடியாகிவிடுகிறது. றுவான் சொல்கிறான், "நாம் எதற்கு இப்படி விளையாடிப் பிரச்சினைப்பட வேண்டும்? நாம்தான் அங்கே சென்றவுடனேயே தப்பியோடி விடுவோமே?" அவன் யோசனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இம்முறை கனகச்சிதமாகத் திட்டமிட்டு, மிகச்சரியாக ஏமாற்றியதால், விசா கிடைத்துவிடுகிறது.

நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். இறுதி நேரத்தில் மனோஜ் மனம் மாறிவிடுகிறான். குடும்பத்தைவிட்டுப் பிரிய மனமின்றி இங்கேயே தங்கிவிடுகிறான். புறப்படும் நேரம்வரை அவனை எதிர்ப்பார்த்து விமான நிலையத்தில் காத்திருக்கும் ஸ்டான்லியுடன் விஜித் இணைந்துகொள்ள, டீம் ஜெர்மனிக்குச் செல்கிறது. குடிவரவு அதிகாரிகளின்முன் கலவரத்துடன் வரிசையில் காத்திருக்கிறார்கள். பிரச்சினையின்றி அனுமதித்தும் எல்லோரும் நிம்மதியுடன், நம்பிக்கையுடன் கடவுச்சீட்டைக் கொடுக்கிறார்கள். தனக்கான உள்நுழையும் அனுமதி கிடைத்ததும் முகவர் றுவான் குடிவரவு அதிகாரியிடம் நன்றி சொல்லும் பாணியில் சிங்களத்தில் 'Fuck You' எனக்கூற, அதிகாரியும் அமர்த்தலாக அந்த நன்றியை ஏற்றுக் கொள்கிறார்.




இலங்கை அணியை வரவேற்று அழைத்துச் செல்கிறார்கள் ஜெர்மன் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள். தனது பிரயாணிகளுடன் முகவர் றுவான் விமான நிலையத்திலிருந்தே தனியாக தப்பியோட முனையும் திட்டம் தோல்வியில் முடிந்துவிட வேறு வழியின்றி அவர்களும், டீமுடன் பிரத்தியேக பேரூந்தில் செல்கிறார்கள். 'நாளைதான் உங்களுக்கான போட்டி. இன்று ஒய்வெடுத்துச் சுற்றிப் பாருங்கள்' என்கிறார்கள். காலை உணவு உட்கொண்டதும் போலி முகவர் கையில் ரயில் டிக்கட்டுகளுடன் வருகிறார். 'ஐந்து யூரோ இப்போதே புறப்படுங்கள்' என்கிறான். சரியாக அதே நேரத்தில் உள்ளே வரும் ஏற்பாட்டாளர் ஒருவர், "சிறு மாற்றம் செய்ய நேர்ந்துவிட்டது. இன்று உங்களுக்கான போட்டி, விளையாடிவிட்டு நாளை ஓய்வெடுங்கள்" என்கிறான்.

வேறுவழியின்றி நண்பர்கள் விளையாடத் தயாராகிறார்கள். அதுவரை பார்த்தேயிராத விளையாட்டு. என்ன செய்வதென்றே தெரியாதநிலையில் தயங்கியவாறு நிற்கிறார்கள். எதுவாகினும் எதிர்கொள்ளலாம் எனச்சிலர் களத்தில் இறங்க, ஜேர்மனி 59 - 0 இல் வென்றுவிடுகிறது. ஒருநாள் கழித்து இன்னுமொரு போட்டி. இம்முறை இலங்கை அணி ஏதோ விளையாட முயற்சிக்கிறார்கள். கடுமையாகப் போராடி ஒரு கோல் போடுகிறார்கள். மிகுந்த ஆரவாரமிடுகிரார்கள். மிகக்கடினமான ஒரு விக்கெட்டை எடுத்ததுபோன்ற கிரிக்கெட் அணிபோல உற்சாகத்தில் கூச்சலிட, பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். எதிரணியினரும் சேர்ந்து இவர்களை உற்சாகப்படுத்தி கைதட்ட, அன்றைய ஆட்டம் 57-1 என்ற கணக்கில் முடிகிறது.

அன்றிரவு விடுதியில் நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்கள் ஒன்றாக இணைந்து பயணித்த அவர்கள், விடைபெற்றுக் கொள்ளும் தொனியில், இனிமேல் சந்திக்க முடியுமா? இல்லையா என்பது தெரியாமல் மகிழ்ச்சி, துயரம், புதிய நம்பிக்கை எனக் கலவையான உணர்வுகளுடன் ஒவ்வொருவரும் ஸ்டான்லிக்கு நன்றி சொல்கிறார்கள். ஸ்டான்லி எதுவும் பேசாமல் நெகிழ்ச்சியுடன் இருக்கிறான். அனைவரும் இரவு வணக்கம் சொல்லி, விடைபெற்றுத் தங்கள் அறைகளுக்குத் தூங்கச் செல்கிறார்கள். 

சிறிது நேரத்தில் அங்கே போலீஸ் வருகிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் தங்கியிருக்கும் நான்கு அறைகளின் கதவுகளையும் ஒரே நேரத்தில் சடுதியாகத் திறக்கிறார்கள். அங்கே யாரும் இல்லை!

டீம் நண்பர்கள் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நாடுகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள். இறுதியில் ஸ்டான்லி, சுரேஷ், விஜித், றுவான் நால்வரும் இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கிறார்கள். ஜெர்மானிய அரசாங்கம் 'டீம்' நண்பர்களைப் பிடிக்க ஆணை பிறப்பிக்கிறது. ஆனால், இன்றுவரை (படம் வெளியாகும்வரை) அவர்கள் யாரும் இனங்காணப்படவில்லை என்கிறது படம்.

போலீஸ் அறைக்குள் சென்றபோது, அங்கே இருந்த காகிதத்தில் எழுதியிருந்தது, 'We love Germany thanks for  everything'. ஜெர்மன் விளையாட்டுத் திட்ட ஒருங்கமைப்பாளர் நொந்துபோய்க் கூறியது, "இதுவே இறுதித் தடவையாக இருக்கும். இலங்கையிலிருந்து இனி எந்த டீமையும் அழைப்பதாகத் என்னிடம் திட்டம் இல்லை" 'அவர்கள் அழுக்கு உடைகளை அப்படியே விட்டுச் சென்றுவிட்டார்கள்' என மேலதிகமாகக் கவலை தெரிவித்திருந்தாராம். அவர்கள் ஃபிரான்ஸ் சென்றிருக்கலாம் என ஜெர்மன் தெரிவித்தது.

முதலில் படம் பார்க்க ஆரம்பிக்கையில் என்ன இது? ஒளிப்பதிவு ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது, எனத் தோன்றியது. பின்னர் யோசித்தால், அதிகாலை நேரத்தின் கொழும்பு புறக்கோட்டை, மருதானை பகுதியின் ஒப்பனையில்லாத நிறம் அதுதான். ஒரு சேரிப்பகுதியின் இயல்பான, மழைநாளின் ஈரலிப்பும், இருண்மையும் அப்படியே இயல்பாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவு.

கதை மாந்தர்கள் யாவரும் சேரிப்பகுதியைச் சேர்ந்தவர்கள். மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் வாழும் அவர்களின் அவல வாழ்வை அப்படியே இயல்பாகச் சொல்கிறது படம். ஒவ்வொருவருக்கும் பிரச்சினை. ஆனாலும் நண்பர்கள் இணைந்திருக்கும்போது அதையெல்லாம் மறந்து அதையும் இலகுவாகவே எடுத்துக் கொள்கிறார்கள். பார்வையாளர் நாமும் அப்படியே! கொண்டாட்டமாகவே அணுக வைக்கிறது காட்சிகள் ஒவ்வொன்றும். பின்னணி இசையும் அப்படியே. சட்டவிரோதமாக அவர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், நாங்களும் சேர்ந்து பங்கு பெறுவது போலவே உணர்கிறோம். அடிப்படையில் நம் நாட்டைவிட்டு, நல்லதோர் நாட்டிற்குச் சென்றுவிடவேண்டும் எனும் எண்ணம் நம்மையறியாமலே அடிமனதிலிருக்கிறது போலும்.

இலங்கை - ஐரோப்பியக் கூட்டுத் தயாரிப்பான இப்படத்தை இயக்கியவர் இத்தாலிய இயக்குனர் உபர்ட்டோ பசோலினி. தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரசன்ன விதானகே. படத்தின் உருவாக்கத்தில் அவரே அதிகம் பங்காற்றியிருப்பார் என நம்புகிறேன். படம் தயாரிப்பில் இருக்கும்போது பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக உண்மையில் பிரசன்ன விதானகேயின் படமாகவே அறிமுகமானது மச்சான். அதுவே பார்க்க வேண்டிய ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரசன்ன விதானகேயின் 'புரஹந்த களுவர' (1997) (Death on a Full Moon Day) பார்த்ததனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு.

உயிர் பிழைக்கவும், உழைக்க வேண்டியும் வேறுவழியின்றி, ஐரோப்பிய நாடொன்றுக்கோ, கனடாவுக்கோ செல்வதைக் கனவாகக் கொண்டு உயிரைப் பொருட்படுத்தாது சாகசப் பயணங்களை மேற்கொண்ட பலரின் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். சந்தித்திருக்கிறோம். நிச்சயமாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொருவருடைய நெருங்கிய உறவினர்களிடம், நண்பர்களிடம் அப்படியொரு கதை இருக்கும். கடும் குளிரில் காடு மேடுகளில், நடந்து சென்றவர்கள்,படகுகளில்,பயணித்தவர்கள், கண்டெய்னர்களில் பதுங்கியிருந்து வெறும் கோக் மட்டும் அருந்தியவாறு நாட்களையும் எல்லையையும் கடந்தவர்கள், அந்த முயற்சியிலே அந்நிய மண்ணில் அடையாளம் இல்லாமலே தொலைந்து போனவர்கள் பலரது கதைகள் நம்மிடமுண்டு.

அவை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இதோ எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் யாரோ ஒருவர் தனது குடியுரிமை விண்ணப்பம் அனுமதிக்கப்படுமா நிராகரிக்கப்படுமா எனத் தவித்துக் கொண்டிருப்பார். யாரோ ஒருவர் முகவரால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். உயிரைப் பணயம் வைத்து ஒரு கடற்பிரயாணத்துக்குத் தயாராகியபடி ஒருவர், நடுவழியில் தவித்துக் கொண்டு ஒருவர் இருக்கக்கூடும். ஏன் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடமும்கூட மறக்கமுடியாத ஒரு அனுபவம் இருக்கக்கூடும்.

பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதிய கட்டுரை இது!

Friday, October 24, 2014

கத்தி!



இந்த வருடம் 'நய்யாண்டி' சம்பவத்துக்குப் பிறகு, திரையரங்கில் பார்த்த ஒரே படம். முதலில் ஆர்வம் இருக்கவில்லை. திடீரென நண்பர் அழைத்ததில் சென்று பார்த்தேன். 

விஜய் - இந்தவருடம் இன்னும் நான்கு வயது குறைந்திருக்கிறது. அறிமுகப் பாடல் காட்சியில் பார்க்கும்போது இன்னும் இருபது வருடங்களுக்கு தமிழ்சினிமாவின் யுத் ஹீரோ விஜய்தான் எனத் தோன்றுகிறது. உறுதிப்படுத்தினார்கள் அந்நாளைய இளைஞர்களான பின்வரிசைச் சிறுவர்கள். நான் பார்த்த இன்றைய காட்சியில் ஐந்தாறு வயது வாண்டுகள் மட்டுமே பெரிதாகச் சத்தமிட்டார்கள், ரசித்துச் சிரித்தார்கள். என்வரையில் விஜய் பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்தாலே வித்தியாசமான நடிப்புத்தான். வெட்டி சவடால் பேச்சு, எரிச்சலூட்டும் தொனியில் இழுத்து இழுத்துப் பேசாமல் இயல்பாக இருக்கும் விஜயை யாருக்குத்தான் பிடிக்காது? இதில் கதிரேசன் வழக்கமான அதேசமயம் அலட்டலில்லாத கலகலப்பான விஜய். ஜீவானந்தம் நரைத் தாடி மின்ன அநியாயத்துக்கு அமைதியாக இருக்கிறார். நடிக்க வேண்டிய ஒரிருகாட்சிகளிலும் அப்படியே இருக்கிறார். ஏனென்று தெரியவில்லை. நிச்சயமாக விஜய் இதைவிட நன்றாக நடித்திருக்கக் கூடியவர்.

படத்திற்குச் சமந்தா தேவைப்படவில்லை.துரதிருஷ்டவசமாக அனிருத் இரைச்சலுடன் கூடிய சில பாடல்கள் போட்டிருந்ததால் சமந்தா கதைக்கு அவசியப்பட்டுவிட்டார். அறிமுகமாகும் காட்சியில் பக்கென்று அதிர்ச்சியளித்தார். பின்னர் பழகிவிட்டது.

'துப்பாக்கி' எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. 'கஜினி' படத்துப்பிறகு முருகதாஸ் படங்களில் ஏனோ ஒரு டீவி சீரியல் சாயல் இருப்பதாகத் தோன்றியது. துப்பாக்கியைவிடக் கத்தி நல்ல படமாகத் தெரிகிறது. கிராமத்து காட்சிகளை ஆவணப் படம்போல இல்லாமல் அதை இன்னும் ஆழமாகப் பதிய வைத்திருக்கலாம். ஏனெனில் அங்கேதான் கதை ஆரம்பிக்கிறது. பிரச்சினை சொல்லப்படுகிறது. அதன்பிறகுதான் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. மொக்கைப் பாடல்கள் இல்லாமலே இருந்திருக்கலாம்.

படத்தில் சொல்லப்பட்டது மிக முக்கியமான சமூகப் பிரச்சினை. ஏற்கனவே சிட்டிசன், சாமுராய், ரமணா, தூள் போன்ற படங்கள் வந்திருக்கின்றன. சீரியஸாக சொல்ல முயற்சித்து இடையிடையே சிரிப்புக் காட்டி, சொதப்பலாகவே முடிந்தது சிட்டிசன். சாமுராய் சீரியசாகவே சொன்னாலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

ஒரு பக்கா எண்டர்டெயினரில் சீரியசான பிரச்சினையைச் சொல்லியிருக்கிறார்கள். சொல்லப்பட்ட விஷயம் எவ்வளவு சீரியசானது என்பதுதான் முக்கியம். உண்மையைச் சொன்னால் எவ்வளவு திருத்தமாக,சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் கமர்ஷியல் சினிமாவுக்கும், பார்வையாளரான நமக்கும் தேவை. மற்றபடி நாங்கள் எந்தப் படம் பார்த்தும் இதுவரை திருந்தியதில்லையே. இனியும் திருந்துவதாகவும் இல்லையே. விஜய் 'கோக்' விளம்பரத்தில் நடித்துவிட்டு கோக் பற்றிய உணமையைப் பேசுவது எப்படி நியாயம்? என்று பலரும் பொங்குவது வேடிக்கையானது. நம்மில் பலரும் படத்தில் 'கோக்' செய்த அநியாயத்தைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட மனதை இடைவேளையின்போது 'கோக்' குடித்துத்தான் ஆசுவாசப்படுத்தியிருப்போம் என்பதுதானே உண்மை.

வெற்றிகரமான ஒரு கமர்ஷியல் படம், பார்வையாளனை படம் பார்த்துக் கொண்டிருக்கும்வரையில் தர்க்க ரீதியான கேள்விகளை யோசிக்கவிடாது உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சிந்திப்பதற்கான அவகாசத்தைக் கொடுக்கக்கூடாது. அல்லது பெரிதாகக் கண்டுகொள்ள விடக்கூடாது. கத்தியும் அப்படியே!

படத்தின் ஆரம்பத்தில் 'லைக்கா' லோகோ தோன்றும்போது ஏனோ விசிலடிக்க வேண்டும்போல அவ்வளவு  உற்சாகமாக இருந்தது ஏனெனத் தெரியவில்லை. இந்த 'லோகோ' பிடிக்காமல்தான் பலரும் உணர்வுடன் போராடினார்கள் என்று கேள்வி.

'நண்பன்' படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த விஜய் படம் 'கத்தி'. 

Friday, September 26, 2014

சந்தியாராகம்!


பாலுமகேந்திரா இறந்து போனபின்புதான் அவர் படங்களைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றுகிறது. என் வழக்கப்படி, நீண்டநாட்களாக கணினியில் சேமித்து வைத்திருந்த 'சந்தியாராகம்' படத்தைப் பார்த்தேன்.

கிராமத்தில் எந்தக் கவலைகளுமின்றி வாழ்வை அதன்போக்கில் ரசித்து வாழ்ந்துகொண்டிருந்த ஒரு முதியவர், சந்தர்ப்பவசத்தால் நகரத்தின் நெருக்கடி மிகுந்த, கீழ்நடுத்தரவர்க்கத்து பொருளாதாரச் சிக்கல் நிறைந்த வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள நேரிடுகிறது. அதன் பின்னர் சந்திக்கும் அனுபவங்ககள் என்னென்ன? எப்படி அவற்றை எதிர்கொள்கிறார் என்பது பற்றிப் பேசுகிறது படம்.

