Friday, November 29, 2013

இரண்டாம் உலகம்!



படம் பார்க்கும்போது, ஏனோ செல்வராகவன் கொடுக்கும் பேட்டிகள் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தன. தமிழில் இதுவரை இல்லாதவகையில் நல்ல சிஜி அமைந்திருக்கிறது. எனினும் அழகான முகம், அகலமான முதுகு, தடந்தோள்கள், ஆஜானுபாகுவான உயரம் என்று அனுஷ்காவின் பிரம்மாண்டத்துக்கு முன் வேறெதுவுமே அவ்வளவு பிரமாதமாக இல்லை.

வழமையான செல்வராகவன் பட நாயகிகள்,ஆண்களைவிட உறுதியானவர்களாக, திடமாக முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். மாறாக இதில் ஆர்யாவிடம் காதலைச் சொல்ல முடியாமல் தயக்கம், தவிப்புடன் இருக்கிறார். தப்பில்லை. ஆனால் தனியாளாக முப்பது பேருக்கு திருமணம் பேசி, நடாத்தி வைத்தவர் போலிருக்கும் அனுஷ்கா வெட்கப்படுவதுதான் (அவர் சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டேன்,தோழி சொல்கிறார்) அதிர்ச்சியளிக்கிறது. அவரே மூன்று கல்யாணம் முடித்தவர்போலத்தான் இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. ஆனால் ஆர்யா கச்சிதமாகப் பொருந்துகிறார் - அவர் நடித்த, இனி நடிக்கவிருக்கும் எல்லாப் படங்களையும் போலவே!

அனுஷ்காவின் மருத்துவத் தோழிகளுடனான உரையாடல்கள், ஆர்யா அனுஷ்காவின் இரவு உரையாடல் போன்ற இடங்களில் செல்வா டச். ஆர்யா தன் இயலாத தந்தைக்கு உதவும் காட்சிகளில் செண்டிமெண்ட் பிழியாமல் வயலின் வாசிக்காமல் இயல்பாகக் கடந்துவிடுவது அழகு. அநிருத்துக்கு வயலின் வாசிக்கத் தெரியாததுதான் காரணமா என்ற சந்தேகம் வருகிறது. தெரிந்திருந்தால் பின்னியிருக்ககக்கூடும்.

'இரண்டாம் உலக'த்தில் காதல் இல்லை. அதனால் பூக்கள் பூப்பதில்லை. பெண்களை மதிப்பதில்லை. அதனால் அழிந்துகொண்டிருக்கிறது. அந்த அழிவைத் தடுக்க ஒரு குழந்தை பிறக்க வேண்டும். அதற்கு வர்ணாவுக்கு ஆர்யா மேல் காதல் வரவேண்டும். இது ஆரம்பத்தில் சொல்லப்படுகிறது.

அங்கே இருக்கும் ஆர்யாவும் (மறவன்) வழமையான செல்வராகவன் பட ஹீரோ போலவே அனுஷ்கா (வர்ணா) பின்னால் அலைகிறார். அது காதல் இல்லையா? மறவன்,வர்ணாவை மதிக்கிறான். வர்ணாதான் ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவளுக்கும் காதல் வந்துவிடுகிறது. அதற்கு நம்மூர் ஆர்யாவின் தேவை என்ன? எந்தவகையில் அவர் பயன்படுகிறார்? நம் ஆர்யா அங்கே போய் வர்ணாவைப் பார்த்தவுடன் பூக்கள் பூக்கின்றன. இது மட்டும்தான் ஆர்யா அங்கே செல்வதற்கான தேவை? இதற்குத்தான் அவர்களின் கடவுள் அனுஷ்காவைப் போட்டுத்தள்ளி, ஆர்யாவை அங்கே அழைக்கிறார்? ஃபான்டசி படங்களில் குறித்த ஒரு நபர் இன்னோர் உலகத்திற்கு தற்செயலாகப் போகலாம். ஒரு காரணத்தோடு செல்லும்போது அது சரியாக, வலுவாக  இருக்க வேண்டிய அவசியமில்லையா? செல்வராகவன் அசிஸ்டென்டுகளுடன் கதை, திரைகதை பற்றி விவாதிப்பாரா? அவர்களின் கருத்தைக் கேட்பாரா?

