Monday, June 28, 2010

மணிரத்னமும் தமிழும்

ஒரு இயக்குனர் தனது படைப்புக்காக அரசிடம் விருது பெற்றால் அவர் திறமைசாலி!
எப்படி எடுத்தால் அரசாங்கம் விருது கொடுக்கும் என்று பார்த்து படமெடுத்தால் அவர் மிகவும் திறமைசாலி... இல்லையா?




தொண்ணூறுகளில் அவர் ஒரு நல்ல 'தமிழ்'  இயக்குனராக இருந்தார்.குறிப்பாக 'மௌன ராகம்'

அவரது மிகச்சிறந்த படம் (master piece ) 'நாயகன்' அதன் பின் வந்த அவரது எந்த படமும் நாயகனை மிஞ்சவில்லை என்றே நான் நினைகிறேன்.

'ரோஜா' வுக்குப்பிறகு இந்திய அரசின் தேசிய இயக்குனர். அப்போ தமிழ்?

அவர் கடைசியாக எடுத்த தமிழ் படங்கள் அலை பாயுதே, ஆய்த எழுத்து

மற்றவை எல்லாம் வேற்று மொழிப்படத்தை தமிழில் 'டப்' பண்ணியது போன்ற உணர்வு.

ஆனால் ஏதோ வட்டார 'எபெக்ட்' கொடுப்பதற்காக ' எலே, ச்சொன்னீய, ச்சொல்லுதீய, யாருவே ' போன்ற சொற்கள்.

காட்சியமைப்புகளில், நடிகர்களில் தமிழுக்கு சம்பந்தமே இல்லாமல், படத்துடன் பார்வையாளன் ஒன்றமுடியாமல் இருக்கும்போது வட்டார வழக்கில் பேசினால்?

உதாரணத்துக்கு 'டைட்டானிக்' படத்துக்கு தமிழ் 'டப்' இப்படி இருந்தால்?,

' என்ன ஜாக் ச்சொல்லுதீய? நெசமாத்தான் என்னைய புடிச்சிருக்கா?'
'அட எம்மேல சத்தியமா புள்ள.....நீன்னா உசுரு '
..............
' எலே ஜாக் ஓடுறாமில......அவன புடிலே'

கொடுமையா  இருக்காதா?

காஷ்மீர், நாகாலாந்து, நக்சல்கள், தீவிரவாதம்,ஒடுக்கப்பட்டவர்கள், ஏதோ ஒரு இலட்சியத்துக்காக போராடுபவர்களை, அதைப்பற்றிய எந்தவொரு சரியான  கண்ணோட்டமும் இல்லாது, அவர்களை ஒரு குழப்பவாதிகளாக சித்தரித்து, முடிந்த வரையில் கொச்சைப்படுத்துவதன் மூலம் இந்திய அரசை மகிழ்வித்து, விருதுகளைப் பெற்றுக்கொள்கிறார்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இலங்கை வரும் மாதவனுக்கும் பிராகாஷ்ராஜுக்கும் இடையிலான உரையாடல் மணியின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும்.

மாதவன் ' எதுக்காக இந்த சண்டை எல்லாம்?' ( படத்தில்  மாதவன் பத்திரிகையில் உருக்கமாக கதை எல்லாம் எழுதுகிறார் படத்தில் இது தெரியவில்லை ஒருவேளை 'ஹிந்து' தான் வாசிப்பாரோ? )

பிராகாஷ்ராஜ் ' உலக நாடுகளுக்கு ஆயுதங்கள் விக்க வேணும், ஆயுத தரகர்களுக்கும்  லாபம் வேணும் ' - இதுதான் மணிரத்னம்.

இதை எல்லாம் கவனிக்காமல் 'ச்சா மணிரத்னம் இலங்கையை பிரச்சனையை காட்டிட்டாண்டா'  எனப் புல்லரித்த ஆத்மாக்கள் ஏராளம்.

மணிரத்னம் ஸ்டைல் என்று நாங்கள் ஒருகாலத்தில் சிலாகித்துப் பேசுவது (வசங்களை தவிர்த்து  ) ஒளிப்பதிவு (அநேகமாக பி.சி.ஸ்ரீராம் அல்லது சந்தோஷ் சிவன் ) கொஞ்சம் அரையிருட்டாக நன்றாகத்தானிருக்கும்.