பெரியவர் சொக்கலிங்கம், மனைவி விசாலாட்சியுடன் கிராமத்தில் வாழ்கிறார். பிள்ளைகள் இல்லை. உறவென்று தம்பியின் மகன் மட்டுமே சென்னையில் இருக்கிறான். எந்தக் கவலைகளும் அவருக்கு இல்லை. மனைவி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அப்பளம் போட்டு கடைகளுக்கு கொடுக்கிறார். அவரது தேவைகள் அதிகமில்லையாதலால் அவரளவில் சொகுசான வாழ்க்கை. இதெல்லாம் ஒரே நாளில் பெரியவருக்கு அர்த்தமற்றுப் போய் விடுகிறது. மனைவி இறந்துவிடுகிறார். தன் ஒரேயொரு உறவான தம்பி மகனிடம், சென்னைக்கு வருகிறார்.

பத்திரிகை அலுவலகத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கிறார்கள் தம்பி மகனும், மனைவியும். பள்ளி செல்லும் சிறு பெண்குழந்தை, இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். திடீரென வந்து சேரும் பெரியவரை அன்பாகக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர் தொடர்ந்து அங்கேயே தங்கிவிடுவாரோ என்ன செய்வது என ஆரம்பத்தில் பயப்படுகிறாள் மருமகள். அன்று அவள் கவலைகொண்டபோதும் பின்னர் அவரைத் தம் குடும்பத்தில் ஒருவராகவே மகிழ்ச்சியுடன் கவனித்துக்கொள்ளும் மருமகள் ஒரு சிறு சம்பவத்தின் விளைவாக கோபத்தில் கடிந்துகொண்டு பாராமுகமாக இருப்பது பெரியவரைக் காயப்படுத்திவிடுகிறது. அங்கிருந்து சொல்லாமல் வெளியேறிவிடுகிறார். பின்னர் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல வரும் மருமகளிடம் பேசித் தன்முடிவை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் பெரியவர். எளிமையான இந்தக்கதைக்குள் மனிதர்களின் மெலிய உணர்வுகள், உளச்சிக்கல்கள், புரிந்துணர்வு என எந்தக் காலத்துக்கும் பொருந்தும், ஏராளமான விஷயங்களைச் சொல்லப்படுகிறது.

முதியவர்கள் என்றதுமே, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாரிதாபத்துக்குரியவர்கள், அதனாலேற்பட்ட சுய கழிவிரக்கத்தில் வாழ்பவர்கள் அல்லது முரட்டுத்தனமான வரட்டுப் பிடிவாதக்காரர்கள் என்பதைத்தவிர்த்து, வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும் முதியவர்களைப் பற்றிய படங்கள் தமிழில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும், முதுமையையும் அவ்வளவு உற்சாகமாக எதிர்கொள்ளும் மனிதர்களும் நம் நகர வாழ்வில் மிக அரிதாகவே இருப்பர்கள் போலும். கிராமங்களில், நம் ஊர்ப்புறங்களில் அட்டகாசம் பண்ணு 'பெருசுகளை' நாம் பார்த்திருப்போம். 'பரதேசி' படத்தில் கவிஞர் விக்கிரமாதித்யன் வருவாரே, படத்திலேயே அதுதான் எனக்கு மிகப்பிடித்தது. சிறிது நேரமே வந்தாலும், அதகளம் செய்திருப்பார்.

பெரியவர் சொக்கலிங்கத்தின் கிராமத்து வாழ்க்கை மிக அழகானது. ஆர்ப்பாட்டமில்லாமல் ரசனையோடு எதையும் பார்க்கும் குழந்தைத்தனமும், குறும்பும் கொண்ட மனிதர். காலையில் மனைவி விசாலாட்சி சுடச்சுட பெரிய டம்ளரில் கொடுக்கும் தேநீரை ரசித்துக் குடித்துவிட்டு, குளத்துப் பக்கம் செல்கிறார். சிறுவர்களைப் போல நீர்ப்பரப்பில் கல்லெறிந்து அது நீர்மேற்பரப்பில் தத்திச் செல்வதை ரசிக்கிறார். வரும் வழியில் யாரோ சிறுவர்கள் பொட்டுவைத்த கட்டத்தில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒற்றைக்காலில் தத்தி பாண்டி விளையாடுகிறார். ஆசைதீர ஆற்றுக்குளியல், வெள்ளிக்கிழமைகளில் பிள்ளையார் கோவிலில் ஒரு கும்பிடு, திரும்பும் வழியில் சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விளையாடுகிறார். கொண்டாட்டமான ஓர் வாழ்க்கை அவருடையது.

பெரியவரின் கிராமத்து வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களின் அன்னியோன்யம், அக்கறை, அவரின் கௌரவத்தை, சின்னச் சின்ன ஆசைகளை,விளையாட்டுத்தனங்களை ஆரம்பக் காட்சிகள் சொல்கின்றன. இவற்றிற்கு முற்றும் மாறான நகரத்தை காலையில் வந்துசேரும்போதே எதிர்கொள்கிறார் சொக்கலிங்கம். புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டு பதற்றமடைந்து விலகி நடக்கிறார். அதுவரை எல்லோராலும் 'பெரியய்யா' என அன்போடு அழைக்கப்பட்டவரை 'சாவுக் கிராக்கி' என திட்டுகிறான் அவர்மீது மோதிவிடுவதுபோல் வந்து நிற்கும் ஆட்டோ டிரைவர்.

அடுத்த அதிர்ச்சி வீட்டில். குளிப்பதற்கு வெந்நீர் போட்டு வைக்கிறாள் மருமகள். ஆற்று நீரில் நீராடிய பெரியவர் சில கணங்கள் அந்தச் சிறிய வாளியை அந்த யோசனையுடன் பார்த்துவிட்டு பக்கத்திலிருக்கும் நீர்க்குழாயைத் திறக்கிறார். அங்கே குடியிருக்கும் ஒருவன் சொல்கிறான் இன்று நீர் வராது, நாளைதான். அதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான புதிய அனுபவம் ஒரே நாளில் ஏற்படுகிறது. ஆனாலும் உடனடியாகவே அவற்றோடு இயைந்து வாழத் தயாராகி விடுகிறார் சொக்கலிங்கம்.

குழந்தையும் பெரியவரோடு சேர்ந்துவிடுகிறது. பெரியவரும் மருமகளுக்கு ஒத்தாசையாக கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொடுக்கிறார். குழந்தையும் அவருடன் இலகுவாக ஒட்டிக் கொள்கிறது. சாப்பாடு வேண்டாம் என அம்மாவிடம் மறுக்கும் குழந்தை தாத்தா ஊட்டிவிடுவதாகக் கேட்டதும் சம்மதிக்கிறது. குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். 'பெரியவர் இங்கேயே தங்கி விடுவாரோ?' - மருமகளுக்கு அன்றைய இரவில் தோன்றும் சந்தேகம். ஏற்கனவே இடநெருக்கடி, போதாத வருமானம், இதில் புதிதாக ஒருவர் குடும்பத்தில் இணைந்துகொள்வது மருமகளுக்குக் கலவரத்தை ஏற்படுத்துகிறது. கணவனிடம் கேட்கிறாள். என்னைவிட்டா அவருக்கு வேற யார் இருக்காங்க? எங்க போவார்? சமாளிக்க வேண்டியதுதான் எனபதாக அமைகிற அவனது பதில் பொறுப்பற்றதாக, கோபம் கொள்ள வைப்பதாக இருக்கிறது. தவிர்க்க முடியாத இந்தப்பேச்சு, உச்சகட்டத்தை எய்தி, பொறுமையிழந்து உரக்கப் பேசிவிடுகிறான் கணவன். தன பெரியப்பா வந்தது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதாகவே தொடர்ந்து அவன் நம்புகிறான். பின்னரும் அடிக்கடி சொல்லிக் காட்டுகிறான். கணவன், மனைவிக்கிடையான பேச்சு சொக்கலிங்கம் காதில் விழ, யோசனையில் ஆழ்கிறார். ஆனாலும் உடனடியாக உணர்ச்சிவசப்படவில்லை. அவர்களின் நிலையையும் தன் நிலையையும் புரிந்துகொள்கிறார் பெரியவர். முடிந்தவரை அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என நினைக்கிறார். இதுதான் யதார்த்தம்.

ஒரு கீழ் நடுத்தரவர்க்க குடும்பத்தின் தன் குடும்பம் தவிர்த்து உறவுகள் மீது என்னதான் அன்பு, பாசம் இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி பொருளாதார நிலை சார்ந்த சிக்கல்கள் இயல்பாகவே முன்னிலைப் படுத்தபடுகிறது. நகர வாழ்வின் நெருக்கடிகளில், பொருளாதாரச் சிக்கல்களில் முதியவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார்கள் சிலவேளைகளில் தவிர்க்கமுடியாமல் என்பதையும் ஓரிரு காட்சிகளில், அயல் வீட்டில் குடியிருக்கும் பெரியவரின் பேச்சு வாயிலாக சொல்லிவிடுகிறது.

எண்பதுகளில் நடைபெறுகின்ற கதை எனினும், இன்றைய காலகட்டத்திலும், எதிர்காலத்திலும் பலரும் எதிர்கொள்ளும், கொள்ளப்போகும் வாழ்க்கைதான். சொந்த ஊரில், அயலவர்களோடு அளவளாவிக் கொண்டு தம் போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த நம் தாத்தாக்கள், பாட்டிகள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எல்லா வசதிகளும் இருந்தும், நடைமுறையை ஏற்றுக் கொண்ட போதும், ஏதோ ஒரு தருணத்தில் இழந்துவிட்ட தம் இயல்பான வாழ்க்கையைக் குறித்த ஏக்கத்துடன் வாழ்வதைப் பார்க்கிறோம். வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் தனிமையுணர்வு, தாம் சரியாக மதிக்கப்படவில்லை எனும்போது அல்லது அப்படித் தோன்றும்போது ஏற்படும் அயர்ச்சி, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இடமாற்றம், அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிக்கள், நகர்புற மத்தியத்தர வாழ்க்கை தரும் பொருளாதார அழுத்தங்கள், அதனாலேற்படும் ஏற்படும் உறவு சிக்கல்கள் இவை பற்றி பேசுவதற்கான தேவை எப்போதுமே இருக்கிறது.

சொக்கலிங்க பாகவதர். என்ன ஒரு நடிகன்! தமிழ்சினிமாவில் இப்படி ஒரு நடிகரைப் பார்ப்பதே எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது. மிகை நடிப்பு, தேவையே இல்லாமல் உரத்த குரலில் பேசுவது, நாடக பாணியில், குறிப்பாகத் தெருக்கூத்து வகையான நடிப்பையே சினிமாவிற்கும் வழங்கி அதையே நடிப்பு எனக் கொண்டாடி வரும் நமது பாரம்பரியத்தில் சொக்கலிங்க பாகவதர் போன்ற ஒருவர் தமிழ் திரையுலகத்தால் கண்டுகொள்ளப்படாததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயக்குனர் பாலுமகேந்திராவைத் தவிர வேறு எவரும் அவரை இந்த அளவுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார்களா?

பம்பரம் விடும்போது அவர் முகத்திலிருக்கும் குழந்தைத்தனமான ஆர்வம், ஒரு குறும்புச் சிரிப்பு, தன் மனைவியை அழைக்கும்போது குரலில் இருக்கும் காதல், (ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. அது பாலுமகேந்திராவின் எப்போதும் தீராத காதலின் தாக்கமாகவும் இருக்கக் கூடும்) குளித்துவிட்டு வரும் பாட்டியைப் பார்த்ததும், "ஏண்டி ஜுரமும் அதுவுமா குளத்துல குளிச்சிட்டு வர? வெந்நீர் போட்டிருக்கலாம்ல?" எனும்போது தெரியும் பரிவு, பாட்டி கொடுக்கும் தேநீரை ஒரு மிடறு குடித்துவிட்டு கொடுக்கும் எதிர்வினை ஒன்றே போதும். தன்மேல் கோபமுற்றிருக்கும் மருமகள் மருத்துவமனை வாசலில் சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பப் போகிறாள். தன்னையும் அழைப்பாளா எனத் தயங்கி நிற்கிறார். மருமகள் கூப்பிட்டதும் சிறு சிரிப்புடன் சின்ன குழந்தை போல் ஓடி வருவது, குழந்தை வள்ளியின் கால்களை தன் மடியில் போட்டு கொள்வது, அவ்வப்போது சிரித்துக் கொள்ளும் குழந்தைச் சிரிப்பு என சொக்கலிங்க பாகவதர் அசத்துகிறார். 

முதியோர் இல்லத்தில் சேரும்போது அவர் பார்த்த தொழில் என்ன என்கிறார்கள். நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தேன் என்கிறார். வேற என்ன தொழில்? எனக்கேட்க ஒரு பண்ணையாரிடம் கணக்கெழுதிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார். ஆயினும் தனது தொழிலை 'நடிகன்னே போட்டுக்க' எனச்சொல்லும்போது முகத்தில் அப்படியொரு பெருமை, சிரிப்பு! தொடர்ந்து தான் நடித்த நாடகத்தின் காட்சியொன்றை பாடி, நடித்துக் காட்டுகிறார். அதுவரை இருந்த சொக்கலிங்க பாகவதர் ஆளே மாறிப்போய் இளைஞனாகியதுபோல மிடுக்குடன் நிற்கும் காட்சி, பின்னர் தன்னை பார்க்க வரும் மருமகளை தன் சகாக்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ஒரு பாட்டிக்கு ரொம்பவே மறதி எனும்போது தனது வாயையும் பொக்கையாகச் செய்து காட்டுவது என அதகளம் செய்கிறார்.

அந்த முதியோர் இல்ல வாழ்க்கை அவருக்கு ஏராளமான நண்பர்களைப் பெற்றுக் கொடுக்கிறது. இழந்துவிட்ட பழைய கொண்டாட்டமான வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பதாக இருக்கிறது. சொக்கலிங்க பாகவதர் தன் மருமகளுக்கு முதியோர் இல்லத்தைச் சுற்றிக் காட்டும் காட்சியைக் கவனித்துப் பார்த்தால் புரியும். தன் சொந்த வீட்டைச் சுற்றிக் காட்டுவதுபோல ஒரு பெருமை, பூரிப்பு அவர் முகத்தில். சூழ்நிலை காரணமாக தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட அழகான வாழ்க்கை மீளக் கிடைத்துவிட்டதைப் போன்ற உற்சாகம்.

இப்போது சினிமா ஆர்வலர்களால் முக்கியமானதாகக் கவனிக்கப்படுகிற ஈரானிய சினிமா எப்போது உருவானது அல்லது எப்போது முதல் உலகின் பரவலான கவனத்தைப் பெறத் தொடங்கியது எனத் தெரியவில்லை. எனது நண்பன் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது Baran படத்தைப் பார்த்துவிட்டு அதுபற்றிச் சொல்லியிருந்தான். நான் முதன்முதலில் பார்த்தது 2007ல் Children of Heaven திரைப்படம். வெளியாகிப் பத்து வருடங்களின் பின்னரே. இங்கே ஈரானிய சினிமா பற்றிப் பேசியது ஏனெனில், சந்தியாராகம் பார்க்கும்போது எனக்கு ஈரானியப் படங்கள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வே ஏற்பட்டது.

ஈரானியப் படங்கள் போல என்று சொன்னதற்கு இன்னுமோர் காரணம், படத்தில் எல்லோருமே நல்லவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அதை, வெளிப்படுத்தும் விதம் வேறுபடுகிறது. தவிர, சூழ்நிலை, இயலாமை காரணமாக அவ்வப்போது தமக்குள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பழகியவர்கள் கூறும் சம்பவங்கள் நினைவுகள் ஒவ்வொன்றும் அழகானவை. முழுக்க முழுக்க அன்பாலும், ரசனையாலும் நிரம்பிய வாழ்வைக் கொண்டாடிய கலைஞன். அவர் படைப்புகளிலும் அதையே பிரதிபலிக்கக் காண்கிறோம். அவற்றில் அன்பும், மெல்லிய உணர்வுகளும், உளச்சிக்கல்களும், தீராத காதலும் நிறைந்த அழகியல் விரவிக் கிடக்கின்றது.

தமிழ்சினிமாவில் பாலுமகேந்திரா சரியானபடி பேசப்படவில்லையோ, கொண்டாடப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தமிழர்களின் வழமைபோல இறந்த பின்னர், சமீப காலமாகத்தான் அதிகம் பேசப்படுகிறார். ஒரு நல்ல படைப்பாளியின் உண்மையான வெற்றி என்பது அவர் உருவாக்கிச் சென்ற, தன் நீட்சியாக விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள் மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கான தன் வாரிசுகளும்தான். அவரின் சிஷ்யர்களே போதும் - அவர்கள்மீது எவ்வாறான விமர்சனங்கள் வைக்கப்ப்படும்போதிலு! பாலா, ராம், வெற்றிமாறன் போன்றோர் அவர்பற்றிக் கூறும்போதெல்லாம் பிரமிக்க வைக்கிறது, அன்பினால் கட்டமைக்கப்பட்ட அவர் சாம்ராஜ்யம்!

அதிகாலையில் கிராமத்தில், பெண்கள் நடந்து செல்லும் படத்தின் ஆரம்பக் காட்சி, குளத்தில் ஆரவாரமாக செல்லும் எருமைகள், சென்னையில் நடுத் தெருவில் மரங்களின் ஊடே விழும் சூரிய ஒளி போன்ற கட்சிகளைப் பார்த்தபோது வண்ணத்திரைப்படமாக எடுத்திருந்தால் இன்னும் நன்றாயிருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனாலும் கருப்பு - வெள்ளை காட்சிகளின் ஆழத்தை, தாக்கத்தை அதிகமாக்கும் என்பதால் அதுவே பாலுமகேந்திராவின் விருப்பமாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். நண்பர்கள் சிலர் அப்படியும் சொல்கிறார்கள் வண்ணத் திரைப்படமாகப் பார்த்ததாக. நான் யூ-டியூபில் தரவிறக்கியே பார்த்தேன். பாலுமகேந்திராவின் படங்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியது. 

