Wednesday, April 24, 2013

காக்கா கொத்தின காயம்!




“என்ன இது?”

“அது காக்கா கொத்தினது”

“ஏன் கொத்திச்சு?”

“உங்கள மாதிரி சின்னப்பிள்ளையா இருக்கேக்க, அம்மாவ விட்டுட்டு தனியா மொட்டை மாடிக்கு போனப்போ...”

என் இடது புருவத்தில் மறைந்திருந்த சிறு வெட்டுக் காயத்தைக் காட்டி கேட்ட என் அக்கா மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் மறந்தே போய்விட்டிருந்த என் பால்ய வயது அடையாளம். புருவத்தின் குறுக்காக சிறிய ஆழமான ஒரு வெட்டு. காக்கா கொத்தியது என்றால் நம்பும்படியாக இருந்தது. அது எப்படி சற்றும் யோசிக்காமல் காக்கா கொத்தியது என்று சொல்ல முடிந்தது?

என் சின்னஞ்சிறு பராயத்தில் என் பெரியப்பாவிடம் அதே கேள்வியைக் கேட்ட ஞாபகம் இருக்கிறது. என் புருவத்தில் இருக்கும் அதே போன்ற வெட்டுக் காயம் அவருக்குமிருந்தது. அவர் சொன்ன பதிலும் அதே காக்கா கொத்தியதுதான்.

குழந்தைகள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். கவனிப்பதும், கதை கேட்பதுமாக முதல் தேடல் குழந்தைப்பருவத்தில் ஆரம்பிக்கிறது. வளர்ந்து வருகையில் கவனித்தல் குறையலாம். ஆனால் கதை கேட்கும் ஆர்வம் வாழ்வின் இறுதிவரை குறைவதில்லை. முக்கியமாக குழந்தைப் பருவத்தில் பேச்சு ஆரம்பித்து சில நாட்களிலேயே  'கதை விடுதல்' என்பதும் ஆரம்பித்து விடுகிறது. அதை மட்டும் நாம் எப்போதும் தவறாமல் செய்து வருகிறோம்.

குழந்தைகளிடம் கதை விடுவதற்குத்தான் காக்காய்கள் எவ்வளவு உறுதுணையாக இருக்கின்றன. "காக்கா கொண்டு போயிட்டுது! " - குழந்தைகளிடம் ஒரு பொருளை மறைத்து வைப்பதற்கு நாம் உபயோகப்படுத்தும் உத்தி. அதன்மூலம் நாங்களே முதன்முறையாக குழந்தைகளுக்கு ‘கதைவிடுவது’ பற்றி அறிமுகம் செய்கிறோம். பின்னர் அவர்கள் எங்களிடம் வெகு தீவிரமான முகபாவத்தோடு ‘காக்கா கொண்டு போச்சு” என அதே ‘டெக்னிக்’கை பிரயோகிக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும்போல பெரியவர்களிடமிருந்தே கதைவிடுவதையும் கற்றுக் கொள்கிறார்கள்.

நாம் முதன்முதலாகக் கேட்ட 'கதைநாயகன்' காக்காதான் இல்லையா? திருட்டுத்தனமான பாத்திரமாகவே காக்கா அறிமுகப்படுத்தப்படுகிறது. பின் நமது திருட்டுத் தனங்களுக்கும் காக்கா மீதே பழிபோட்டு, திருட்டுத்தனத்தின் உருவகமாகவே அவைகளை மாற்றிவிட்டோம். சிறுவயதில் இடையிடையே ஓரக்கண்ணால் சற்றே சாய்ந்து பார்க்கும் பழக்கம் இருந்தது. “என்னடா காக்காப் பார்வை பார்க்கிறே?” என அக்காக்கள் சிலர் சிரித்தபடியே கேட்பார்கள். அவசரமாக, அரைகுரையாகக் குளிப்பதை ‘காக்காக் குளியல்’ , ‘காக்காக் கடி’ என காக்கைகள் நமக்கு கலைச் சொற்கள் சிலவற்றை வழங்கி நம் மொழிக்கும் சேவை செய்திருக்கின்றன.

பாவம் காக்கைகள் அவற்றுக்கு காலம் காலமாக தம் இனத்தின் மீது நாம் மேற்கொள்ளும் தவறான கற்பிதங்கள் பற்றித் தெரியாமல் இருக்கலாம். அல்லது தங்கள் மீதான அவதூறுகளைக் களைய வேண்டுமென்ற பிரக்ஞை இல்லாமலோ தங்கள் பாட்டுக்கு வாழ்ந்து வருகின்றன. ஆனாலும் அவ்வப்போது திருட்டுத்தனங்களும் செய்வதாகத் தெரிகிறது.



ன் காயத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். புருவத்தின் குறுக்காக சற்றே ஆழமான ஒரு பிளவு. இவ்வளவு நாட்களாக நான் கவனிக்கவே இல்லையே? நேராகப் பார்த்தால் தெரியாததால், இப்படியொரு அடையாளத்தையே மறந்து போயிருந்தேன். அந்தக்காயம் ஏற்பட்டபோது, ஓரிரு மணிநேர பயத்தையும், சில நாட்கள் வலியையும் எனக்குக் கொடுத்திருந்தது.

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, என் விளையாட்டுத் தோழர்களைச் சந்திக்க ஓடினேன். அப்பா கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் வீட்டில் அம்மாவின் கடுமையான சட்டதிட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதி. பொதுவாக நான் வெளியில் சென்று விளையாடுவதை அம்மா விரும்புவதில்லை என்பதால், பலத்த கெடுபிடியுடனேயே எப்போதாவது அதற்கான அனுமதியை பெற வேண்டியிருந்தது. அதுவும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில்.

சரியாக மாலை ஆறுமணிக்கு அம்மாவின் ஊரடங்கு அமல்படுத்தப்படும். அப்போது நான் வீட்டில் நிற்க வேண்டும், விளையாட்டில் தோழர்களுடன் ஏற்படும் பிரச்சினை எதுவானாலும் நான் அவற்றை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது என்பவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் என்மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்திற்கு அடிப்படையான தகவல்கள் போன்றவற்றுக்கு காலதாமதமற்ற கடுமையான நடவடிக்கையும், காலவரையற்ற தடைச்சட்டமும் உண்டு. அப்போதெல்லாம் மோதலின் ஆரம்ப கட்டத்திலேயே ‘ஒ..’ வென்று அபாயச்சங்கை முழங்கி, பக்கத்து வீட்டுஅக்காக்களிடம் ஆதரவு கோருவதை என் ராஜதந்திர ரீதியான நடவடிக்கையாக வைத்திருந்தேன். அது எப்போதும் நல்ல பயனைக் கொடுப்பதாக இருந்தது. 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையின்போது திடீரென ஒருநாள் 'மிராஜ்' வந்ததே, அதேபோல பறந்து வருவார்கள்.

அன்று ஐஸ்போல் விளையாடிக் கொண்டிருந்தோம். பெயரைத் தவிர விளையாட்டில் ஐசுக்கும், பந்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒருவர் கண்களைப் பொத்திக் கொண்டு ஒன்றிலிருந்து, ஐம்பதுவரை எண்ணிக கொண்டிருக்க மற்றவர்கள் ஒளிந்துகொள்வது. ஒளிந்திருப்பவர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடித்தபின் மீண்டும் தொடங்கும். இப்போது முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர், கண்களை மூடிக் கொள்ள மற்றவர்கள் ஒளிந்துகொள்ள - இப்படியே தொடரும். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. தோழி ஒருத்தி கண்களை மூடிக் கொண்டு வழக்கத்தைவிட வேகமாக எண்ணத் தொடங்கினாள். நாங்கள் தலைதெறிக்க ஓடினோம். பாருங்கள், தோழிகள் எப்போதுமே இப்படித்தான் இருக்கிறார்கள்.