நாங்கள்  நண்பர்கள் யாரும் எடுத்த கொஞ்சம் இருட்டான புகைப்படங்களை பார்த்தாலே மணிரத்னம் ஸ்டைலா என்று கேட்பதுண்டு.

அப்புறந்தான் தெரிஞ்சுது,
ஹொலிவூட் காரன்களைப் பார்த்து கதையைக் 'கொப்பி' அடிக்கலாம். ஒளி அமைப்பையுமா ?

சாதாரண டிஜிட்டல் காமரா வில் எடுக்கும்போதே இந்தியா,இலங்கை போன்ற நாடுகளுக்கும், ஐரோப்பிய, வட அமெரிக்க, கனடா போன்ற நாடுகளில் எடுக்கப்படும் புகைபடத்துக்குமான வித்தியாசம் எமக்கு தெரியும்.

அது அந்தந்த நாடுகளின் நிலவும் காலநிலைக்கு ஏற்ப இயல்பாகவே அமைந்து விட்ட பிரகாசம் ( lightning )

அந்த நாட்டுக்காரன் ஒரு அறையிலுள்ள யன்னலை திறந்தா, எவ்வளவு வெளிச்சம் வருமோ அதை அவன் தன்னோட படத்தில காட்ட,.... நம்மாளு அதைப் பார்த்துவிட்டு, , இருட்டில படம் எடுக்க,....நாங்க எல்லாம் அத பாத்திட்டு 'ஐயோ ஹோலிவூட் ஸ்டைல்லயே எடுக்கிறாம்பா' ன்னு புல்லரித்து,....என்னத்த சொல்ல.

God father தான் நாயகனாக வந்தது என சொல்ல பட்டாலும் கூட அது படமாக்கப்பட்ட விதத்தில், திரைக்கதையில் ஒரு நேர்மை இருந்தது. அது எங்களுக்கு பிடிச்சிருந்தது.

'மணி இப்போதெல்லாம் ஹொலிவூட் டைவிட்டு  இலத்தின் அமெரிக்க சினிமா வைத்தான் பார்க்கிறார்' ன்னு ஒரு செய்தி (செல்வராகவனும் - city of god - புதுப்பேட்டை )

அதில ஒரு வசதி என்னன்னா அதெல்லாம் உலக சினிமால தான் வரும் 'ஹொலிலிவூட்' னா ஈசியா கண்டு பிடிச்சிடுவாங்க. அதோடு வித்தியாசமான, நல்ல கதைகளும் கூட.

அப்படித்தான் Amores perros என்ற Mexican படத்தை பார்த்து ஆய்த எழுத்து உருவானது.

ஒரு நல்ல படத்தை copy அடித்து இன்னொரு நல்ல படத்தை எடுப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அது 'டப்பிங்' படமாக இருக்கக்கூடாது. எங்களுக்கு மணியிடமிருந்து நல்ல 'தமிழ்' படம் வேண்டும்.

நான் ராவணன் இன்னும் பார்க்கவில்லை. ஸ்டில்ஸ் ஐப்பார்க்கும்போது,
கருமை படர்ந்த அடர் காடு, குளு குளு ஆறு,அருவி, கரும்பச்சை மரங்கள் (அமேசன் காடுகள் போல்), முகத்தில் பெயிண்ட் அடித்துக்கொண்டு விக்ரம் குழுவினரையும் பார்க்கும்போது Apocalypto ஞாபகம் வருது.

அபோகலிப்டோ (Apocalypto) - Hollywood நடிகர் Mel Gibson இயக்கத்தில் வெளிவந்த இலத்தின் அமெரிக்க மொழியில்  (மாயன்)  எடுக்கப்பட்ட படம்.

Saturday, June 26, 2010

அறியாத வயசு

நாங்கள் மிகவும் தீவிரமாக இருந்தோம். எங்கள் மூவரில் யாருக்கு 'அந்த' யோசனை முதலில் தோன்றியது, யார் முதலில் வெளிப்படுத்தியது என்று எதுவும் தெரியவில்லை.