சந்தியாராகத்தை வண்ணத்திரைப்படமாகப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படக் இன்னுமோர் காரணம், 'அழியாத கோலங்கள்' படம்தான். ஆணுறையில் பலூன் செய்து விளையாடியபடி long shot இல் சிறுவர்கள் நடந்து வரும் காட்சி ஒன்றே போதும் ஒளிப்பதிவு பற்றிச் சொல்லிவிட. அவ்வளவு அழகானது. பாலுமகேந்திராவின் இளமைக்காலத்தின் பாதிப்பெனில், என்னமாதிரியான கொண்டாட்டமான வாழ்க்கை அது! என்னை மிகக்கவர்ந்த படம். அதையும் இந்த வருடம்தான் பார்த்தேன். விடலைப் பருவப் பையன்களின் உணர்வுகளை, வாழ்க்கையை தமிழில், வேறெந்தப் படமும் பதிவு செய்ததில்லையெனச் சொல்லப்படுகிற அற்புதமான, ரகளையான படைப்பு. மிக முக்கியமாக ஒளிப்பதிவு. அந்த வயதினருக்கே உரிய குறும்பும், விளையாட்டுத்தனங்களும், புதிதாக அறியும் எதையும் முயன்று பார்க்கும் ஆர்வமும் அப்படியே பதிவுசெய்யப்பட்டிருக்கும். சிகரெட் பிடிக்கும் காட்சியும் அப்படியே. ஓர் இளைஞன் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதைப் பார்த்துவிட்டு அதனால் கவரப்பட்டு, ஒருமுறையேனும் முயன்று பார்த்தவர்கள், ஊதுபத்திக் குச்சியைப் பேப்பரால் சுத்தி புகைத்தவர்கள், குறைந்தபட்சம் நினைக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன!

அதேபோல, 'வீடு' - மத்தியதர வர்க்கத்தினரின் மிக முக்கியமான கனவு பற்றிய படம். இன்றும், எந்தக்காலத்திற்கும் பொருத்தமான படம். காலத்தால் அழியாத படைப்பு என்றுமட்டும் பாலுமகேந்திரா படங்களைச் சொல்ல முடியாது. ஏனெனில் அவரின் அநேகமான படங்களுக்கான பிரதிகள் அவரிடமே இல்லையென, அழிந்துபோய்விட்டதென வருத்தப்பட்டிருந்தார். எந்தக் கலைஞனுக்கும் நேரக்கூடாத சோகம் அது. உலக சினிமா விரும்பிகள் அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய படங்கள் 'சந்தியாராகம்', 'அழியாத கோலங்கள்', 'வீடு'. தமிழிலும் பல வருடங்களுக்கு முன்பே உலக சினிமா எடுத்த படைப்பாளி இருக்கிறான் எனக் கொண்டாடலாம்.

பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதிய கட்டுரை இது!

Monday, September 8, 2014

A Gun and a Ring : புதிய ஆரம்பம்!



ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. காரணம் நாம்தான். 'எம்மவர் படைப்பு' என்ற அடையாளம், மிகைப்படுத்தப்பட்ட பெருமைகளுடன் வெளியாகும் வஸ்துகள்- ஈழத்து முயற்சி என்று ஆரம்பித்தாலே தெறித்தோடும் நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. நேர்மையாகச் சொன்னால், சில நண்பர்களின் முயற்சிகள் தவிர, 'ஈழம்', 'இலங்கை' என்றாலே படமோ, பாட்டோ எதுவானாலும் நான் மறந்தும் 'கிளிக்' செய்வதில்லை.

A Gun and a Ring படம் குறித்துப் பேசப்பட்டபோதும் வழமை போலவே முதலில் நினைத்தேன். பின்பு வழமையான முயற்சிகளை விட நல்லதாக இருக்கலாம் என நம்பினேன். பார்த்தபோதுதான் தெரிந்தது நிச்சயமாக எம்மவரின் பெரியதொரு பாய்ச்சல். கொழும்பிலிருந்து கொண்டு படம் பார்க்க வராதவர்கள், ஒரு நல்ல அனுபவத்தைத் தவற விட்டுள்ளார்கள். நிச்சயமாக அவர்கள் மீது மட்டும் தவறல்ல. மேற்சொன்ன 'ஈழத்து, அனுபவம்தான் முக்கிய காரணம்!

எமது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளை, புலம்பெயர் நாடொன்றில் பிறந்து வளரும் இளம் சமுதாயத்தின் உணர்வுகளை, அவர்களுக்கும் பாரம்பரிய சமூகக் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பெற்றோருக்குமிடையான முரண்பாடுகளை, பாதுகாப்பான நாடு என நாம் நம்பிக் கொண்டிருக்கும் வெளிநாடுகளில் துரதிருஷ்டவசமாக எதிர்கொள்ள நேரிடும் பிரச்சனைகளை, முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, எப்போதும் உடனிருந்து கொல்லும் உளவியல் பிரச்சனைகளை மிகை நடிப்போ, திணிக்கப்பட்ட வசனங்களோ இல்லாது மிக இயல்பாகப் பேசுகிறது படம்.

சமூக சேவகியான மனைவியைப் புரிந்து, இலங்கையில் விட்டுவிட்டு குழந்தையின் நலனுக்காக வெளிநாட்டுக்கு வந்த, பிறருக்கு உதவும் உறுதியான மனம் படைத்த நல்லவரான சொர்ணம் - ஆரம்பகால இந்திய பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி கனடா வந்த, எளிதில் பதற்றமடையும், பழைய நினைவுகளால் அலைக்கழிப்பால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாத குழப்பவாதியான ஞானம் - போரினால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தில் தான் மட்டுமே எஞ்சிய, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்யும் இலட்சியத்தில் ஒருவனால் வரவழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்ட திடமான இளம்பெண் அபி - எப்போதும் நிதானமாக, உணர்ச்சி வசப்படாத, குற்ற உணர்ச்சியில்லாமல் பழைய வாழ்க்கையை வன்முறையை மறந்து விட்டு அல்லது உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க அமைதியாக வாழும் அரியம் - தனது இரையைத் தேர்ந்தெடுத்துவிட்ட ஒரு சைக்கோ சீரியல் கொலைகாரனைக் கண்காணிக்க வரும் பொலிஸ் புலனாய்வாளன் ஜோன் - அப்பாவின் அறிவுரையைக் கேட்டு விலகிய தன்னால்தான் நண்பன் தற்கொலை செய்துகொண்டான் என நம்பும் ஓரினச் சேர்க்கையாளன் ஆதி - இவர்களைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு நகர்கிறது கதை.

இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேடிக்கொள்ளும் முடிவுகள் தனித்தனியான தலைப்புகளுடன் (அத்தியாயங்கள்?), அவை ஒன்றுடனொன்று எப்படிச் சம்பந்தப்படுகின்றன என்பதையும் தெளிவான திரைக்கதையூடாக இணைக்கப்பட்டிருக்கின்றது. (இந்த தலைப்புகள் போடுவதை பார்த்ததுமே மிகுந்த உற்சாகமானேன். படத்தின் இயக்குனர், டெரண்டினொவின் தீவிர ரசிகராக இருப்பாரோ என்று தோன்றியது)

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இடையிலும் தொடர்ந்து சில கேள்விகள் எழ வைத்து, பின்னர் படிப்படியாக முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே செல்கிறது படம். ஒரு அத்தியாயத்தின் காட்சியில் பார்வையாளனுக்குத் தோன்றும் கேள்விக்கு, இன்னொரு அத்தியாயத்தின் முடிவில் பதில் கிடைக்கிறது. ஒரு சில காட்சிகள் நம்மை ஒன்று நினைக்க வைத்து அதற்கு மாறாக, சில சமயங்களில் அது ஒரு விஷயமாகவே இல்லாமல் ஆக்கிவிடுவது ரசிக்க வைக்கும் உத்தி.

கத்தியைக் கண்டு பதற்றமடைகிறது ஒரு பாத்திரம். அதற்குக் காரணம் கத்தி சார்ந்து ஒரு அதிர்ச்சிகரமான பழைய சம்பவம் இருக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் அப்பிடியிருக்க எந்த அவசியமும் இல்லை. வாழ்க்கையில் சிலவிஷயங்களிற்குப் பதில் 'அது அப்படித்தான்' மட்டுமே!

இருள் சூழ்ந்த அறையில் கையில், பச்சை குத்திய காதலியின் பெயரை அழிக்கமுயலும், கைத்துப்பாக்கியால் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு பாத்திரம் போதைப்பொருள் கடத்துபவனாகவோ, சமூக விரோதியாகவோ, கோழையாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை. நேர்மையான, மனச்சாட்சியுள்ள பொலிஸ் புலனாய்வாளனாகக் கூட இருக்கலாம்.

என்னை மிகக்கவர்ந்தது அரியம்- ஞானம் காட்சிகள்தான். "…ஏனண்ணே கொல்லுறதெண்டு முடிவெடுத்தா எத்தின வழி இருக்கு. கத்தி இருக்கு... ஏன் அடிச்சு..?" என்று கேட்கும்போது ஞானத்தின் முகத்தில் இயலாமை, விரக்தி, மன்றாட்டம் போன்ற உணர்ச்சிகள்! அப்படிக்கேட்கும்போது இலேசாக சிரிக்கக்கூடத் தோன்றியது எனக்கு மட்டும்தானா தெரியவில்லை. அதுபோல அரியம் திடீரென மாறும் பழைய இரும்பனாக திகைக்க வைக்கிறார்.

ஆரம்பத்தில் குழப்பவாதியாக அறிமுகமாகும் ஞானம், எப்போதும் அப்படியே இருக்கிறார். எதிலும் தெளிவில்லாதவர்கள் எளிதில் பதற்றமடைபவர்கள் தமக்கு மட்டுமன்றிக் கூட இருப்பவர்களுக்கும், சமயத்தில் எந்த சம்பந்தமில்லாதவர்களுக்கும் சேர்த்தே பிரச்சினையை ஏற்படுத்திவிடுகிறார்கள். எளிதில் பதற்றமடையாத சாதுவாக அறிமுகமாகும் அரியம், பின்பு காட்டும் சடுதியான மாற்றம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர் எப்போதும் அப்படியே இருக்கிறார். பதற்றமடையாமல் நிதானமாக நடந்துகொள்ளும் அவர் பெயர் வேறு இரும்பன். அட்டகாசமான சேஞ்ச் ஓவர்.

பக்கத்திலிருந்த நண்பன், 'இரும்பன்' தனது ஊர் என்றார். இன்னொரு நண்பன் இரும்பன் கதாபாத்திரம் யாரென்று இன்னொருவரைச் சொன்னார். இரும்பனின் தோற்றம் பார்த்தவுடனேயே ஒருவரை ஞாபகப்படுத்துகிறது. ஆக, ஒருகாலத்தில் நிறைய இரும்பன்கள் இருந்தது, இப்போதுமிருப்பது தெரிகிறது. படத்தில் யார் எந்த இயக்கம் என்று சொல்லாமலே அவரவர் ஊகத்திற்கு விட்டுவிடுவது மிகக் கவர்கிறது. அது மிகச்சரியான வழிமுறை. உண்மையில் எல்லா இயக்கத்துக்கும் சில பக்கங்கள் ஒரே மாதிரியானவைதான்!

முதலில் மிகக்கவர்ந்தது தமிழ். யாழ்ப்பாணத்துத் தமிழ் மிகச் சரியாகவே பயன்படுத்தபட்டிருப்பதாக நினைக்கிறேன். (நினைக்கும் அளவுக்குத்தான் எனக்குத் தெரியும்). படம் தொடங்கும்வரை நம்பிக்கையில்லாமல் இருந்தது படத்தின் பேச்சு மொழி குறித்துத்தான்! 'தெனாலி' உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றிக் கவலைப்படும் நாங்கள் இலங்கை - புலம்பெயர் படைப்புகளின்(?!) கொடூரங்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக கதநாயகி எப்படிப் பேசுகிறார் என்பதைப் பார்க்கும் ஆவலிருந்தது. அவர்களுக்கென்றே தனிமொழி இங்கே இருப்பதாகத் தெரிகிறது. சந்தேகமிருந்தால் நம்மவரின் காணொளிகளைப் பார்க்கவும். பேச்சுமொழியைச் சிறப்பாகக் கொண்டுவந்ததற்கே இயக்குனர், நடிகர்களுக்கு விருது கொடுக்கலாம். உண்மையில் வெளிநாடுகளில்தான் எண்பதுகளில் வெளியேறிய நம்மவரிடம்தான் உண்மையான, முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கேட்ட பேச்சு மொழி இன்னும் வழக்கில் இருப்பதாகத் தோன்றுகிறது.

எம்மவர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் இணையத்தளங்கள் மிகக் கேவலமான குப்பைகளை மன்னிக்கவும் 'படைப்புகளை' எல்லாம் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகின்றன. இதனால் உண்மையிலேயே நல்ல படங்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும் அபாயம் எதிர்காலத்திலும் நிகழலாம். மிகக் குறைந்தபட்ச பொறுப்புடனாவது நடந்துகொள்வது அவசியம். ஏனெனில், படம் பார்க்க வந்தவர்களில் தமிழர்களை விட சிங்களவர்களே அதிகம் என்று தோன்றுகிறது. இலங்கையில் திரையிடச் சாத்தியமில்லாத, சென்சாரில் தப்ப முடியாத இந்தப்படத்தை சிங்களவர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்தது கூட ஒரு வித்தியாசமான அனுபவமே.

நம் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாகப் பார்க்க வழிசெய்வது நம் சமுதாயத்துக்கு மிகுந்த நன்மை பயக்கும். 'எங்கட பெடியள் ஏதோ செய்ய வெளிக்கிடுறாங்கள். எங்களால முடிஞ்சத செய்யவேணும்' - என்ற நல்ல மனதுடன் என்ன ஏது என்றே கேட்காமல் பணத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய அதிகார்வலர்கள், யாரோ ஒரு 'மங்களம் சாரி'ன் பணத்தில் எதுவுமே இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கமெராவைத் தூக்கிக்கொண்டு படம் எடுக்கக் கிளம்புபவர்கள், கொலை வெறியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கலையார்வலர்கள் 'படம் பார்க்கக்' கற்றுக்கொள்ளவும், பலர் இதையெல்லாம் கைவிட்டு, மனந்திருந்தி வாழவும் வாய்ப்பிருக்கிறது.

நடிகர்களின் தேர்வும் நடிப்பும் இயல்பாக, கவர்கிறது. பேச்சு மொழி அவ்வளவு அருமையாக உள்ளது முக்கியமாகக் கதாநாயகியைத் தனியாகவே பாராட்டலாம் - ஏனெனில் அவர்கள்தான் வழமையாக அதிகம் அச்சமூட்டுபவர்கள். இரும்பன், ஞானம் கதாபாத்திரங்களின் பாதிப்பு இரண்டு நாட்களுக்கு இருக்குமென நம்புகிறேன். காட்சிகளின் நீளம், சில தெளிவின்மை, ஒளிப்பதிவு என்பன பற்றி தேர்ந்த விமர்சகர்களுக்கு புகார்கள் இருக்கலாம். உலக சினிமா, ஹொலிவூட், தமிழ் சினிமா என்று ஒப்பிட்டு நம் திறமை சார்ந்து பேசிக் கொள்ளலாம். ஆனால், ஒரு சாதாரண பார்வையாளனான என்னை அப்படியே ஈர்த்துக் கொண்டது. எனக்கு படம் பார்க்கும் அந்த நேரத்தில் கிடைத்த அனுபவம், நான் எதிர்பார்த்ததற்கு மிக மிக அதிகமானது.

இது முழுக்க முழுக்க எம்மவர் அடையாளத்துடன் வந்திருக்கும் படம். இந்தத் திரைக்கதையமைப்பு தமிழ்ப்படங்களில் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. தவிர, எடுத்தாளப்பட்டிருக்கும் பிரச்சினைகள், களம் முழுக்க எங்களின் வாழ்வும், ஒரு முழு நீளத்திரைப்படமாக முற்றிலும் புதிதானது என்றே நம்புகிறேன். நிச்சயமாக, மனப்பூர்வமாகவே எம்மவரின் சினிமா என்று பெருமை கொள்ளலாம்!

இயக்குனர் - லெனின் M. சிவம்
மொழி - தமிழ்
நாடு - கனடா

(4தமிழ்மீடியாவில் வெளியான என் கட்டுரை இது)

Friday, September 5, 2014

என்னைத்தவிர யாருக்கு?

'எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?' துயரம் துரத்தும்போது கேட்டுக் கொள்ளும் டெம்ப்ளேட் கேள்வி. நீங்கள் ஒருமுறையேனும் கேட்டிருக்கிறீகளா? நான் பலமுறை கேட்டுவிட்டுக் கேள்வியை மாற்றி விட்டேன். 'என்னைத்தவிர யாருக்கு இப்பிடியெல்லாம் நடக்கும்?' - அது,மிகுந்த தன்னம்பிக்கையையும், ஒருவித மமதையையும் கொடுத்துவிடுகிறது.