இப்படியெல்லாம் கேட்கலாம். ஆனால் படம் பிடிக்கவில்லை எனச் சொன்னவர்களை ஒருவாரமாக பலர் ஃபேஸ்புக்கில் மானாவாரியாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் கேட்க மாட்டேன்.  'ஆயிரத்தில் ஒருவ'னில் தமிழன் வரலாறு சொன்னதிலிருந்து செல்வராகவன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என நம்பும் கூட்டம் உருவாகிவிட்டது. கூடவே இந்தப்படத்துக்கு ஏன் அறுபத்தேழு கோடி செலவாயிற்று என்ற பாமரத்தனமான கேள்வியும் எழுந்தது.

இரண்டாம் உலகத்தில் தமிழில் பேசுவது கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளைக்கார நண்பர் ஒருவர் 'அது நம்மை நோக்கித்தான் வந்திட்டிருக்கு' பாணியில் தமிழில் பேசும்போது விசிலடிக்கத் தோன்றுகிறது. இயக்குனர் நினைத்திருந்தால் அவதார் படத்தைப்போல தனியான ஓர் பாஷையையே உருவாக்கி பேச வைத்திருக்கலாம். இருந்தும் தமிழிலேயே பேச வைத்திருப்பது இயக்குனரின் தமிழுணர்வைக் காட்டுகிறது. பெருமையாக இருக்கிறது.

இரண்டாம் உலகத்தின் கடவுளான 'அம்மா'வைக்கடத்த அவ்வப்போது அயல்நாட்டு கொடிய மன்னன் முயல்கிறான். ஆர்யா சொன்ன அளவுக்கு முக்கியமானவராக சொந்தநாட்டில் யாரும் அம்மாவைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. கடவுளைக் கடத்தும்போது, 'இவிங்களுக்கு வேற வேற வேலையேயில்லை' என்பதுபோல அசுவாரசியமாக வேடிக்கை பார்க்கிறார்கள். 

'அம்மா'வைக் காப்பாற்ற நாயகி, நாயகன் இருவரும் சேர்ந்து சண்டையிடுகிறார்கள். இடையிடையே தமக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள். வழமையான சண்டைக் காட்சிகளில் அடியாட்கள், ஹீரோவிடம் ஒவ்வொருவராக வந்து அடிவாங்க, மற்றவர்கள் சுற்றி நின்று தனியாக நடனம் ஆடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே பொறுமையாக அவர்கள் பேசுவதை அனுமதிக்கிறார்கள். ஒட்டுக் கேட்பதுபோல ஆர்வமாகக் கூர்ந்து கவனிக்கிறார்கள். அதன்பின்னரே ஒவ்வொருவராக வந்து அடிவாங்குகிறார்கள். இதில் அம்மாவை யாரோ தூக்கி வைத்திருக்க, அவரும் சுவாரசியமாக வேடிக்கை பார்ப்பது அட்டகாசம்! தமிழ்சினிமாவில் இது முற்றிலும் புதிய முயற்சி. வரவேற்கலாம்.

'அம்மா'வை ஒவ்வொரு முறையும் மிக இலகுவாக, நர்சரியில் படிக்கும் அஞ்சு வயசு அம்முவை ஐஸ்பழம் வாங்கிக் கொடுத்து 'அம்மா கூப்பிட்டாங்க' என்று சொல்லிக் கடத்துவதுபோல, சாகவாசமாக அழைத்துச் செல்கிறார்கள். அம்மாவும் ஜாலியாக டூர் போவதுபோல கிளம்பிவிடுகிறார். உடனே நாட்டின் படைவீரர்கள் பதினைஞ்சு பேரும் துரத்துகிறார்கள்.கடவுளையே கடத்தும்போது, துரத்திச் சென்று  பாதி வழியில் திரும்பி வந்து, 'இனி பனிக்காலம். நனைஞ்சா காய்ச்சல் வந்துடும். ஆறு மாசம் கழிச்சு ஆறுதலாப் பார்த்துக்கலாம்'  என்பது போல நடந்துகொள்வது மேலதிக கொடுமை!