ஈனா நம்பிக்கை இல்லாமல், இப்பிடித்தான் ஒவ்வொரு தடவையும் 'பிளான்' பண்றதாகவும் பிறகு கைவிடுவதாகவும் என்று கூற, கடுப்பான ஞானா, 'எதையும் அவசரப்பட்டு செய்யக்கூடாது நீ எதையும் யோசிக்காம கதைக்கிறே'

ஒக்கே ஒக்கே இந்த முறை 'அத' முடிக்கிறோம் - இது நான்

ஒருமனதாக நாங்கள் தீர்மானித்துவிட்டோம்.

'எப்ப ?' - ஈனா

'நேற்று என்பது முடிந்து போனது, நாளை என்பது நிச்சயமற்றது, இன்று மட்டுமே நிஜம்' -நான் (அடிக்கடி அசந்தர்ப்பமாக இதைத்தான் கூறுவேன்)

என்னை முறைத்துக்கொண்டிருந்த ஞானா ' புதன் கிழமை?'

'சரி' - ஈனா
'எங்கே?'

'அங்க தானே வேற எங்க'
(எங்கள் பகுதியில் 'அந்த' விஷயத்துக்கு பிரபலமான இடம் )

'எட்டு மணி , ஓக்கேயா ?'
'ஒகே'

நாள் பார்த்து முகூர்த்தம் குறிக்கப்பட்டாயிற்று.

அந்த புதன்கிழமையும் வந்தது. காலையிலிருந்தே இனம் புரியாத ஒரு த்ரில், அல்லது கிளுகிளுப்பு அல்லது அடிவயிற்றில் லேசான ஒரு...ஒரு (அதான் இனம் புரியாத ன்னு சொல்லியாச்சே )


இதுவரை எங்களில் யாருக்கும் 'அந்த' அனுபவம் இல்லை. எவ்வளவு நாளைக்குத்தான் 'இப்படியே' இருப்பது?

மாலை ஏழு மணி. நாங்கள் மூவரும். 'இந்தப்பக்கத்தால போக வேணாம்...சொந்தகாரங்க...சுத்திபோகலாம்' - ஞானா


லேசாக தூறும் மழை. 'அதுவும் நல்லது தான்' - ஞானா. 'எதுக்கு'ன்னு யாரும் கேட்கவில்லை.


உள்ளே வந்து விட்டோம். எல்லோரும் எங்களை பார்ப்பதை போன்ற உணர்வு. ஒரு ரூமில் மூவரும்.

'யாரும்  வந்தால் தெரிஞ்சிடும். அவ்வளவுதான் ' - ஈனா கலவரப்படுத்தினான்.
ஞானா வெளியே போய் ஒரு மொட்டைத்தலை ஆசாமியிடம்  கதைத்தான்.


திரும்பி வந்து, 'வெயிட்' பண்ணட்டுமாம்.

' என்ன மாதிரி?' அனிச்சையாய் அவன் ஒரு விரலைக்காட்ட,
'மூணு பேருக்குமா?'

'..........'

'..........'


யாரும் எதுவும் பேசவில்லை. இது நிச்சயமாக நமது வாழ்வின் முக்கிய தருணம், இது நம்மை அடுத்தகட்டத்துக்கு..? கொண்டு செல்லும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை.


இப்பொழுதே எங்கள் முகத்தில் 'எதையோ'  சாதித்து விட்ட திருப்தி.
ஆழ்ந்த மௌனமும், மழைத்துளியின் ஓசையும் மட்டுமே.


'டொக்..., டொக்..'


ஒரு பியரும், மூன்று 'கிளாஸ்' களும் வைக்கப்பட்டன எமது மேசையில்.

சாரு என்கிற சாருநிவேதிதா...

                      
                                               பத்து, பன்னிரண்டு (சரியாக நினைவில்லை) ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பெயரைக்கேட்டிருக்கிறேன்...இல்லை பார்த்திருக்கிறேன். அப்பொழுது எனக்கு இலக்கியப்பதிரிகைகள் பரிச்சயமில்லை (இப்போ மட்டும்?-ஏதோ அவ்வப்போது உயிர்மை மட்டும்) அவருடைய சில புத்தகங்களை பார்த்திருக்கலாம் சரியாக ஞாபகமில்லை ஆனால் சும்மா புரட்டிக்கூட பார்த்ததில்லை (இப்ப தான் Feel பண்றேன்). ஏன் பாக்காம போனேன்னு இப்ப உக்காந்து யோசிச்சா அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க, மூணு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அவரை ஒரு பெண் எழுத்தாளர் ன்னே நினைச்சுட்டிருந்தேன். 