என்முன்னால் ஓடிக்கொண்டிருந்த நண்பன் திடீரெனத் தடுக்கி விழ, அவன்மீது நான் தடுக்கி, தடுமாறி எதிரிலிருந்த சதுரத் தூணின் விளிம்பில் மோதி, சற்று நேரம் எதுவும் புரியவில்லை, வலிக்கவுமில்லை. கண்கள் மின்னியது. லேசாக இரத்தம்கசிய, ‘வீட்டுக்கு எப்படிப் போவது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனது நல்ல நேரம். அன்று அப்பா கொழும்பிலிருந்து விடுமுறையில் வரும் நாளாக இருந்தது. தெருமுனையில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தேன்.

தூரத்தில் அப்பா வருவது தெரிந்ததும் ஓடிச்சென்று அப்பாவிடமிருந்து சிறு பையொன்றை வாங்கி தொழில் மாட்டிக் கொண்டே கூட நடந்தேன். ‘குழந்தைகள் ஓடி விளையாட வேணும், விழுந்து காயம் பட வேணும்’ என்பது அப்பாவின் கொள்கை. கொள்கையின்படி வாழ்ந்ததில், அவரிடமும் சில விளையாட்டுக்காயங்கள். அதைவிட தன் இளம்வயதில் கிரிக்கட் விளையாடும்போது, பற்றைக்குள் பந்தை எடுக்கப் போய் கையில் பாம்பிடம் கடிவாங்கியிருந்தார். ‘பாம்பு கடித்த காயம்’ தெரியவில்லை. சிகிச்சையளிக்கும்போது வைத்தியர் கத்தி கொண்டு சுரண்டியதில் ஒரு பாம்புக் குட்டி அளவிற்கு கையில் அடையாளம். மேலதிக விபரமாகச் சொல்லியிருந்தார், பாம்பு கடித்தது அவ்வளவாக வலிக்கவில்லையாம். சிகிச்சைதான் பயங்கரமாக வலித்ததாம்.



வ்வொரு காயங்கள், தழும்புகளுக்குப் பின்னாலும் அழகான எமது பால்யகால நினைவுகள், சுவாரஷ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. அது அன்றைய பொழுதில் பெருந்துன்பமாக இருந்து, பின்னர் அவை பற்றிய நினைவே இல்லாது போயிருக்கும். உண்மையில் அப்படி ஒரு காயம் இருப்பதையே மறந்து போயிருப்போம். யாரோ நெருங்கிய ஒருவர் கேட்கும்போது, அநேகமாக ஒரு குழந்தை கேட்கும்போது, மனம் பின்னோக்கிப் பயணிக்கும்.

ஒருமுறை பள்ளி விடுமுறையின்போது நண்பர்கள் எல்லோரும் விளையாடிவிட்டு வந்து, எங்கள் வீட்டு முற்றத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். சமீபத்தில் நடந்துமுடிந்த கிரிக்கெட் போட்டி பற்றிச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த கமலன், பண்டா அடித்த சிக்ஸ் பற்றி ஆக்சன் காட்டினான். அவன் காற்றில் மட்டைடைச் சுழற்ற 'டொக்' சத்தம் எப்படி வந்ததென்று அதிர்ந்து திரும்பினோம். டினேஷ் கண்ணைப் பொத்திக் கொண்டிருந்தான். புருவத்தில் அடிபட்டு சதை பிய்ந்து தொங்கியது. மூன்று தையல் போடப்பட்டது. இப்போது அவன் சகோதரியின் குழந்தையோ, அல்லது ஓர் மருத்துவனான அவனிடம் வரும் ஓர் குழந்தையோ  அவனிடமும் கேட்கலாம். ஒருவேளை சற்றே பெரிய காக்கா கொத்தியதாகக் கூட அவன் சொல்லல்லாம்.

என் பெரியப்பாவின் காயத்துக்குப் பின்னால் என்ன கதையிருக்கும்? ஒரு மாங்காய் திருடிய கதை இருக்கலாம். ஒரு கிட்டிப்புள் விளையாடிய கதை இருக்கலாம். நம் எல்லோரிடமும் நாம் மறந்துபோய்விட்ட ஒரு சிறுவயதுக் காயத்தின் அடையாளம், தழும்பு இருக்கும். என்போலவே பலருக்கும் புருவத்தில் ஒரு காக்கா கொத்திய காயம் இருக்கலாம். அதன்பின்னே ஒரு கதை இருக்கும். சுவாரஷ்யமான காரணம் இருக்கும், காக்காவைத் தவிர!

சிறு வயதில் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் மட்டும் அப்படியே தழும்புகளாக, நிரந்தர அடையாளங்களாக மாறிவிடுவது ஆச்சரியம்தான். ஒருவேளை வளர வளர அவதானமாக இருக்கப் பழகிவிடுவதால் காயங்கள் மனதில் மட்டுமே அதிகமாக ஏற்படுகின்றன போலும். 

யாருக்கும் தெரியாத,  யாருமே கவனிக்காத, எந்தக் கேள்வியும் கேட்காத மனதின் காயங்களை நாமே கேள்வி கேட்டு, ஆறவிடாது அப்படியே புதிதாகப் பேணிக் கொள்கிறோம். ஏதோவொரு சமயத்தில் அந்த வலியையும், அதன் வீரியத்தையும் முதன்முறையாக ஏற்படுவது போன்றே உணர்ந்து கொள்கிறோம். மனதின் காயங்களையும் சிறு வயதின் விளையாட்டுத் தழும்புகள் போலவே சிறு புன்னகையுடன் கடந்து செல்ல முடிந்தால், முயன்றால் நன்றாயிருக்குமல்லவா?


Tuesday, April 16, 2013

The Hole (1998)



விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட தனிமை மிகுந்த சுதந்திர உணர்வையும், மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது. அதுவே தனிமைப்படுத்தப்பட்டதாக, கைவிடப்பட்டதாக உணரும்போது, சுய பச்சாதாபத்தையும், இனம்புரியாத பயத்தையும் கொடுத்துவிடுகிறது.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வெறுமையாக, ஆள் நடமாட்டமின்றி இருக்கிறது. தனியாக இருக்கும் அவள், தன் வீட்டின் பின்புற பல்கனியில் நிற்கிறாள் . அயலில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. தொடர்ந்து ஒரு பெண்ணின் குரல் "தயவு செய்து போய்விடு எனக்கு மிகுந்த பயமாக இருக்கிறது மனிதத் தன்மையுடன் நடந்துகொள்" எனக் கெஞ்சுகிறது. சற்று நேரத்தில் அவள் வீட்டு அழைப்பு மணியும் ஒலிக்கிறது. அவளும் பயந்து, பின்னர் ஒரு முறை அவள் வெளியே வந்து பார்க்கிறாள்.  யாரும் அங்கே இல்லை. அதே நேரத்தில், இன்னொரு வீட்டின் அழைப்பு மணியை ஒரு சிறுவன் அழுத்துகிறான். உடனடியாகவே அங்கிருந்து தனது சிறிய சைக்கிளை ஒட்டிக் கொண்டு அதே மாடியிலுள்ள வேறு பகுதிக்குச் செல்கிறான். சற்று நேரத்தில் வேறொரு வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. ஒரு சிறவனின் விளையாட்டே அவர்களுக்கு மிகுந்த பயங்கரமானதாக இருக்கிறது.

