Monday, November 29, 2010

மிஷ்கினின் தமிழ்சினிமா


ஒரு வழியாக நந்தலாலா வெளிவந்து விட்டது!

மிஷ்கினின் முதல் படமான 'சித்திரம் பேசுதடி' யிலேயே என்னவோ மிஷ்கினைப் பிடித்துக் கொண்டது.

என்ன காரணமென்று தெரியாமலே, ஏதோ சில வித்தியாசங்கள் வழமையான படங்களிலிருந்து. கமெரா கையாளப்படும் விதம், காட்சியமைப்பு - குறிப்பாக நேராகக் காட்டாமல் பார்வையாளனை உணரவைக்கும் அந்த தூக்கில் தொங்கும் காட்சி, வசனங்கள். ஆச்சரியமாக அந்தப்படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே நல்லவர்களாக இருந்தார்கள்.

ஒரு போலீஸ்காரனின் முதல் நாள் அனுபவம் - தமிழ் சினிமாவில் நாங்கள் பார்த்தேயிராத காட்சி. அஞ்சாதேயில்.

வழமையாக போலீஸ் யூனிபோர்மை மாட்டியதும், வீரம் வந்து, வெறிகொண்டு, கடத்தல்காரரையோ, உள்ளூர் தாதாவையோ தட்டிக் கேட்கப் புறப்பட்டு விடும் ஹீரோக்களுக்கு மத்தியில், அந்தச் சூழ்நிலையே ஒத்து வராமல் பின், படிப்படியாக வேலையில் ஒன்றும் அந்தக் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கே புதிது.

ஒளியமைப்பு, ஒளிப்பதிவில் ஏரியல்வியூ காட்சிகள், கமெரா நகர்ந்து செல்லும் விதம், கால்களின் நகர்வுகளின் மூலம் கதை சொல்லப்படுதல், லாங்ஷாட் காட்சிகள்.

பின்னணி இசை, தேவையான நேரங்களில் மௌனம் மட்டுமே. அதே போல் வசனங்கள் பல வசனங்களில் சொல்லவேண்டியதை சில காட்சிகளிலேயே உணர்த்தி விடுதல். இப்படி எல்லாமே!

இபோழுது நந்தலாலா.

பதிவுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. எல்லோரும் நல்ல படமென்று ஏற்றுக் கொண்டாலும் கலவையான விமர்சனங்கள். சிலர் கிகுஜிரோவின் Copy என்கிறார்கள்.
ஒரு படத்தை அப்படியே அப்பட்டமாக Copy அடிப்பதற்கும், அதன் பாதிப்பில் எமது சூழ்நிலைக்கேற்ப மாற்றி நல்ல படமாக கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு.

குறைந்த வசனங்களும், காட்சியமைப்பும் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை மிஷ்கின் ஏற்கெனவே தனது படைப்புக்களில் நிரூபித்த ஒன்று.

குறிப்பாக இசை. இளையராஜா பற்றி எப்போதும் விமர்சிக்கும் 'சாரு', நந்தலாலா பின்னணிஇசை பற்றி உயர்வாகக் குறிப்பிட்டபோதே எதிர்பார்ப்பு எகிறியது எனக்கு.

குறிப்பாக இசை எங்கு மொனமாக இருக்கவேண்டுமென்று இந்தப் பின்னணி இசையின் மூலம் தெரிந்து கொள்ளலாமென்றும் பதிவர்கள் கூறியுள்ளார்கள்.
பொதுவாக மிஷ்கினின் படங்களில் இசை மட்டுமல்ல, வசனங்கள் எங்கு இருக்கக் கூடாதெனவும் தெரிந்து கொள்ளலாம். பேசும் வார்த்தைகளை விட, மெளனத்திற்கே அர்த்தம், ஆழம், வீச்சு அதிகம்.

