Thursday, October 3, 2013

ராஜாராணி - சமகால யதார்த்த சினிமா!



ன்றைய இளைஞர்களின் வாழ்வியலை இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்த படைப்பொன்று சமீபகாலத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. காதல் என்பதை வெறும் கச்சாப் பொருளாக மட்டும் உபயோகித்து எடுக்கப்படும் அபத்தக் குப்பைகளுக்கு மத்தியில், இருவருக்கிடையிலான உணர்வுச் சிக்கலை மைய இழையாகக் கொண்டு யதார்த்த நிலையிலிருந்து சற்றும் விலகாமல் வெளிவந்திருக்கும் 'ராஜாராணி' தமிழின் புதிய அலை சினிமாவின் ஆரோக்கியமான நல்வரவு!

ஒரு பார்வையாளனாக மனதுக்கு நெருக்கமாகவும் உன்னதமான அனுபவத்தை எனக்களித்த ஓரிரு காட்சிப் படிமங்களை விபரிப்பதேயன்றி, படத்தின் கதையைக் கூறுவதோ, விமர்சனம் செய்வதோ அல்ல என்பது என் துணிபு.

ந்தவகையில் முதற்காட்சி...
தேவாலயத்தில் ஒரு திருமணம் நிகழவிருக்கிறது. திருத்தந்தை அந்தப்பெண்ணை மணமுடிக்க சம்மதமா? என அறைகூவுகிறார். நாயகன் மெதுவாக திரும்பி தயக்கத்துடன் நண்பனைப் பார்க்கிறான். நண்பன் 'பயப்படாமல் சம்மதி பார்த்துக் கொள்ளலாம்' எனப் பார்வையாலேயே தைரியம் (குணச்சித்திரம்) சொல்கிறான். நாயகன் தெளிந்து சம்மதிக்கிறான். இன்றைய இளைஞர்கள் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறு காட்சியிலேயே உணர்த்திவிடும் நுட்பமான 'இயக்குனர் தொடுகை' அது என்பேன்.

முன்னைய காலங்களில் மணமக்களின் விருப்பத்தை, சம்மதத்தைப் பெற்ற பின்புதான் திருமணத்தையே நிச்சயிப்பர் பெற்றோர். தேவாலயத்தில் கேட்கப்படும் சம்மதம் என்பது ஒரு சம்பிரதாயம் அல்லது சடங்கு மட்டுமே. ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்ப அவசரகால யுகத்தில் அதெல்லாம் சாத்தியமாவதில்லை என்கிற உண்மை போகிறபோக்கில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னர் பார்த்தோ, பேசியோ இராத இருவரை நேரடியாக மணநிகழ்வில் வைத்து  சம்மதம் கேட்டு முடிவெடுக்கக் கோரும் இந்தநிலை ஆரோக்கியமானதா என ஆராயப்படவேண்டியது ஒருபுறமிருக்க, சமகாலச் சினிமாவில் முதன்முறையாக இது சரியாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இப்போது சம்மதத்தைப் பெண்ணிடம் கேட்கிறார். நாயகி மிக மிக மெதுவாகத் தந்தையை நோக்கி முழுவதுமாகத் திரும்பி நிற்கிறாள். வசனங்கள் ஏதுமில்லை. அல்லது பார்வையாளனின் கற்பனைக்கே விடப்படுகிறது. நாயகியின் பார்வை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' என்பது போலிருக்கிறது. திருமணத்திற்கு வந்தவர்கள் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கிறார்கள். மகளைப் புரிந்து கொண்ட, அவள் உணர்வுகளை மதிக்கும் நவீன தந்தை புன்னகைக்கிறார். உனக்கு சம்மதம் என்றால் சரி திருமணத்தை முடித்துவிடலாம். இல்லை என்றாலும் சரி ஒரு கேக்கோ, ஐஸ்கிரீமோ வாங்கிக் கொடுத்து அந்தப் பையனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்பதான உணர்ச்சியை வெளிபடுத்துகிறார்.

இதுவே முன்னையகால சினிமாவாக இருக்கும்பட்சத்தில், திருத்தந்தை அவசரப்பட்டு "என்ன மிஸ்டர் டேவிட், பொண்ணு சம்மதமில்லாமல்தான் இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்தீர்களா?" என அறிவுபூர்வமாக பேசுவதாக நினைத்து அதிகப்பிரசங்கித்தனமாக கேள்விகேட்டு,காரியத்தையே கெடுத்துவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் 'காலத்தோடு புதுப்பித்து வாழ்ந்துவரும்' (Up to date) இந்த திருத்தந்தை அவ்வாறு நடந்துகொள்வதில்லை.