மில்லேனியம் பிறப்பதற்குச் சில தினங்கள் இருக்கின்றன. தாய்வானின் நகரப் பகுதியொன்றில் ஒரு புதுவிதமான நோய் பரவி வருகிறது. நோய் பரவி வரும் இடங்களைத் தனிமைப் படுத்தும் நடவடிக்கையாக அரசாங்கம் அங்கிருந்து மக்களை வெளியேறச் சொல்கிறது. தொடர்ந்து மழை பெய்வதால் கழிவு நீர் வடிகாலமைப்பும் சீர்குலைந்திருக்கிறது. அதனால் அங்கே நீர் வழங்கலும் இடம்பெறாது என செய்தி ஊடகங்களில் அறிவிக்கப்படுகிறது. வேறுவழியில்லை, அங்கே வாழ முடியாத சூழ்நிலையில் பெருமளவான மக்கள் வெளியேறி விடுகிறார்கள்.

ஒரு சிலர் அங்கேயே இருக்கிறார்கள். அவனும் அப்படித்தான். நகரத்தின் மார்க்கெட் தொகுதியில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன். அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தனியாக வாழ்பவன். வாழ்க்கை பற்றிய பெரிதான ஈடுபாடோ, புகார்களோ இல்லாதவன்போல் அதன்போக்கில் வாழ்கிறான். முதல்நாள் இரவு சாப்பிட்ட உணவு, குடித்த பியர் எல்லாம் அப்படியே சிறிய மேசைமீது இருக்க, சோபாவில் தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது வரும் ஒரு பிளம்பர் அவன வீட்டில் நீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், அது கீழ் வீட்டில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுப்பதால், பரிசோதிக்க வேண்டும் என்கிறான்.

தரையைச் சோதிக்கும் அவன் நீர்க்குழாய் செல்லும் பாதைய இனங்கண்டு கொத்தி, அப்படியே விட்டுச் செல்கிறான். தரைத்தளத்தின்மீது புதிதாக ஒரு துளை. அவன் வீட்டையும், அதற்கு நேர் கீழே இருக்கும் அவள் வீட்டினையும் இணைப்பது போல அந்தத் துளை. அவள் வீடு நீர்க்கசிவினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில அறைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. துணிகளை ஊறப்போட்டு பிழிந்து நீரை அகற்ற முனைகிறாள். ஏராளமான டாய்லெட் பேப்பர்களை வாங்கி வைத்திருக்கிறாள்.

காலையில் கடைக்குச் செல்கிறான் அவன். அந்தக் கடைத்தொகுதி முழுவதும் பூட்டப்பட்ட கடைகளுடன் காலியாக இருக்கிறது. தன கடையிலிருந்து ஒரு சிறிய தகரத்திலடைக்கப்பட்ட உணவு எடுத்துக் கொண்டு வந்து பூனை ஒன்றை அழைக்கிறான். அதற்கு சாப்பிடக்  கொடுக்கிறான். தானும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே அருகில் அமர்ந்து, பூனையைத் தடவிக் கொடுக்கிறான். சுற்றிலும் ஏராளமான அதே போன்ற காலிக் கொள்கலன்கள் கிடக்கின்றன. அந்தப் பூனைக்கு உணவு கொடுப்பது அவனது அன்றாடக் கடமைகளில் ஒன்று.

ஒரூ பெரியவர் அவனது கடைக்குவந்து தனக்கு ஒரு பீன் சோர்ஸ் வேண்டுமெனக் கேட்கிறார். அவர் கையில் கொண்டுவந்திருந்த மாதிரியைப் பார்த்துவிட்டுச் சொல்கிறான். "இந்த பிராண்ட் இப்போது வருவதில்லை. நிறுத்தப்பட்டு விட்டது. வேறு நல்லது இருக்கு" அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்கிறார். அங்கேயே வேறு கடைகளில் கிடைக்குமா எனத் தேடி அலைகிறார். வேறு எந்தக் கடைகளும் திறந்திருக்கவில்லை. மீண்டும் சந்தைக் கட்டடத்தின் வாசலில் வந்து யோசனையுடன் நிற்கிறார். அவனும் அதைக் கவனிக்கிறான். நோயிலிருந்து பாதுகாக்க தன் ஊரை விட்டு நீங்க விருப்பமின்றி இருப்பவர் தனக்குப் பிடித்த, தன் வழக்கமான வகை உணவுப் பொருளிலிருந்து அவ்வளவு இலகுவில் மாறிவிட விரும்பவில்லை. இரவு மீண்டும் அநதப் பூனைக்கு அன்போடு உணவு கொடுத்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்புகிறான். போதையில் வரும் அவன் தன வீட்டின் வரவேற்பறையிலிருந்த அந்தத் துளையை பரிசொதிப்பவன் போல அருகில் செல்கிறான். அப்போது பார்த்து அவனுக்கு வாந்தி வருகிறது. 

ரவில் விழித்துக் கொள்ளும் அவள் எழுந்து செல்லும்போது தனது மேசையின் மீது கைவைக்க எதுவோ ஒட்டிக் கொள்கிறது. அண்ணாந்து மேலே பார்ப்பவள் அருவருப்பு, ஆத்திரம், அழுகையுமாக சுத்தம் செய்கிறாள்.  ஏற்கனவே இருந்த பிரச்சினைகளுடன் இப்போது அந்தத் துளையும் அவளுக்கு ஒரு பெரிய தொல்லையாகி விடுகிறது.

காலையில் தன் கடைக்கருகில் ஒரு மனிதன் விசித்திரமாக ஊர்ந்து கொண்டு செல்வதைப் பார்த்து, பேச முயற்சிசெய்கிறான். அவனோ சட்டை செய்யாமல் ஒரு கரப்பான் பூச்சி போல குப்பைக் குவியல், இருட்டான இடம் தேடி ஊர்ந்துகொண்டே செல்கிறான். பின்பு சிலரின் உதவியுடன் அவனை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்கின்றனர். இந்த நேரத்தில் தன் மேல்வீட்டுக்காரனைச் சந்திக்க வந்த அவளும் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். ஊர்ந்து சென்ற மனிதன் அந்த விசித்திர நோயால் பீடிக்கப்பட்டவன்.

அதுவரை அவர்கள் சந்தித்துக் கொண்டதில்லை. ஒருவரையொருவர் பொருட்படுத்தியதில்லை.
அவள் கேட்கிறாள்,"இன்று மதியம் இரண்டு மணிக்கு வீட்டில் இருப்பாயா? பிளம்பர் வருவான்"
"இருக்கக் கூடும்"
"நீ கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனைத் திருத்த முடியாமலே போய்விடும்"

அன்றிரவு இனந்தெரியாத அந்த தொற்றுநோய் பற்றிய அறிவுறுத்தலைக் கேட்கிறாள். 'தாய்வான் வைரஸ்' எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள். கரப்பான் பூச்சி மூலம் பரவலாம் எனச் சந்தேகிக்கிறார்கள். ஆரம்பத்தில் காய்ச்சல் போன்று இருக்கும். பின்னர் வெளிச்சத்தைக் கண்டு பயப்படுவார்கள்.  பூச்சிகள் போலவே ஊர்ந்து கொண்டு இருளான இடம் தேடி ஒளிந்துகொள்வார்கள் எனச் சொல்லப்பட்டுகிறது. அச்சம் கொள்ளும் அவள் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க, ஏராளமாக ஸ்பிரே அடிக்கிறாள். வீடு முழுதும் மருந்து பரவி துளை வழியாக அவன் வீட்டிற்குள்ளும். இருவரும் உளே இருக்க முடியாமல் கதவு யன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு, வெளியே பல்கனியில் நிற்கிறார்கள். மௌனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

னிமையிலுள்ள இருவரையும் அந்தத்துளை ஏதோ ஒருவகையில் நெருங்கச் செய்கிறது. அவன் துளையைச் சிறிது சிறிதாகப் பெருப்பிக்கிறான். அடிக்கடி துளை வழியாக அவளைப் பார்க்கிறான். அவளுக்கும் அது தெரிந்தே இருக்கிறது. முதலில் தொல்லையாக நினைப்பவள் பின்னர் கண்டுகொள்வதில்லை. ஓர் ஆறுதலைக் கூடக் கொடுத்திருக்கலாம். தான் தனித்துவிடப்படவில்லை என்ற உணர்வையும்,.பாதுகாப்பையும் கொடுத்திருக்கலாம்.