கிராஃபிக்ஸ் சிங்கத்தின் சண்டைக்காட்சியில் சிஜி அற்புதமாக இருந்ததாக பலரும் பாராட்டியிருந்தார்கள். சிங்கத்தின் முகம் ஒரு பரிதாபமான மனிதனுடையதைப் போல இருந்தது. ஏனோ தயாரிப்பாளர் ஞாபகம் வந்தது. அது என் பிரச்சினை. சிலருக்கு பயமாகவும் இருந்திருக்கலாம், கொலைவெறியும் வந்திருக்கலாம். குறிப்பாக தயாரிப்பாளருக்கு செல்வாவின் முகம் தெரிந்திருக்கலாம்.

இதுபோன்ற படங்கள் தமிழ்சினிமாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லுமா எனத் தெரியவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களை நிச்சயமாக அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோய் விட்டுவிடும்.

தமிழ்சினிமாவில்  நல்ல முயற்சிகளுக்கு ஆதரவில்லை, யாருக்குமே அறிவில்லை. தமிழ்சினிமா உருப்படாது. தமிழர்கள் ஃபான்டசி படத்திற்கு தயாராகவில்லை என்கிற செல்வராகவன் பேட்டியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

செல்வராகவனைக் கொண்டாடுகிறேன். அது, புதுப்பேட்டைக்காக!

Friday, November 22, 2013

மூடர்கூடம், இன்னும் பிடித்தவை சில..


"ஒரு மனுஷன் எவ்வளவு கடன் வாங்குறானோ அந்தளவுக்கு பணக்காரனா இருக்கான். ஆயிரத்தில் சம்பாதிக்கிறவன் ஆயிரத்தில கடன் வாங்குறான். லட்சத்துல சம்பாதிக்கிறவன் லட்சத்தில..... கோடிக்கணக்கில ஒருத்தன் கடன் வாங்குறான்னா....  என்ன அர்த்தம்?"

"தெரியல பாஸ்!"

"சென்ட்றாயன்! நீங்க தனியா இருக்கிற ரூம்ல ட்ரெஸ் இல்லாம ஒரு பொண்ணு  வந்துச்சுன்னா எனக்கிது பழக்கமில்ல, தெரியலன்னு விட்ருவீங்களா சென்ட்றாயன்?"

"ட்ரை பண்ணுவேன் பாஸ்"

"அப்ப ட்ரை பண்ணுங்க சென்ட்றாயன்..எடுத்த உடனே தெரியலன்னு சொல்லாதீங்க"

'சூது கவ்வும்' படத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் வந்த படங்களில் எனக்கு மிகப் பிடித்த படம் 'மூடர் கூடம்'. சரவெடியான வசனங்கள், அதை நவீன் சீரியசாகப் பேசும் பாணி அட்டகாசம்.

நகைச்சுவை என்பது வாய்விட்டு, வயிறு வலிக்கச் சிரிக்க வைக்க வேண்டியதில்லை என்பது என் நம்பிக்கை. சிறு புன்னகையுடன் அட! போட வைப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். சூது கவ்வும் படமும் அதைச் செய்தது. 'சூது கவ்வும்' பார்த்து சிரிப்பே வரவில்லை எனக் குறைபட்டவர்களும் இருக்கிறார்கள்.நகைச்சுவை நடிகரைப் பார்த்தவுடனேயே சிரிக்க ஆரம்பித்துவிடுவதற்கு பழக்கப்பட்டிருப்பதால், மாற கால அவகாசம் தேவைப்படலாம்.

