Tuesday, October 1, 2013

THE ACT OF KILLING



ப்போது வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவுட்சோர்சிங் வேலை என்பதால் அவ்வப்போது நைட் ஷிஃப்ட் செய்ய நேரிடும். தொடர்ச்சியாக அங்கே நைட் ஷிஃப்ட் செய்துகொண்டிருந்த தமிழ் பேசும் நபரொருவர் இராணுவத்தில் சிலருடன் நெருக்கத்தில் இருந்தவராம். அவ்வப்போது சிறு வெற்றியைக் கொண்டாடும் சில பார்ட்டிகளில் கலந்துகொள்ளப் போனபோதுதான் தெரியும். அவருக்கு மெயிலில் வரும் புகைப்படங்கள் பற்றி உடன் வேலைபார்த்த நண்பன் சொன்னான். நிர்வாண நிலையில் இறந்த பெண்களின் புகைப்படங்கள் வருவதாகவும், வன்னியிலிருந்து மொபைலில் எடுக்கப்பட்டவை போலத் தெரிகிறது என்றான். இதுபோன்ற ஒரு விடயமே ஊடகங்கள் எதிலும் வெளிவராத, தெரியாத காலப்பகுதி. ஓர் நள்ளிரவு நேரத்தில் கவனிக்கையில், புன்னகையுடன் அந்தப் புகைப்படங்களை ரசித்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் தெரிந்த ஆர்வம் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

யாரென்றே தெரியாத, இறந்துகிடக்கும் ஓர் பெண்ணின் உடலைப் பார்த்து அவ்வளவு மகிழ்ச்சியடைந்தது எப்படி? அவ்வளவு கிளர்ச்சியைக் கொடுத்ததா? சொல்லமுடியாது, அவர் பிணங்களைப் புணர்வதில் ஆர்வமுள்ளவராக இருக்கலாம். இறந்த பெண்ணுடலை, ரசித்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் அவரிடம் அதைவிடத் திறம்பட, கற்பனைத் திறனுடன் கொலை செய்யக் கூடிய இன்னும் வேறு நல்ல ரசனையான திட்டங்கள், தகைமை வாய்த்திருந்திருக்கலாம். அந்தக் கலையார்வம் என்றாவது ஓர்நாள் அவர் மனைவி பிள்ளைகள்மேல் திரும்பிவிடாதிருக்க நிகரற்ற அன்பாளனான இறைவனை வேண்டிக் கொள்வதைத் தவிர செய்வதற்கு வேறொன்றுமிருக்கல்லை.


வேலைக்குச் சேர்ந்த புதிது. காலை, யாழ்ப்பாணம் அரசடி வீதி வழியாக சென்றுகொண்டிருந்தபோது கஸ்தூரியார்வீதியில் பெரும்கூட்டம் நின்றது தெரிந்தது. 'வழமைபோல ஏதாவது சம்பவம்' இடம்பெற்றிருக்கலாம் என நினைத்தேன். பின்னர் அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். இயக்கத்தால் பிடிபட்ட திருடனுக்கு யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் கட்டி வைத்து கல்லால் எறிந்து ஒரு கும்பலால் மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக. ஒரு செயினுக்காக திருடர்கள் கொலையே செய்வது வழக்கமென்பதால் இதுதான் சரியான தண்டனை என்றும், ஒரு பயம் வருமென்றும் பலரும் பேசிக் கொண்டார்கள். மனிதாபிமானம் பேசியவர்களை "திருடர்கள் உன் அம்மாவைக் கொன்றிருந்தால் இப்பிடிப் பேசுவாயா?" என்று வழக்கம்போல புத்திசாலித் தனமாகக் கேள்வி கேட்டு மடக்கினார்கள் சிலர். அது சமாதான காலம்.புலிகள் பெயர் சம்பந்தப்பட்டால் இதுபோன்ற விஷயங்களில் போலீஸ், இராணுவம் எதுவும் தலையிடாது. தவிர, சில சிக்கலான கேஸ்களில் போலீஸ், இதற்கு அவர்கள்தான் சரி, அவர்களிடம் சென்று தீர்த்துக் கொள்ளுமாறு கூறிய சம்பவங்களும் உண்டு.