ஓரிரவில்,அவள் இடைவிடாது தும்மிக் கொண்டு மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு தூங்குகிறாள். நள்ளிரவில் திடீரென விழித்துக் கொள்பவள் படுக்கையறைக்குள் தண்ணீர் வந்துவிட்டுப்பதைப் பார்த்து அழுகிறாள். அடுத்த காட்சியில் வரவேற்பறையில் ஏராளமான குவிந்து கிடக்கும் துணிகள், பேப்பர்களுக்கிடையே அவள் வேகமாக ஊர்ந்து சென்று ஒளிந்து கொள்வது அதிர வைக்கும். இதனை மேலே இருந்து பார்ப்பவன் ஆற்றாமையுடன் அழுகிறான். மூர்க்கமாக உடைத்து அந்தத் துளையைப் பெருப்பிக்கிறான்.

பெருப்பிக்கப்பட்ட துளை வழியாக காலை வெளிச்சம் பாய்கிறது. அவள் எழுந்து மூச்சு வாங்கியபடி வெளிச்சத்தில் துளையைப் பார்த்தவாறு சாய்ந்திருக்க மேலேயிருந்து நீர் பருகக் கொடுக்கிறான். நீர்க்குடுவையை வாங்குவதுபோல மீண்டும்  அவன் கையை நீட்ட, அவள் இருகைகளாலும் பற்றிக் கொள்கிறாள். அப்படியே தூக்குகிறான். இருவரும் புதிய ஆடைகளுடன் அணைத்தவாறு நிற்க, பாடலுடன் படம் நிறைவடைகிறது.

வளுக்கு உண்மையிலேயே அந்த நோய்த்தொற்று ஏற்பட்டதா? அல்லது மிதமிஞ்சிய பயம், சுகவீனத்தாலேற்பட்ட பலவீனமான மனிநிலை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் அவ்வாறு நடந்து கொண்டாளா? இறுதிக் காட்சியில் அவள் குறித்த நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் நடத்தைக்கு முரணாக வெளிச்சத்தை நோக்கியே வருகிறாள். அவன் தன்பால் ஈடுபாடு கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவன் தயங்கி விலகியிருக்கிறான்., அவன் மனத்தடையை உடைத்துக்கொண்டு வெளிவருவதற்காக அப்படி நடந்துகொண்டாள் என்றே நம்புகிறேன். பாடல்களின் சில வரிகளிலும் அப்படியே வருகிறது.

படம் முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே மழை பெய்வது போன்ற உணர்வைக் கொடுத்தது. இப்படி என நண்பனும் கூறியிருந்தான்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கும். மிகப் பழமையான இசை. 'ஓ கலிப்சோ' என்ற பாடல் 1959 இல் வெளிவந்த பாடல். அடுக்குமாடிக் குடியிருப்பின் எலிவேட்டர், பழைய படிக்கட்டு போன்ற இடங்களில் பாடல் படமாக்கப்பட்டிருக்கும். வெள்ளை, ஓரிரு வர்ண உடை, அதிகபட்சம் நான்கு பெண்கள், நான்கு ஆண்களை மட்டும் வைத்துக் கொண்டு பாடல் காட்சிகள் மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு கனவுப் பாடலை, பிரம்மாண்டமான அரங்கமைத்து நூறு பேரை ஆடவைத்து, எடுக்காமலே கொடுக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

இயக்கம் : Tsai Ming-Liang
இசை :    Grace Chang
நாடு : Taiwan
மொழி : Mandarin, Taiwanese

Friday, April 12, 2013

பயணம்...



ர் நீண்ட பேருந்துப் பயணத்தின்போது, ஆரம்பத்திலேயே தூங்கிப் போய்விடுபவர்களைப் பார்க்கும்போது, சற்றே பொறாமையாக இருக்கும். அது ஒரு திறமைதான். அதிலும் எந்தத் தயக்கமோ, தயவு தாட்சண்யமோ இன்றிப் பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து தூங்குவதென்பது ஒரு வரம். வரம் அபூர்வமாகவே கிடைக்குமாயினும், நம்மிடையே ஏராளமான அபூர்வப் பிறவிகள் இருக்கிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள முடிகிறது.

திருகோண மலையிலிருந்து யாழ் செல்ல வேண்டியிருந்தது. அதற்குச் சொகுசுப் பேரூந்து ஏதுமில்லாததால் சோகத்துடன் அமர்ந்துகொண்டேன். இரவு பத்து மணி. இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் நிறைக்கப்பட்டு புறப்பட்டது. எந்த மேலதிக வசதிகளும் இல்லாத ஒரேயொரு பேரூந்துதான் அந்த நேரத்திற்கு! சரிந்து அமரவும் முடியாத இருக்கைகள்.  அதுவும் வழமைபோல இல்லாமல் ஒருபக்கத்தில் இரண்டு, மற்றையதில் மூன்று பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு வேறு!  எனக்கருகில் ஓர் நடுத்தரவயது மனிதர், அடுத்து அவர் மனைவி. அங்கிள் சிநேகமாகப் புன்னகைத்து, தன்னைப்பற்றி, என்னைப்பற்றி அளவளாவிக் கொண்டார்.

அரைமணி நேரத்தில் ஆரம்பித்தது அவஸ்தை. அவர் தூங்க ஆரம்பித்தார். அதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. என்ன, என் தோள்மீது சாய்ந்து தூங்க அரம்பித்திருந்தார். நொந்துபோய் அமர்ந்திருந்தேன். ஆனாலும் அவர் மிகவும் நல்லவராக, நாகரீகமானவராக இருந்தார். அது கூடச் சில சமயங்களில் மற்றவர்களுக்குத் தொல்லையாக அமைந்துவிடுகிறது. தனது செயலுக்கு அவ்வப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அட! இவ்வளவு அவஸ்தையையும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஒருமுறை சொறி தம்பி சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!


வ்வொரு பயணங்களும் விதவிதமான அனுபவங்களைக் கொடுக்கின்றன. ஒரு நெடுந்தூரப் பயணம் கொடுக்கும் கலவையான அனுபவங்கள் அலாதியானவை. 

இடைவிடாது பேசிக்கொண்டே வரும் சக பிரயாணி, அபூர்வமாக வாய்க்கும் ஒத்த ரசனை கொண்ட தற்காலிக நண்பர், தவறுதலாக இருக்கை மாறி அமர்ந்து அதுபற்றி உணராமலே 'நியாயம்' பேசுபவர்கள், தூக்கம் வரும்வரை நாட்டு நிலைமை பற்றித் தீவிரமாகக் கவலைப்படுவோர், உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல் பற்றிக் கவலைப்பட்டுவிட்டு, சத்தமாகக் குறட்டைவிட்டுத் தூங்கி அடுத்தவர் தூக்கத்தைச் சுரண்டுபவர்கள், பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து உறங்கும் 'தனிமனித சுதந்திர ஆர்வலர்கள்' , எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே, எப்போது வாந்தி எடுப்பாரோ எனக்கிலியை ஏற்படுத்தும் பயங்கரவாதிகள் எனப்பல சுவாரஷ்யமான மனிதர்களை சந்திக்க வைக்கின்றன. இனிமையான தருணங்கள். இமசையான அனுபவங்கள் எனக் கொட்டிக் கிடக்கின்றன. ஓர் தேர்ந்த எழுத்தாளனுக்கு ஒவ்வொரு பயணமும் ஒரு சிறுகதைக்கான  கருவினைக் கொண்டிருக்கின்றன.