கொரியப் படத்தைச் சுட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பார்த்துப் பார்த்துச் சலித்த தமிழ்ப்படங்களையே மீண்டும் மீண்டும் சுட்டு, மிகப்பெரிய வெற்றிபெறும் கமர்ஷியல் படங்கள் எடுக்கப்படும்போது வித்தியாசமான முயற்சிகள் அப்படி வரும்போது வரவேற்கவே தோன்றுகிறது.என்ன இன்ஸ்பிரேஷன் என்று ஒரு வார்த்தை சொல்லிவிடலாம். என்வரையில், ஒரு I am Sam படத்தை அப்படியே சுட்டு தமிழில் ஒரு,'ஐயாம் சாம்'எடுப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை.'தெய்வத்திருமகளாக'எடுப்பதைத்தான் சகிக்க முடிவதில்லை. அதுவும் அந்த அபத்தக் குப்பைகள் காவியங்களாகக் கொண்டாடப்படுவது மேலதிக கொடுமை.

படத்தின் இசையும் பல இடங்களில்  அட்டகாசமாக இருந்தது. கதாபாத்திரங்களின் முன்கதை சொல்லலில் குபேரனின் கார்ட்டூன் ஸ்டைல் முன்கதையும் இசையும் மிகக் கவர்ந்தது.சென்ட்றாயன் அசத்தியிருக்கிறார், கூடவே அந்தக் குட்டிப் பொண்ணும்!

புத்திசாலித்தனமான வசனங்களில் உலக மயமாக்கல், முதலாளித்துவம் சார்ந்த கருத்துக்கள், புத்திமதிகள் சில இடங்களில்,  குறிப்பாக நவீன் பேசும் வசனங்களைவிட, குபேரன் பேசும்போது சற்றுத் தூக்கலாகவே தெரிகிறது. கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாக மாறிவிடக்கூடிய அபாயமிருக்கிறது. இயக்குனர் ராமின் படங்களில் நிகழ்வதும் இதுதான். மிக இயல்பாக, நகைச்சுவையுடன் இதனைக் கையாண்டவர் இயக்குனர் சிம்புதேவன். என்ன துரதிருஷ்டவசமாக புலிகேசியில் வடிவேலு இருந்ததாலேயே பல நுணுக்கமான விஷயங்கள் பலரால் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது.


ழுதுவதிலுள்ள சோம்பேறித்தனம் போலவே படம் பார்ப்பதிலும் இருக்கிறது. புதிய படங்களைப் பார்க்காமல் சமயங்களில் பார்த்த படங்களையே திரும்பவும் பார்க்கும் கெட்ட பழக்கமும் நீண்ட நாட்களாகஉள்ளது.  அப்படித் திரும்பப் பார்க்கவைத்த படம் 'சூது கவ்வும்!'.

குறைகள் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லாத ( ஒரு உதாரணத்துக்கு, Life of Pi படத்தில் கிராஃபிக்ஸ் சரியில்ல, மொக்கைன்னு சொல்லலாம் ஆனால் அந்தப் படத்திற்கு அது ஒரு பொருட்டல்ல) அட்டகாசமான படம். 'சூது கவ்வும்' வெற்றி பெற்றபோது, தற்போது வெளியாகும் படங்களில் அநீதி ஜெயிப்பது போலவே வருகின்றன எனக் குறைபட்டுக்   கொண்டவர்களும் உண்டு. 'மங்காத்தா' இவற்றுக்கு முன்னோடியாக இருக்கலாம். எனக்கென்னவோ அவைதான் உண்மையிலேயே யதார்த்த சினிமாவோ எனத் தோன்றுகிறது.

 'நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்', 'பீட்சா', 'வத்திக்குச்சி', 'உதயம் NH4' போன்ற படங்களும்  மிகப் பிடிச்சிருந்தது. இந்த வரிசையில் இறுதியாகப் பார்த்தது, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?'-எனக்குப் பிடிச்சிருக்கு. அடுத்ததாக ஆவலுடன் எதிர்பார்ப்பது 'பண்ணையாரும் பத்மினியும்' படம்தான். எனக்குப் பிடித்திருந்த 'மதுபானக்கடை', 'வ.குவாட்டர் கட்டிங்' படங்கள் கூட இப்போது வந்திருந்தால் வெற்றிபெற்றிருக்குமோ எனத் தோன்றுகிறது.இதுபோன்ற படங்களையே பார்க்க பார்க்க ஆவலாக இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களைப் பார்க்கும் ஆர்வம் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. இயக்குனர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா படங்களை மட்டுமே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


குவென்டின் டெரென்டினோ படங்களைப் பார்த்து இப்பிடித் தமிழில் வராதா? என்று ஏங்கிய பலருக்கு ஆரண்யகாண்டம் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வைச் சொல்லிவிட முடியாது. அனால் அந்தப் படத்தைப் புறக்கணித்தே தீருவது என்ற முடிவில் இன்றுவரை உறுதியாக இருக்கும் தமிழ்சினிமாவின் ஆண்டவர்கள், அறிவுஜீவிகள், அடையாளங்களைப் பார்க்கும்போதுதான் எவ்வளவு மோசமான, கேவலமான 'கொண்டாடப்படுதலின் அரசியல்' இருப்பது தெரியவருகிறது. 'தியாகராஜன் குமாரராஜா' பெயரை இவர்கள் யாரும் உச்சரித்ததாகவே தெரியவில்லை. செல்வராகவன் சிலாகித்திருக்கிறார்.

'தமிழ்சினிமாவின் அடையாளம்' பதவியையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளலாம். இளையராஜா இனி ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என அவ்வப்போது அவர்மீது அக்கறை(?) கொள்பவர்களும்கூட, விடாப்பிடியாக நாற்காலியைப் பிடித்துவைத்திருக்கும் 'அடையாளங்கள்' குறித்து ஏதும் பேசுவதில்லை. ஒருவரை தமிழ் சினிமாவின் அடையாளம் என்று சொல்வார்கள். பார்த்தால், அவர் இருபது வருஷத்துக்கு முதல் ஒரு நல்ல படம் எடுத்திருப்பார். வேறு நல்ல படமே வருவதில்லையா? புதியவர்கள் எப்போது அடையாளமாக இருப்பார்கள்? இந்த அடையாளம் பதவிகூட கட்சித்தலைவர் பதவி மாதிரியானவைதானோ? இளைஞர்களுக்கு வாய்ப்பே இல்லைப் போலும். வெற்றிமாறன் அடையாளமில்லையா? 'புதுப்பேட்டை' வந்தவுடன் செல்வராகவன் அடையாளமாகக் கொண்டாடப் பட்டிருக்க வேண்டாமா?

இன்றைய புதிய இயக்குனர்கள் பலரின் கதையில் காதல் அப்படியொன்றும் முக்கியமானதாக முன்னிறுத்தப்படுவதில்லை. சென்டிமென்ட் கலந்து அச்சுப் பிச்சுத்தனமான டயலாக்குகளின் உதவியோடு யாரும் படத்தில் காதலிப்பதில்லை என்பது பெரிய ஆறுதல்.இது இன்னொரு வகையில் கெட்டதாகவும் அமைந்துவிடுகிறது. இளைஞர்கள் காதலைக் கைவிட்டதில், அடையாளங்கள், பெருசுகள் கையிலெடுத்து விடுகிறார்கள். காலம் போன காலத்தில் காதல் பற்றிப் படமெடுத்துப் படுத்துகிறார்கள்.