இந்தப் படம் வெளிவராமல் நீண்டகாலம் இருக்கும்போது நினைத்தேன். உலக மகா மொக்கைப் படங்களாகவே தொடர்ந்து வெளியிட்டு வரும் சன்பிக்சர்ஸ் இது போன்ற நல்ல படங்களையும், வருடத்திற்கு இரண்டாவது வெளியிட்டால், கொஞ்சமாவது தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு ஒரு நியாயம் அல்லது நல்லது செய்ததாக அமையுமே என்று. இப்போது அந்த நல்ல காரியத்தை ஐங்கரன் செய்துள்ளது.

தனிப்பட்ட ரீதியில் மிஷ்கின் மேல் என்ன மாதிரியான (தலைக்கனம் பிடித்தவர் - ஒரு நல்ல படைப்பாளி அப்படி இருந்தாத்தான் என்ன?) விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு ஆளுமை.

தமிழ் சினிமா என்றாலே தொடர்ந்து,


- பெயரை மட்டும் மாற்றிக் கொண்டுவரும் பருத்திவீரன்கள்


- வெட்டுறாய்ங்க, கொல்றாய்ங்க...கூட்டமாக, பரட்டைத் தலையுடன் வந்து, காதலித்து கடைசியில் நண்பர்கள் அல்லது ஹீரோ உயிரை விடும் 'பாசக்காரப் பயலுக' படம்.

என்றுமட்டுமில்லாமல் (அவையும் நன்றாகவே இருந்தாலும்)  இன்னும் வேண்டும்.

இன்னுமொரு வகை தமிழ் சினிமா இருக்கிறது.

-அநியாயத்தைத் தட்டிக்கேட்கும், ஊருக்கு உழைக்கும், நல்லவர், வல்லவரான, வழமையான ஹீரோவின் கதை.


-டப்பிங்கில் மட்டுமே தமிழ் பேசும், காட்சிகளில் தமிழுக்கு எந்த சம்பந்தமுமில்லாத மணிரத்னத்தின் தமிழ்ப்படங்கள்.


-ஆஸ்கார் கனவுகள் கலைந்து போனபின் 'இந்தியன் ஸ்டான்டர்டில்' எடுக்கப்படும் படங்கள்.


-பல ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளைக் Copy அடித்து, ஹாலிவுட்காரனைக் கொண்டே கிராபிக்ஸ்ம் செய்து, ஹாலிவுட் க்கே..(!?)சவால்விடும் படங்கள்!

-இதுல கதை உன்னோடதா, என்னோடதான்னு இன்னும் சண்டை வேற பிடிக்கிறாங்கப்பா!....ஆமா இந்த விஷயம் அவங்களுக்குத் தெரியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில், தொடர்ந்தும் இப்படியான நல்ல படங்கள் வரவேண்டும்.

நந்தலாலா ஒரு ஆரம்பமாக அமையட்டும்!

Sunday, November 28, 2010

இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?


'இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?' - சிங்கம் கேட்டான்.

அசோகச் சக்கரவர்த்தி இல்லாமல் எப்படி ஒரு சரித்திரப் பாடம் இல்லையோ, அதே போல 'இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?' என்ற கேள்வியைக் கடந்து செல்லாமல் இளமைப்பருவம் பையன்களுக்கு இல்லை.

கேள்வி கேட்கப்படும் நேரம் மாறுபடலாம். அனால் காலம், கேட்கிறவனைப் பொறுத்த வரையில் அவனுக்கு வாழ்வின் வசந்த(?) காலமாகவும், எங்களைப் பொறுத்தவரை எங்களின் போதாத காலமாகவும் இருக்கும்.

கேள்வியின் வடிவம் மாறலாம். 'இதுக்கு என்ன அர்த்தம்?', 'அப்ப ஒக்கே தானே?' என்பதாக.
உட்பொருள் ஒன்றுதான். பதிலும் அவ்வாறே.
'அவளுக்கும் ஒரு ஐடியா இருக்கலாம்', 'உன்ன பிடிச்சிருக்கு ன்னு நினைக்கிறேன்', 'ஆமாமா' இவ்வாறாக.
மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தோமானால் அவ்வளவுதான். உடனே பார்வை மாறும்.