ஒரு நெடுந்தூரப் பேருந்துப் பயணத்தின் போது மனம் தனது பயணத்தைத் தனியாக ஆரம்பித்து விடுகிறது. மிக வேகமாக வருஷங்கள் கடந்து பின்னோக்கிச் சென்று விடுகிறது. அநேகமாகப் பால்யகாலத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறது. சின்னவயது முதல் வாழ்க்கையில் கடந்து சென்ற மனிதர்கள் பலரை நினைவு படுத்துகிறது. முதன்முதல் பயணித்த ஒரு நீண்ட பேரூந்துப் பயணத்தை, ரயில் பயணத்தை ஞாபகப் படுத்துகிறது. இழந்துவிட்ட உறவுகள், தவறவிட்ட சில தருணங்கள் என மனத்தைக் கனக்க வைத்துவிடுகின்றது. ஒரு நீண்ட பயணத்தினால் ஏற்படும் மிதமிஞ்சிய களைப்பு என்பது உண்மையில் மனத்தின் பாய்ச்சலால் ஏற்படுவதுதானோ?


சில பயணங்கள் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றி விடலாம். அதுவே ஒரு வரலாற்று நாயகனை உருவாக்கலாம். ஏதோ ஒரு திட்டமிடலுடன் ஆரம்பித்த ஒரு பயணம், பிற்காலத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பெரிய மாற்றத்தை அவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கே ஏற்படுத்தலாம். அப்படித்தான் 'எர்னஸ்ட்டோ குவேரா' என்ற இருபத்துமூன்று வயது இளைஞனும், அவரது நண்பரும் ஓர் உல்லாசப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் ஐந்தாயிரம் மைல் தூரத்தை நாலரை மாதத்தில் கடப்பதாக திட்டமிடுகிறார்கள். உல்லாசம்,பொழுதுப்போக்கு மற்றும் முடிந்த வரை தம் இளமைக்குத் 'தீனி' போடுதல் என்பவற்றை மட்டும் நோக்கமாகக் கொண்ட அந்தப் பயணம் ஆரம்பிக்கப்படுகிறது. பயணம் படிப்படியாக அவர்கள் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பெருவின் மச்சு பிச்சு (Machu Picchu) என்ற அழிக்கப்பட்ட Incan இனத்தின் வரலாற்றுப் பெருநகரம், வாழ்ந்து மறைந்துபோன அவ்வினம் அவர்கள் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த உலகத்துக்கு ஓர் 'சே குவேரா!' கிடைத்தார். The Motorcycle diaries (2004) என்கிற Argentina திரைப்படம் இதுபற்றி விரிவாகப் பேசுகிறது.


திடீரென வாய்க்கும் திட்டமிடப்படாத பயணங்கள் வாழ்வு முழுமைக்கும் மறக்க முடியாதவையாக அமைந்துவிடுகின்றன.அது எம்போன்றவர்களுக்கு புதிதல்லவே! அப்படியான என் முதல்பயணம் ஏதுமறியாத சின்னஞ்சிறு வயதில் ஏற்பட்டது. தூக்கத்திலிருந்து திடீரென கலைக்கப்பட்ட அந்த அதிகாலைப் பொழுதில், அம்மாவின் பதற்றம் நிறைந்த முகம் கலங்கலாகத் தெரிந்தது. என்னைத் தோளில் அள்ளிப்  போட்டுக் கொண்டு வேகமாக நடந்ததும், அயலவர், சொந்தங்களையும் அதே போல கண்டேன். எங்க போறம்?”,  “இண்டைக்கு ஸ்கூல் இல்லையா?” போன்ற என் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. என் பள்ளித் தோழர்கள், தோழிகள் சிலரையும் பார்த்தபோது உண்டான உறசாகமும், மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல வடிந்து போனது. வழமைக்கு மாறான சத்தங்களுடன் ஆரம்பித்த அந்த விடிகாலைப் பொழுது, வழமைக்கு மாறான விபரீதமான நாளொன்றின் ஆரம்பமாக இருந்தது. பின்பு அதுவே வழமையாகிப் போன ஒரு நெடிய பயணத்தின் ஆரம்ப நாளாக இருந்தது பின்நாட்களில் புரிந்துபோனது.


டம்பெயர்வு என்பது ஒரு விரும்பாத பயணம். அது கொடுக்கும் அனுபவங்கள் நம்மில் பலருக்கும் வாய்த்திருக்கிறது. அந்த அனுபவங்களை, அதன் தாக்கங்களை அன்றாட வாழ்வில் கண்டு கொள்ள முடிகிறது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் இருந்த காலப்பகுதியில் ஒரு தொலைக்காட்சியோ அல்லது வேறு எந்த உபகரணங்களோ வாங்கினால் அது அடைக்கப்பட்டு வந்த பெட்டியை யாரும் எறிந்துவிட  விரும்புவதில்லை. "எப்பவாவது தேவைப்பட்டிச்செண்டா..." என்று இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அந்தத் தேவை என்னவென்பதை சிலர் வெளிப்படையாகவே "தச்சமயம் ஓட வேண்டி வந்தாலும்..." நேரடியாகவே கூறுவார்கள். யாழ்ப்பாணத்திலாவது பரவாயில்லை. கொழும்பு வந்த பிறகும் அதுவே தொடர்கிறது. வாடகை வீட்டிலிருந்து இன்னோர் வாடகை வீட்டுக்கான பயணத்தின்போது உதவினாலும் அடிப்படையில் "எப்பவாவது ஓட வேண்டி வரும்" என்பது மனதில் ஆழப்பதிந்துவிட்டது. அது மாறுவதாகவும் தெரியவில்லை.

சில பயணங்கள் வாழ்வு முழுமைக்கும் மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்துவிடுகிறன. சில அதுவரை சந்தித்திராத, அறிமுகமில்லாத மனிதர்களின் அன்பினை உணர வைத்துவிடுகின்றன. சில நம் கூடவே இருக்கும் மனிதர்களின் அதுவரை பார்க்காத வேறுபட்ட முகங்களை இனங்காட்டிச் செல்கிறன. ஒரே இன மக்களின், ஒரே பிரதேச மனிதர்களின் மக்களின் மாறுபட்ட குணவியல்புகளைச் சொல்கின்றன. ஒரு குறுந்தூரத்திற்கான நெடிய பயணம் அது. ஐந்து கிலோமீட்டருக்கும்  குறைவான தூரத்தைக் கடக்க பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நகர்ந்து சென்ற அந்த ஒரே ஒரு பயணமே பலருக்கு வாழ்வை உணர்ந்துகொள்ளப் போதுமானதாக இருக்கிறது. எவ்வளவு பேரானாலும் இன்முகம் காட்டி வரவேற்று, ஆதரவளித்த சக மனிதர்கள் பலரையும், தாகத்துக்கு நீர் கொடுக்க மறுத்த சில 'நல்ல' மனிதர்களையும் அறிமுகம் செய்து வைத்தது.


வாழ்க்கை ஓர் பெரும்பயணம். அது சிலசமயம் தெளிந்த நீரோடையில் அமைதியாக பயணிக்கும் அழகிய படகு போல செல்கிறது. சிலவேளைகளில் காட்டாற்று வெள்ளம்போல் அலைக்களித்துச் செல்கிறது. மேலும் சில புயலில் அகப்பட்டுக் கொண்ட படகுபோல் இடம்தெரியாமல் தொலைந்துபோகிறது!  ஏதோ ஓர் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி எப்போதும் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். சிலர் இலக்கை அடைகிறார்கள். சிலர் திசை மாறி விடுகிறார்கள். சிலர் பாதியிலேயே தொலைந்து போகிறார்கள். இனி எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலையில் வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து வருபவர்கள் பலர்.

வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு கனவோடு பயணிப்பவர்கள் இருக்கிறார்கள். ஏராளமானோர் ஒரே கனவை இலக்காகக் கொண்டு வெவேறு பாதைகளில் பயணித்திருக்கிறார்கள். கனவுகளுடனேயே வாழ்ந்து, அதற்காகவே வாழ்ந்து, எதுவும் நிறைவேறாமல் அந்தக் கனவுகளோடும் , ஏக்கங்களோடுமே தொலைந்தும் போயிருக்கிறார்கள். சக பயணிகளாலும் தொலைந்து போயிருக்கிறார்கள். ஒரு தலைமுறையின் நிறைவு பெறாத பயணத்தை அடுத்த தலைமுறையும் தொடரலாம்.


கனவுகளைச் சுமந்துகொண்டு, நிஜங்களை சகித்துக் கொண்டு, நிம்மதியைத் தேடி, வெற்றியைத் தேடி, அங்கீகாரத்தைத் தேடி, அடையாளங்களை நிறுவிக் கொள்வதற்கு வாய்ப்புகளைத் தேடி, அமைதியைத் தேடி, பாதுகாப்பைத் தேடி வாழ்வின் இறுதிவரை பயணம் தொடர்கிறது. திசை மாறலாம், குறிக்கோளை அடையமுடியாது போகலாம், பாதியில் தொலைந்து போகலாம். எனினும் நம்பிக்கையுடன் பயணிப்போம்!

( 'வானம் தாண்டிய சிறகுகள்' என்ற தொடருக்காக பத்திரிகை ஒன்றில் எழுதியது. )

Friday, April 5, 2013

தாய்நிலம்!


"தம்பி என்னைத் தெரியுமா?" மெல்லிய உடல்வாகுடன் இருந்த அந்த அக்கா சிரித்துக் கொண்டே கேட்டார். பக்கத்தில் இன்னொரு வயது முதிர்ந்த பெண்மணி.

யோசித்துக் கொண்டே பார்த்தேன்.

"நீங்க அப்ப சின்னப்பிள்ளை. ஞாபகமிருக்காது. உங்கட வீட்டுக்குக் கிட்டதான்" மீண்டும் அவரே சொன்னார்.

"அப்பிடியா?"

"ஓம் உங்கட வீட்ல டீ.வி எல்லாம் பாக்க வருவம். இப்ப கொஞ்சம் முதல் அப்பா அம்மாவைக் கண்டு கதைச்சனான்"

அப்படி யாரையும் நினைவில் இல்லை. யாராயிருக்கும்? யோசித்துக் கொண்டே, "உங்க பேர் என்ன?" - கேட்டேன்.

"உங்களுக்கு ஞாபகமிருக்காது தம்பி"

"சொல்லுங்க"

அவர் நம்பிக்கையில்லாமல் சிரித்துக் கொண்டே, "ரதீஸ்வரி"

"ஓ..! நீங்களா? எனக்குத் தெரியும். மகேஸ் அக்கா எங்க?" அவருடைய அக்கா பற்றியும் விசாரித்தேன்.

கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு போகும்போது மகிழ்ச்சியுடன் சொன்னார். "தம்பிக்கு எல்லாரையும் ஞாபகம் இருக்கு".

அதிர்ச்சியாக இருந்தது. ரதீஸ்வரி அக்காவா இது? ஆளே அடையாளமே தெரியாமல் மெலிந்து போய்.. சற்று நேரம் அவர் போவதையே  திரும்பி, பார்த்துக் கொண்டிருந்தேன்.

ல்லாமே மாறிப்போய் விட்டிருந்தது. சரியாக இருபத்திரண்டு வருடங்கள். நான் பிறந்து வளர்ந்த, சின்னஞ்சிறு வயதில் விட்டு விலக்கப்பட்ட என்தாய்நிலம் அவ்வளவு அந்நியமாக தெரிந்தது. பழக்கப்படுத்திக் கொள்ள நினைவுகளின் அடுக்குகளிளிருந்து தேடிக் கொண்டே மெதுவாக நடந்துகொண்டிருந்தேன்.

சொந்த மண்ணில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு நாடோடிகளாக வாழும் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா? சின்னசிறு வயதில் மட்டுமே பார்த்த ஊரின் எந்தக் காட்சிகளையும் கற்பனை செய்து பார்க்க முயன்று, முடியாமல் நினைவுகளால் மட்டும் உணர்ந்திருக்கிறார்களா? சிறுவயதில் கேட்ட பாடல்கள் அடிமனதில் இருக்கும் சிறுவயது ஞாபகங்களை எப்போதாவது கிளறிவிட, தூக்கம் தொலைந்ததுண்டா? 

மீண்டும் பல வருடங்களின் பின் தாய்மண் திரும்பும்போது, அது தன் பழைய அடையாளங்களைத் முற்றிலும் துறந்து, அந்நியமாய் தெரியும்போது, என்ன தோன்றும்? முதன் முதலாக சிறுவயதில் நீங்கள் நடைபயின்ற வீதியில் மீண்டும் நடந்து செல்கையில், பள்ளிக்கூடம், சின்னவயது நண்பர்களுடன் விளையாடி, உருண்டு, புரண்ட கோயில் மணல் வீதி எல்லாம் பார்க்கும்போது, பழைய நினைவுகள் மெதுவாக மீட்டப்படுவதை உணர்ந்ததுண்டா?


தோ நான் சென்றுகொண்டிருக்கும் இந்த ஒழுங்கை எனக்கு முற்றிலும் புதிதானதுதான். சின்ன வயதில் ஒரு முறை கூட தனியாக இங்கே நடந்ததில்லை. ஆங்காங்கே ஒரிரு புதிய வீடுகள் கட்டிக் கொண்டும், காணிகளைத் துப்புரவு செய்துகொண்டும் இருந்தவர்கள் ஒரு கணம் நிறுத்தி, அந்நியனான என்னை அடையாளம் கண்டுகொளும் முயற்சியில் கவனிக்கிறார்கள்.

அவர்களுக்கு என் அப்பாவைத் தெரிந்திருக்கும். சிறுவயதில் என்னைக் கூடத் தெரிந்திருக்கலாம். இதோ கேற்றிலிருந்து நீண்ட சிமெண்ட் மேடை நடைபாதை போடப்பட்ட அடையாளம் மட்டும் தெரிகிறதே, ஒரு பெரிய வீடு இருந்ததற்கான எந்த அடையாளமுமின்றி சிறு கற்குவியல் மட்டுமே எஞ்சியிருக்கிறதே இது? இது ராசமணி அன்ரி வீடல்லவா? பலாலி இராணுவத் தளத்திலிருந்து முதலாவது ஷெல் வந்து விழுந்ததும், அந்தச் சுற்றாடலிலுள்ளவர்களின் முதற்கட்ட 'பாதுகாப்புடன் கூடிய பின்னகர்வு நடவடிக்கை' அந்த வீட்டிற்குச் செல்வதாகவே ஒரு காலத்தில் அமைந்திருக்கும். அந்த வீடு கற்குவியலாகக் காட்சியளித்தது.

மோட்டார்சைக்கிளில் மீன் விற்றுக் கொண்டிருந்தவரிடம், "அண்டைக்குத் தந்த மீன் சரியில்ல! பச்சத்தண்ணி மாதிரி இருந்திச்சு" 'கஸ்டமர் கொம்ப்ளெயிண்ட்' குரல் ஒன்று நடந்து வந்து கொண்டிருந்தது  கேட்டது.. படலையைத் திறந்துகொண்டு வந்த குரலின் சொந்தக்காரர் நடுத்தர வயதானவராக இருந்தார். ஆங்காங்கே தலை நரைத்திருந்தாலும், என்றும் மாறாத அதே புன்னகையில் அடையாளம் காட்டினார் பஞ்சண்ணை!