உண்மையில் 'ஆரண்ய காண்டம்' விஷயத்தில் ஏன் அப்படி ஒரு கள்ள மௌனம்? திட்டமிட்டு புறக்கணிக்கிறார்களா? படத்தின் ஒரிஜினல் DVD கூட வரவில்லை என்பதுதான் சோகம்! இந்தப் படம் தொடர்பான அரசியல் தெரியாமல் DVD கடைகளில் சென்று விசாரித்திருக்கிறேன். அப்படியொரு படம் வந்ததே பலருக்கும் தெரியாது. இன்றுவரை இணையத்தில் வெளியான ஒரேயொரு மங்கலான பிரதி மட்டுமே இருக்கிறது. ஒருமுறை ஃபேஸ்புக்கில் சினிமா விகடன் கேட்டிருந்தது ஒரிஜினல் DVD வந்தால் வாங்குவீர்களா? என. பின்பு அதுபற்றிப் பேச்சில்லை.

'ஆரண்ய காண்டம்' தவறான காலப்பகுதியில் வெளிவந்துவிட்டதா? இன்றைய நாட்களில் வெளியாகியிருந்தால் பெரு வெற்றி பெற்றிருக்குமா? வெறும் அபத்தக் குப்பைகளும், போலிகளும் கொண்டாடப்படுகின்ற சூழலில், ஒரு நல்ல படமும், அதன் இயக்குனரும் அவர்கள் சார்ந்த தமிழ் சினிமா உலகத்தாலேயே திட்டமிட்டு கண்டுகொள்ளப்படாமலிருப்பதுதான் சோகம்! தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படத்திற்காகக் காத்திருக்கிறேன்.

Thursday, November 7, 2013

மகளைப் பெற்ற ஓர் அப்பாவின் கதை!


தமிழ் சினிமாவின் நல்ல படங்களை, முக்கியமாக 'யதார்த்த' படங்களைப் பார்ப்பதில் எப்போதும் எனக்கோர் பயம். நான் அவ்வளவு தைரியசாலியல்ல எனச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதனால்தான் தங்க மீன்கள் டி வி டி வங்கி, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்கவில்லை. பார்த்தபோதுதான் என் தவறு புரிந்தது. எதிர்பார்த்ததற்கு மாறான அனுபவம். படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி, கதை நிகழும் பிரதேசமும் படம் முழுதும் உணரவைக்கும் ஈரமும் ஏனோ ஓர் ஈரானியப் படத்தைப் பார்ப்பது போலவேயிருந்தது.

ஈரானியப் படங்களில் வருவது போலவே அனைவரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமாக கவர்கிறார்கள். கல்யாணி வேலை பார்க்கும் 'பெரிசு', எவிட்டா டீச்சரின் கணவன் உட்பட! அவரவருக்கு இயல்பான நியாயத்தோடு முரண்பட்டுக் கொள்கிறார்கள். கல்யாணி மட்டும் சிக்கலானவனாக, வகைப்படுத்திக் கொள்ள முடியாதவனாக இருக்கிறான். அந்தக் குளத்திலிருக்கும் தங்க மீன் பற்றிப் பேசும்போதே பகீரென்கிறது.ஆரம்பத்திலேயே எப்போது நடக்கப்போகிறதோ? எனத் திகிலாகிவிடுகிறது.

கல்யாணிக்கு என்ன பிரச்சினை? பொறுப்பில்லாத மனிதனா? ஒவ்வொரு ஊரிலும் பொறுப்பில்லாத, எதையும் உதாசீனத்தோடு அணுகும் மனிதர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையின் மீதும், யார்மீதும் ஈடுபாடில்லாமல் வாழ்வார்கள். அனால் கல்யாணி அப்படியல்ல. அவனுக்கும் குடும்பம் இருக்கிறது. மகள், மனைவி மீது உயிரை வைத்திருக்கிறான். மனைவியை, அப்பா, அம்மாவை மதிக்கிறான். அவனுக்குத் தன்மானம், ரோஷம் இருக்கிறது. கல்யாணி எதையும் புரிந்து கொள்ளாத முட்டாள் இல்லை. புரிந்துகொள்ள மறுக்கிறான். பொதுவில் நாம் காணும் விட்டேத்தியான மனிதர்கள் இப்படியிருப்பதில்லை.அவர்களில் பெரும்பான்மை குடிகாரர்களாக வேறு இருந்து தொலைப்பார்கள்.