கடந்த என் பிறந்தநாள். காலை நன்றாக விடிந்திருந்தது. முதல்நாள் மாலை கணணி வேலை செய்வதை நிறுத்தியிருந்தது.டிஸ்ப்ளே வரவில்லை.அன்றைக்கு என்று பார்த்து எனக்கு கணனியில் வேலையிருந்தது.திட்டமிட்டு விரைவாகச் செய்துமுடிக்க நினைத்திருந்தேன்.இனி கொண்டுபோய் திருத்துவது சாத்தியமில்லை, காலையில் பார்த்துக் கொள்ளலாம் என மனதைத் தேற்றிக் கொண்டேன். அன்றைய இரவைக் கடப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. இணையத்துக்கு முழுமையாக அடிமையாகிப் போயிருந்ததை உணர்ந்தேன்.

பிறந்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளலாம் என்கிற நற்சிந்தனையுடன், அதிகாலையிலேயே எழுந்து, ஒன்பது மணிவரை காத்திருந்து, இப்படியான நேரத்தில் த்ரீவீலரே வராது என்கிற அனுபவம் கற்றுத்தந்த பாடத்தில் காத்திருக்காமல், தெருமுனைவரை சிஸ்டத்தைத் தூக்கிச் சென்று, த்ரீவீலரில் கடையை அடைந்து, பிரச்சினையைச் சொல்லி, இன்றைக்கே தேவையென்று கூறி, இருக்கையில் அமர்ந்துகொண்டேன். உஸ்ஸ்!

சோதனைகளின் முடிவில்  RAM தான் பழுதென்று மாற்றியாகிவிட்டது. 'அப்பாடா நல்லபடியா முடிஞ்சுதே... சாதிச்சுட்டம்ல!' என்கிற மமதையோடு கார்ட்டை நீட்டினேன்.
"ஸாரி பாஸ் எங்க மெஷின் அப்செட். காஷ் தாங்க இங்க ஆர்பிகோ பக்கத்தில ATM இருக்கில்ல"
ஒருகணம் மனம் துணுக்குற்றது 'நம்ம ராசி வேலை செய்ய ஆரம்பிச்சுட்டுதோ... சேச்சே இருக்காது' தைரியம் சொல்லிக்கொண்டே நடந்தேன்.

இந்தமாதிரியான என் வழமையான சூழ்நிலைக்கு மாறாக ATM இல் ஆட்களில்லை. ஆச்சரியத்துடன் நெருங்கினால், Out Of Service என்றிருந்தது. ஏறக்குறைய ஏழரை ஆரம்பமாகியிருந்தது உறுதியானது.

பேரூந்திலேறி இரண்டு நிறுத்தங்கள் கடந்து மூன்றாவதில் இறங்கி சற்று நேரம் நடந்து ATM. இரண்டு வரிசைகள் ஒன்றில் இளம்பெண்கள் பெண்கள், ஓரிரு வயோதிபர்கள். இன்னொன்றில் இளைஞர்கள்.இரண்டாவதில் நின்றுகொண்டேன். மற்றைய வரிசை நகர நேரமெடுக்கும். அதிலும் இளைஞிகள் அம்மாவிடமிருந்து காதலனின் குறுந்தகவல்களை செல்பேசியில் காப்பாற்ற பூட்டிக் கொண்ட இலக்கப் பாஸ்வேர்டைத்தான் பழக்க தோஷத்தில் முதலில் தட்டுகிறார்களாம் என்றோர் வதந்தி உலாவுகிறது. ஆக அந்த வரிசை நகர நேரமெடுக்கும் என்பது என் கணிப்பு.

என் கணிப்பு என்றும் என்னை ஏமாற்றுவதில்லை. விளைவு எப்போதும் எதிர்மாறாகவே இருக்கும்.எங்கள் வரிசை நின்றுகொண்டிருக்க மற்றைய வரிசை நகர்ந்தது. அதற்காக எல்லாம் கணிப்பதை நிறுத்திவிடப்போவதில்லை. 'விடாத கணிப்பு விட்டு விட்டு ஆப்பு ' என்பதுதானே நம் வாழ்வை எப்போதும் சுவாரசியமாக்குகிறது! எங்கள் வரிசையில் ஒவ்வொருவனும் திடீர் விஞ்ஞானியாக மாறி, இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு உண்மையைக் கண்டறிந்து சொல்லிவிடும் பாவனையில் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். 'அடப்பாவிங்களா! ஏடிஎம்-ல காசு எடுக்கிறக்கு ஏண்டா ஃபோர்ப்ளே செய்கிறீர்கள்?' - மனக்குரல் அலறியது. 

ஒருவாறாக பணத்தை எடுத்துகொண்டு, திட்டமிட்டேன். அந்தப்பக்கம் கடந்து, பேரூந்துக்கு நடந்து ஏறி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, பிறகு நடந்து.. அதைவிட நடந்தே செல்வது உசிதமானது. உச்சி வெயில். நடுத்தரவயது ஆன்டிகள் எல்லாம் அசமந்தமாக 'எங்கே செல்லும் இந்தப்பாதை ' இலக்கில்லாதது போல நடந்துகொண்டிருந்தார்கள்.

எங்கோ கடைக்குள்ளிருந்து குடையுடன் வந்த ஓர் ஆன்டி மிக இயல்பாக, உரிமையாக என் காதுக்குள் குடைக்கம்பியை சொருகினார். பிறகு எதுவும் நடக்காததுபோல அவராகவே விலகிச் சென்றார். அந்த அன்பில் ஒருகணம் நெகிழ்ந்துபோனேன். யாரவர்? என்காதைக் குடைந்துவிட வேண்டும் என்று அவரைச் செலுத்தியது எது? என்னமாதிரியான எதிர்பார்ப்பில்லாத அன்பு அது!

நடு வெய்யிலில் வீதியில் சென்றுகொண்டிருக்கும் யாரென்றே தெரியாத ஒருவனின் காதுக்குள் கம்பியைவிட்டுக் குடையத் தோன்றும் அன்பு இருக்கிறதே..அந்த அன்புதானே கடவுள்! இல்லையா?-இப்படித் தத்துவார்த்தமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, இன்னோர் ஆன்டி குடையுடன் என் மூக்கைக் குறிபார்த்து வருவது கண்டு, அவசரமாக விலகி வீதியில் இறங்கி  நடந்தேன்.

ஒரு மணிக்கு வீடு திரும்பி, மிகவும் களைத்த நிலையில்,எல்லா சோதனைகளையும் கடந்து சாதித்த திருப்தியுடன்  கணணியை பொருத்தி உயிர்ப்பித்தேன்.

கணிணி அப்படியே இருந்தது,நேற்றுப் பார்த்த மாதிரியே! 

டிஸ்ப்ளே யூனிட் போயிட்டுதா? மாத்தலாமா? மொத்தமா தூக்கி எறியலாமா? மொத்தமாக சோதித்து ஒருவழி பண்ணலாம். மறுபடியும் சிஸ்டம், மொனிட்டர் இரண்டையும் அள்ளிக் கொண்டு மீண்டும்....

"மொனிட்டரும் போயிட்டுது" , "இருக்கா?"
"யூஸ்ட் இருக்கு.. போடுவமா இல்ல புதுசா" , "புதுசா போடலாம்"
"செவண்டீன் போதுமா பெருசா இல்ல.." , "பெருசா"
"அந்தா ரோட்ல போறாரே அவர.." , "போட்டுறலாம்"
எதற்கும் தயாராக இருந்தேன்.

புதிதாக ஒன்றைத் தெரிந்து, முக்கியமாக பரிசோதித்து, மறந்து பணம்கொடுக்க கார்ட்டை எடுத்துவிட்டு...சோகமாக திரும்பினேன் மறுபடியும் ஏ.டி.எம் செல்லத் த்ரீவீலர் பிடிக்க!

திரும்பி வீடு வரும்போது பாதி வழியில் த்ரீவீலர் நின்றுவிட்டதையோ, நான் மீதித்தூரத்தை நடந்தே வந்ததையோ இவ்வளவு ஏன், என் அறைக்குள் நுழைந்து கணினியை உயிர்ப்பிக்க முனைகையில் பவர் கட் ஆகியிருந்ததையோ நான் இங்கே எழுதுவதாக இல்லை. ஏனெனில் இது தன்னம்பிக்கையூட்டும் பதிவு.சமூக அக்கறையில் எழுதப்பட்ட என் சொ(நொ)ந்த அனுபவம்!

'எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?' என்று கேட்காதீர்கள். 'என்னைத்தவிர யாருக்கு இப்பிடியெல்லாம் நடக்கும்?' தன்னம்பிக்கையுடன் கேளுங்கள்!

Monday, August 25, 2014

பரோட்டாவும் சமகாலவாழ்வும்!



மா பரோட்டாவாகிறதா இல்லை சமோசா ஆகிறதா என்பது மாவுக்குத் தெரிவதில்லை. மாறாக பிசையும் மாஸ்டருக்கே தெரியும். ஆனால் எந்தப் பரோட்டாவை யார் சாப்பிடப் போகிறார்கள் என்பது அந்த மாஸ்டருக்கே... தெரிவதில்லை. உலக மயமாக்கலில் கடைக்கோடி ஏழைக்கும் சாத்தியமான ஒரே நுகர்பொருள் பரோட்டாதான் என்பதில் உண்மையில்லாமலில்லை. ஏதோ ஒரு தருணத்தில் பரோட்டா மாஸ்டர் அய்யாச்சாமிகூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகத்தான் தெரிகிறாராம் என்பார் தோழர் பொன்னுஸ்க்கி என்கிற பொன்னுச்சாமி

இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. வெட்டிவைத்த முட்டை பரோட்டா போல கச்சிதமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு வெந்தும் வேகாமலும் அமைகிறது. பலருக்கு காய்ந்து காலாவதியாகிவிடுகிறது. இன்னும் சிலருக்கோ ஓவர் குழம்பு ஊற்றிய கொத்துப்பரோட்டா போல கொழ கொழவென்று கலவரமாகிவிடுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்கிற உண்மையை மெக்கானிக் திருமலை அண்ணனுக்கு முதலே கண்டறிந்து சொன்னவர் எங்களூர் பரோட்டா மாஸ்டர் ஐன்ஸ்டீன்தான் என்பதில் எங்களுக்கு எப்போதும் பெருமை.

'நாபியிலிருந்து கிளம்பும் அமிலச்சுனையொன்று நெஞ்சை அடைத்துக் கண்டம்வரை எரிந்து சாமம்கடந்தும் ஓயாத ஏப்பங்களாக ஒரு பரோட்டா மாஸ்டரின் கைவண்ணத்தைப் பேசியபடி காற்றில் கரைகிறது' - 'பரோட்டா உண்ட ராவுகள்'  தொகுப்பில் கவிஞ்ஞர் சங்கூவின் கவிவரிகள் நினைவுக்கு வருகின்றன.ஒரு பரோட்டா என்பது வெறும்பரோட்டா மட்டுமல்ல....வாழ்க்கையின் தத்துவமே... சரிவிடுங்கள், வெறும் பரோட்டா மட்டுமே வெறும்பரோட்டா! மற்றபடி, சேர்க்கையைப் பொறுத்து முட்டைப்பரோட்டா, கொத்துப்பரோட்டா, ஆளுப் பரோட்டா...

பரிசாரகர் வந்து ஈ மற்றும் சிந்தனையைக் கலைத்தார்.
"சொல்லுங்க"
"பரோட்டா"

வெளிப்பார்வைக்கு சாதுவாக, அழகாக மனதைப் பரபரப்படைய வைக்கும் பரோட்டாக்கள் உண்ணும்போது, அவ்வாறிருப்பதில்லை. தாடைகளின், பற்களின் கடும் உழைப்பைக் கோருபவையாகவும், சமயங்களில் கன்னத்தின் உட்தசைகளைப் பதம் பார்ப்பவையாகவும் அமைந்துவிடுநின்றன. ஒரு பரோட்டாவைப் போல வாழ்வியலைச் சொல்லிக் கொடுப்பது...

'டொக்' பரிசாரகரின் அன்பும், தண்ணீரும் ஏக காலத்தில் தெறித்தன.
ஆரம்பிக்க வேண்டியதுதான்.

வெளியே பதமாக இருந்தது, உள்ளே பசையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டது. பற்களிலும், மேலண்ணத்திலும் (கீழண்ணம் என்று இருக்கிறதா?) வெகுவாக ஒட்டிக் கொண்டது. இனி, கோக்காகோலா போட்டுத்தான் கழற்றியெடுக்க வேண்டும். நிச்சயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிதான். இதையெல்லாம் வெளியே சொல்ல முடியுமா? அப்படியே முயன்றாலும் ஒட்டிக்கொண்ட பரோட்டாதான் அனுமதிக்குமா? மூடிக் கொண்டே சாப்பிட வேண்டியதுதான். அப்படியே கேட்டாலும் நீதி கிடைத்துவிடுமா? மேலதிகமாக இரண்டு பரோட்டாக்கள் கிடைக்கலாம். நல்ல பரோட்டா தருகிறேன் என்று சொல்லிக் கொடுப்பார்கள். அதையும் நாங்கள் அல்லவா காசு கொடுத்துத் தின்று தொலைக்கவேண்டும்?

ஏதோ நம்மால் முடிந்தது. பல்லுக் குத்திக் கொண்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடலாம். யாரேனும் ஆறுதல் சொல்லலாம். அந்தப் பரோட்டக் கடைக்காரனின் சொந்தக்காரன்போல யாராவது வந்து கமெண்டில் விளக்கம் சொல்லக்கூடும்.
'சூடா இருந்திருக்கில்ல அதான் தலைவா!'
'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டாவ அவசரப்பட்டு முழுங்கிட்டீங்க பாஸ்!'

எனக்குப் புரிவதே இல்லை. பரோட்டான்னா சுட்டு, உடனே சுடச்சுட சாப்பிடவேண்டும். அதற்காகத்தானே கடைக்குப் போகிறோம்? அதென்னய்யா அது.. 'பத்து நிமிஷம் கழிச்சு'? வித்தியாசமான ரெசிப்பியோ? தனக்குப் பிடிச்சவன் அரைகுறையாச் சமைச்சத பிடிச்சு சாப்பிட்டவன் எவனைப் பாத்தாலும் 'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டா', 'பத்து மணித்தியாலம் கழிச்சு சுட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்', 'பார்சல் கட்டி பத்து நாளைக்கு அப்புறம் சாப்பிட்டிருந்தா கலக்கியிருக்கும் ' என்கிறார்கள்.

அதுகூடப் பரவாயில்லை. யாரோ ஒருவர் வந்து 'தமிழர்களின் நாக்கு இன்னும் சரியா வளரலைய்யா' என்று ஒட்டுமொத்தமாக அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். என்னய்யா கதை விடுறீங்க? இப்ப கேவலமா இருக்கிறது பத்து நாளைக்கு அப்புறம் நல்லாயிருமா? இன்னும் கேவலமாயிடாதா? என்ன, இப்ப கழுவி ஊத்துறவன்..அப்ப ஊத்தி ஊத்திக் கழுவ மாட்டானா?

இதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மார்க்கின் கைங்கரியத்தைப் பாருங்கள். ஒரேயொரு ஃபேஸ்புக்! அப்பப்பா! ஊரில் உள்ள அத்தனை பேரையும் நல்லவர்களாக்கி விட்டதைப் பாருங்கள். இந்த உலகமே அன்பால், மனித நேயத்தால், நிறைந்து மலர்ந்து கிடப்பதைப் பாருங்கள். எங்கும் ஏராளமான புத்தன், யேசுகள் எல்லாரும் கையில் லேப்டாப், செல்பேசிகள் சகிதம் ஸ்டேட்டஸ் மூலம் அன்பைப் போதிக்கும் சமகாலத்தில், ஒரு பரோட்டா குறித்து கண்டபடி சமூகப் பிரக்ஞையற்றுப் பேசிவிட முடியுமா?

'ஒரு பரோட்டாக்குப் பின்னால இருக்கிற உழைப்பைப் பற்றி உங்களுக்கு என்னய்யா தெரியும்? எத்தனை பேரோட வியர்வை, உணர்வு கலந்திருக்கு தெரியுமா? ஒரு பரோட்டா மாஸ்டர் காலைல அஞ்சு மணிலருந்து இரவு பதினோரு மணிவரைக்கும் அடுப்புக்கு முன்னால நின்னுட்டே இருக்கிறத கூட இருந்து பாத்திருக்கியா? ஒவ்வொரு பரோட்டாலயும் அசுர உழைப்பு கொட்டிக் கிடக்கு தெரியுமாய்யா? அந்த உழைப்பைப் பாருங்கைய்யா' என்கிறார்கள்.

“ஆ... ஊ... என்றாலே உழைப்பைப் பாருங்கள் என்கிறார்கள். பிறகு இன்னொன்று வைத்திருக்கிறார்கள். என்னாது... ஆங்க்.. மனசைப்பாருங்கள். செண்டிமெண்டல் பிளாக்மெயில்!

'அந்தா பாருங்க மாவைத் தொட்ட கையால நெஞ்சைச் சொறிஞ்சுக்கிட்டே நிக்கிற பரோட்டா மாஸ்டரைப் பாருங்க. அவர் சொறியிற நெஞ்சைப் பாருங்க.. அதில வளர்ந்திருக்கிற முடிதாண்டி, தோல் தாண்டி, நாடி நரம்பு தாண்டி உள்ள ஒரு மனசு இருக்கு! அந்த மனசைப்பாருங்க! அந்த மனசுக்குள்ளயும் ஒரு உணர்வு' அப்பிடி இப்பிடீன்னு ஆரம்பித்துவிடுவார்கள். மனிதாபிமானம் இல்லாத பயல் என்று முத்திரை குத்திவிடுவார்கள். நமக்கெதற்கு வம்பு?

