Monday, July 1, 2013

புஜ்ஜி!


“அலே காக்கா வடை வேன்மா?”

மொட்டை மாடியில் அம்மா சோறூட்டிக் கொண்டிருக்கையில், அருகில் வந்தமர்ந்த காக்கையைப் பார்த்து புஜ்ஜி சீரியசாகக் கேட்டான். ‘அழகான காக்கா வடை வேணுமா?’

காக்கைகள் எப்போதும் வடைக்காகவே காத்திருகின்றன என்பது அவன் புரிதல். இரண்டு நாளைக்கு முதல்தான் புஜ்ஜி பாட்டி வடை சுட்ட கதையை முதன்முதலாக கேட்டிருந்தான். இனி அடிக்கடி கேட்பான். தெரிந்த கதையையே திரும்பத் திரும்ப பிடித்தவர்கள் வாயால் கேட்பது ஒரு தனி சுவாரஷ்யம் இல்லையா? குழந்தைகளுக்கு பேச்சு வர ஆரம்பிக்கும்போது, கதை கேட்பதும் ஆரம்பிக்கிறது.  கவனித்தலும், கதை கேட்டலுமே அவர்களின் பொழுதுகளைச் சுவாரஷ்யமாக்குகிறது. கதை கேள்விகளைக் கேட்க வைக்கிறது. அதுவே விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது .


புஜ்ஜி சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போது டீ.வி.யில் ஒரு வண்ணத்துப்பூச்சி பறப்பதைக் காட்டுவார்கள். அது அவனுக்குப் மிகப்பிடித்திருந்தது. அதைப் பார்த்து தானும் கைகளை  உற்சாகமாக அடித்துக் கொள்வான். ஒருநாள் பல்கனியில் தாத்தா தூக்கி வைத்திருந்தபோது திடீரென புஜ்ஜி கைகளை உற்சாகமாக அடித்துக் கொண்டான். தாத்தா ஆச்சரியமாகத் திரும்பிப் பார்க்க, சற்றுத் தள்ளி ஓர் வண்ணத்துப்பூச்சி! முதன்முறையாக நேரில் அவன் பார்த்தது அப்போதுதான்.

உணவுட்கொள்வதும், தூங்குவதுமாக தமது வேலையைத் தொடங்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் அடுத்ததாகக் கவனிக்க ஆரம்பிக்கின்றன. கவனிப்பதை மிக மகிழ்ச்சியாகச் செய்கின்றன. எதையும் ஆச்சரியமாகப் பார்க்கின்றன. அவர்கள் பார்க்கும் எல்லாமே அவர்களுக்குப் புதிதாகப் பிறந்தவைதான்.

நாய்களைப் பார்க்கும் போதெல்லாம் "வவ் வவ்" என்பான் புஜ்ஜி. அன்றொருநாள் உறவினர் வீடொன்றில், ஒரு அழகான நாய்க்குட்டியைப் பார்த்து வழக்கம்போல "வவ் வவ்" என்றான். அது "மியாவ்" என்றது பதிலுக்கு.

முதன்முறையாக ஒரு பூனைக்குட்டியை சந்தித்தான் புஜ்ஜி.


ருமுறை அவனுடைய புத்தகத்தில் படம் பார்த்து பெயர் சொல்லிக் கொண்டிருந்தான். தாத்தா கேட்டார் "மேலே என்ன இருக்கு?" புஜ்ஜி அவசரமாக புத்தகத்தை விட்டு அண்ணார்ந்து மேலே பார்த்தான்.

எல்லோருக்கும் சிரித்துவிட, அவனுக்கும் புரிந்ததுவிட்டது. 'மேலே என்பது புத்தகத்தில் மேலே' என சில நாட்களிலேயே தெரிந்துகொண்டான். அப்போது அவனுக்கு வயது மூன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, ஆறுவயதுக் குழந்தையெல்லாம் பேசும்போது 'மேலே' என்றால் உடனே மேலே பார்க்காது என்பதைக் குழந்தைகளை வைத்துப் படமெடுக்கும் தமிழ்சினிமா இயக்குனர்கள் கவனிக்க வேண்டும்.

குழந்தைகள் எதையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். ஒவ்வொரு சிறு அசைவிலும் புரிந்து கொள்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களைப் பிரதி செய்கின்றனர். யாரும் அவர்கள் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது.