மகளுக்கு உயர்ந்த கல்வியைக் கொடுக்கவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறான்.ஆனாலும் அதற்காக நல்ல வேலையைத் தேடிக்கொள்வதில்லை. கல்யாணிக்கு வேறு வேலை கிடைக்காமலில்லை. மகளைக் கூட இருந்தே கவனிக்க வேண்டும் என விரும்பும் அவன் அதற்கு முயற்சிக்கவில்லை. இது ஆணின் இயல்புக்கு மாறானது.யாரும் விரும்புவதுமில்லை, குழந்தையைத் தவிர! வளர்ந்தபின் அவளே தந்தையின் பொறுப்பு பற்றிக் கேள்வி கேட்பாள் என்பது வேறு விஷயம் - ஆக, அதுவும் இயல்பானதுதான். கல்யாணியின் தந்தை கேட்கிறார்,  "அவளுக்கு எதுக்குடா ரெண்டு அம்மா?"

அப்பாக்களின் பிரதான கடமை குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வைத்திருப்பது என்பதால் மனைவி, பிள்ளைகள் மீதான சற்றே விட்டேத்தியான மனநிலை சமூகத்தால் கண்டுகொள்ளப்படுவதில்லை. அதுவே பொருளாதாரரீதியாக வெற்றிகரமான குடும்பத் தலைவனின் அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது. பின்னாளில் தனிமைப்படுத்தப்பட்ட மனைவியின் பார்வையில் அவர் பொறுப்பில்லாதவராகவும் தோன்றலாம்.

"எப்பவும் எழுதறது, படிக்கறது, ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே இருப்பார். மனைவி, குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்குக் கிடையாது. சுருக்கமாச் சொல்லணும்னா பசங்க என்ன படிச்சாங்க, எப்படிப் படிச்சாங்கன்னு கூட அவருக்குத் தெரியாது. பசங்களாப் படிச்சாங்க…. அவங்களா வேலையைத் தேடிகிட்டாங்க… அவங்களா பிடிச்ச பெண்ணைத் திருமணம் செய்துகிட்டாங்க… மத்தபடி அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை" - தலைவர் சுஜாதாவின் நிலைமை இது!

குடும்பத்தின் பொருளாதார நிலையிலோ, உறவுகளின்மீதோ எந்தவித அக்கறையுமில்லாத விட்டேத்தி அப்பாக்களும் நடைமுறையில் இருக்கிறார்கள்.'பாவம் குடிகாரர்' என்று நியாயப்படுத்திவிடவும்(?!) முடியாத சோகம் அவர்களுடையது!

கல்யாணியையே சரியாகப் புரியாத நிலையில் இதற்கெல்லாம் இலகுவாக கல்யாணியே தீர்வு சொல்லிவிடுவதுதான் நெருடுகிறது. இவ்வளவு பிரச்சினைக்கும் பணம் பிடுங்கும் தனியார் கல்விமுறைதான் காரணம் என்கிறான். அதுதான் கல்யாணியையும் குழந்தையையும் பிரித்தது. அதுதான் குழந்தையின் உயிரைப் பறித்துவிடக்கூடிய அசம்பாவிதத்தை நிகழ்த்தியிருந்தது. பணத்தைக் கோராத அரசு பள்ளியில் மகளைச் சேர்த்துவிட்டால் எல்லாப் பிரச்சினையும் சரியாகிவிடும் என்கிறான். ஆக, கல்யாணியின் பிரதான பிரச்சினை பள்ளிக் கட்டணம்.அது அவசியமில்லாதபோது கல்யாணி வேறு ஊருக்குப் போய் உழைக்கத் தேவையில்லை. ஏன் உழைக்கவே வேண்டியதில்லை - அவன் வரையில்! அப்படியானால் வீட்டில் தொலைக்காட்சியை அகற்றிவிட்டால் விளம்பரங்களைப் பார்த்து மகள் எதையாவது கேட்கும் ஆபத்துமில்லை? இதுதான் பிரச்சினையா? படத்தின் மையக்கருவா? இதுதவிர, எங்கோ ஓர் மூலையில் ஒளிந்திருக்கும் ஒன்றிரண்டு எவிட்டா டீச்சர்களுக்கும் நன்றி சொல்லப்படுகிறது.

