Saturday, October 19, 2013

சுஜாதா, திரைக்கதை எழுதுவது இப்படி!


கடந்த மாதம் யாழிலிருந்து வந்திருந்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பேச்சு தலைவர் சுஜாதாவுக்குச் சென்றது. அவன் தீவிர சுஜாதா ரசிகன்.

"திரைக்கதை எழுதுவது எப்படி? இங்க வந்ததா?எங்கயுமே கிடைக்கேல்ல" - நண்பன் கேட்டான்.

"மச்சி நானும் ஒரு ஆர்வத்தில 2005ல யாழ்ப்பாணத்தில தேடி, கொழும்பு வந்து தேடிப்பார்த்து எங்கயுமே கிடைக்கல. வந்தது, முடிஞ்சுதுன்னு சொன்னாங்க"

"யாழ்ப்பாணத்தில 'புக்லாப்'ல மட்டும் 'திரைக்கதைப் பயிற்சிப் புத்தகம்'னு ஒண்ணு வச்சிருந்தாங்க. அது கதை ரெடியானப்புறம் என்னென்ன பண்ணனும்னு ஒரு கைடன்ஸ் மாதிரி நாமளே ஃபில் அப் பண்ணி யூஸ் பண்றது. நமக்குத் தேவையில்லாதது. அப்புறம் எனக்கும் இண்டரஸ்ட் இருக்கல. ஆனா இப்ப திரும்பவும் ஆர்வமா இருக்கேன். ஏன்னா வர்ற வருஷம் இன்னொரு புத்தகம் வந்திடும். 'திரைக்கதை எழுதுவது இப்படி'ன்னு அது இன்னும் நல்லாருக்கும்"

" எப்பிடி? யார் எழுதினது?"
"ராஜேஷ்ன்னு ஒருத்தர் கருந்தேள் கண்ணாயிரம் என்கிற பேர்ல ஒரிஜினலா எழுதின Syd Field கிட்ட கொப்பி ரைட்ஸ் வாங்கி எழுதுறார். அவர் ஒழுங்கா எழுதியிருந்தா போன வருஷமே எழுதி முடிச்சிருக்கணும். செய்யல. ஆனா அதுவும் நல்லதுதான். இப்போ வித்தியாசமான படங்கள் வர்றதால அது பற்றியெல்லாம் இருக்கும்."

"அது சுஜாதா புத்தகத்தைவிட நல்லாருக்குமா?"
"நிச்சயமா நல்லாருக்கும். நான் சுஜாதா புத்தகம் பார்க்கல. ஆனா தலைவர் சில விஷயத்தை '.......இப்படிச் சொல்கிறார் Syd Field'ன்னுதானே எழுதியிருப்பார். ராஜேஷ் டீப்பா எல்லாருக்கும் புரியிறமாதிரி அலசி ஆராய்ஞ்சு சரியான ஹாலிவுட், சரியான தமிழ்ப்படங்களோட உதாரணம் சொல்லியிருப்பார்.

"ஏன்.. சுஜாதா அப்பிடிச் செய்திருக்கமட்டாரா?"

"செய்திருப்பார் மச்சி.. ஆனா தலைவர்கிட்ட சிலநேரங்கள்ல பிடிக்காத விஷயம் அதுதான். ஸ்க்ரீன் பிளே டெக்னிக், What If? இதுக்கெல்லாம் ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் படத்தில இருந்துதான் அப்பப்ப எக்சாம்பிள் காட்டுவார். இதுல ஷங்கர் படம் படம் தவிர, மற்றதெல்லாம் படுமொக்கையான உதாரணமாத்தான் இருக்கும். தலைவர் தான் வேலைசெய்த படத்த மட்டும் சொல்லியிருக்கலாம். வேற சின்னப் படங்களை கண்டுக்காம இருந்தாரா இல்ல வேற நல்ல படம் அவருக்கு சொல்றதுக்கு கிடைக்கலையான்னு தெரியல. கணையாழியின் கடைசிப்பக்கங்கள்ல தமிழ்சினிமா பற்றி எழுதின வாத்தியாருக்கும் ரெண்டாயிரம்கள்ல இருந்தவருக்கும் எவ்வளவு வித்தியாசம். எக்கச்சக்கமா காம்ப்ரமைஸ் ஆகிட்டார். ஒருவேளை சலிப்படைஞ்சு போயிருக்கலாம்"

'திரைக்கதை எழுதுவது இப்படி' நிச்சயமா தலைவரோட புத்தகத்தைவிட ரீச் ஆகும். ஆகவேணும். நிறையப்பேர் அடிச்சுப்பிடிச்சு வாங்குவாங்கன்னு நம்புறேன். இப்பவே ராஜேசைக் கவனிக்கத் தொடங்கியாச்சு. சூது கவ்வும் படத்தில கொஞ்சமா அவரோட பங்கிருக்கு..இனி தலைவரோட புத்தகம் யாருக்கும் தேவைப்படாதுன்னு நான் நம்புறேன்"

"அப்பிடியா?" - இதைக் கேட்கும்போது அவன் முகத்தில் அப்பட்டமாக ஒரு ஏமாற்றம், கவலை தெரிந்தது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.