நாயகி மீண்டும் புன்னகையுடன் மிக நிதானமாகத் திரும்புகிறாள். அவள் முடிவு செய்துவிட்டாள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது, பெண்கள் தம் வாழ்க்கை பற்றி மிக நிதானமாக ஆழ்ந்து யோசித்தே முடிவு செய்வதென்பதில் எப்போதும் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.

'இவ்வாறு தெளிவாக இருக்கும்' நாயகி, "சூர்யாவைத் திருமணம் செய்ய சம்மதம்" என்கிறாள். துரதிருஷ்டவசமாக அங்கே சூர்யா என யாரும் இருப்பதில்லை!

இந்த இடத்தில் ஒவ்வொரு பாத்திரமும் வெளிப்படுத்தும் உணர்வுகள் மிக முக்கியமானவை. உடனேயே நாயகி தன் தவறை உணர்கிறாள். வருத்தப்படுகிறாள்.

நாயகனின் நண்பனோ அதிர்ச்சியுடன் தலையில் கை வைக்கிறான். 'ஒரு வேளை அவன்தான் சூர்யாவோ' எனப் பார்வையாளன் குழம்பி, 'இருக்கமுடியாது, அவனுக்கும் ஏற்கனவே சூர்யாவைத் தெரிந்திருக்கலாம் ' எனத் தெளிகிறான்.

மணமகனான நாயகனோ ஒருகணம் மிகுந்த மகிழ்ச்சி பொங்க புன்னகைக்கிறான். அதுவரை ஏதோ ஒரு குழப்பத்தினால் பீடிக்கப்பட்டிருந்த அவனுக்கு, 'தான் தனியாக இல்லை' என்ற ஓர் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத் தென்படுகிறது. இது தேவாலயத்தில் நிகழ்வதுதானே முறை? - இன்னுமோர் நுட்பமான 'இயக்குனர் தொடுகை' 

கா.பு.வா. திருத்தந்தை அதிர்ச்சியடைவதில்லை. 'இங்கே திருமணம் செய்துகொள்ளும் பெரும்பாலான பெண்கள் சமபந்தமில்லாதவன் பெயரைத்தான் சொல்கிறார்கள், இதெல்லாம் இங்கே சகஜம்' என்பதுபோல அமைதி காக்கிறார்.

ஆனால் மணப்பெண்ணின் தந்தை ஏனோ அதிர்ச்சியடைந்து நெஞ்சைப் பிடித்துகொண்டு சாய்கிறார். பார்வையாளனுக்கும் அதிர்ச்சி! நாம் அவர்மீது கட்டமைத்த பிம்பம் போல அவர் நவீன தந்தை கிடையாது. பழைய தலைமுறையை, சற்றேறக்குறைய 'மௌனராகம்' காலத்தைச் சேர்ந்த, அந்தக் காலகட்டத்திலேயே தேங்கிவிட்ட மனநிலையோடு வாழ்பவர் என்பது புரிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி!

படத்தில் மணப்பெண், நாயகனின் நண்பன் தவிர, மணப்பெண்ணின் தந்தைக்காக யாரும் அங்கே அதிர்ச்சியடைவதில்லை. 'இதைவிட இன்னும் ஏதாவது சுவாரஸ்யமாக  நடைபெறலாம்' என்பதுபோல கூட்டம் அசையாமல், ஆர்வமாக வேடிக்கை பார்க்கிறது. 'அப்படியொன்றும் அசம்பாவிதம் நடைபெற திரைக்கதை அனுமதிக்காது'என்பதுபோல மணமகனும் அலட்டிக் கொள்வதில்லை. திருத்தந்தையும் 'ஆறுதலாகக் கலந்து பேசி ஒருமுடிவுக்கு வாங்கப்பா' என்பது போல காத்திருக்கிறார். இவ்வாறு இனிதே நடைபெறுகிறது திருமணம்.