ஆனால் ஒன்று மட்டும் புரியவேயில்லை. பசியில் காசு கொடுத்துச் சாப்பிட போகிறவன் பரோட்டா நன்றாக இருக்கிறதா என்றுதானே பார்ப்பான்? அதுதானே அவன் தேவை? பரோட்டா மாஸ்டரின் உழைப்பையோ, மனதையோ பார்ப்பதற்காக யாரும் சாப்பாட்டுக் கடைக்குப் போகிறார்களா என்ன!

Friday, August 15, 2014

மாலைநேர மயக்கம்!



அலுவலகத்திலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தேன். பிரதான வீதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள்ளேயே இப்படியொரு கிராமப்புறத்தை யாராலும் கற்பனை செய்ய முடியாது. நானும் செய்யவில்லை. நேரில் பார்த்தபிறகு எதற்குக் கற்பனை? ஆனாலும் இங்கும் பென்ஸ், ஜாக்குவார் கார்கள்தான் திரிகின்றன.

வாழ்க்கையின் விசித்திரங்களை எண்ணி வியந்தபடியே நடந்தேன். சிக்கன் பிரியாணியை ஃபுல் கட்டு கட்டியபின், இரவு சாப்பிட முடியாது என்கிற மந்தமான வயிற்றுநிலையில் வாழ்வின் அபத்தங்கள், ஏற்றத் தாழ்வுகள் குறித்த திடீர் சமூகப் பிரக்ஞையை அடைபவரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் என் தோழனே! வாருங்கள் இணைந்து நடப்போம்!

'டொக்.. டொக்'  - சீரான குளம்புச்சத்தம்..அல்ல, குதியுர்ந்த காலணிச் சத்தம் என் சிந்தனையைக் கலைத்தது. சேலை கட்டிய ஒரு பெண்மணி எனக்கு இருபதடி முன்னால் சென்று கொண்டிருந்தார். பெரும்பாலும் சிங்களப் பெண்மணிகள்தான் பொருத்தமாக, மிகத்திருத்தமாக, அழகாக, கச்சிதமாகச் சேலை உடுத்துகிறார்கள் என்கிற உண்மையைச் சொன்னால் தமிழினத் துரோகியாகச் சித்தரித்துவிடக் கூடும் என்கிற அச்சத்திலேயே பலரும் சொல்வதில்லை எனத் தெரிகிறது. நானும் அதுபற்றி ஒன்றும் சொல்வதாக இல்லை.

என்போலவே வேகமாக நடந்துகொண்டிருந்தார். ஆக, அவரை ஓவர் டேக் செய்வது சாத்தியமில்லை என்பதால் முயற்சிக்கவில்லை. ஒரு பெண்மணி நம் முன்னால் சென்றால் அவரை ஓவர்டேக் செய்து விடவேண்டும், அல்லாவிடில் அவரைப் பின்தொடர்வது போலாகிவிடும் என்கிற ஒழுக்கவியல் சார்ந்த உயரிய கொள்கை உங்களுக்கும் இருக்கிறதா? அப்படியானால் நீங்களும், நான் வளர்ந்த யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் செல்லும் பெண்மணியை ஓவர்டேக் செய்து பழகியதால் ஏற்பட்ட சிந்தனை என்பேன். ஆனால் பாருங்கள், சரியாக நாம் கடந்து செல்ல முற்படும் நேரம்தான் அவர்களும் நமக்கு இணையான வேகத்தில் செல்வர்கள். 'அடியே எடுபட்ட சிறுக்கி..' என பாரதிராஜா பட அப்பத்தா போல உங்கள் மனமும் அப்போதெல்லாம் அலறியிருக்கலாம்.

அந்தப் பெண்மணி அழகானவராக இருக்கக்கூடும். சிங்களவர்களின் பாரம்பரிய கண்டிய நடனம் பயின்றிருப்பார் என்று தோன்றியது. சிலரைப் பார்க்கும்போதே உங்களுக்கும் அப்படி உறுதியாகத் தோன்றுகிறதா? கலைக்கண்கள் உங்களுக்கு. எந்த நேரத்திலும் அந்தப்பெண்மணி பின்னோக்கி, பின்புறமாகவே, கால்களை நாலைந்து அடிகள் எட்டி வைத்து, இடையை ஒடித்து, ஒரு அரை வட்ட U Turn அடித்து, ஒரு கண்டிய நடன ஸ்டெப் போடுவார். கண்டிப்பாக அந்தக் காட்சியை நான் தவற விட்டுவிடக் கூடாது என எண்ணிக் கொண்டேன்.

தூரத்தே குதிரையின் கனைப்பொலி கேட்டது! ச்சே! என்ன இது பிரமை! இந்தத் தமிழ்சினிமாதான் நம் மனதை எந்த அளவுக்குக் கெடுத்து வைத்திருக்கிறது பாருங்கள். கலாச்சாரக் காவலர்கள் சினிமா சமுதாயத்தைச் சீரழிக்கிறது எனப்பொங்குவதில் நியாயம் இருக்கிறதுதான் போலும். சடுதியாக என் சமூக சிந்தனை விழித்துக் கொண்டது.

மீண்டும் சிதறவிட்ட என் சிந்தனையைக்கூட்டிப் பொறுக்கிப் பிரக்ஞை பெற்று நிகழுலகைக் கவனித்தேன். அப்பெண்மணி எனக்கு ஏழடி தூரத்தில் செல்வதைக்கண்டு திடுக்குற்றேன். 'உண்மையிலேயே அந்த கண்டிய நடன ஸ்டெப் போட்டிருப்பாரோ? ச்சே மிஸ் பண்ணிவிட்டோமே!' என் சமூக சிந்தனை செய்த சதியை நொந்து கொண்டே எதிரில் பார்த்தால் இரண்டு குதிரைகள் வந்துகொண்டிருந்தன. இருங்கள் குதிரைகள் என்றால் உண்மையான குதிரைகள். கடற்கரையில் பரிதாபமாக, நன்கு வளர்ந்த மனிதத் தடிமாடுகளை வயிற்றுப் பிழைப்புக்காகச் சுமந்து ஓடுகின்றனவே அதே குதிரைகள்.

பெண்மணி பயந்து போய் பின்னடைந்திருக்கிறார். நான் இன்னும் பயந்துபோய் வீதியின் அடுத்த கரைக்கு கடந்து போய்விடலாமா எனத்தீவிரமாக யோசித்தேன். வாய்ப்பிருக்கவில்லை. குதிரைகளை இப்படியா வளர்ப்பார்கள்? மாடுகள் வீதியில் திரிவது போல தனியாக வரும் குதிரையை எங்கேயும் பார்த்ததில்லையே! மனதிற்குள் பீதி பீடித்துக் கொண்டது. நான் தனியாக என்றால் பரவாயில்லை. அந்தப்பெண்மணி குறித்து இன்னும் பீதியடைந்தேன். அவரும் நான் பயந்தமாதிரியே பயந்தாரா? இல்லை, வேறுமாதிரிப் பயந்தாரா எதுவும் புரியவில்லை. அந்தக் குதிரைகள் என்ன நினைக்கின்றனவோ? மனிதர்கள் நினைப்பதையே புரிந்து கொள்ள முடியாதபோது குதிரை நினைப்பதை எங்ஙனம் புரிந்துகொள்வது?

மீண்டும் என் சிந்தனை கலைந்து பார்க்க, குதிரைகள் நெருங்கியிருந்தன. அந்தப் பெண்மணியைக் காணவில்லை. 'எங்கடா?' ஆச்சரியப்பட்டு தேடினால் என்பின்னால் நின்றுகொண்டிருந்தார். 'அய்யய்யோ இது எப்படா நடந்திச்சு?' மனம் அலறியது. இப்போது கலவரம் அதிகமாகியிருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு மெதுவாக நடந்தேன்.

அப்படி எந்த விபரீதமும் இடம்பெறவில்லை. என்னை மெதுவாகக் கடந்த குதிரை, "நான் பயந்துபோய்விட்டேன்" பதற்றமான சிரிப்புடன் கூடிய குரலில். ஆச்சரியமாக இருந்தது. 'அந்தப் பெண்மணியைப் பார்த்து குதிரை எதற்குப் பயந்து போயிற்று?' 'அதைவிட குதிரை சிங்களம் பேசுமா?' 'பெண்குதிரையா அது?' துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்தேன்.

அந்தப் பெண்மணி சிரித்தார். குதிரைகள் கண்டுகொள்ளவில்லை. தம்பாட்டில் வீதியோரமாக் இருந்த புற்களை மேய்ந்துகொண்டு சென்றன. குதிரைகள் பாவம். அவை, குதிரைகளையே குதிரைகளாகப் பார்க்கின்றன. தவறாக நினைத்ததற்காகக் குதிரைகளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டே நடந்தேன்.

Tuesday, August 5, 2014

ஸ்டேட்டஸ்!

வவுனியா ரயில்வே ஸ்டேஷன். பளையிலிருந்து ரயில் வந்து நின்றதும் அவசரமாக ஏறிக் கொண்டேன். உண்மையைச் சொன்னால் சரியான நேரத்திற்கு ரயில் வந்து தொலைத்ததில், ஒரு ஃபேஸ்புக் போராளியாக இந்தச் சமூகத்தின் பொறுப்பின்மையைச் சாடும் ஒரு ஸ்டேட்டஸ் கைநழுவிப்போன சலிப்புடன் ஏறினேன். என்போன்ற போராளிகளுக்கு பார்க்குமிடமெங்கும் சமூக அவலங்களும், ஒழுங்கின்மையுமே நீக்கமற நிறைந்திருக்கவேண்டும். எல்லாமே சரியாக இருந்தால் என்னதான் செய்வது?

எனது டிக்கட்டில் B1 54 என எழுதியிருந்தது. B கம்பார்ட்மெண்டில் ஏறியிருந்தேன், 'B1 எங்கே?' நகரும்போதே டிக்கட் பரிசோதகரின் குரல் இதுதான் B1 என்று யாருக்கோ சொன்னது. 54ம் இலக்கத்தைக் கண்டுபிடித்து அமர முற்படுகையில் கவனித்தேன். எனக்கு அருகில் ஒரு தமிழ்ப் பெண்மணி. இப்போது குழப்பமாக இருந்தது. எனது டிக்கட் இலக்கத்தை மீண்டும் சரி பார்த்துக் கொண்டேன். ஒருவேளை என் தவறா? கம்பார்ட்மெண்ட்டில் A1 என்று எழுதியிருந்தது. 'குழப்புறானுகளே...'யோசித்தபடி என் பயணப்பையை மேலே வைத்தேன்.

அந்தப் பெண்மணி வன்னியிலிருந்து வருகிறார் எனத் தோன்றியது. ஏழ்மை அப்பட்டமாகத் தெரிந்தது. யாரேனும் உறவினர் வீட்டுக்குச் செல்பவராக இருக்கக்கூடும். தவறுதலாக இந்த இருக்கையில் வந்து அமர்ந்திருக்கலாம். அல்லது அவருக்கான டிக்கெட்டைப் பதிவு செய்தவர் ஒரு ஆணாக இருந்து, பயணப்படுபவர் பெண் எனக் குறிப்பிடாது விட்டிருக்கலாம். அதனால் ஆண்களுக்கருகில் அமர நேர்ந்துவிடும். பதிவு செய்தவரின் தவறை விட, இருக்கையின் குழப்பமாக இருக்கவே சாத்தியம் அதிகம். டிக்கட் சோதகர் வந்து அந்தப் பெண்மணி இருக்கை மாறி அமர்ந்ததைச் சுட்டிக் காட்டக் கூடும்.

வழமைபோல வாயிற் கதவருகே வந்து நின்றுகொண்டு பயணத்தைத் தொடங்கினேன். அனுராதபுரம் நெருங்கியதும் வந்தமர்ந்தேன்.

"தன்ர புத்தக வெளியீட்டு விழா ஒண்டுக்கும் சேர் வாறேல்ல எண்டு ரெண்டுமூண்டு பேரிட்ட குறையாச் சொல்லியிருக்கிறார். அதான் இந்தமுறை எப்பிடியும் போவேனுமேண்டு.." - சத்தமாகப் பக்கத்து முன்வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தவர் ஒரு தமிழ் ஆசிரியர்.

வெளிர் மஞ்சள் நிறத்தில் பச்சைப் பூக்கள் பெரிதாக வரைந்த சேர்ட் அணிந்திருந்தார். பின்மண்டையில் ஒரு டென்னிஸ் பந்தின் அளவிற்குச் சமமாக வழுக்கை. அதை மறைக்க இடது பக்கமாக சற்றே நீளமாக முடிவளர்த்திருந்தார். மூன்று கற்றையாக இருந்தது. அவற்றை அப்படியே வளைத்து வழுக்கையை மூடித் தொப்பி அணிந்திருந்தார். தொப்பியைக் கழற்றியதும் மின்விசிறியின் உதவியுடன் முடிக்கற்றைகள் விடுதலை பெற்று இரண்டு கற்றை மகரதோரணம் போல தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. மூன்றாவது கற்றை தலைகீழாகப்(?) பறக்கும் பட்டத்தின் வால் போல மேல்நோக்கிப் பறந்துகொண்டிருந்தது.

சோதகர் என்னிடம் வந்து டிக்கட் சரிபார்த்தார். அந்தப் பெண்மணியிடம் டிக்கட் கேட்க, அவர் என்னைத் தாண்டி சற்றுப் பின்னால் கையைக் காட்டினார். ஏராளமாக இருக்கையை நிறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் இருப்பதாகச் சிங்களத்தில் சொன்னார். ஆக, அவர்தான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். ஆண்களுக்கான இரண்டு பயணச்சீட்டைப், பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், வெகுகவனமாக தனது அருகில் வந்துவிடாமல் வேறு வேறு இருக்கையைப் பதிவு செய்திருக்கிறார். இரண்டு பயணச்சீட்டைப் பதிவு செய்யும்போது அருகருகாகவே கொடுப்பார்கள், நாம் சொல்ல வேண்டியதில்லை. தனித்தனியாக பதிவு செய்வதற்குத்தான் பேச வேண்டும்.

இப்போது புரிந்தது. அவர் தனது வீட்டிற்குப் பணியாளாக அந்தப்பெண்ணை அழைத்துச் செல்கிறார். தன் அருகே வேலைக்காரியை அமரச் செய்து அழைத்துச் செல்வது அவரது கவுரவத்தைப் பாதிக்கும் என முடிவு செய்து, அதற்காக மிகுந்த சிரத்தையெடுத்துப் பேசி, தன கவுரவத்தைக் காப்பாற்றியிருக்கிறார். பார்க்கும்போது, திருவாளர் கவுரவம் ஒரு சிங்களவர் எனத் தெரிந்தது.

"ஒழுங்காப் பள்ளிக்கூடம் போகோணும்... ஹரிஷிட்ட குடுங்கோ" என்றார் அந்தப் பெண்மணி தொலைபேசியில். இரண்டு குழந்தைகள் இருக்கக் கூடும். வருமானத்திற்கு வேறுவழியின்றிப் புறப்பட்டிருக்கலாம்.

சிங்களவர்கள் வன்னியிலிருந்து வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஏதோ ஒரு வித பழிவாங்கல் போலவே எண்ணத் தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எல்லாவிதமான வளங்களோடும், தன்னிறைவோடும், வந்தாரை வாழவைக்கும் நல்லிதயங்களோடு வாழ்ந்தவர்கள் வன்னிமக்கள். இறுதிப்போர் மிக மோசமாகப் பழிவாங்கிவிட்டது. கொஞ்சம் மனதைவிட்டுப் புத்தியைப் பாவித்து யோசித்தால், அவர்களுக்குத் தேவை வேலை, வருமானம். அதைக் கொடுக்க விரும்புபவர்கள், மனமிருப்பவர்கள் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்! ஆனால் நான் அப்படி யோசிப்பதாக இல்லை. என் ஃபேஸ்புக் போராளிப்பார்வையில், இது சற்றும் அனுமதிக்க முடியாத ஒரு விடயம். இது பற்றி உடனே ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிடலாமா என கை பரபரக்க, யோசித்துக் கொண்டிருந்தேன்.

"அது பாருங்கோ.. அவ்வளவு குருபக்தி..அவரோட அவ்வளவு திறமையும் அப்படியே அவனுக்கு வந்திட்டுது..." புளகாங்கிதமடைந்து யாரையோ பாராட்டிக் கொண்டிருந்தார் தமிழ். யூ-ட்யூபில் 'சிரிச்சா போச்சு' நிகழ்ச்சி பார்க்கும் பழக்கமுடைய எனக்கு வடிவேல் பாலாஜி, சிங்கப்பூர் தீபன் எல்லோரும் வரிசையாக ஞாபகம் வந்தார்கள். யாரென்று உத்தேசிக்க முடியவில்லை.

"கூல் வத்துற பீம.." தண்ணீர்ப் போத்தல் விற்பவர் கூவிக் கொண்டு கடந்து போனார். திருவாளர் கவுரவம் தான்மட்டும் ஒரு மைலோ வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். அதிர்ச்சியாக, மிகுந்த கோபமாக இருந்தது. இந்தச் சிங்களவர்களே இப்படித்தான். அந்தப் பெண்மணி பற்றிய எந்த அக்கறையுமில்லாமல், தண்ணீர் வேண்டுமா? என ஒரு வார்த்தை கேட்காமல் தனக்கு மட்டும். பாவம் அந்தத் தமிழ்ப்பெண்மணி! இவர் வீட்டிலா வேலை செய்யப் போகிறார்? இதே கோபத்துடன், இந்தச்சம்பவத்தை நான் மிகுந்த ஆக்ரோசமான ஸ்டேட்டஸ் போட்டேயாகவேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன்.

"வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும் எண்டுற மாதிரி...." அவரே கண்டுபிடித்த பழமொழியோ என்னவோ. சொல்லிவிட்டு ஒரு பெருமிதச் சிரிப்புடன் அவருக்கு நேர் பக்கத்து இருக்கையிலிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்தார் தமிழ். ஆனால் கொடுமையைப் பாருங்கள், அவர்கள் இது எதையும் கவனிப்பதாக இல்லை, காதலர்கள்! கவனித்தாலும் அவர்கள் அதுகுறித்து அலட்டிக் கொள்ளப் போவதில்லை. காரணம் அவர்கள் சிங்களவர்கள்.

"அதில பாருங்கோ டீவில கேட்டாங்கள் என்ன.. நீங்கள் ஒரு மருத்துவத்துறை மாணவரா இருந்துகொண்டு எப்பிடி தமிழ்ல இவ்வளவு ஆர்வமெண்டு..அவன் சொன்னான் என்ர தமிழாசிரியர்தான் காரணமெண்டு... "
வலதுகால் மேல் இடது காலை நான்கு போல் போட்டுக் கொண்டு வலதுகையால் கணுக்காலைப் பிடித்துக் கொண்டு, வேகமாகக் காலை ஆட்டியபடி ஒரு அமர்த்தலான பொஷிஷனில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் தமிழ்! பக்கத்திலிருந்த சக தமிழ் ஒரு இஸ்லாமியர். புன்னகையுடன் அமர்ந்திருந்தார். அவர் முகத்தின் களைப்பு நோன்பு காரணமாக ஏற்பட்டதா சக பயணியால் ஏற்பட்டதா? அனுமானிக்க முடியவில்லை.

"ஓமோம்..அகளங்கன் சேர் அப்ப கம்பன் கழகத்தில இருந்தவர் பழைய ஆள் பிறகு விலத்தீட்டார்..போன முறை கம்பன் விழா நல்லாச் செய்தவங்கள் அதில..." சொல்லிக் கொண்டே பக்கத்து இருக்கைக் காதலர்களைத் தற்செயலாகப்  பார்த்தார்.

சரியாக அதே நேரத்தில் அந்தக்காதலி, காதலனை வாரித்தன் தன் தோள்மேல் தலை சாயவைத்து அவன் தலைமுடியைக் கோதிக் கொண்டிருந்தார். தமிழ், இந்தக் காட்சியைக் கண்டதும் சற்றே துணுக்குற்றவர் போல முகத்தைத் திருப்பிக் கொண்டார் . மறுகணமே, சடுதியாகத் திரும்பித்தன் கண்களை நம்பிக்கொண்டார். இதுபோன்ற காட்சிகள் தமிழுக்கு ஒவ்வாததுபோலும். மீண்டும் ஓரிரு தடவை பார்த்துக் கொண்டார். கம்பராமாயணத்தில் இதுபோன்ற வர்ணனைகள் இருக்குமா? அல்லது உண்மைகளுக்கு அப்பாற்பட்ட எந்தவித ப்ரோபோஷிஷனும் இல்லாத மிகை உவமானக் காட்சிகள்  இருக்ககூடுமோ?அயோத்திமாநகரத்துப் பெண்கள் தங்கள் காதலனை இறுகத் தழுவிக் கொண்டு அவன் முதுகுப் பகுதியை இருகைகளாலும் தடவிக் கொள்கிறார்கள். அதாவது சோதனை செய்கிறார்களாம். தங்கள் கூரான முலைகள் அவன் நெஞ்சை ஊடுருவி வெளிவந்திருக்கின்றனவோ? எனச் சொல்லியிருந்தது பத்தாம் வகுப்பில் நான்படித்த பதின்வயதினருக்கான ஓர் இலக்கியப் புத்தகத்தில்.

செல்பேசியில் ஃபேஸ்புக்கில் ஆழ்ந்திருந்தேன். அந்தப் பெண்மணி எதையோ கேட்க விளைவதுபோல, சற்றே அவஸ்தைப் படுவதைப்போல தோன்றியது என் பிரமையாகக் கூட இருக்கலாம். ஒருவேளை தண்ணீர் தேவையா? இயற்கை உபாதையா? கழிவறை எங்கேயென்று கேட்கக் கூச்சமா? தெரியவில்லை. என்னிடம் யாரும் எந்த உதவியும் கேட்காமல் நான் வலியச்சென்று உதவுபவனில்லை. தவிர, பெண்கள் என்னிடம் பேசினாலன்றி நானாகப் பேசமாட்டேன். இதுவும் தமிழன் பெருமையில் அடங்குமா எனத் தெரியவில்லை. ஆனால், பக்கத்திலிருப்பவர்களை பொருட்படுத்துவதில்லையே தவிர, உலகில் எங்கோ யாருக்கோ நடக்கும் கொடுமைக்கு கண்டனம் தெரிவிப்பேன். எனது தொலைநோக்குப் பார்வை குறித்து எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை.

கையிலிருந்த ரம்புட்டான் பழங்களை மிக அவசரமாகக் காலி செய்துகொண்டிருந்தார் தமிழ். ஒருவேளை பக்கத்து இருக்கை நண்பர் நோன்பை முடித்துவிட்டால் பறித்துத் தின்றுவிடுவார் என்பதுபோல. என் பின்பக்கமாகத் தமிழில் பேச்சுக்குரல் கேட்டது. திரும்பிக் கவனித்தேன். திருவாளர் கவுரவம் பக்கத்து இருக்கைக் காரருடன் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

கவுரவம் தமிழர் என்கிற உண்மை எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. என் ஸ்டேட்டஸ் ஆட்டங்காணத் தொடங்கியிருந்தது. இப்போது எடிட்டிங் மோடிலிருந்தது. எப்போது வேண்டுமானாலும் மனதிலிருந்து மானசீகமாக ரிமூவ் ஆகிவிடலாம்.
"ஓ! யாழ்ப்பாணம்தான் அப்பவே வந்திட்டம்" இது அதிர்ச்சியாக இல்லை. நான் சரியாக ஊகித்தது குறித்து ஒரு தமிழனாக மகிழ்ச்சி கொள்ள, பெருமைப்பட ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என யோசித்துக் கொண்டிருந்தேன்.

"என்ன இருந்தாலும் தமிழுக்கெண்டொரு பாரம்பரியம் இருக்கில்ல?"
உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார் தமிழ். இன்னும் கம்பராமாயணம், கம்பன்கழகம், தமிழ்விழா என்றே பேசிக் கொண்டிருந்தார். ஃபேஸ்புக் பற்றி அவருக்குச் சரியாகத் தெரியவில்லைப் போலும். உலகின் மிகப்பெரிய கோவில் கட்டியது, தஞ்சைப் பெரிய கோவிலைச் சாய்த்துவிடாமல் நேராகவே கட்டியது உட்பட ஒரு தமிழனாக பெருமைப்படுவதற்கு ஏராளமான சாத்தியங்களை ஃபேஸ்புக் வழங்குவதை பலரும், குறிப்பாகத் தமிழ் ஆசிரியர்கள் அறிவதில்லை என்பது பெரும் சோகம்.

ரயில் புறக்கோட்டை நிலையத்தை நெருங்கியது. சரியான நேரத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த தமிழ், சக தமிழ் தட்டி எழுப்ப, திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார். கவுரவம் என்னருகே வந்து நின்று, "வெள்ளென போனாத்தான் பஸ்ஸ பிடிச்சு கெதியா வீட்ட போகலாம்" என்றொரு அறிவுறுத்தலை வழங்கினார். 'புகையிரதம் இன்னும் சற்று நேரத்தில் முதலாவது மேடைக்கு வரும்' பாணியில் வழங்கப்பட்ட அந்த அறிவுறுத்தல் யாருக்கானது? என என்னைக் குழம்பவிடாமல் அந்தப்பெண்மணி அவசரமாக எழுந்து சென்றார். கவுரவத்துடன் பக்கத்துப் பெட்டிக்குச் சென்றார். ஆச்சரியகரமாக எல்லாப்பெட்டிகளும் ஒரேநேரத்திலேயே ஓய்வுக்கு வந்தன.

கூட்டத்தினரோடு மெதுவாக நகர்ந்து, வீதிக்கு வந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பேரூந்தில் ஏறினேன். அதே தமிழ்ப்பெண்மணி தனியாக அமர்ந்திருந்தார். மற்றவரிசையில் இரண்டு இருக்கைகள் தள்ளி எனக்குப் பக்கத்தில் கவுரவம் அமர்ந்திருந்தார். வெள்ளவத்தைக்கு இரண்டு டிக்கட் எடுத்தார். ஒரே ரயில், பேரூந்து, ஒரே விலையான டிக்கெட்டில் வெகு சிரத்தையாகத் தனது கவுரவத்தை நிலைநாட்டும் அவரது முயற்சிகளை வியந்து கொள்ளத் தோன்றியது. பெருமையாக இருந்தது. என்போலவே கவுரவமும் செல்பேசியில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தார். அவரும், ஏதேனும் தமிழன் பெருமையை மிகுந்த பெருமையுடன் பகிரக் கூடும். தமிழனுக் கெதிரான கொடுமையைச் சாடும் ஸ்டேட்டஸ்க்கு ஆவேசமாக லைக் செய்யக்கூடும். என்னைப்போலவே லைக்குதல், பகிர்தல் மூலம் எந்தக் கொடுமையையும் தீர்த்துவிட முடியும் என கவுரவமும் நம்பக்கூடும்.

நம்பிக்கை எதையும் சாத்தியமாக்கும். நானும் நம்புகிறேன். புலரும் பொழுதில் கவுரவத்தின் வீட்டில் புதிய சூழலில் அந்தப் பெண்மணியின் புது வாழ்க்கை நல்லபடியாகத் தொடங்கும். கவுரத்தின் குடும்பத்தினர் அந்தப் பெண்மணியை நீ, வா, போ என ஒருமையில் அழைக்க மாட்டார்கள். முக்கியமாக குழந்தைகளும் அப்படி அழைக்க மாட்டார்கள். சரியானவேளையில் அவருக்கு நல்ல உணவு கிடைக்கும். நல்ல படுக்கை வசதிகள் வழங்கப்படும். அவர் கவுரவமாக நடத்தப்படுவார். வீட்டுப் பணியாளரைத் தம்மில் ஒருவராக நினைக்கும் குடும்பங்களில் ஒன்றாக கவுரவம் குடும்பமும் இருக்கும். வரும்நாட்களில் அவர் குழந்தைகள் உண்மையில் மகிழ்ச்சியான தம் அம்மாவின் குரலையே செல்பேசியில் கேட்பார்கள். என் நம்பிக்கையில், நான் உத்தேசித்திருந்த என் ஆக்ரோசமான ஸ்டேட்டஸ் இப்போது முற்றாக அழிந்துபோயிருந்தது.

இப்போது சிங்கள சினிமா இயக்குனர் ஒருவர் தமிழரின் உணர்வுகளைக் கேவலப்படுத்திவிட்டது குறித்து ஆக்ரோசமாகப் பேசிய ஒரு ஸ்டேட்டஸ் என்னைக் கவர்ந்தது. அதெப்படி தமிழ்ப்பெண் சிங்கள இளைஞனைக் காதலிக்க முடியும்? இதற்குமுன் நடந்திருக்கிறதா? இனித்தான் நடக்க முடியுமா? சரித்திர, பூகோள, விஞ்ஞான, இலக்கிய இன்னபிற எந்தரீதியிலாவது இது சாத்தியமா? அனுமதிக்கலாமா? கொடுமையைக் கண்டதும் பொங்கியெழுந்து ஒரு ஆவேச லைக் போட்டேன். அதே ஸ்டேட்டஸ்க்கு கவுரவமும் லைக் போட்டிருக்கலாம்.

Wednesday, July 23, 2014

மெரூன் கலர் ஜட்டி!

வாழ்வின் துன்பங்களுக்கு உயிரின், உடைமைகளின் இழப்புகள் மட்டுமே காரணமாக அமைவதில்லை. மாறாக ஒரு மெரூன் கலர் ஜட்டியின் வரவு கூட காரணமாக அமைந்துவிடலாம்.

நெடுந்தூரப் பேரூந்துப் பிரயாணங்கள் எனக்குப் புதிதல்ல. கொழும்பு - யாழ் குறைவாகவே இருந்தாலும், கொழும்பு - திருகோணமலை வாரம் இருமுறை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் பயணித்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் குளிரூட்டப்பட்ட கொகுசுப் பேரூந்துகளின் பாதுகாப்பான பிரயாணங்கள். உடைமைகள் விஷயத்தில் எந்தக் கவலையுமின்றி, எல்லாவற்றையும் இருக்கைக்கு மேலே வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கிவிடலாம். வசதி வாய்ப்புகள் கவலையீனத்தையும் சேர்த்தே பழக்கப்படுத்திவிடுகின்றன போலும்! பாருங்கள் என் தவறை நியாயப்படுத்த எவ்வளவு பேச வேண்டியிருக்கிறது?

கொழும்பிலிருந்து வவுனியா பகலில் செல்ல வேறுவழியில்லாமல் ஒரு சாதா பேரூந்தில் ஏறி, யன்னலோரம் அமர்ந்து மேலே இடமில்லாததால் மடியில் பயணப்பையை வைத்திருந்தேன். அருகில் அதே போல ஒரு சிங்கள இளைஞனும் அமர்ந்திருந்தார். அர்ஜூனின் மொக்கைப் படம் ஒரு டிவியில் போய்க்கொண்டிருந்தது. படம் முடிந்து பாதித்தூரத்தில் குழந்தையுடன் வந்த முஸ்லிம் பெண்மணிக்கு தன் இருக்கையைக் கொடுத்துவிட்டு எழுந்து நின்றுகொண்டார் அந்த சிங்கள இளைஞன். பின்னர் வேறு இருக்கை கிடைக்க, என்னிடமிருந்த அவரது பையையும் பெற்றுக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

பிறருக்கு உதவி செய்வது எனக்கு உவப்பானதுதான். ஆனால் அதன் பின் விளைவுகள் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை என்பது என் அனுபவம். இருந்தாலும் ஒரு சமூக அக்கறையாளனாகவோ, ஃபேஸ்புக் போராளியாகவோ மாறும் முனைப்போ, மமதையோ என்னவோ ஒன்று. என் ராசி தெரிந்தும் ரிஸ்க் எடுத்துவிடுகிறேன். இடையில் இறங்கி விட்டு திரும்ப அமரும்போது அந்தப் பெண்மணி எனக்காக வழிவிட்டு நகர்வது கஷ்டமாக இருக்க, "உங்களுக்கு ஈசின்னா அந்த சைட்ல இருங்க" என்றேன். சிறு புன்முறுவலோடு 'தாங்க்ஸ்'.

அந்தக் குழந்தை சிரித்துக்கொண்டே என்கையைப் பிடித்து விளையாடியது. மறுபக்கத்தில் மூவர் அமரும் இருக்கையின் கரையில் இருந்த தாடிவைத்த அண்ணன் குழந்தையோடு அவ்வப்போது கதைகேட்டு சிரித்தபடியே வந்தார். அந்தப்பெண்மணியின் கணவர். "இதில வரப்போறீங்களா?" மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி அமர்ந்துகொண்டார். நான் அவரது இடத்தில் அமர்ந்துகொண்டேன். மேலே பையை வைக்க இடமிருந்தது. வைத்தேன். அவ்வளவுதான். இறங்கும்போது இருக்கவில்லை.

தெரியாமலோ, தெரிந்தோ, மாறியோ, மாறாமலோ யாரோ எடுத்துக் கொண்டு மதவாச்சியில் இறங்கிவிட்டார்கள். எனது பயணப்பை இருந்த இடத்திற்கு அருகில் இன்னொரு சிறிய பை இருந்தது. ஒருவேளை  மாறியிருக்கக் கூடும் என நம்ப விரும்பியபடி இறங்கினேன். கண்டக்டர் கேட்டார். இல்லை என்றேன். "தூங்கிட்டா இருந்தீங்க?" ஒற்றைக் கேள்வியுடன் நேரம் அனுமதிக்காததால் யாழ் விரைந்தது பேரூந்து.

'தூங்கிட்டா இருந்தீங்க?' - அப்போதைக்கு அதுதான் தமிழின் ஆகச்சிறந்த கெட்ட வார்த்தையாக தோன்றியது.

ஒருகணம் எதுவும் தோன்றாமல் வெறுமையாக இருந்தது, ஓர் பயணத்தின்போது பையைத் தொலைத்துவிட்டு  வெறுங்கையுடன் நிற்கும்போது ஏற்படும் உணர்வே வெறுமை எனப் புரிந்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக வவுனியாவில் எங்கள் வழமையான சஹானாஸ் துணிக்கடை நோக்கி பஜார் வீதியூடாக நடந்தேன். கடையில் தெரிந்த முகம் ஒன்றையும் காணவில்லை. 'ஒருவேளை ஒரே பெயரில் வேறு கடையோ?' நீளமான உட்பகுதிக்குச் செல்கையில் முதலாளி எதிர்ப்பட்டார்.
"ஹாய் நானா! எப்பிடி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் தம்பி வாங்க.." குத்துமதிப்பாக குழப்பமாக பேசினார்.