முன்னிரவு வேளைகளில் புஜ்ஜி யாருக்கும் தெரியாமல் நைசாக சாமியறைக்குள் நழுவுவதை தாத்தா முதலில் கவனித்தார். சாமிப் படத்துக்கு கொளுத்தி வைக்கப்படிருந்த ஊதுபத்திகளில் ஒன்றை எடுத்து மெதுவாக வாயில் பொருத்திக் கொண்டான். எல்லோரும் ரகசியமாகக் கவனித்துக் கொண்டார்கள். வீட்டில் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லையே? "எங்க பாத்தீங்க தம்பி?" தாத்தா மெதுவாகக் கேட்டார். அவன் சொன்ன பதில் இங்கே அவ்வளவு முக்கியமில்லை.

"யாரும் அவனை ஒன்றும் சொல்ல வேண்டாம். தடுக்கப் போனால் இன்னும் இன்னும் செய்வான். அப்பிடியே விடுங்க" தாத்தா சொன்னார். யாரும் கண்டுகொள்ளவில்லை. சில நட்களிலேயே புஜ்ஜி தம்மடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டான் என்றால் பாருங்கள். இப்போதெல்லாம் அதை மறந்தே போய்விட்டான்.

நம்மவர்களில் பெரும்பாலானோர் தாத்தா ஆனபின்பே பிள்ளைகளை எப்படி வளர்ப்பது எனத் தெரிந்துகொள்கிறார்கள். சில நாட்கள் புஜ்ஜி 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ஒரு பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாக் குழந்தைகளையும் போலேவே அவனுக்கும் நடிகர் ரஜினியைப் பிடித்திருந்தது.


ம்மா ஒருநாள் மிரட்டுவதற்காக புஜ்ஜியிடம் கடவுளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். 

"குழப்படி செய்தா கடவுள் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். பணிஷ் பண்ணிடுவார்".

"கடவுளை சுட்டுடுவன்" - கையிலிருந்த விளையாட்டுத் துப்பாக்கியை மேல்நோக்கி உயர்த்திக் காட்டினான்.

எதற்கெடுத்தாலும் சுட்டுவிடுவது புஜ்ஜியின் வழக்கமாக மாறியிருந்தது. கணனி விளையாட்டுக்கள், ஷூட்டிங் கேம்ஸ் அவனது பொழுதுபோக்காக மாறியிருந்தது. தன் பெயரை ஒழுங்காகச் சொல்லவோ, நாலைந்து வார்த்தைகள் ஒழுங்காகச் சேர்த்துப் பேசவோ இன்னும் அவனுக்குத் தெரியாதென்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கணனியில் தன் பெயர் ஆங்கிலத்தில் தட்டச்சி, பாஸ்வேர்ட் எல்லாம் கொடுக்கத் தெரிந்திருந்தது.

அவனது ஒரு வயதிலேயே கணணி பற்றிக் கொஞ்சம் அறிவு வந்துவிட்டது. அப்பா கணனியில் வேலை செய்யும்போது, புஜ்ஜி தவழ்ந்துகொண்டே சென்று அமர்ந்து, அவரை நிமிர்ந்து பார்ப்பான். குரல் கொடுப்பான். அதாவது அவனையும் மடியில் இருத்திக் கொள்ளவேண்டும். அவனும் கீபோர்டைத் தட்டி ஏதாவது செய்துகொள்வான்.

முக்கியமான வேலையில் இருக்கும்போது இதெல்லாம் சாத்தியமா? அதனால் அப்பா அவனை ஏமாற்ற ஒரு ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுவந்தார். அவன் அருகில் வந்ததும், டிஸ்பிளே பட்டனை அணைத்துவிட்டு "ஆ! போயிட்டுது!" என்று கைகளை விரித்துக் காட்டுவார். புஜ்ஜி நிமிர்ந்து 'பே' என்று விழித்துவிட்டு பேசாமல் ரிட்டர்ன் அடித்து, திரும்பி வருவான்.

ஒருமுறை அப்படித்தான் அப்பா வழக்கம்போல "ஆ போயிட்டுது!" என்றார். புஜ்ஜியும் அலட்டிக் கொள்ளாமல் ரிட்டர்ன் அடித்தான். அப்படியே போகிற போக்கில் தனக்கு அருகிலிருந்த யு. பி. எஸ். பட்டனை அணைத்துவிட்டு, படு கூலாக வெளியே போனான். அப்பா 'மொத்தமா போயிட்டுதே!' என்று  தலையில் கைவைத்துக் கொண்டிருந்தார். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், அப்பாவுக்கு அடிக்கடி பயங்கரவாத அச்சுறுத்தலை விடுத்துக் கொண்டிருந்தான்.