"தம்பி உங்களைத் தெரியும் எனக்கு ஞாபகமிருக்கு! ம்ம்ம்...யாரோட மகன்?"
"கிருபாகரன்"
"ஒமோம் ! எப்பிடித் தம்பி... இப்பதான் இங்கால வாறீங்கள் போல"


ரு சிறிய வைரவர் கோவிலைக் கடந்தபோது, வழக்கம்போல எந்த மதத்துக் கோவிலைக் கண்டாலும் செய்வதுபோல கை அனிச்சையாக ஒரு சல்யூட் வைத்தது. ஏதோ தோன்றியதும் இரண்டடி பின்னகர்ந்தேன். அந்தச் சிறிய வைரவர் சிலை அப்படியே ஞாபகத்தில் இருந்தது. ஒரு குழந்தை நிற்பதுபோல! கண்கள் புருவங்கள், அழகான புன்னகை. ஒரு குழந்தையை மனதில் கொண்டே அதனை உருவாக்கியிருக்கலாம்.

சற்றே தூரத்தில் ஒருவரிடம் அப்பா பேசிக்கொண்டிருந்தார். கறுத்து, தாடி வளர்த்திருந்த அவரைக் காட்டி தெரியுமா எனக் கேட்டார். அருகில் சென்று "ஆனந்து?" என்றேன். ஆனந்துக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. தன் மனைவி, குழந்தையை அறிமுகப்படுத்தி வைத்தார். என்னை விட ஒரு வயது மூத்தவர். அவர் அண்ணன், தம்பி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு பெரியவர். என்னைப் பற்றிக் கேட்டார். அப்பா பெயர் சொன்னதும் "உங்களுக்கு என்னைத் தெரியாது. அப்பாட்ட கேளுங்கோ தம்பி" என ஆரம்பித்து நிறையப் பேசிக் கொண்டிருந்தார். என்னுடன் ஆரம்பப் பாடசாலையில் படித்த சிவாகரனின் தந்தை அவர் எனத் தெரிந்துகொண்டேன். 

"அவன் இப்ப பிரான்சில தம்பி! வீடு உடைஞ்சவங்களுக்கு கட்ட காசு  தாறேண்டு கூப்பிட்டுப் பதிஞ்சவங்கள் தம்பி. பிறகு சொன்னாங்கள் உங்களுக்கு எதுக்கு? ஐரோப்பாவில இருந்து காசு வருது எண்டுறாங்கள். நாஞ்சொன்னன் தம்பியவ..இல்லையெண்டா முதல்லயே சொல்லி, எங்களை மீட்டிங் ஒண்டுக்கும் கூப்பிடாதேங்கோ. சும்மா நேரத்த மினக் கெடுத்தி.." அவரே தொடர்ந்தார்.

"தம்பி இதையெல்லாம் நம்பி இல்ல. நாங்கள் யாரையும் நம்பியே வீடு கட்டினனாங்கள்? எங்கட பிள்ளையள வளர்த்தனாங்கள்? படிப்பிச்சுப் பட்டதாரி ஆக்கினனாங்கள்? எல்லாம் இந்த மண்ணில பாடுபட்டு உழைச்சதுதானே? இந்த மண்தான் எல்லாமே. இதுமட்டும் போதும்!"


கூரை அகற்றபட்டு, உடைந்து, சிதைந்து போயிருந்த எங்கள் வீட்டில் தொலைந்துபோன எதையோ தேடுவதுபோல சுற்றிக் கொண்டிருந்தேன் -வெளிப்புறமாக. கூரை திறக்கப்பட்டு பாதி உடைந்த சுவர்த் தடுப்புக்கு எது வெளிப்புறம், உட்புறம்? வீட்டின் முற்றம் இருந்த இடத்தில், சுற்றிவர என எங்கும் செடிகள் முளைத்திருந்தன. இடையிடையே மண் திட்டுக்களில் நான் அந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததற்கான ஏதாவது ஒரு சின்ன அடையாளம் இருக்குமா எனத் தேடத் தோன்றியது.  ஒரு சிறு விளையாட்டுக் கார்ச்சில்லு, ஒரு ‘ரெனோல்ட்‘ பேனா மூடி, ஒரு பிய்ந்துபோன ரப்பர் செருப்பின் பாகமோ, உடைந்த சிறு விளையாட்டுப் பொருளோ, பெருமளவில் சேகரித்த 'எட்னா சொக்கலேட்' ஸ்டிக்கர் ஒன்று, கோயில் திருவிழாவில் வாங்கி விளையாடிய பறக்கும்தட்டு இப்படி எதுவாகினும் கிடைக்குமா?

நான் இருந்ததற்கான எந்த ஒரு சிறு அடையாளமாவது என் சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு நினைவுச் சின்னத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வெடித்து நெளிந்த மண் நிரம்பியிருந்த சில்வர் டம்ளர் ஒன்று கிடந்தது. ஓரிரு அந்தக்காலத்தைய 'லக்ஸ்பிறே' பால்மாவின் மஞ்சள் நிற பைக்கற் துண்டுகள் கிடந்தன. எனக்கான பிரத்தியேக அடையாளங்கள் ஏதுமில்லை. ஒருவேளை கொஞ்சம் மண்ணைக் கொத்திப் போட்டால் ஏதும் கிடைக்குமோ எனத் தோன்றியது. எப்போதோ நீங்கிச் சென்ற சொந்த மண்ணில், வீட்டில் தான் வாழ்ந்ததற்கான ஏதாவது ஓர் அடையாளத்தைத் தேடுவது மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான இயல்புதானே!

சிறுவயதில் விளையாடும்போது பத்திரமாக வைப்பதாக நினைத்து மறைத்து வைப்போம், பின்னர் நாங்களே அதை மறந்து போய்விடுவோம். இன்னோர் சந்தர்ப்பத்தில் வேறொரு பொருளைத் தேடும்போது எதிர்பாராமல் கிடைத்துவிடும். இது எல்லோருக்கும் வாய்த்த அனுபவமல்லவா? நானும்கூட எதிர்பாராமல், ஏதாவது கிடைக்குமா எனத் தேடினேன்.

ன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி நடைமுறையிலிருக்கும் சீனா. Puyi, அருங்காட்சியகத்தின் வாயிலில் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறார். கண்முன் மிகப்பிரமாண்டமான அரண்மனை. படை வீரர்கள் அணிவகுத்து நிற்கும் மிகப்பெரிய மைதானம் வெறுமையாக இருக்கிறது. பிரதான அரசவைக்குச் செல்லும் நீண்ட படிக்கட்டுகளில் ஏறிச்செல்கிறார். ஒரு முறை திரும்பிப் பார்க்கிறார்.

தனிமையும், இருளும் சூழ்ந்த மண்டபத்தில் இருக்கிறது தங்கத்தாலான சிம்மாசனம். அவர் முகத்தில் சிறு புன்னகை. கயிற்றுத் தடுப்பைத் தாண்டி, சிம்மாசனத்தின் படிகளில் ஏறுகிறார்.

"நில்லுங்கள், அங்கே போக அனுமதியில்லை" ஓர் சிறுவன் வருகிறான்.
"யார் நீ?"
"நான் இங்கேதான் இருக்கிறேன். காவலாளியின் மகன்"
"நானும் இங்கேதான் இருந்தேன். இதில்தான் அமர்ந்திருந்தேன்"
"யார் நீங்கள்?"
"நான் சீனாவின் பேரரசனாக இருந்தேன்"
"நிரூபியுங்கள்" என்கிறான் சிறுவன்.

