Friday, November 19, 2010

மூக்குப்பேணி

மூக்குப்பேணி பார்த்திருக்கிறீர்களா? கேள்விப்பட்டாவது?

நம்முடைய தொலைந்து போன அடையாளச்சின்னங்கள் வரிசையில் அதுவும் சேர்ந்திருக்கலாம்!
சேர்ந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

சின்ன வயதில், எனது பாட்டி வீட்டில் இருந்தது.

இருபது வருடங்களுக்குமுன் யாழ்ப்பாணத்தில் அநேகமாக எல்லாப் பாட்டிகளும் வைத்திருந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

நாம் வீட்டில் உபயோகப் படுத்தும் சில்வர் கிளாசை (இப்போ அதுவும் போயிற்றா?) விட அளவில் பெரியதாக, பித்தளையில் செய்யப்பட்டிருக்கும். வாய்ப்பகுதியில் மூக்கு போல் நீண்டிருக்கும், சிந்தாமல் ஊற்றுவதற்கு வசதியாக.

                                   இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்?

அண்ணாந்து குடிப்பதற்காகத்தான் அப்படி உருவாக்கி பயன்படுத்தினார்களோ?

என்னமோ எனக்கு அதில் தேநீர் குடிப்பதில் அலாதிப் பிரியம். ஏதோ வித்தியாசமாக, சுவை அதிகமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு!

கனமாக இருப்பதாலோ என்னவோ, வெளியே அவ்வளவாக சூடும் தெரியாது.

சொந்த ஊரை விட்டு வந்தபின் எங்கும் கண்டதில்லை.
பாட்டி வைத்திருந்தது? அதை எடுத்து வரவில்லையா? மறந்துவிட்டார்களா? இல்லை அதன் பிறகு பாவித்ததில்லையா?

நானும் யாரிடமும் கேட்கவில்லை.

இப்போ யாரிடமாவது இருக்கிறதா?

யாழ்ப்பாணத்திலிருந்து பழமை வாய்ந்த பித்தளைச் சாடிகள், விளக்குகள், சிலைகள் எல்லாம் பெரும் விலை கொடுத்து, வாங்கி வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப் படுவதாகக் கூறுகிறார்கள்.

ஒரு வேளை இனி மூக்குப்பேணியையும் நாம் அங்கேதான் பார்க்க முடியுமா?

நீங்க பார்த்தா சொல்லுங்க!

14 comments:

  1. மூக்கு பேணி..இந்த பெயரையே இன்னைக்கு தான் கேள்விபடுறேன்..உங்க நடை நல்லாருக்கு..

    ReplyDelete
  2. நீங்க சொல்ற அமைப்பு புரியுது...ஆனால் இந்த பேணி அப்டிங்கிற வார்த்தை ரொம்ப புதுசா இருக்கு...ஒரு வேளை நல்ல அழகான தமிழ் இல் நீங்க சொல்றிங்கன்னு புரியுது...முனிவர்கள் எல்லாம் கையிலே வச்சிருப்பாங்களே அந்த கூஜா வை சொல்றிங்களா ஜி..?? நான் அப்டி தான் யோசனை பண்ணினேன்...:(((

    ReplyDelete
  3. "மூக்குப்பேணி இருபது வருடங்களுக்குமுன் யாழ்ப்பாணத்தில் அநேகமாக எல்லாப் பாட்டிகளும் வைத்திருந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்."
    உண்மை தான்.. வைத்திருந்தார்கள்

    ReplyDelete
  4. @ஹரிஸ்
    நன்றி!:)

    @பிரஷா
    நன்றி!:)

    @ஆனந்தி
    //முனிவர்கள் எல்லாம் கையிலே வச்சிருப்பாங்களே அந்த கூஜா வை சொல்றிங்களா ஜி..?? நான் அப்டி தான் யோசனை பண்ணினேன்//
    :))
    நான் தேடிப் பார்த்துவிட்டேன் google இல்.எங்கேயும் படம் இல்லை. :((

    ReplyDelete
  5. அருமையான பண்பாட்டு பதிவு நண்பா...