இப்படியாக ஆரம்பித்த அவனின் கணணி அறிவு, பின்னர் விளையாட்டுகளில் வந்து நின்றது. விளையாட்டுகளில் சுடுவது, ஆர்மி போன்ற விளையாட்டுகளே அவனுக்குப் பிடித்திருந்தன. அது மண்ணின் இயல்பானதாகவும் இருக்கலாம். அவ்வப்போது தன்னைப் போலீசாக வேறு நினைத்துக் கொண்டிருந்தான். அன்று அப்பா அறைக்குள் நுழைந்தபோது புஜ்ஜி கூகுளில் போலீஸ் என்று டைப் செய்து சீரியசாக ஏதோ தேடிக் கொண்டிருந்தான். விக்கிப்பீடியா, ஸ்கொட்லன்ட்யார்ட் எல்லாம் ஒப்பன் ஆகியிருந்தன. அவனது கூகிள் தேடலைப் பார்த்து அப்பா வெலவெலத்துப் போய், இணையத் தேடலுக்கான சிலபல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.

இப்படி ஆரம்பித்த துப்பாக்கிப் பழக்கம் கடவுளைச் சுடும் அளவிற்கு வந்துவிட்டது. அவ்வப்போது துப்பாக்கியும் கையுமாக வந்து அம்மாவிடம்  கேட்டுக்கொள்வான், "கடவுள் பாத்துட்டிருப்பாரா?" - 'வந்தாப் போட்டுடலாம்' என்பதுபோல ஒரு பாவனையுடன்.

புஜ்ஜி போல ஏராளமான குழந்தைகள் இருப்பதால்தானோ என்னவோ, கடவுள் பூமிக்கு வருவதில்லை.


ம்மாவுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது என்ன இருந்தாலும் கடவுளைப் பற்றி இப்படி மிரட்டுவதற்கு மட்டும்தான் சொல்லிக்கொடுப்பதா? அவன் பயந்துவிடவில்லை என்பது வேறு விஷயம்! அவனுக்குச் சரியாக அறிமுகம் செய்து வைக்கலாம் என முடிவு செய்தாள்.

முதலில் பிள்ளையார் " பாருங்க கையில ஸ்வீட்ஸ் எல்லாம் வச்சிருக்கிறார். இவரைக் கும்பிட்டா நிறைய சாப்பாடு தருவார்", “இது துர்க்கை கும்பிட்டா ஸ்ட்ரோங்கா இருப்பாங்க, சரஸ்வதியைக் கும்பிட்டா நல்லா படிக்கலாம். லக்ஸ்மி பாருங்க நிறையக் காசு வச்சிருக்காங்க கும்பிட்டா தருவாங்க" கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பின்னர் அம்மா கேட்டாள், "உங்களுக்கு யாரைப் பிடிச்சிருக்கு?"
"லக்ஸ்மி"
"ஏன்?"
"அவங்க நிறையக்காசு வச்சிருக்காங்க" குழந்தைகள் எவ்வளவு விவரம் பாருங்கள்!
"அவங்கள இங்க கூப்பிடலாமா?" அவனே மீண்டும் கேட்டான்.
"எதுக்கு?"
"நிறையக் காசு இருந்தா நிறையக் கார் வாங்கலாம்" - அவனுக்கு கார் பிடிக்கும் ஏராளமான விளையாட்டுக் கார்களை வாங்கிக் குவித்திருந்தான். 

அன்றிரவு தூங்காமல் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்த புஜ்ஜி திடீரென கேட்டான், "அம்மா லக்ஸ்மிக்கு எத்தின வயது?"

அம்மா பயந்து போனாள். 'வேறு ஏதாவது ஐடியா வைத்திருக்கிறானோ?' என்று!

"சொல்லுங்கம்மா?"

லக்ஷ்மிக்கு என்ன வயதிருக்கும்? இவ்வளவு நாளா நாம் யோசிக்கவில்லையே? முப்பது சொல்லலாமா? "தேர்ட்டி!"

"தேர்ட்டின்னா த்ரீ சீரோ தானே! அம்மா அந்த ஃபோனை தாங்க"

செல்பேசியை வாங்கி 30 அழுத்தி, அழைப்பெடுத்தான். குழந்தைகள் எவ்வளவு இலகுவாக லொஜிக்காக சிந்திக்கின்றன? பெரியவர்கள்தான் குழப்பிக் கொள்கிறோம் இல்லையா?

"அவங்க எடுக்கிறாங்க இல்ல" குறைபட்டுக் கொண்டே தூங்கிப் போனான்.

குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அதற்குள் நுழையும்போதே நம்மையும் ஓர் குழந்தை போலவே உணரச் செய்துவிடுகிறது.