                                 ஏற்கனவே இங்கு பரவலாக வாசிக்கப்படுகிற பெண் எழுத்தாளர்களின் பயங்கரவாதத் தாகுதல்களினால் அந்த ஏரியா பக்கமே போறதில்லை. பெரும்பாலான பெண்கள் 'ரமணிச்சந்திரன்'  என்பவர் படைக்கும் 'இலக்கியங்களை' த்தான் படிப்பார்கள். 

                                                                      தலைவர் 'சுஜாதா' பெயரைச்சொன்னாலே, பாடுற சுஜாதா வா? சினிமா அம்மா சுஜாதா வா? என்றுதான் நிறையப்பேர் கேட்பார்கள் (ஐயையோ அவர் ஆம்பிளையா..ஆஆ) . 'ஷங்கர்'  படங்கள் மூலமாக அறிந்தவர்கள் பலர். குறிப்பாக 'boys' (அத்திரைப்படம் வந்த போது நிறைய வயசு போன 'boys' பத்திரிகைகள் வாயிலாக அவரைத் திட்டிக்கொண்டிருந்தார்களே)

அப்படியிருந்தும் 'அந்நியன்' வந்த புதிதில், நான் தலைவரின் வசனங்களை நினைத்து புல்லரித்து போயிருந்த ஒரு கணத்தில் ஒருத்தன் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி ' அந்நியனில வசனம் எழுதினது பாடகி சுஜாதா வா?..எனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளெல்லாம் வாய்க்குள் அவசரமாக அணிவகுக்க அப்படிப் பேசிப்பழக்கமில்லை என்ற ஒரே காரணத்துக்காக ice water குடிச்சு விழுங்கிட்டேன்.

இப்படியான ஒரு செழிப்பான சூழலில் தான் நான் அவரது புத்தகத்தை புரட்டிக்கூட பார்க்காதது. 
                    
                                          ஒருமுறை (அது தான் முதல் முறையோ? ) உயிர்மை இதழில் சினிமா கட்டுரை ஒன்றில் piano teacher பற்றிய பார்வை, எழுதியவர் சாருநிவேதிதா கூடவே புகைப்படம் (ஐயையோ.. இவனா?  சாருநிவேதிதா...ஆஆ). இங்கு இவன் என்று  நான் யோசித்தது மரியாதைக்குறைவாக இல்லை. பொதுவாக நடிகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்ற celebrity களை அப்படி அழைப்பது தான் தமிழர்கள் வழக்கம் (இந்துக்கள் கடவுளையும் அப்படித்தானே?) எழுத்து பிடித்திருந்தது.

அதுதான் அறிமுகம், பிறகு அப்பப்ப எப்பவாவது பார்க்கிறதோட சரி. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் ஒரு வெகுஜன பத்திரிகையில் அவரது இணையத்தள முகவரியைப் பார்த்ததும் ஓடிவந்து   கணனியில் தட்டினேன்.

                            சுஜாதா மறைந்த சோகத்தில் இருந்த எனக்கு அதே துள்ளல், எள்ளல், நக்கல், நையாண்டி கலந்து எப்பேர்ப்பட்ட பிம்பங்களையும், கட்டுமானங்களையும் உடைத்து, புரட்டி, போட்டு தாக்கும், எல்லோருக்கும்  புரியும் தமிழில் எழுதும் ( இது ரொம்ப முக்கியம் - சில பேரை வாசிக்கும்போது நமக்கு தமிழே தெரியாதோ ன்னு தோன்றும் , சிலருடையது தமிழில் தான் இருக்கும் ஆனால் வாசித்தால் எஸ்பஞோல் ஆக இருக்கும் ) சமகாலத்தில் வாழும் ஒரு இலக்கியவாதியை கண்டேன். 

அப்புறமென்ன, இப்பல்லாம் ஒவ்வோரு நாளும் பார்க்கிறேன். இணையத்திலதானுங்கோ!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...