எட்டு வருஷத்துக்கு முதல் பார்த்தது. அவர் தம்பிகளுக்கு அடையாளம் தெரியும். யாரையும் காணவில்லை. அவசரமாக என்னென்ன தேவையென்று சொல்லி, அவசரமாக தெரிவு செய்து, எனக்கு உதவிய கடைத்தம்பி சிவப்பு நிறத்தில் அண்டர் வெயார் எடுத்துக் காட்டினான். "சரிய்யா ஆனா லைட் கலர்ல வைங்க பாஸ் ப்ளூ, வைட், ஆஷ் இப்பிடி..." "ஒக்கே பாஸ்" பவ்வியமாக சொன்னான்.

இடையில் ஒருவர் வந்து, "உங்களை நான் பார்த்திருக்கேன். எங்க இருந்தீங்க?" என்றார். சொன்னேன். விலை பார்க்க அவகாசம் இருக்கவில்லை. சஹானாசில் எனக்கு இதற்கு முன்னர் பேரம் பேச எப்போதும் அவசியம் இருந்ததில்லை. அதே ஞாபகத்தில் கவுண்டருக்கு வந்தேன்.
"உங்களுக்கு குறைச்சுப் போட்டிருக்கேன்"அதே தம்பி பவ்வியமாக சொன்னான். ஆறாயிரம் ரூபாய் வந்தது.
வரும்போது முதலாளி "தம்பி எங்கடா இப்ப?" சொன்னேன். "இந்தப்பக்கம் வந்தா வாடாப்பா!" என்றார் வழமைபோல அடையாளம் தெரிந்தவராக.

கொஞ்சம் ஓய்வானதும், மனம் தொலைந்துபோனவை பற்றிய கணக்கு போட்டது. அதிகமில்லை இரண்டு ஷேர்ட், இரண்டு பாண்ட்ஸ், இரண்டு ஜட்டி, ஃபோன் சார்ஜர், பயணப்பை என மொத்தம் இருபதாயிரத்துக்கு கணக்கு வந்தது. ஆயாசமாக இருந்தது. பணம் என்பதை விட தேடி வாங்கியது என்பதும், ஒருமுறை மட்டுமே அணிந்தவை என்பதும் சற்றே உறுத்தியது. எடுத்தவனுக்கு லக் என்று ரணகளத்திலும் யோசிக்கத் தோன்றியது. மற்றபடி அலட்டிக் கொள்ளவில்லை.

உறவுகளைச் சந்தித்ததும் அளவளாவியதும் மகிழ்ச்சியை, மனநிறைவைக் கொடுத்தது. அது ஓரிரு நாட்களோ, ஓரிரு மனித்தியாலங்களோ என்பது பொருட்டல்ல!

ஆனால் இந்தச் சம்பவம் என்னை நினைத்து மிக ஆச்சரியப்பட வைக்கிறது. வழக்கமாக சிறு சம்பவங்களுக்கே மனம் குழம்பி அதிகம் யோசிக்கும் நான், ஓரளவு பெருசம்பவமான இது குறித்து அலட்டிக் கொள்ளாமல் விட்டதுதான். என்னமோ போனது போகட்டும் என்கிற மனநிலையா? எவ்வளவோ பாத்திருக்கோம் இது என்ன என்கிற மனப்பக்குவத்தை காலம் கற்பித்து விட்டதா? அல்லது எது நடந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒருவித ஜென் மனநிலைக்கு வந்துவிட்டேனா? புரியவில்லை!

காலையில் கடைப்பையைத் திறந்து பார்த்ததும் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. மெரூன் கலரில் இரண்டு ஜட்டிகள் இருந்தன. மேற்கண்ட சம்பவத்தின் ஆகப்பெரிய சோகமாகத் தோன்றுவது, நான் மெரூன் கலர் ஜட்டி அணிந்ததே. வாழ்க்கைல இப்படியொரு சோகத்தை உணர்ந்ததே இல்லை என்பதுபோல, அந்த மெரூன் கலர் ஜட்டி அந்தத் துன்பியல் சம்பவத்தை நினைவூட்டிக் கொண்டே இருப்பது போலப்படுகிறது.

சந்தர்ப்பம் என்பது சமயங்களில் மோசமான எதிரி. அது சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்து மிக மோசமாகப் பழிவாங்கிவிடுகிறது. எந்த அளவு மோசமானது என்றால்... மெரூன் கலர் ஜட்டி அணியவைத்துவிடும் அளவுக்கு!

Friday, June 27, 2014

எர்வா மார்டின், கேர்ண், இன்டுலேகா ; பல்பு!

"அண்ணே உங்களுக்கு முடி ஓவராக்கொட்டுது. இப்பிடியா விட்டா நல்லதில்ல. மிஷின் போட்டு ஒட்ட அடிப்பமா?"
அடிக்கிற வெயிலுக்கு நன்றாயிருக்கும் என்பதால் சம்மதித்தேன்.

முடிந்ததும் 'அவ்வளவு மோசமாக இல்லை' என நம்பிக் கொண்டு வீடு திரும்பினேன். வழியில் ஓரிருவர் விநோதமாகப் பார்த்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் வழமையாக வீதியில் என்னைக் கடந்துசெல்லும் பெண்மணி ஒருவர் பார்த்ததும் சிரிப்பை மிகுந்த பிரயத்தனத்துடன் அடக்கிக் கொண்டு சென்றார். அதுதான் உறுத்தியது.

வீட்டில், அக்காவின் ஒருவயது மகள் வைத்த கண் வாங்காமல் அதிர்ச்சியா, பயமா, ஆச்சரியமா? இன்னதென்று தெரியாத ஒரு பார்வை பார்த்தது. 'இப்பிடியும் மனுஷர் இருக்கிறாங்களா?'

பாத்ரூம் கண்ணாடியில் பார்த்தபோது, வழக்கம்போல சலூன் கண்ணாடி ஏமாற்றிவிட்டது தெரிந்தது. லயன் காமிக்ஸ் ஸ்பைடர் மாதிரி இருந்தேன். மறுநாளிலிருந்து குட்டீஸின் பார்வை ஆச்சரியத்திலிருந்து விடுபட்டுவிட்டது. என்னைப் பார்க்கும்போதெல்லாம் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தது.

இரண்டுவாரம் கழித்து, கொஞ்சம் பரவாயில்லாமல் அல்லது பழகிப் போய் இருந்தது. சலூனுக்கு ஷேவிங்குக்கு சென்றேன்.
கடை உரிமையாள நண்பர் கேட்டார் "என்ன பாஸ் இது? யார் உங்களுக்கு இப்பிடி வெட்டினது?"
"அது ரெண்டு கிழமையாச்சு பாஸ்.... இப்பப்போய் அதிர்ச்சி அடையுறீங்க?"
"இப்பவே இப்பிடி இருக்குன்னா... அப்ப எப்பிடி இருந்திருக்கும்?"
"விடுங்க பாஸ்"
"ஹி ஹி சொல்றனேன்னு தப்பா எடுக்காதீங்க... ஹி ஹி இப்பிடி சொல்லக்கூடாது..."
"என்னய்யா? ஹொஸ்பிட்டல்ல இருந்து தப்பி ஓடிவந்த மாதிரி இருக்கா?"
"ஹி ஹி ஆமா"
நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அவர் எதை நினைத்தாரோ. 'எங்கே செல்லும் இந்தப்பாதை' பாடல்வேறு அந்த அநேரத்தில் டீவியில் போய்க்கொண்டிருந்தது.


மூன்று வருஷத்துக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த நண்பன் ஏராளமான கோத்ரேஜ் ஹெயார் டை பெட்டிகளை வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தான்.

"ஏண்டா இது? உனக்கு நரை இல்லையே"

"எனக்கில்லடா... இது நரைக்கில்ல..  இது பாவிச்சா முடி வளருதாம் அதான் நிறையப் பேர் வாங்கிட்டு வரச்சொன்னங்க"
"உண்மையாவா?"

"அப்பிடித்தாண்டா சொல்றாங்க யாரோ கண்டுபிடிச்சிட்டாங்க இப்ப எங்கட சனம் நம்பி வாங்குது ...மச்சி மண்ணெண்ணைல பைக் ஓடலாம்னு கண்டு பிடிச்சதிலருந்து நம்மாளுங்க கண்டுபிடிப்பு அலப்பரை தாங்க முடியலடா!"


மேசன் காட்டில் கண்டெடுத்த அரிய மூலிகையில் செய்த தலைமுடித் தைலத்தை ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்திய அண்ணன் ஒருவர் சொன்னார்,

"நல்லா இருக்கு ஜீ இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது"
எனக்கும் தெரிந்தது பார்க்கும்போதே முடி கிசுகிசுவென வளர்ந்தது, டீ.வி.விளம்பரத்தில்.

சிரித்து வைத்தேன். நம்பிக்கைதானே வாழ்க்கை?
"வைங்கண்ணே உங்களுக்குத்தான் வயசே தெரியலயே..இன்னும் ரெண்டு செட்டாகும் பாருங்க!"அண்ணி காதில் விழும்படியாக நம்பிக்கை வார்த்தை  சொல்லிவைத்தேன். ஏதோ நம்மால் முடிந்தது.


"இது யார் பாவிக்கிறது?"

வாங்கி பலமாதமாகிவிட்ட, வெற்றிகரமாக இரண்டுமுறை மட்டும் என் தலைக்கு வைக்கப்பட்ட எண்ணெய்ப் போத்தல் பெட்டி முழுவதும் தூசி படர்ந்திருந்தது. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் என்கிற உத்தரவாதத்தில், அல்லது புதிதாகவும் முளைக்கக்கூடும் என்கிற மிகுகற்பனையின் பேரில் பலராலும் பாவிக்கப்பட்ட/படும் Kern  என்கிற ஜெர்மன் தயாரிப்பு எண்ணெய்.

என்வழக்கப்படி இரண்டு நாட்கள் உபயோகித்து பலன் தெரியவில்லையாதலால் 'இது ஆவுறதில்லை' எனக் கைவிட்டிருந்தேன்.

"நான்தான் அப்போ பாவிச்சது" அசடு வழிந்தேன்.
"நானும் பாவிச்சனான்"

அவர் தலையைப் பார்த்தேன். நன்கு துடைக்கப்பட தோசைக்கல் போல பளபளவென்று ஒரு மாசு மயி.. மன்னிக்கவும் மறு இல்லாமல். முடி உதிர்வது எப்போதோ சுத்தமாக நின்று போயிருந்தது!

"நான் ஏலெவல் படிக்கேக்க இருந்து யூனிவெர்சிட்டி முடிக்கும் வரைக்கும் பாவிச்சேன்"
"அப்பவே வந்திட்டுதா?" - அடப்பாவீங்களா? புதுசுன்னு சொன்னீங்களேடா! சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி வாங்க வைத்த என் வழமையான சிகையலங்கார நிபுணர் மனசுக்குள் வந்துபோனார்.

"எவ்வளவு காலம் எண்டு பாரும். எவ்வளவு காசு. இதெல்லாம் பொய்" என்றார்.
"உண்மைதான் இப்ப நம்புறேன்" உறுதியாகச் சொன்னேன்.

"இதுபற்றி ஒரு தியரம்  இருக்கு தெரியுமா?"

அய்யய்யே ஆரம்பிச்சுட்டாங்கப்பா! இந்தக் கன்சல்டண்டுகளுக்கே ஒரு கெட்ட பழக்கம். எப்போதும் துறை சார்ந்தே சிந்திப்பார்களாம். சிலர் சோறு, கறி, குழம்பைக்கூட வேளையைப் பொறுத்து 6:3:1, 4:2:1 என வேறுவேறு கலவைகளில் குழைத்துத்தான் சாப்பிடுவர் என்றால் பாருங்கள். இந்த என்ஜினியரிங் வெறி காரணமாக சமயங்களில் நிம்மதியாகச் சாப்பிடக் கூட முடியாது. இந்த உரையாடல்கூட டைனிங் டேபிளில்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. துயரம் இப்போது தியரம் வடிவில் வந்தது.

"உடம்பில இருக்கிற மொத்த முடிகளின் எண்ணிக்கை மாறாது. ஓரிடத்தில கொட்டினா இன்னோரிடத்தில முளைக்கும்" சொன்னார்.
"அப்பிடியா நான் கேள்விப்பட்டதே இல்லை"

அவரைப் பார்த்தால் நம்பலாம் எனத் தோன்றியது. தலையை மட்டும் ஷேவ் செய்த பெரிய சைஸ் கரடிக்குட்டி போல இருந்தார். ஆனால், அவர் நேரத்தைப் பாருங்கள். சரியாக இன்னொரு கன்சல்டண்ட் அங்கிள் குளித்துவிட்டு இடுப்பில் டவலைக் கட்டிக் கொண்டு எங்களைக் கடந்து போனார். அவரைக் கண்ணைக் காட்டினேன். அவர் தலையில் சுத்தமாக ஒன்றுமில்லை. கைகளில், நெஞ்சில் கண்ணுக்கெட்டிய எல்லாப்பகுதியும் ஒரு முடியும் இல்லை.

"இப்ப சொல்லுங்க உங்க தியரம் பொய்ன்னு ஒத்துக் கொள்றீங்களா? இல்ல வேறமாதிரி ப்ரூஃப் பண்ணுற ஐடியா..."

அதற்குப் பிறகு அவர் என்னுடன் பேசவில்லை.
'அடப்பாவீங்களா முடியலன்ன முடியலன்னு ஒத்துக்கணும்.. அதென்ன சின்னப்புள்ளத்தனமா பேசாம இருக்கிறது?'


"பா
ஸ் இன்டுலேகா வச்சுப் பாருங்க.. நிறையப் பேருக்கு முளைச்சிருக்கு" - நேற்று நம் சலூன் நண்பர்.
"ஆள விடுங்க பாஸ்"
"சரி விடுங்க...உங்களுக்கு எப்ப பாஸ் கல்யாணம்?"
"ஏன்யா.. எதுக்கு.. திடீர்னு?"
"இல்ல பக்கத்தில லேடீஸ் சலூன் ஒப்பன் பண்ணியிருக்கோம்..பாத்தீங்களா?"
"யோவ்...அதுக்கு....? நல்லா வருவீங்கய்யா"

Tuesday, June 17, 2014

யாழ்ப்பாணமும் மாற்றமும்!


"எப்பிடி? யாழ்ப்பாணம் டெவலப் ஆகிட்டுது பாத்தீங்களா?"
ஒவ்வொரு முறை யாழ் செல்லும்போதும் யாராவது ஒருவரேனும் இப்படிக் கேட்பது வழமை.

ஒரு நகரத்தின் அபிவிருத்தி முதலில் வீதிகளில் தெரியவேண்டும் என்கிற நம்பிக்கையின்படி அகலப்படுத்தப்பட்ட சீரான வீதிகள், தற்போது ஓரிடத்தில் மட்டுமே உள்ள ரோட் சிக்னல், வீதிக் குறியீடுகள், பாதசாரிகள் கடவை என இம்முறை உண்மையான வளர்ச்சி சற்றே தெரிந்தது.

அவசரமான ஒரு யாழ் பிரயாணம். நான்குநாட்கள் தங்கிநின்ற முழுநேரமும் வேலையாக இருந்ததால் பார்க்க வேண்டுமென்று நினைத்த நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை. இடையிடையே அயலவர்களுடன் மட்டும் பேச முடிந்தது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் பார்த்ததை விட நகரப்பகுதி மாறியிருந்தது. சில இடங்கள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தது. எங்கள் ஏரியா நிறையவே மாறியிருந்தது.

* * * * * * * * * * * * 

"அண்ணே மதில் கலர் செம்மையா இருக்கு!"
பக்கத்தில் மூர்த்தி அண்ணன் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது.
"நீங்க சொல்றது விளங்குது ஜீ நன்றி நன்றி"
"எப்பிடிண்ணே? ஓட்டுக்கு மச் பண்றமாதிரி செலக்ட் பண்ணீங்களா? ஓ! அந்த வீட்ல அடிச்சிருக்கிறதப் பாத்து ஆசைப்பட்டு..."
சற்றுத் தள்ளியிருந்த வீட்டு மதிலும் அப்படியே இருந்தது.
"இது ரோட் பெருப்பிக்க இடிச்சுட்டு அவங்கள் கட்டித்தந்த மதில். அவங்களே அடிச்ச பெயிண்ட்!"

வீதியின் ஏராளமான வீட்டு மதில்களும் அதே நிறத்தில். செம்மஞ்சள், ரோஸ், பிரவுன் எல்லாம் கலந்து என்னவென்றே அனுமானிக்க முடியாத கண்ணைப் பறிக்கும் நிறத்தில் அட்டகாசமாக ஒளிர்கின்றன.
"ஸாரிண்ணே உங்க டேஸ்ட்டுன்னு நினச்சு அவசரப்பட்டு பாராட்டிட்டேன்"
"அது கண்ட்ராக்டர் டேஸ்ட் போல! ஏற்கனவே மதில் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும்னு தெரியல... இதில பெயிண்டா முக்கியம்? யாருமே வாங்காத, கடைல விக்காம கிடந்த கலராப்பாத்து மலிவா வாங்கி அடிச்சுவிட்டுட்டாங்க போல"

"ஆனா ஸ்ட்ரீட் லைட் உண்மைல நல்லா இருக்கு. ஆனா இவ்ளோ கிட்டகிட்ட தேவையில்லையே இடைல ஒன்றைத் தூக்கிடலாம்"
"அது எரியிறதில்லைத்தானே"
"அப்பிடியா ஏன்"
"ஆர் டி ஏ தங்களைக் கேக்காமப் போட்டுட்டுது எண்டு பிரதேச சபை சொல்லுது. அவங்கதான் பில் கட்டுறதாம்"

* * * * * * * * * * * *

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது மிக அரிதாகவே பேரூந்தில் பயணித்திருக்கிறேன். இந்தமுறை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பயணம் செய்ததில் யாழில் 'Rosa' பஸ்களைத் தடை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அவ்வளவு கொடுமையான பயண அனுபவங்கள்.