"ஹா ஹா ஹா இங்க பாருங்க மங்கி மாதிரியே  இருக்கார்" 

சுற்றிலும் நின்றவர்களும் சிரித்தார்கள். கோயிலில் முதன்முறையாக ஆஞ்சநேயர் சிலையைப் பார்த்து அவன் அடித்த கமெண்ட்!


புஜ்ஜியின் அட்டகாசம் தாங்கமுடியாத ஒரு பொழுதில் அப்பா ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். அந்த அருமையான ஐடியா யாரோ ஓர் அறிவுஜீவியால் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அப்பா ஒரு பிரம்பு வாங்கி வந்தார். அந்தப் பிரம்பின் பயன் குறித்து அவர் அறிந்துகொண்ட தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

'பிள்ளைகளின் குழப்படி தாங்க முடியாதபோது, ஒருமுறை பிரம்பினால் அடிபோட்டுவிட்டு, அதனை சம்பந்தப்பட்ட 'குற்றவாளி'யின் பார்வையில் படும்படி மாட்டிவைத்துவிட வேண்டும். சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பிரம்பைப் பார்க்கும்போதெல்லாம் மேற்படி 'குற்றவாளிக்கு' ஒரு பயம் இருக்கும். அதன்மூலம் குற்றச்செயல்கள் பெரிதும் குறைந்துபோய்விடும். முற்றாக நின்று போய்விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' - என்கிற ரீதியில் ஆலோசனையிருந்தது.

முதலில், அப்பா பிரம்பை புஜ்ஜியின் கண்ணில் படும்படியாக மாட்டிவைத்தார். மேலதிகமாக "குழப்படி செய்தா அடிவிழும்" எச்சரித்தும் வைத்தார்.

'இதெல்லாம் சரியா வருமா? என்னமோ போங்கடா' என்பதுபோல் புஜ்ஜி ஒரு பார்வை பார்த்தான்.

அடி என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியாது. அதைவிட குழப்படி என்றால் என்னவென்பதே அவன் அறிந்திருக்கவில்லை. அவன் செய்வது குழப்படியா? அவன் தன் கடமையைத்தானே செய்கிறான்? சம்பந்தமே இல்லாத விஷயங்களை அவனிடம் பேசியது மிகுந்த சலிப்பாக இருந்திருக்கக்கூடும். கண்டுகொள்ளவில்லை. அவ்வப்போது 'எனக்குச் சம்பந்தமில்லை' என்பதுபோல் அந்தப் பிரம்பைப் பார்த்துக்கொள்வான்.

ஒரு சுபயோக சுபதினத்தில், அப்பாவின் புதிய மடிக் கணணியின் மீது நீரையூற்றி, ஒரேயடியாகத் 'தண்ணி தெளித்துவிட்டான்' புஜ்ஜி.

அப்பா பொறுத்தது போதும் எனப் பொங்கியெழுந்துவிட்டார். பிரம்பை எடுத்து, சற்றே மெதுவாக அல்லது சற்றே பலமாக அல்லது என்னவென்றே சொல்ல முடியாதபடியாக, பரிசோதனை முயற்சியாக ஒரு அடி போட்டார்.

அவ்வளவுதான்! புஜ்ஜி "க்ரேல்ல்ல்... " என்பதுபோன்ற ஒலியுடன் ஆரம்பித்து பெருங்குரலில் அலறினான். அப்பா பதறிப்போனார். இந்த அடிக்கு இப்படியொரு அழுகையா? ரொம்பவும் அதிகமாக இருக்கே என்ற ஆச்சரியத்துடன், குழப்பம், கவலை கலந்து பார்த்துக் கொண்டிருக்க, புஜ்ஜி அப்பாவிடமிருந்து மெதுவாகப் பிரம்பை வாங்கினான். 

பாவம்! சரமாரியாக, பலமாகப் பத்துப் பன்னிரண்டு அடி விழுந்திருக்கும் அப்பாவுக்கு. அன்று, அவன் தனது விளையாட்டுப் பள்ளிக்குப் போகவில்லை. கணனியில் விளையாடிக் கொண்டிருந்தான். கால் நடக்க ஏலாதாம். உள்ளங்காலில் பெயிண்டிங் ஸ்டிக்கால் சிவப்பு, பச்சை, நீலம், ஊதா நிறங்களில் வரிசையாகப் புள்ளி போட்டு வைத்திருந்தான். ரத்தமாம்!