ஒரு குழந்தைபோல் உற்சாகமாகி, புன்னகையுடன் சென்று சிம்மாசனத்தில் அமர்கிறார். முகத்தில் மகிழ்ச்சி பொங்க, அப்படியே எட்டி, கீழ்ப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்துத் தன் சட்டையில் துடைத்து அவனிடம் கொடுக்கிறார். அது வெட்டுக்கிளி வளர்க்கும் ஒரு சிறிய மரக்கூடு. குழந்தைப்பருவத்தில் பேரரசனாக வாழ்ந்தபோது ஓர் படைவீரன் கொடுத்தது. அவர் விளையாடும்போது மறைத்து வைத்தது. The last Emperor படத்தில் இடம்பெற்ற காட்சி இது.

ன் சொந்த நாட்டை இழந்து, பிற தேசங்களில் அடையாளங்களைத் துறந்து, அலைந்து கொண்டிருக்கும் நாடோடி இளவரசன் போலவே  சுற்றித் திரிகிறோம். சொந்த மண் ஒவ்வொருவரையும் மனதளவில் மண்ணின் மைந்தனாக மட்டுமல்ல தன் தாய்நிலத்தின் மன்னனாகவே உணர வைக்கிறது.

எங்கு சுற்றித் திரிந்தாலும், தேசங்கள் கடந்து வாழ்ந்தாலும் எம்மையறியாமலே சொந்த மண் பற்றிய நினைவுகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு பண்டிகைக்கால நாளின் காலைப் பொழுதோ, ஒரு பால்யகால புகைப்படமோ, ஏதோ ஒரு சோப் வாசனையோ திடீரென தாய்நிலம் பற்றிய நினைவுகளில் சடுதியாக மூழ்கடித்து மனதைக் கனக்கச் செய்துவிடுகிறது.

ஊரும் நம்மைப் போலவே தன் இயல்பான எந்த அடையாளமுமின்றி கனத்த மௌனத்தைப் போர்வையாக்கி, உறங்கிக் கொண்டிருக்கிறது.

( 'வானம் தாண்டிய சிறகுகள்' என்ற தொடருக்காக வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதியது. )

Wednesday, April 3, 2013

பரதேசியும், இடலாக்குடி ராசாவும்!


"அப்பம் ராசா வண்டியை விட்டிரட்டா"

"ராசா வண்டியை விட்டிருக்கேன்"

பரதேசி பார்த்தேன். முதலில் பரதேசியின் முதல்ப் பாதிக் கதையின் மையவிழையும், பிரதான பாத்திரமுமான இடலாக்குடி ராசா சிறுகதை...


'பரதேசி' ராசா 'இடலாக்குடி' ராசா அளவுக்கு ரோசமானவனாக இல்லை என்று தோன்றுகிறது. சமயங்களில் பிதாமகன் சித்தனின் சற்றே மேம்பட்ட, நன்கு பேசத்தெரிந்த நாயகன் போலத் தோன்றுகிறான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவனின் சாப்பாட்டில் திடீரென்று கைவைத்துவிடுகிறான் - பாலா நாஞ்சில் நாடனின் சிறுகதையில் கைவைத்தது போலவே! சரி அவன்தான் அப்படியென்றால், சாப்பிடுபவனும் பாலாவைப் போலவே இருப்பதுதான் கொடுமை. எட்டி உதைந்துவிடுகிறான்.

கதையின் முடிவில், அந்தக் கல்யாண விருந்து. அதுதான் அந்தச் சிறுகதையை அவ்வளவு அழகாக்குகிறது. அந்தப்பந்தியில் இருப்பவர்கள் முழுக்க இளவட்டங்கள். அவர்கள் ராசாவுடன் கொஞ்சம் விளையாடிப்பார்க்க மட்டுமே விரும்புகிறார்கள். அந்த முடிவு அவர்கள் சற்றும் எதிர்பாராதது. அவ்வளவு சோகத்தைக் கொடுத்துவிடுகிறது. அவர்களின் ஒட்டுமொத்த கொண்டாட்ட மனநிலையையே மாற்றிவிடுகிறது. கதையின் எவ்வளவு முக்கியமான பகுதி இது?

படத்தில்? அந்த விருந்தில் இளவட்டங்கள், அனுபவப்பட்ட பெருசுகள், பாட்டிகள் எல்லோருமே இருக்கிறார்கள். ராசா அழுதுகொண்டு வெளியேறும்போதும் யாரும் உணர்ந்துகொள்ளவில்லை. கொஞ்சம்கூடச் சுரணையுணர்வின்றி, மந்தைக்கூட்டம் போலவே நடந்துகொள்கிறார்கள். விவஸ்தை கெட்டவர்களாக, மனநிலை பாதிக்கப்பட்ட கூட்டம்போலவே சிரித்துக் கொள்கிறார்கள். அசட்டுத்தனமாகப் பல்லிளிக்கிறார்கள்.

மிகுந்த எரிச்சலை மட்டுமே கொடுத்த காட்சி இது. சிலருக்கு உச்சபட்சமாக, 'இவனுங்களை எல்லாம் தேயிலைத் தோட்டத்தில கொண்டுபோய் விட்டாத்தான் புத்தி வரும்!' என்றுகூடத் தோன்றியிருக்கலாம்!

அவர்களைப் பார்க்கும்போது, பாலாமீது சிறு மாற்றுக் கருத்து கூறினாலும், என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாமல் உடனே அடித்துப் பிடித்து பொங்கி ஓடிவரும் ரசிகமணிகளைப் பார்ப்பதுபோலவே ஒரு பிரமை உண்டாகிறது.

இந்தக்காட்சி சிறுகதையின் கருவையே சிதைந்துவிட்டது. இடலாக்குடி ராசா கதையை அப்படியே பயன்படுத்தியிருக்கலாமே? அழகான அந்தக்கதையை ஏன் மாற்ற வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? என்று யோசித்தபோது தோன்றியது.

ஓர் நல்ல சிறுகதையைத் தேர்வு செய்து கருக்கலைப்பு செய்துவிட்டால் அதை எங்கள் சொந்தக்கதையாகப் போட்டுக் கொள்ளலாம்? கதை, திரைக்கதை, இயக்கம் - பாலா. வசனம் - நாஞ்சில் நாடன்.

ஆக, நாஞ்சில் நாடனின் இடலாக்குடிராசாவும் அதர்வாவின் சிகையலங்காரம் போலவே சிரைக்கப்பட்டிருக்கிறது.

வேதிகாவை அறிமுகக் காட்சியில் பார்க்கும்போது எங்கேயோ பார்த்ததுபோல இருக்கே என்று பயந்து, குழம்பிப் பின் தெளிந்தேன். அப்படியே சந்திரமுகி 'பேய்' ஜோதிகா போலவே இருந்தார். ஏனைய காட்சிகளில் - சகிக்கவில்லை!

அப்பத்தா பஞ்சாயத்து முடித்து வைத்துவிட்டுப் போகும்போது, அந்தக் கல்யாணப் பெண் வேதிகாவைப் பார்த்து சிரிப்பாரே..மனதில் நிற்கிறார். அந்த அப்பத்தாவும் மனதை அள்ளுகிறார்.

படத்தில் மிக மிக ரசிக்க முடிந்தது, 'பெரியப்பா' விக்கிரமாதித்யன்தான்! அந்தக் கதாபாத்திரத்தை கிராமம், நகரம் வித்தியாசமின்றிக்காண முடியும் - தோற்றத்தில் மட்டும் வேறுபாட்டுடன். மனிதர் அட்டகாசம் பண்ணியிருக்கிறார்.