    ...ஃஃஃஇருபது வருடங்களுக்குமுன் யாழ்ப்பாணத்தில் அநேகமாக எல்லாப் பாட்டிகளும் வைத்திருந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்...ஃஃஃ
    20 வருடங்கள் என்பதை விட 15 வருடங்கள் என்றால் இன்னும் பொருத்தமாய் இருக்கும் என நினைக்கின்றேன்...போர் காரணமான இடப்பெயர்வுகள் இவற்றை காணாமல் போக செய்திருக்கும்..
    எனக்கு 5 வயது இருக்கும் போது என் தாய் வழி தாத்தா பாட்டி இதனை பயன்படுத்தினர்...1995 இடப்பெயர்வின் பின்னும் தாத்தா அதிலே தான் நீர் அருந்தினார்....அவர்கள் மறைவின் பின் அதுவும் மறைந்து விட்டது....

    @ஆனந்தி
    //முனிவர்கள் எல்லாம் கையிலே வச்சிருப்பாங்களே அந்த கூஜா வை சொல்றிங்களா ஜி..?? நான் அப்டி தான் யோசனை பண்ணினேன்//
    :))
    மன்னிக்கவும் சகோதரி..முனிவர்கள் பாவிப்பது கமண்டலம்...இது சாதாரண செம்புக்கு மேல் கைபிடி போட்டது போல் இருக்கும்....
    மூக்குப்பேணி என்பதை நீங்கள் இப்போது நாம் பயன்படுத்தும் ரீபொட்(teapot)னை சற்று சிறிதாக்கி அதன் கைபிடியையும் நீக்கி விட்டு பாருங்கள்...கிட்டதட்ட அப்படியே மூக்குப்பேணி போல் இருக்கும்....

    ReplyDelete
  6. மூக்கு பேணி?

    நான் இதுவரி கேள்விப்பட்டது கிடையாது

    ReplyDelete
  7. @ஜனகனின் எண்ண ஜனனங்கள்
    உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    @THOPPITHOPPI
    ஒரு வேளை உங்க ஊரில் வேறு பெயரில் இருந்திருக்கலாம் / இருக்கலாம்!

    ReplyDelete
  8. நான் சிறுவயதில் மூக்குப் பேணியில் குடித்திருக்கிறேன். எமது வீட்டில் பல இருந்தன. நாம் இழந்தவற்றுள் ஒன்றாக இணைந்துகொண்டது.

    ReplyDelete
  9. கொஞ்சம் படம் வரைந்து காட்டுங்களேன் ப்ளீஸ்,

    ReplyDelete
  10. @Dr.எம்.கே.முருகானந்தன்
    நன்றி Dr . உங்கள் அனுபவப் பகிர்வுக்கு!

    @சிவகுமாரன்
    உங்களுக்காக படம் கிட்டத்தட்ட இப்படி இருக்கும்!

    ReplyDelete
  11. அட..பரவாலையே..கண்டுபிடிச்சு போட்டிங்க..பார்க்கவே நல்லா இருக்கு..இது சின்னதா இருந்தால் அல்மோஸ்ட் குழந்தைகளுக்கு கொடுக்கிற சங்கு..இப்ப தான் பார்க்கிறேன் ஜீ )))) நன்றி நன்றி...:))))

    ReplyDelete
  12. @ஆனந்தி
    நன்றி
    கண்டு பிடிக்கல! 3d max ல நான் செய்தது...அதான் இப்படி இருக்கலாம்னு எழுதி இருக்கிறேன் :))

    ReplyDelete
  13. @ஜீ..இதுதாங்க அது.....ரொம்ப சரியாகவே இருக்கு...சூப்பர்....

    ReplyDelete
  14. நன்றி ஜனகன்! :)

    ReplyDelete