Friday, December 6, 2013

முதல் அனுபவம்!



"ஸ்கூல் கட் அடிச்சு போர்ன் மூவி பாத்திருக்கிறாங்கள்!"

எதிர்பார்க்காத ஒரு குற்றச்சாட்டு ஆங்கில ஆசிரியையால் வைக்கப்பட்டிருந்தது. குழப்பமாக இருந்தது. நாளை பள்ளியில் இப்படியொரு சம்பவம் நிகழுமென யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஸ்கூல் கட் அடிச்சது உண்மை. நண்பன் வீட்டில் படம் பார்த்ததும் உண்மைதான்.

ஆனால் இந்த 'போர்ன்'என்ற வார்த்தையையே எங்களில் யாரும் கேட்டிருக்கவில்லை.என்னவென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.

"டேய் அது ப்ளூ பிலிமாம்டா!" ஒருத்தன் சொன்னான். அதிர்ச்சி!

"அய்யய்யோ" - வாய்விட்டு அலறினான் இன்னொருத்தன்.

வேறொன்றுமில்லை. பொதுவாக ஆங்கில ஆசிரியர்கள் அறிவுஜீவிகள் என்பது நம் பாடசாலைகளில் அதிபர்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் தொன்று தொட்டு நிலவிவரும் நம்பிக்கை.இந்த நிலையில் அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தானாம், 'இங்க்லீஷ் டீச்சருக்குத் தெரியாததா? ஒரு வேளை அருணாச்சலம் போர்ன் என்ற மூவி வகையைச் சார்ந்ததாக இருக்கலாம், ஆகவே விசாரணை வந்தால் உடனடியாகவே அப்ரூவராக மாறிவிடலாம்' - புதிதாக பீதி கிளப்பினான். அடப்பாவி! மொத்தமாகக் காரியத்தையே கெடுத்திருப்பான்.

பார்த்த படம் அப்போது புதிதாக வெளியாகியிருந்த 'அருணாச்சலம்'

பதின்ம வயது. ஆசிரியை சந்தேகப்பட்டாலும் தவறேதும் சொல்லமுடியாது. இயல்பானதுதான். நடந்திருக்க வாய்ப்புகளுண்டு. ஆனால் இதுதான் நடந்ததென்று அபாண்டமாகக் கூறியது ஏனென்று புரியவில்லை. அதுவும் தவிர அவர் மிக நல்லவர், எப்போதும் அன்பாகவே பழகுபவர், அமைதியான பெண்மணி. அவரிடமிருந்து அப்படியொரு குற்றச்சாட்டை நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு மதம் சார்ந்த  பிரிவில் இருந்த அந்த ஆசிரியை அவர் வரையில், தவறு செய்த எங்களை மந்தையிலிருந்து வழிதவறிப்போன ஆடுகளாக நினைத்து மன்னித்துவிடாமல், பலி போட்டுவிடலாம் என முடிவெடுத்து விட்டிருந்தார். வேறு ஆசிரியர்கள் யாரும் அவர் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. என்னடா அப்பிடியா? என்று சாதாரணமாக வகுப்பாசிரியர் கேட்டதிலேயே ஆசிரியை மேல் கோபம். அதைவிடக் கடுமையான மன உளைச்சல்! ஏனெனில் நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. அப்போதைய லட்சியமான அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பம், வளங்கள் சரியாக அமையவில்லை.

இத்தனைக்கும் கணணி பள்ளியில் எங்களுக்கு அறிமுகமான அந்தக் காலகட்டத்திலேயே, எங்களில் குறூப்பிற்கு கணனி தொடர்பான நல்ல அறிவு இருந்தது. கணனியில் வழக்கம்போல பாட்டுக் கேட்பது, பெயின்டில் படம் வரைவது போன்ற முக்கியமான வேலைகளில் ஈடுபடும்போது கணணி ஸ்டக் ஆகிவிட்டால், பேந்தப் பேந்த முழித்து, ஆசிரியரை உதவி கேட்கும் மற்ற மாணவர்கள் போல அல்லாமல், அக்கம்பக்கம் பார்த்து நைசாக பவர் பட்டனை அமுக்கிவிட்டு 'எஸ்'ஆகிவிடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தோம். அப்படியிருந்தும் நம் லட்சியத்தை நிறைவேற்ற முடியாத சோகம் இருந்தது.

நான் வேறு அதி தீவிரமான மன உளைச்சலில் இருந்தேன். ஒற்றைச் சொற்தொடர் என்னை அவ்வளவு குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. அது 'வாய் மூலமான பாலுறவு!'  நாளிதழ்களில் மோனிகா - கிளிண்டன் விவகாரம் பரபரப்பாக பேசப்பட ஆரம்பித்த நாளிலிருந்து, அந்தக் குழப்பம். என்ன அது? அதுவரை சாதாரண வாசகனாக இருந்த நான்,தீவிர படிப்பாளியாக மாறியிருந்தேன். எவ்வளவு தேடியும் விடைகாண முடியவில்லை. நண்பர்களிடமெல்லாம் கேட்கவில்லை.'என் கவுரவம் என்னாவது?'