ஒரு தனி மனிதனின் கதையாக, ஒரு கல்யாணியின் வாழ்வாக, அதுவரை நல்லதோர் அழகியலாக ரசிக்க முடிந்த படம், இறுதியாக வலிந்து கருத்து சொல்லும்போது தர்க்க ரீதியான கேள்விகளைக் கேட்கச் சொல்கிறது. உலகமயமாக்கல் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து சமூகத்தை நோக்கி கைகாட்டுகிறான், சமூகத்தில் ஒரு தந்தையாக தனது பொறுப்புகளைச் சரிவரச் செய்யாத கல்யாணி. தனது பொறுப்பின்மைக்கும் சேர்த்து சமூகத்தைக் குற்றம் சொல்வது உறுத்துகிறது. இன்றைய ஒரு குழந்தைக்கு முக்கிய தேவை ஓர் கணணியா அதே பெறுமதியுடைய நாய்க்குட்டியா என்று கேட்டால் கல்யாணி மகள் விரும்பிய நாய்க்குட்டி எனச் சொல்வான். அவன் வரையில் அது நியாயம்! அதை வாங்கிக் கொடுத்துவிட்டு அதற்கும் சமூகம்தான் காரணம் எனக் கூற விழைந்தால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்? இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்களுக்கும் இதுவே காரணம் என்றே நம்புகிறேன். கல்யாணி கல்யாணியாகவே இருந்திருக்கலாம். திடீரென இயக்குனர் ராம் ஆக மாறிவிடுவதுதான் பிரச்சினை. சமூகத்தை நோக்கிக் கருத்து சொல்வது சமயங்களில் அழகான ஓர் கதையை குழப்பிவிடுகிறது. 'கற்றது தமிழ் ' படத்திலும் இதே சிக்கல்!

"காசில்லாதவன் எல்லாம் முட்டாள் இல்லைடா", "காக்கா வந்து சொல்லிச்சா? "வசனங்களைக் கேட்கும்போது ராம் தெரிகிறார்.ஆற்றாமையால் அழும்போதும் அழுகையை அடக்கிக் கொண்டே திக்கித் திக்கிப் பேசும்போதும் அவ்வளவு இயல்பு! குடும்பத்தைப் பிரிந்து தொலை தேசத்தில் வேலைபார்க்கும் எல்லா அப்பாக்களுக்குள்ளும் ஒரு கல்யாணி இருக்கிறான். இது மகள்களைப் பெற்ற அப்பாக்களின் கதையல்ல. ஒரு கல்யாணியின் கதை!  பணத்தை பொருட்படுத்தாத உறவுகளை மட்டும் முன்னிலைப்படுத்தும் கல்யாணியின் உலகம் தனியானது. இந்த உலகம் கல்யாணிகளுக்கானதல்ல. இறுதியில் கருத்து சொல்வதைத் தவிர்த்து விட்டால், சில நெருடல்களையும் தாண்டி நல்லதோர் படைப்பு தங்க மீன்கள்.

இதுவே ஓர் இரானியப் படமாகவோ, இத்தாலியப் படமாகவோ இருந்தால் (நிச்சயம் 'கருத்து' சொல்லப்படாது) அந்த 'தங்கமீன் கதை', 'வோடஃபோன் 'நாய்க்குட்டியையும் பற்றிய எந்த உறுத்தலுமில்லாமல் கொண்டாடியிருப்பேனோ என்று எனது நேர்மையையும் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.