கைச்சுவைக் காட்சி பற்றி அவசியம் கூறவேண்டும். நமக்குப் பிடிக்காதவர்களை விட்டு விலகிவிடுவது, தவிர்த்துவிடுவது என்ற பழமைவாத சிந்தனைகளை விடுத்து 'கூடவே இருந்து குடைச்சல் கொடுப்பது ' என்ற புதிய நாகரீகமான படித்த இளைஞர்களின் தாற்பரியத்தின்படி, நாயகன் படுக்கையறையில் சத்தமாக தொலைக்காட்சி பார்க்கும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்காட்சிகளை,இன்றைய நகரமயமாக்கலின் விளைவான அடுக்குமாடிக்குடியிருப்புகளின் ஒற்றைப் படுக்கையறையும்,அங்குள்ள ஒற்றைக் கட்டிலையும்,அதில் ஒரேயொரு போர்வையை மட்டுமே அனுமதிக்கும் கடும் நெருக்கடிமிகுந்த அவல வாழ்வைச் சொல்லும் 'கறுப்பு நகைச்சுவை' எனலாம்.  தமிழர்களின் நகைச்சுவையுணர்வு குறித்த கவலையினை வெளிப்படுத்திவரும் ஆர்வலர்களுக்கு, இனி அதுபோன்ற சந்தேகங்கள் வரச் சாத்தியமில்லை என்றே நம்புகிறேன்.

ருகட்டத்தில் தன் மனைவியின் பெயர் தெரியாது என்கிறான் நாயகன். பெண் மருத்துவர் அதிர்கிறார். ஆனால், யதார்த்த நிலை அறிந்த பார்வையாளன் யாரும் அதிர்ச்சியடைவதில்லை. இந்தக் காட்சி மிக முக்கியமான விடயத்தைக் கூற விழைகிறது. அதுதான் காதல்! 

காதல் தொடர்பான சமகால இளைஞர்களின் நிலை, மதிப்பீடு பற்றிச் சொல்கிறது. எவனொருவன் முதன்முறை காதல் வயப்படுகிறானோ அப்பொழுதே அவன் மனம் முழுதும் காதலி வந்து நிரம்பிக் கொள்கிறாள். அந்த இடத்தை பின்பு வேறு யாராலும் பிரதியீடு செய்ய முடிவதில்லை. மரணப் படுக்கைவரை மறக்க முடிவதில்லை. பத்து இருபது வருடத்திற்குமுன்னர் காதலித்தவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம். ஆனால் இதுதான் இன்றைய யதார்த்தம்.

சூழ்நிலை கருதி வேறொரு பெண்ணை போனால் போகிறதென்று திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் மனைவி பெயரைத் தெரிந்துகொண்டோ, அலைபேசி இலக்கம் பகிர்ந்துகொண்டோ தம் தனித்துவத்தை இழக்கவோ, காதலின் புனிதத்துவத்தை களங்கப்படுத்தவோ யாரும் சம்மதமாயில்லை. சந்தேகமிருந்தால் சோதித்துக் கொள்ளுங்கள். மனைவி பெயர் தெரியாது. ஆனால் காதலி பெயரை உடனடியாகச் சொல்லிவிடுவார்கள். அதுபோலவே பெண்களும், கவனம் ஒருமுறைதான் கேட்கவேண்டும்.

க, 'முழுக்க முழுக்க திரைப்படம் கூறும் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேனா?' என என்னை நானே நேர்மையாகக் கேட்டுகொள்ளுமிடத்து, 'இல்லை! நான் இயக்குனரோடு ஓரிடத்தில் கடுமையாக முரண்படுகிறேன் ' என்பதைச் சொல்லியேயாக வேண்டியிருக்கிறது.

தன்மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது மனித நேயத்துடன் நடந்துகொள்ளும் நாயகன், அதற்கு முற்றிலும் முரணாக முன்பொருமுறை அவள்மீது படுக்கையறையில் உச்சகட்ட வன்முறையைப் பிரயோகித்திருக்கிறான். ஆம், டி.ராஜேந்தர் என்பவரது திகில் காணொளியை சத்தமாக வைத்துப் பார்க்கிறான். இதுபோன்ற அதிர்ச்சியான காட்சியை இயக்குனர் பாலா படத்தில்கூட நான் பார்த்ததில்லை.

நல்ல சினிமாக்களுக்கு மக்களிடம் எப்போதுமே அமோக வரவேற்புக் கிடைத்தே வருகிறது. 'தெய்வத்திருமகள்', 'கண்ணா லட்டு திங்க ஆசையா?' சிவாவின் 'தில்லுமுல்லு', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தேசிங்குராஜா', வரிசையில் இந்தப்படத்துக்கும் அமோக ஆதரவையளித்தமையானது மேலும் இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்தும் வருவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது.

********

இந்தக் கட்டுரைக்கான ஆய்விற்காக (மனைவியின் பெயர் தொடர்பாக) நேற்று நண்பனுக்குத் தொலைபேசினேன். நேரம் இரவு 11.55.