அவன் புதிதாக இணைந்தவனாக இருக்கலாம்,அதற்குமுன் குற்றச் செயல்களில் ஈடுபடாதவனாகவும் இருக்கக்கூடும். ஆவேசமடைந்த கும்பல் மனநிலையில் பலிவாங்கப்பட்டிருக்கலாம். அங்கே நீதியான விசாரணை எப்படி சாத்தியம்? மரண தண்டனைக்கு எதிரானவர்களின் பிரதான கவலையும் இதுவே! அந்தக் கும்பலில் இருந்தவர்களின் மனநிலை பற்றிக் குழப்பமாக இருந்தது. அதில் பங்குபற்றிய யாராவது அந்தச் சம்பவத்தின்பின், ஒருமுறையாவது தங்களையும் கொலையாளிகளாக உணர்திருப்பார்களா? அப்போது உற்சாகமாக வேடிக்கை பார்த்தவர்களும் பின்னர் தனிமையில் சிந்திக்கும்போது (சிந்திப்பவர்களாக இருக்கும்பட்சத்தில்) வருந்தியிருப்பார்களா?

மறுநாள் ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது, திருடர்களின் கொட்டத்தால் ஆவேசமடைந்த மக்கள்(!?) தகுந்த தண்டனை வழங்கியதாக. மக்கள் அந்தளவிற்கு திடீரென நாகரீக வளர்ச்சியடைந்திருந்தது மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. தொடர்ந்த ஓரிரு நாட்கள் அந்த மைதானத்தைக் கடந்து செல்லும்போது கோல் கம்பமும் அதில் கட்டப்பட்டிருந்த சிறு கயிற்றுத் துண்டும் என்போலவே பலருக்கும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கக்கூடும்.

க மனிதன் மீதான வன்முறை பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. நாமும் வன்முறை செய்கிறோம். வன்முறை உயிர்பறிப்பது மட்டுமல்லவே. வார்த்தைகளில், சிறு செயல்களில், அணுகுமுறைகளில் தினமும்! அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது பற்றியும் சிந்திக்கத் தோன்றுகிறது. இன்னொருவர் மீதான வன்முறையை முற்றிலும் கண்டுகொள்ளாமல் விடுவது, ஏதோ ஒருவகையில் குரல்கொடுப்பது, பயந்துகொண்டே ஆர்வத்தில் பார்ப்பது. ஒருகட்டத்தில் ரசித்துப் பார்க்கும் மனநிலையை அடைவதுதான் ஆபத்தானது.

ஒருவனைத் துன்புறுத்திக் கொல்பவனையும் தாண்டி, அதை ரசித்துப்பார்க்கும் ஒருவனின் மனநிலை அதிர்ச்சியடைய வைக்கிறது. குழந்தைப் பருவத்தில் எறும்புகளைக் கொல்லாதவர்கள் இருக்கமுடியாது. அது இயல்பானது நானும், நீங்களும் அப்படியே! ஆனால் பத்துவயதில் ஒருவன் சுவாரஸ்யமாக தேடிதேடி எறும்பு கொல்வதை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துசெல்ல முடிவதில்லை.

ஒருமுறை புகைவண்டியில் சிக்கி உடல் துண்டாகிக் குற்றுயிராகிக் கிடக்கும் ஒருவரை செல்பேசியில் படம்பிடித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் ஒருவர். இப்படியான சமூக ஆர்வலர்களையும் இடையிடையே காணமுடிகிறது. தம்மிடம் சரணடைந்த ஒருவரை சித்திரவதை செய்து கொல்வதை வீடியோ எடுத்து மகிழும் இராணுவ வீரனொருவனின் மனநிலைக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக நான் நம்பவில்லை. அதைக்கூட யாராவது கும்பல் மனநிலை, தன் சக நண்பர்களின் இழப்பினாலேற்பட்ட  பழிவாங்கும் வெறி, தொடர்ந்த கடும் மோதலில் ஏற்பட்ட தற்காலிக மனப் பிறழ்வு என்று காரணங்கள் கூறலாம். ஆனால் இதற்கு? விழிப்புணர்வு எனக்கூறும் பட்சத்தில் இவர்கள் தொடர்பில் என்னவகையான விழிப்புணர்வை கொள்ளவேண்டும், பயப்படுவதா? பரிதாபப்படுவதா?