அந்தப் பிரம்பு? அதை அப்போதே ஒளித்து வைத்துவிட்டார்கள். புஜ்ஜி கையில் கிடைத்தால் நிலைமை என்னவாவது? எதிர்பார்த்ததைப் போலவே பிரம்புமீது ஒரு பயம் வந்துவிட்டது - புஜ்ஜியைத் தவிர எல்லோருக்குமே!


ப்போதெல்லாம் புஜ்ஜி செல்லுமிடமெல்லாம் மானாவாரியாக மானத்தை வாங்கிவிடுவதாக அம்மா சொல்கிறாள்.

அப்படித்தான் அன்றும். ஒரு பெரிய ஆடைக் கடைக்குப் போயிருந்தார்கள். உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் அம்மா, அப்பா ஈடுபட்டிருக்க, புஜ்ஜி உற்சாகமாக அங்குமிங்கும் ஓடித் திரிந்துகொண்டிருந்தான். இடையிடையே அவனைப் பார்த்துக் கொண்டார்கள். வழக்கம்போலவே அழகாக ஆடை உடுத்திய பொம்மைகள் நின்றுகொண்டிருந்தன. அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் புஜ்ஜி.

ஒரு பொம்மை அவனை மிகவும் கவர்ந்தது. அது ஒரு பெண்குழந்தைப் பொம்மை. சின்னதாகச் சுடிதார் அணிந்து மிக அழகாக இருந்தது. அவனைவிடச் சற்று உயரமாக இருந்தது.

புஜ்ஜி சிறு சிரிப்புடன், விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் ஆடையைத் தொட்டுப் பார்த்தான். தன் கைகளை பொம்மையின் கைகளுடன் இணைத்து, கோர்த்துப் பார்த்தான். அம்மா இதைக் கவனித்து, கலவரமாகி, அப்பாவிடம் ஏதோ சொல்ல அப்பா விரைந்து வநதார். அதற்குள் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது.

புஜ்ஜி எட்டி அந்தப் பொம்மையின் வாயில் ஒரு உம்மா கொடுத்துவிட்டான்.

"டேய் டேய்!" சிரித்துக் கொண்டே போய்த் தூக்கிக் கொண்ட அப்பா பின்னர் சொன்னார், "டேய் உன்னோட தலைக்கு மேலே காமெரா இருந்திச்சு. யூ ட்யூப்ல போடப்போறாங்க பார்!"

புஜ்ஜிக்கு யூ ட்யூப் பற்றித் தெரியாது. தெரிந்திருந்தால் ஒருவேளை தேடிப்பார்ப்பான்.

15 comments:

  1. குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அதற்குள் நுழையும்போதே நம்மையும் ஓர் குழந்தை போலவே உணரச் செய்துவிடுகிறது.

    ரசிக்கவைத்த குழந்தைக் குறும்புகள்..!

    ReplyDelete
  2. வாவ்! wonderful! இதெல்லாம் நிஜமாக நடந்த அனுபவமா, இல்லை வெறும் கற்பனையா? கற்பனை என்றால் hats off!!!

    ReplyDelete
    Replies
    1. முழுக்கக் கற்பனை அல்ல..நடைமுறையில் பார்த்ததும், கற்பனையும்!

      Delete
  3. நல்லா தான் இருக்கு ..... ஒரு சுட்டி குழந்தையின் சிறு வயது ..... அவனுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்கும் விதங்கள் :p

    ReplyDelete
  4. நல்ல விழிப்புணர்வூட்டும்(பெற்றோருக்கு)பகிர்வு.புஜ்ஜியாக மாறி விட ஆ............ !

    ReplyDelete
  5. இது யாரு ?..சின்ன வயதில் எடுத்த உங்களது படமா ?...:))))
    வாழ்த்துக்கள் சிறப்பான ஆக்கத்திற்கு .

    ReplyDelete
  6. நல்ல பதிவும் சுவாஸ்யமும்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு...
    புஜ்ஜி.....ரசிக்க வைக்கும் குழந்தைக் குறும்புகள்
    சூப்பர்

    ReplyDelete
  8. புஜ்ஜி போல ஏராளமான குழந்தைகள் இருப்பதால்தானோ என்னவோ, கடவுள் பூமிக்கு வருவதில்லை.// உண்மை.
    குழந்தைகளின் உலகம் ரொம்ப அருமையானதுதான்.

    ReplyDelete
  9. ரசிக்க வைத்தது...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. குழந்தைகளின் உலகம் ரொம்ப அருமையானது. ஆனால் பெரியவர்கள் அதற்குள் போவதில்லை

    ReplyDelete
  11. அழகு ..

    ReplyDelete