"தங்கள் மனைவியின் பெயரை உடனடியாகக் கூற முடியுமா?"
"@#%^#$$&"
"அடைமொழியா மச்சி?"
#^$@%##  #$#$%^  #@%#$%  #$#%#^$ 
"ரைட்டு விடு!"
(தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லித் தொலைங்கடா!)

17 comments:

  1. கருத்துரை இட்டாலும் வெளியிடுவதில்லை... உனக்கு எதற்கு தளம்...?

    ReplyDelete
  2. Replies
    1. அடே சொட்டைப்பயல் தனபாலா பிடிச்சுதுன்னா வாசி இல்லனா மூடிக்கிட்டு போ, காற்றாவது வரட்டும்.

      Delete
  3. ஒருகட்டத்தில் தன் மனைவியின் பெயர் தெரியாது என்கிறான் நாயகன். பெண் மருத்துவர் அதிர்கிறார். ஆனால், யதார்த்த நிலை அறிந்த பார்வையாளன் யாரும் அதிர்ச்சியடைவதில்லை. \\\\\\\

    இது கொஞ்சம் ஓவர் தான்

    ReplyDelete
  4. ராஜா ராணி என்ற பெயரில் குறியீட்டை தாங்கள் விளக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
    இருந்தாலும் இப்படத்திலுள்ள நுண்ணரசியலை நுணுக்கி...நுணுக்கி...ஆராய்ந்து சொல்லி இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

    ‘ஓநாயும் ஆட்டுகுட்டியும்’ போன்ற ஆபத்தான சினிமாக்களை தமிழ் கூறும் நல்லுலகம் புறக்கணித்தது என்பது ஆரோக்கிய சினிமாவுக்கு எவ்வளவு ஆனந்தமளிக்கும் செய்தி!

    ReplyDelete
  5. முழுக்க பின்னப்படாதாரை வேக்காட்டு திரைக்கதையுடன் கூடிய படம். நல்ல ஜாலியான ஒரு காதலைச் சொன்னதாலேயே படம் தப்பித்தது. படம் பற்றி முழுக்க நெகடிவ்வாக ஒரு பதிவு எழுத நினைத்தேன்..பார்ப்போம்.

    ReplyDelete
  6. நம் மக்கள் கெக்கேபிக்கே என்று சிரிக்க வைத்தால் போதும் எனும் மனநிலைக்கு வந்திருப்பது நல்லதா என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  7. தமிழ்ப்படத்துக்குப் பிறகு நுட்பமான சடையர் வகைப் படம் இது. உங்களுக்குப் புரியவில்லையா!!!!

    ReplyDelete
  8. முதல் ரெண்டு பந்திய வாசிச்சுட்டு அப்படியே ஷாக்காயிட்டேன், அப்புறம்தான் புரிஞ்சது அப்பாடா செம ஓட்டு ..................

    ReplyDelete
  9. எனக்கு முதல் பாராவில இருந்தே தெரியும்.. இது பகடின்னு.. :) :)

    ReplyDelete
  10. அது சரி... விமர்சனம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.................

    ReplyDelete
  11. ம்ம் செம செம.. படத்தை விட விமர்சனம் சூப்பரப்பு

    ReplyDelete
  12. இது ஒரு திரைக் காவியம். இதைத் வெறுமனே ஒரு திரைப் படம் (அல்லது வெறுமனே சினிமா) என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    ReplyDelete
  13. ஜீ said:///ஒரு பார்வையாளனாக மனதுக்கு நெருக்கமாகவும் உன்னதமான அனுபவத்தை எனக்களித்த ஓரிரு காட்சிப் படிமங்களை விபரிப்பதேயன்றி.......///எப்பிடியோ தப்பீட்டீங்கள்!என்ன,எங்கே விமர்சனம் என்று கேட்போர் இந்த முதல் பந்தியை ஏன் வாசித்துக் கிரகிக்கவில்லை?ஹி!ஹி!!ஹீ!!!/////////'திண்டுக்கல் தனபாலன்' நல்லவர்,வல்லவர்,நாலும் தெரிஞ்சவர்.முதல் காமெண்ட் காத்திருந்து போடுபவர்.எதனால் இப்படி ஆனார்????????????

    ReplyDelete
  14. யப்பா.. நானும் உங்களுக்கு எதோ ஆயிடிச்சோ அல்லது எனக்குத்தான் இந்த உலக சினிமா புரியலையோன்னு பயந்துட்டேன்.. அப்புறம்தான் புரிஞ்சுது....

    ReplyDelete