அப்போதெல்லாம் ஊடகத்துறை அவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கவில்லை. கமெராத்துறை, ஸ்கேண்டல் துறை எதுவுமே கேள்விப்பட்டதேயில்லை. ஏன் சன் டீ.வி. கூட இப்போது இருப்பது போல வளர்ச்சியடைந்திருக்கவில்லை. என்னமாதிரியான பத்திரிக்கை தர்மம் இது? எதையுமே தெளிவாகச் சொல்ல மாட்டார்களா? எனக்குள் இருந்த தீராத தேடல், ஊடக தர்மம் குறித்த கேள்விகளையும், அறச்சீற்றம், தார்மீகக் கோபம் போன்ற இன்னபிற உபாதைகளையும் ஏற்படுத்தியிருந்தது. அப்போதே ஒரு சமுதாய அக்கறை கொண்ட இணையப் போராளிக்கான அடையாளங்களை என்னிடம் கண்டுகொண்ட தருணம் அது.

ஆனால் ஒன்று, என்னதான் விவரமில்லாமல் இருந்தபோதிலும், அப்போதெல்லாம் கிளிண்டன் என்று பெயர் சொன்னவுடனேயே எனக்கும் கூட விவரமானவர்கள் போலவே மோனிக்காவின் வாய்தான் ஞாபகத்துக்கு வந்தது என்பதை இங்கே அவையடக்கத்துடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஏற்கனவே இருந்த அறச்சீற்றத்தை, மேலும் அதிகப்படுத்துவதுபோல அருணாச்சலம் விவகாரமும் அமைந்துவிட்டது.எங்களுக்கு பள்ளியில் ஏற்பட்ட இந்தக்களங்கத்தை பள்ளியிலேயே எப்படிப்போக்குவது? ஐயகோ இனி வரும் வரலாறு என்ன சொல்லும்? போன்ற கேள்விகள் என் சிந்தனையில். எங்கள் இமேஜ் என்னாவது? படம் பார்த்துப் பள்ளியில் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு, அவ்வளவு முட்டாள்களா நாங்கள்?

பள்ளிகள் தனியே வெறுமனே பாடப்புத்தகங்களை மட்டுமே கற்பிப்பனவல்ல. வாழ்வியலை அங்கே தான் கற்றுக்கொள்கிறோம் பின்னாளில் வாழ்க்கையில் எதிர்கொள்ளப்போகும் எல்லா பிரச்சனைகளுக்கும், அனுபவங்களுக்கும் ஒரு 'டிரையல்' பார்த்துக் கொள்ளும் காலம். உண்மையைச் சொன்னால் பள்ளியில் எல்லாவற்றையுமே கற்றுக் கொடுப்பதில்லை. நாங்களாகத்தான் தேடிக் கற்றுக் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட சம்பவம் சிலநாட்கள் மன உளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அதுகூட ஓர் அனுபவம்தான் இல்லையா? அது கொடுத்த பாடத்தைக் கற்றுக் கொண்டோம். முக்கியமாக 'இனிமேல் ஸ்கூல் கட் அடிச்சுப் படம் பார்ப்பதில்லை!' மனம் தோல்விகளாலும்,ஏமாற்றங்களாலும் துவண்டுவிடும் போதெல்லாம் வாழ்க்கை, அவற்றிலிருந்து மீளச்செய்யவும், புத்துயிர்க்கவும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் என்று சொல்வார்கள். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோமா என்பது முழுக்க எங்கள் திறமை சார்ந்தது.

சம்பவம் நிகழ்ந்து ஒருமாதத்தில் பள்ளியில் ஒரு பெரிய கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டதில்,கணினி அறை சிலநாட்கள் எங்கள் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.

6 comments:

  1. அருணாச்சலத்திற்கே இந்த ரகளையா? கர்த்தரே!

    ReplyDelete
  2. எங்களுக்கெல்லாம் அந்த அனுபவம் ...... சான்ஸே இல்ல
    விடிஞ்சா ஸ்கூல் அந்தியான விளையாட்டு அவ்வளவுதான்

    ReplyDelete
  3. ஆஹா அருணாச்சலம் பார்க்கவா இந்தப்பாடு ஜீ !ஸ்கூல் கட்டடிப்பது ஒரு ஜோர்!ஹீ

    ReplyDelete
  4. அருணாச்சலத்துக்கே இந்தப்பாடா...

    ReplyDelete
  5. ஒரு போர்னுக்கு போயி இவ்வளவு போரா! பேரும் அக்கபோரால்ல இருக்கு!

    ReplyDelete
  6. போர்ன்(BORN) எண்டா பிறக்கிறது எண்டு தானே அர்த்தம்? அதில என்ன....................?விடுவம்,குழந்தைப் பிள்ளையள் தெரியாம கதைக்கப்பிடாது!

    ReplyDelete