ரு காலத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட குழுவொன்று யாழ்ப்பாணத்தில் ஏராளமானோரைக் கொன்றது. புலிகள் சகோதரப் படுகொலைகளைச் செய்தார்கள் என்பவர்கள் கவனிக்க வேண்டியது, எல்லா இயக்கத்தினரும் சகோதரப்படுகொலை செய்தவர்களே. என்ன புலிகள் மாற்று இயக்கத்தினரை மட்டும் கொன்றார்கள். மற்றைய இயக்கத்தினர் புலிகள் தவிர, உறுப்பினர்களின் தனிப்பட்ட பகை, சும்மா போழுதுபோக்கிற்கு தம்மால் பிடிக்கப்பட்டவர்கள் என அப்பாவிகள் பலரையும் 'புலிகள்' என்று முத்திரைகுத்தி கொன்றுகுவித்தார்கள். அதில் ஒரு குழு மண்வெட்டியால் தலையைத் துண்டாடுவது வழக்கமாம். அப்படிச் செய்த தமது சாகசத்தை பெருமையாக, தலை எப்படி விழுந்தது உடல் எப்படி துடித்து அடங்கியது எனப் பெருமையாகப் பேசிக்கொள்வது இளம் உறுப்பினர்கள் பொழுதுபோக்காக இருந்ததாம். அந்தக் குழுவிலேயே நெருக்கத்திலிருந்த எழுத்தாளர் இதுபற்றி பின்னாளில் எழுதியிருந்தார்.

படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் யாராயினும், என்றாவது ஒரு தருணத்தில் தமது செயல்களுக்காக வருத்தப்படுவார்களா? குறைந்த பட்சம் தாம் செய்தது தவறென்றாவது உணர்கிறார்களா?


ந்தோனேஷிய அரசாங்கம் 1965 இல் கம்யூனிஸ்டுகள் மற்றும் அவ்வாறு சந்தேகிக்கப்பட்டவர்கள் என ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் துணை இராணுவக் குழுக்கள், தாதாக்கள் மூலமாகக் கொன்று குவித்தது. கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லையாம் ஐந்துலட்சம் - ஒரு மில்லியன் - இரண்டு மில்லியன் வரை குழப்பமாகவே போகிறதாம்.

இயக்குனர் ஜோஸ்வா ஒபன்ஹைமர் இதனைப் பதிவு செய்துவிடவேண்டும் என முயற்சிக்கும்போதுதான் தெரிகிறது. இன்னமும் மக்கள் கம்யூனிசம் பற்றிப் பேச அச்சப்படுகிறார்கள் என்பது. படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களிடமே பேசலாம் என முயற்சிக்கும்போது, அங்கிருந்து முற்றிலும் எதிர்பார்க்காத வரவேற்புக் கிடைக்கிறது. மிக மகிழ்ச்சியாகத் தேசத்துக்காற்றிய சேவையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களில் ஒருவன் அன்வர். அவன் மட்டுமே ஆயிரம் பேரைக் கொன்றிருக்கிறான்.

என்னதான் தேசநலனுக்கான நடவடிக்கை என்கிற நியாயம் (?!)இருக்கின்றபோதிலும், தனிப்பட்ட ரீதியான கொள்கையும் ஒத்துப்போகும்போது இன்னும் உத்வேகத்தைக் கொடுக்குமல்லவா? தியேட்டர் ஒன்றில் டிக்கெட் கிழிப்பவனாக வேலை பார்த்த அன்வர், எல்விஸ் ப்ரெஸ்லி, அல்பசீனோவின் ரசிகன். தீவிர சினிமா ரசிகனான அன்வருக்கு கம்யூனிஸ்டுகள் ஹொலிவூட் படங்களை தடை செய்தார்கள் என்ற ஒரே காரணமே அவர்களைக் கொல்லப் போதுமானதாயிருந்திருக்கிறது.