"ஏன் மச்சி அதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றே? தலைவர விட ஒருத்தர் டீப்பா சொன்னா நல்ல விஷயம்தானே! ராஜேஷ்க்கும்கூட அவர் வாத்தியார்தான்.... வாத்யாரே இப்ப இருந்தா சந்தோஷப்படுவார்"

சுஜாதா இப்போது இருந்தால்....? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் எல்லோருக்குமே தோன்றுவதுதான்... இந்த ஃபேஸ்புக் யுகத்தில் சுஜாதா இல்லாமல்போனது நிச்சயமாக பெரிய இழப்புத்தான். பிரபலங்களுக்கும், சாமானியர்களுக்குமான இடைவெளியை சமூக வலைத்தளங்கள் இல்லாமல் செய்து விட்டது பிரபலங்கள் பலருக்கும் ஃபேஸ்புக் மீது ஒவ்வாமையைக் கொடுத்திருப்பது உண்மைதான். இங்கே தலைவர் இருந்திருந்தால் அடித்து அடியிருப்பார். என்ன தலைவரைக் கேள்வி கேட்டு திணறடிப்பார்கள் என்பது ஒருபுறமிருக்க, இன்னும் நிறையக் கற்றுக் கொடுத்திருப்பார். அச்சு ஊடகத்தில் அவர் அறிமுகப்படுத்தியதை தேடுவதைவிட நேரடி சுட்டிகளாகப் பகிரப்பட்டிருக்கும். நிறைய வாசிக்கப்படும். ஓவராகச் சலம்புபவர்கள் அடங்கியிருப்பார்கள்.ஏராளமான திறமையான புதியவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டிருப்பார்கள்.

புதியவர்களை இனங்காண்பது, அறிமுகப்படுத்தி பரவலாகக் கொண்டுசேர்ப்பது குறித்து சுஜாதா அளவுக்கு யாருக்கும் பொறுப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியான தளங்களில் இயங்குவதுமில்லை.

அப்படியே சமூகத்தளங்களில் முழுநேரமும் இயங்கும் 'எப்போதோ இலக்கியம் படைத்த' ஓரிரு இலக்கியப் பெருசுகளும் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதோடும், அடுத்தவனில் குறை கண்டுபிடிப்பதிலும், கிண்டல் பண்ணுவதிலுமே காலங்கடத்துகிறார்கள். தொலையட்டும் என்று யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் எவனும் சிக்கவில்லை எனில், சுஜாதாவையும், அவரை ரசிப்பவர்களையும் கிண்டலடிப்பதுதான் கொடுமை. அடுத்தவனைக் கழுவியூற்றுவதிலேயே காலம்தள்ளும் இவர்களுக்கு தம்மீதான சிறு விமர்சனத்தைக்கூடத் தாங்க முடிவதில்லை. சமயங்களில் தாம் எழுதியது நல்ல கதை என்று நிரூபிப்பதற்கும் சுஜாதாதான் தேவைப்படுகிறார். நான் சொன்னதைவிட அவர் எதை அப்படி சொல்லிவிட்டார்? என சுஜாதாவையே துணைக்கழைப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

சுஜாதா இப்போது இருந்தால்....?
மிக முக்கியமாக இணையத்தில் இயங்குபவர்களை மொண்ணைகள் என்று கூறியிருக்கமாட்டார். ஏனெனில் வாசகன் புத்திசாலி என எப்போதும் நம்பியவர் சுஜாதா!

7 comments:

  1. சுஜாதா குறித்த உங்கள் பார்வை அருமை!இப்போதிருந்தால்..............ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  2. தலைவர் தான் இப்போதும் எழுத முயலும் பலருக்கும் ஆதர்ச குரு..ஃபேஸ்புக்கில் சுஜாதா-நினைத்தாலே இனிக்கிறது!

    ReplyDelete
  3. Syd Field-ன் ஒரிஜினலைப் படித்ததாலோ என்னவோ, கருந்தேளின் மொழிபெயர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை. பத்து பக்கத்தை ஒரே பக்கத்தில் மொழிபெயர்ப்பது எந்த விதத்தில் சரியென்று புரியவில்லை!

    மேலும் Syd Field-ஐ நிராகரிக்கும் ஒரு விமர்சன வட்டமும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. Syd Field சொன்னதை அப்படியே மொழிபெயர்த்தால் ட்ரையாக இருக்கலாம். ப்ரோஃபஷனல்கள் தவிர, என்போன்ற தமிழன் வாசிக்கமாட்டாண்ணே! தவிரவும் இது முற்றுமுழுதான 'மொழிபெயர்ப்பு' இல்லையே! அடிப்படைதானே Syd Field!

      Syd Field-ன் ஒரிஜினல் கருந்தேளிடம் பெற்றுக்கொண்டேன். இன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை.

      //மேலும் Syd Field-ஐ நிராகரிக்கும் ஒரு விமர்சன வட்டமும் உண்டு//

      நிச்சயமா. இயல்புதானே! இங்கேயும் திரைக்கதையே முடிவுசெய்யாமல் படம் எடுத்து ஹிட் கொடுத்தவர்கள்/பவர்கள் இருக்கிறார்களாமே!

      Delete
    2. ஹாய். உண்மைல, ஸிட் ஃபீல்ட் பல இடங்களில் பல விஷயங்களை ரிபீட் பண்ணிருப்பாரு. அதை அப்படியே எழுதினா, தமிழ்ல சரிவராது. இதுனாலதான் என் ப்லாக்ல கொஞ்சம் மாத்தி, சுருக்கி எழுதினேன். ஆனா, இப்போ எழுதிட்டு இருக்கும் தினகரன் வெள்ளிமலரில் முடிந்தவரை செம்ம விரிவா எழுதிருக்கேன். 95% தமிழ்ப்பட உதாரணங்களை மட்டுமே வெச்சி. படிச்சி பாருங்க.. ஆன்லைன்லயே இருக்கு.

      Delete
  4. சுஜாதா பற்றிய உங்கள் பார்வை நன்று.
    புத்தகம் வரட்டும்.. வாசிக்க ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
  5. "திரைக்கதை எழுதுவது எப்படி?"

    இந்த புத்தகம் கிடைக்குமா?

    ReplyDelete