வெளியே ஒன்றும் சொல்லாட்டியும் உள்ளே என்ன நினைக்கிறான்னு ஊகிக்கலாம்.
பொறாமை, புகைச்சல்ல சொல்றான், இவன எவளுமே பார்த்திருக்க மாட்டாள் அதான் வயித்தெரிச்சல்.

நானெல்லாம் அப்போது ஒல்லிப்பிச்சானாக வேறு இருந்ததால் (இப்போ?), எங்கே வயிதெரிச்சல்ன்னு முடிவே பண்ணிடுவாங்களோன்னு உடனேயே 'அப்பிடியா?', 'இருக்கலாம்' ன்னு பொத்தாம் பொதுவாக எதையாவது உளறி, எஸ்கேப்.


இதே கேள்வியை சிங்கம் கேட்டபோது உடனடியாக நான் எதையும் கூறவில்லை.

சிங்கம் ஒரு சிந்தனாவாதி. பெரும்பகுதி சிந்தனை பெண்கள் பற்றித்தான். சமீபகாலமாக தான் அடிக்கடி சந்திக்க நேரும் பெண்ணைப் பற்றித்தான் அப்படிக் கேட்டான்.

அவள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் தனக்குச் சார்பான காரணங்களைக் கற்பித்துக் கொண்டு, இதுக்கு என்ன அர்த்தம்? அப்போ அதுக்கு என்ன அர்த்தம்?
உடனடியாக 'ஆமா'ன்னு சும்மா சொல்றான்னு தெரிஞ்சிடும் போய் சொல்றான்னு.
இல்லேன்னு சொன்னா கேட்கமாட்டான்...அடம்பிடிப்பான்.

தீவிர சிந்தனையில் நான். 

இங்கு தீவிர சிந்தனை என்பது, தலையைச் சிறிது சாய்த்து, தொலைதூரத்தில் பார்வையைச் செலுத்தி, வெறித்த பார்வையுடன், புருவத்தைச் சிறிது சுருக்கி, முகத்தில் உணர்ச்சிகளற்ற ஒரு வெறுமையைப் படர விட்டு.....! கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் இருந்தால், ஒரு கையால் தாடையைத் தடவிக் கொள்ளலாம், என்னை மாதிரி.

ஆனா அதே நேரத்தில எதிர்ல வாற பொண்ணை 'சைட்' அடிக்கலாம். 

இது தான் முக்கியமான விஷயம். ஆனா ரொம்ப கஷ்டமானதும் கூட. ஏன்னா நம்ம பசங்க 'சைட்' அடிக்கிறாங்க ன்னா அப்பிடியே முகத்தில தெரியும். பார்வை திசை மாறும், பேச்சு 'கட்' ஆகும், மூஞ்சில 'பல்ப்' எரியும். எங்களுக்கு பின்னால யாரோ பொண்ணு போகுதுன்னு திரும்பாமலே கண்டுபிடிக்கலாம்.

இதில எனக்கொரு பிரச்சனை என்னன்னா சிங்கம் தான் காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் நேரம் பாத்துதான் எனக்குக் கொட்டாவி வரும். அத நான் மறைச்சு விடுறதுக்கு படுறபாடு இருக்கே ஐயோ ஐயோ.... நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே...!

நாளுக்கு நாள் சிங்கத்தில் காதல் தீவிரமாகி எங்களைக் கொலைவெறியுடன் துரத்தத் தொடங்கினான். கதை சொல்லத்தான்! பலமுறை காதல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானதால் அவன் வருகிறான்னதுமே நம்ம நண்பர் கூட்டம் தெறிச்சு ஓடுற அளவுக்கு போயிட்டுது.