எப்படியெல்லாம் கொன்றார்கள் என்று அன்வர் & குழுவினர் சொல்கிறார்கள். "பல்கனியில் ஒரு மேசையின் மீது நாங்கள் அமர்ந்து பாடிக்கொண்டிருப்போம் (அமர்ந்து, பாடிக் காட்டுகிறார்கள்). வீதியால் செல்பவர்கள் பைத்தியக்காரரைப் பார்ப்பதுபோல் பார்த்துச் செல்வர்கள். அவர்களுக்குத் தெரியாது, மேசையின் ஒரு கால் ஒருவனின் கழுத்தின்மீது தாங்கி நிற்பது"

கொலை செய்வதையும், அதன் பின்னரான மனநிலையையும் விபரிக்கிறான் அன்வர்.




இன்னொருபுறம் அன்வர் தற்போது எப்படியிருக்கிறான்?தன் பேரக்குழந்தைகளுக்கு அன்பைப் போதிக்கிறான்.தவறுதலாக அடிபட்ட வாத்துக்குஞ்சொன்றைத் தடவிக் கொடுத்து, கொடுத்து 'sorry, அது ஒரு ஆக்சிடெண்ட்' என்று மன்னிப்புக் கேட்கச் சொல்லிக் கொடுக்கிறான்.

கம்யூனிஸ்டுகள் பற்றிப் பேசவே அச்சப்படும் மக்கள் வாழும் தேசத்தில், படமாக்கும் பொறுப்பை முன்னாள் கொலையாளிகளான அன்வர் குழுவினர் ஏற்றுக் கொள்கின்றனர். நடிகர்கள் தேர்வு, காட்சியமைப்பு போன்ற விடயங்களை அவர்களே கச்சிதமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். தாம் தேசத்துக்காற்றிய மகத்தான சேவை, தம் வாழ்நாள் சாதனை எங்கே வரலாற்றில் பதிவு செய்யபடாமலே போய்விடுமோ என்ற நியாயமான கவலை அன்வரிடம் இருக்கிறது. தவிர, எது நடந்ததோ அதை அப்படியே பார்வையாளன் கண்முன்னே கொண்டுவரவேண்டும் என்பதில் ஓர் நேர்மையான படைபாளியின் உறுதியுடன் இருக்கிறான்.

கொலையாளிகளின் மனநிலை எப்படியிருகிறது? அன்வருக்கு ஆரம்பத்தில் எந்த உறுத்தலும் இல்லை. கொலைகள் பற்றி அவ்வளவு சிலாகித்துப் பேசுகிறார்கள். சிலர் தாங்கள் செய்தது தவறென்று உணர்கிறார்கள். இதெல்லாம் படத்தில் வந்தால் இமேஜ் என்னவாவது என்கிற கவலை இருக்கிறது சிலருக்கு. அன்வர் போலவே இன்னொரு கொலையாளி சொல்கிறான். சர்வதேச சட்டங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. "ஜோர்ஜ் புஷ் அதிகாரத்தில் இருந்தபோது குவாண்டனோமா சரி. சதாம் ஹூசைன் கூட அப்படியே. என்னிடம் அதிகாரம் இருக்கிறது. ஆக, நான் செய்ததும் சரியே!"

"கம்யூனிஸ்டுகளின் வாரிசுகள் இதை ரசிப்பார்களா?" இயக்குனரின் கேள்விக்கு சற்று யோசித்துவிட்டு அன்வர் சொல்கிறான், "நிச்சயமாக! ஆனால், அவர்கள் பற்றியது எனபது தெரிந்தால் பார்க்க விரும்ப மாட்டார்கள். இல்லாவிடில் இதை விரும்புவார்கள்"

ஒரு கம்யூனிஸ்டாக தான் கொல்லப்படுவதாக நடித்தபின்னர் சற்றே உணர்ச்சிவசப்படும் அன்வர், அவர்களின் வலியைத் தான் உணர்ந்ததாகச் சொல்கிறான்.
"நீங்கள் செய்வது வெறும் சினிமாவுக்காக என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு அது தங்கள் இறுதி"
"இல்லை நானும் அதை அப்படியே உணர்ந்தேன்"

படப்பிடிப்பு நடைபெறும்போதெல்லாம் அன்வரின் போக்கில் சிறிது மாறுதல். வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தக் குற்றவுணர்வுமின்றிக் கடந்துவிட்ட அன்வரை அவன் பங்குபற்றிய படம் குற்றவுணர்வுக்குள்ளாக்குகிறது எனில், அதுதான் இந்த ஆவணப்படத்தின் மிகப் பெரிய வெற்றி. ஆரம்பத்தில் தனது கொலைகளை நிகழ்த்திய இடத்துக்கு மீண்டும் போகும்போது அவனால் முன்புபோல பேச முடியவில்லை.சோர்வடைந்தவன்போல நிற்கிறான். 