வலிகாமம் வடக்கில், மீளக் குடியேற தடைவிலக்கப்பட்ட பகுதிகளிலுள்ள திருத்தப்படாத வீடுகள், பராமரிக்கப்படாத காணிகள் பற்றி, உரிமையாளர்கள் பற்றிஅடிக்கடி இராணுவம் வந்து விசாரித்துச் செல்கிறார்கள். பார்த்தீனியம் போன்ற களைகளை அகற்றுவது தொடர்பாகப் பேசியபோது போலீஸ் தெரிவித்த ஒரு 'யோசனை' முக்கியமானது. 'இதுவரை ஆட்கள் வராத, புலம்பெயர்ந்தவர்களின் காணிகளைத் நாம் பொறுப்பேற்றுத் திருத்தி வைத்திருக்கிறோம். உரிமையாளர்கள் வந்ததும், மீளப் பெறலாம்' என்பதே அது. அரச படைகள் இன்றுவரை 'பொறுப்பேற்று' வைத்திருக்கும் காணிகள் பற்றிய அனுபவமே நமக்குப் போதுமானது. ஆக, இருபது வருடங்களுக்கும் மேலாக பிடித்து வைத்திருந்த காணிகளை மீண்டும் அரசபடை எடுத்துக் கொள்ளப்பார்க்கிறது, அல்லது அரசு தாம் வீடற்றவர்களாக்கிய வேறு பிரதேச மக்களுக்கு இந்த வீடுகளை, காணிகளைக் கொடுக்கப் போகிறது - என்கிறவாறாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இன்னும் தம் சொந்த மண்ணை ஒருமுறை பார்க்கக்கூட அனுமதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அரசபடைகள் வசம் இருக்கின்றன. அங்கு செல்ல வேண்டுமென்று இருபத்துநான்கு ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். எல்லாம் பயிர்ச்செய்கை நிலங்கள். பலாலி விமான நிலைய விரிவாக்கம், படையினருக்கான குடியிருப்புகள் என ஒருபகுதி மீளக் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்ததுதான். மீதமிருக்கும் பகுதியையும் வழங்கும் உத்தேசம் இருப்பதாகப் தெரியவில்லை. படையினர் வேறு, 'நாங்கள் அனுமதித்த இடங்களிலேயே மக்கள் குடியிருக்கவோ, பராமரிக்கவோ செய்யவில்லையே?' என்று நியாயமாக(?!) கேள்வி கேட்கிறார்களாம்.

கீரிமலை வீதியில் ஒரு அலுமினியம் தொழிற்சாலை இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தபோது 'யாரோ' இரும்பு கழற்றிக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் வந்து இரும்பு கழற்ற படையினர் அனுமதிக்கவில்லையாம். இம்முறை சென்றபோது அது இருந்ததா? இல்லையா என்று இப்போது என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. நான் கவனிக்கவில்லையா? என் கண்ணில் படவில்லையா? குழப்பமாக இருக்கிறது. காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை 2000 ஆம் ஆண்டில் பார்த்ததிலிருந்து ஒவ்வொருமுறையும் அளவில் சிறியதாகிக் கொண்டே வருகிறது. இரும்பு விற்கப்படுகிறதாம். இந்நிலையில் சிலர் சீமெந்துத் தொழிற்சாலை விரைவில் இயங்கப் போவதாகத் தீவிரமாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். மேலும் குழப்பமாக இருக்கிறது.

திருத்தப்படாத வீடுகள், காணிகள் பற்றி அடிக்கடி அக்கறையாக விசாரித்துச் செல்லும் இராணுவத்தினர் சொல்வது என்னவெனில், வெளிநாட்டுக் காரர்கள், சுற்றுலாப் பிரயாணிகள் வீதியால் செல்லும்போது இந்தமாதிரி இருப்பது நன்றாக இல்லையாம். தவிர, ஓரிரு மாதத்திற்கு முன்னர் வீதியிலிருந்த சிதிலமான கட்டடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களைச் செப்பனிட்டிருக்கிறார்கள். கூரையில்லாத சிதிலமான கட்டங்களின் துப்பாக்கிச் சன்னத்துளைகளுக்கு மட்டும் செப்பனிட்டுவிட்டால், இங்கே போரினால் எந்தப் பாதிப்பும் இடம்பெறவில்லை என நம்பும் யாரோ இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

ஒருவகையில் உண்மையும் அதுதான். இங்கே எந்தச் சண்டைகளும் நடைபெறவில்லை. தொண்ணூறாம் ஆண்டில் பலாலியிலிருந்து முன்னேறிய இராணுவம், பாரிய எதிர்ப்பின்றி புலிகள் பின்வாங்க, ஓரிரு நாட்களில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. வீட்டுக் கூரைகளை மரங்கள் ஒன்றுவிடாமல் அகற்றியது, கதவுகள், யன்னல்கள், நிலைகளோடு உடைத்தெடுத்தது, தேவையேயில்லாமல் இருந்த கிணறுகளை எல்லாம் புல்டாசர் கொண்டு மூடியது, பல வீடுகளை மதிற்சுவர்களை எல்லைகளை அடையாளமே காணமுடியாதவாறு இல்லாமல் இடித்துத் தள்ளியது எல்லாமே பின்னர் இராணுவம் பொழுது போகாமல் செய்த 'மக்கள் சேவை'. எங்கள் வீட்டில் ஓரிடத்தில் யன்னலைக் கழற்றுவதற்காக, சுவரை இடித்துப் புதிய கதவு வழியே வைத்திருந்தார்கள். ஒரு எலக்ரிக்கல் ஸ்விட்ச்சையோ, சிறு வயர்த்துண்டையோ கூட விட்டுவைக்காமல் மிகக் கவனமாகப் பெயர்த்தெடுத்ததில், ஓர் 'இராணுவ ஒழுங்கு' தெரிகிறது. கூடவே சும்மாவே இருப்பதன் கொடுமையும்!

இப்போது எல்லாப்பகுதிகளும் மீளக்கட்டமைக்கப்பட்டமை(!?)சுற்றுலாப் பிரயாணிகள் செல்லும் பகுதிகளிலாவது தெரியவேண்டும். வீதிகள் சரியாக இருகின்றன. வீடுகள்தான் இப்போது பிரச்சினை. எங்கள் வீட்டிலிருந்து பார்க்கையில், சற்றே தூரத்தில் ஒருவர் தனியாளாக காட்டு மரங்கள் கொண்டு ஒரு தற்காலிக வீடமைக்கும் முயற்சியில் இருந்தார். ஏறகனவே அவர் அமைத்த குடிசை, மழைக்கு தாக்குப் பிடிக்கவில்லையாம். மழை நாளொன்றில் இராணுவம் பார்த்துவிட்டு மரங்களையும், கூரைத் தகரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். தனிமனிதனாகத் துரித கதியில் மரங்களை நட்டு, குறுக்கு மரம், கூரை என பார்த்துக் கொண்டிருக்கையில் வீடொன்று உருவாகிக் கொண்டிருந்தது. சைக்கிள்களில் ரோந்து வந்த ஏழெட்டு இராணுவத்தினர் பார்த்துவிட்டு, இறங்கிவந்து கைலாகு கொடுத்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் தோளில் தட்டினார்கள். பாராட்டுகிறார்கள் போலும். யாரேனும் ஃபேஸ்புக் போராளிகள் அந்த இடத்தில் நின்றிருந்தால் ஒரு தமிழனத் துரோகியை இந்த இணைய உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கக்கூடும்.

மாலை. மாவிட்டபுரத்தில், யாழ்நகர் செல்லும் பஸ் ஏறுகையில் இராணுவத்தினர் அல்லது போலீசார் சிலரும் வந்து ஏறி அமர்ந்து கொண்டார்கள். காங்கேசன்துறையில் பணியோ பயிற்சியோ தெரியவில்லை. இறுகிப்போன முகங்களோடு யாரையும் கண்டுகொள்ளவில்லை. கைக்குழந்தையோடு ஏறும் தாய்மார்களைப் பார்த்ததும் கண்டக்டர் வழக்கம்போல "குழந்தையோட நிக்கிற அக்காக்கு இடங்குடுங்கோ" என்றபோதெல்லாம் அவர்கள் மட்டும் சலனமில்லாமல் இருந்தார்கள். விநோதமாக இருந்தது. நான் பார்த்தவரையில் - போர்க்களமல்லாத பகுதிகளில் இராணுவம்/போலீஸ் மக்களோடு இவ்வளவு முறைப்பாக, விறைப்பாக இருந்ததில்லை. பேரூந்தில் வயது முதிர்ந்தவர்கள் நிற்கும்போத்து இப்படிப் பாராமுகமாக இருந்து பார்த்ததில்லை. ஒருவேளை புதிதாகப் பயிற்சி பெறுவதால் அப்படியோ என நினைத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் விடை தெரிந்தது. அவர்களில் ஓரிருவருக்கு தொலைபேசி அழைப்புவர எடுத்து, "மச்சான் நான் இப்பதாண்டா வந்திட்டிருக்கேன்.. ஆறுமணிக்கு வந்திடுவேன்" - ஆக, தேச சேவையில் இணைந்துகொண்ட தமிழர்கள் அவர்கள். பெருமையாக இருந்தது.

* * * * * * * * * * * *

பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் வீதியின் குறுக்காக வரிவரியாக வீதியில் மஞ்சள் நிறத்தில் கோடாக கோடாக பெயிண்ட் பூசப்பட்டிருந்தது. வந்த நாளிலிருந்து அவ்வப்போது சில நிமிடங்கள் தொடர்ச்சியாக அவதானித்துப் பார்த்திருந்தேன். ஆனாலும், அதன் காரணத்தையோ, பயன்பாட்டையோ சற்றும் அனுமானிக்க முடியவில்லை.

"என்னன்னே இது? ஏதும் டிசைனா? - மீண்டும் மூர்த்தி அண்ணனுடன் பேசும்போது.
"உங்களுக்குப் பார்த்தா எப்பிடி தெரியுது?"
"பார்த்த உடனே படஸ்ட்ரியன் க்ரொசிங் மாதிரியே.. இருக்கு ஆனா அப்பிடித் தெரியேல்ல"
"அப்பிடின்னு சொல்லித்தான் போட்டவங்கள்... நானும் வாசல்லயே க்ராஸ் பண்ணி பிள்ளையாரிட்ட போகலாம்னுதான் நினச்சேன்"
"யாரும் கண்டுக்கிறதாவே தெரியலயே"

அப்போது இரண்டு பெண்மணிகள் அந்தப் பாதசாரிகள் கடவையை மிகுந்த பிரயத்தனத்துடன், கடும் அவதானத்துடன் மிக மிக மெதுவாக தயங்கித் தயங்கிக் கடக்க முனைந்தார்கள்.
"படஸ்ட்ரியன் க்ரொசிங்க இவ்வளவு பயபக்தியா யாரும் கடந்து நான் பார்த்ததே இல்லண்ணே"
"அதில வச்சு அடிச்சு அக்சிடென்ட் ஆகியிருக்கு... அதான் சனம் பயப்பிடுது"

நடுவீதில் அந்தப் பெண்கள் மெதுவாக கடக்கையில், அவர்களுக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் மோட்டார் சைக்கிள்கள் தம் பாட்டுக்கு கடந்து சென்றன. தொடர்ந்து அதில் வைத்து மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றையொன்று ஓவர் டேக் செய்தார்கள்.

பகலிலோ, இரவிலோ குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் கடமையில் இருப்பார்கள் எனவும், முன்பு போல திடீர் திடீரென கண்ட இடங்களில் நின்று மறிப்பது, மது அருந்தியோரை பிடிப்பது போன்ற தொல்லைகள் இல்லையாம். குறிப்பாக 'டிமிக்கி' கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் செல்பவர்களைத் துரத்திப் பிடிப்பது போன்ற தொந்தரவுகள் இல்லை என்கிறார்கள்.

* * * * * * * * * * * *

எட்டு வருடங்களுக்குப் பின் நண்பன் கௌதமனுடன் எங்கள் பழைய நண்பரான Book lab புத்தகக்கடைக்கு சென்றோம். நண்பர் கௌதமனைப் பார்த்து "என்ன பாத்து நாளாச்சு?" என்றார். என்னைப் பார்த்தும் "இவரப் பாத்து நிறைய நாளாச்சே" என்றார். புத்தகங்களுக்காகத் தேடியலைந்து 2005 நல்லூர்த்திருவிழாவில் கண்டடைந்த அட்டகாசமான புத்தகக்கடை அது. இம்முறை தேடும்போது நண்பன் கேட்டான்

"என்ன முந்தி மாதிரி ஒண்டையும் காணேல்ல..."
"கௌதமன், நீங்க ஒரு லட்சியத்தோட இருக்கீங்க..உங்களுக்கு காசு தேவையில்ல, சொந்தமா ஒரு பில்டிங் இருக்கு, பொதுச்சேவை செய்ய மேலதிகமா பணம் இருக்குன்னு வைங்க... நீங்க முந்தி இருந்த புக்லாப் மாதிரி ஒண்ணைத் திறக்கலாம். எங்கள மாதிரி ஆக்களுக்கு சேவை செய்யலாம்"

ஒரு லட்சியத்தோடு தொடங்கப்பட்ட புக்லாப் யாழ்ப்பாணத்தின் புத்தகக் கடைகளுக்கான 'ஸ்டாண்டர்ட்'டுக்கு மாறியிருந்தது. கடையின் பெரும்பகுதியை பாடசாலை மாணவர்களுக்கான பாடப் பயிற்சிப் புத்தகங்கள் நிறைத்திருந்தன.

* * * * * * * * * * * *

"ஜீ எப்பிடி மாறிட்டுது யாழ்ப்பாணம்...? நீங்க இங்க வரமாட்டீங்களா? கொழும்பில்தான் வேலை செய்வீங்களா?" சிறீ அண்ணன் கேட்டார்.
புன்னகையில் ஒரு 'அருமை' கமெண்ட் போட்டேன்.
"இங்க வந்தா ஒரு நல்ல பொம்பிளை பாக்கலாம்ன்னு.... ஓ நீங்க கொழும்பில வீட்டோட பாத்துச் செய்வீங்க இல்ல? பிறகு கதைக்கிறன் உங்களோட"
யாழ்ப்பாணம் மாறியிருக்கா? குழப்பமாக இருந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன் பார்த்ததை விட நகரப்பகுதி மாறியிருந்தது. உண்மையில் கொஞ்சம் டெவலப் ஆகியிருந்தது. எப்படி தெரியும்? உதாரணமாக யாழ் நகரத்தினையே எடுத்துக் கொண்டால் மேலோட்டமாக இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.

நெரிசலான கடைத்தொகுதிகளைத் தவிர்த்து, சற்றுத் தள்ளியுள்ள பயன்படுத்தப்படாத பகுதிகளில் புதிய கட்டடங்களை நிர்மாணித்து விரிவு படுத்துதல். கழிவுநீர் வடிகாலமைப்பு. விசாலமான வீதிகள், போக்குவரத்து ஒழுங்குமுறை. இது நான் நம்பும் முதலாவது முறை.

இரண்டாவது - நெரிசலான இடத்தில் மேலும் பல கட்டடங்களைக் கட்டி, மேலும் சிக்கலாக்குவது. அங்கே நிறையப் புதிய கடைகளைத் திறந்து, கலர் கலராக மின்விளக்குகளை எரியவிடுதல். இருக்கும் மூத்திரச் சந்துகளிலேல்லாம் நாலைந்து வங்கிகளைத் திறந்துவிடுதல்.

இரண்டாவது முறைதான் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானோரின் நம்பிக்கை என்பதைக் கடந்த காலங்களில் உணர்ந்திருக்கிறேன். யாரும் இதை மறுக்க முடியாது. வேண்டுமெனில் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

மூன்றாவதாக இன்னொரு முறை இருப்பதாகத் தெரிகிறது.
"ஜீ..யாழ்ப்பாணம் எப்பிடி டெவலப்ப்பாகி இருக்கு பாத்தீங்களா?"
"ம்ம் இப்ப உண்மைல நல்லா இருக்கு ரோட் எல்லாம்..."
"ரோட்ட விடுங்க ஜீ அது எப்பவும்தானே இருக்கு? கே.எஃப். சி வந்துட்டுது நீங்க போகலையா?"

* * * * * * * * * * * *

நாட்டில் அமைதி திரும்பிவிட்டது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சுமூகமாக வாழ்கிறார்கள் என வெளிநாடுகளுக்கு காட்ட அரசாங்கம் பெரும்பிரயத்தனம் எடுத்துக் கொண்டாலும், ஒருமுறை அவர்களில் யாரேனும் ரயிலில் பயணிக்கும் பட்சத்தில் உணர்ந்துகொள்ள முடியும், இங்கே எதுவும் மாறவில்லை. வன்முறை ஓயவில்லை. அதன் வடிவம் மட்டுமே மாறி இருக்கிறது என்பதை.

ரயிலில் சிங்களப் பாடல்களைப் போட்டுத் தொலைக்கிறார்கள்!