திரும்பிச் செல்லும்போது ஆச்சரியகரமாக அழுகிறான். இங்கேதான் ஆவணப்படம், ஒரு திரைப்படமாக மாறுகிறதா என்ற சந்தேகமும் வந்துதொலைத்தது. காரணம் நான் வளர்ந்த, வாழும் சூழல் அப்படியொரு நம்பிக்கையைக் கொடுப்பதாக இல்லை. இதுபோன்ற ஏராளமான கதைகள் நம்மிடையே உள்ளன - ஆவணப் படுத்தப்படாமல். ஏராளமான அன்வர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித குற்றவுணர்ச்சியும் ஏற்பட வாய்ப்புகளே இல்லை.

7 comments:

  1. அற்புதமான கட்டுரை ஜீ.

    ReplyDelete
  2. வன்முறையை ரசிக்கும் குரூர புத்தியை நானும் பார்த்து, ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஹாஸ்டல் போன்ற படங்கள், இத்தகைய குரூர புத்தியுடையோரை சந்தோசப்படுத்தவே எடுக்கப்படுகின்றனவோ என்ற ஐயமும் உண்டு. ஆக்ட் ஆஃப் கில்லிங் பற்றி வேறு யாரோ ஒருவரும் எழுதியிருந்தார்கள். பார்க்கும் தைரியம் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. கொழந்த எழுதின மிக நுணுக்கமான பதிவு அது!
      http://kolandha.com/2013/08/actofkill.html

      Delete
  3. அருமையான படைப்பு ஜீ.....குற்ற உணர்வு இல்லாத மனிதர்கள் வாழும் காலத்தில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....!

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு.எங்கள் துன்பமும்,துயரமும் ....................எங்களவர்களே,எங்களைக் கொன்ற கொடூரம்.............இன்னும் தொடரவே விரும்பும் மனோ நிலையில்...........///உணவுக்காக மிருகங்களைக் கொல்வோர் கூட பிரார்த்தித்தே கொல்கிறார்கள்.

    ReplyDelete
  5. அடர்த்தியான கட்டுரைய.. வாசித்தது போன்ற மன நிறைவு. யாழ்பாணச் சம்பவம் நிகழ்ந்த போது ஆனும் ஊரிலிருந்திருக்கிறேன். அடுத்த நாள் பேப்பரில் செய்தி பார்த்து பலர் புளகாங்கிதம் அடைந்ததை பார்த்திருக்கிறேன். நானும் புளகாங்கிதமடைந்ததாகவே நினைவு இப்போது நினைத்துப் பார்க்கும் போது வன் முறை என்பது எவ்வளவு அர்த்த மற்றதுஎன்பதும் , அதன் பின்விளவுகளின் பாரதூரமும் உறைக்கிறது வன்முறைகளுக்குள் பிறந்து , வளார்ந்து அதனுள்ளே ஊறிப் போன எங்களின் வன்முறை கலாச்சாரமும் மிகவும் ஆபத்தானது பிரான்சில் அதிகம் பேர் ரெஸ்ராறன்டில் தான் வேலை செய்கிறோம் . எங்களுடன் வேலை செய்யும் பிரஞ்சு காரர்கள் அடிக்கடி சொல்வார்கள் தமிழர்கள் மிகவும் வேலைகாறர்கள். விசுவாசமானவர்கள் ஆனால் எடுத்ததுக்கெல்லாம் கோவப்படுபார்கள் என்று. நானும் பல முறை பார்திருக்கிறேன் சாதரண விடையங்களுக்கு எல்லாம் கோவ படுபவர்களை. வன்முறை கலாசரத்தின் அம்சமிது.

    ReplyDelete
  6. Superb and heart melting story ..... thanks...
    bloody sinhalans....

    ReplyDelete