நிலைமை தீவிரமான ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். 'மச்சான் அங்க சொல்லி முடிவு தெரிஞ்சப்புறம், கற்பனை, கதை எல்லாத்தையும் 'டெவலப்' பண்ணு. இல்லாட்டி கஷ்டம். அது வரைக்கும் எனக்கு இந்தக் கதை ஒண்ணும் சொல்லவேணாம்'.

இதன்பிறகு என்னிடம் ஒன்றும் சொல்லல. எங்கள் நட்பில் கூட சிறு விரிசல். ஏத்தி விட்டு கூத்து பாக்கும் தீபாவிடம்தான் எல்லாம் சொல்ல, அவனும் தன்னால முடிஞ்ச அளவுக்கு, உசுப்பேத்தி, உருவேத்தி....

ஒரு சுபயோக, சுபதினத்தில் சிங்கம் அசிங்கப்பட்டு, மனசெல்லாம் ரணகளமாகி...

அன்றிரவு, எங்கள் அட்வைசர், காதல் 'கோச்' தலைமையில் நாங்களெல்லோரும் கூடி,

அந்த சோகத்திலும் சிங்கம் தளராமல் 'கோக்' தான் குடிச்சான். நாங்க தான் சோகம் தாங்க முடியாம 'பியர்'.

அப்ப சிங்கம் என்ன நினைத்தானோ, கேட்டான் ஒரு கேள்வி, 'டேய் உங்க எல்லாரையும் விட நான்தானேடா நல்லவன் ?'

'இதைப்பற்றி நீங்க என்ன நினைகிறீங்க?'

Tuesday, November 23, 2010

City of God


தமிழில் சினிமாவில் புதுப்பேட்டை, பட்டியல் போன்ற நல்ல Gangster படங்கள் வரும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் படம் City of God அவற்றில் இந்தப் படத்தின் பாதிப்பு நிச்சயம் இருக்கவே செய்கின்றன.

ஓரிருவர் தவிர ஏனையோர் பதின்மூன்று வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கும்பல். எல்லோர் கைகளிலும் துப்பாக்கிகள். சமைப்பதற்கு வைத்திருந்த கோழி ஒன்று தப்பிச் சென்றுவிட, அதைப்பிடிப்பதற்கு துப்பாகியால் சுட்டபடி துரத்திச் செல்கிறார்கள்.

கையில் கமெராவுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வரும் ரொக்கட்டும், அவன் நண்பனும் எதிர்பாராமல் இந்தக் கும்பலை எதிரே கண்டதும் அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். ரொக்கட்டிடம், அந்தக் கோழியைப் பிடிக்குமாறு சொல்கிறார்கள். பிடிக்கத் தயாராகும் நிலையில், தங்களை நோக்கிக் கும்பலின் துப்பாக்கிகள் உயர்வதைக் கண்டு, அதிர்ச்சியாகிறார்கள். இருவரும் குழப்பத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்க, குறிவைத்தபடி போலீஸ்! - இப்படித்தான் ஆரம்பமாகிறது படம்.

பிரேசிலின் மிகப் பெரும் கேளிக்கை நகரான ரியோ டீ ஜெனிரோ வைச் சுற்றியுள்ள ஏராளமான சேரிப்புறங்களில் ஒன்றில் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லும் படம். கொள்ளை, கொலை, சிறு வயதிலேயே போதைப் பொருள் பழக்கம் எல்லாமே அங்கு சாதாரணமானவை. போதைப் பொருள் கடத்துபவர்களாக பத்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள். வழிப்பறி, வன்முறை, உதைபந்தாட்டம் எல்லாம் அப்பகுதி மக்களின் வாழ்வின் அங்கமாக! சில பிரதான பாத்திரங்களின் ஊடாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு ஊரின் கதை.

இளைஞர்களான சாகி, கூஸ், கிளிப்பர் மூவரும் மோட்டல் ஒன்றைக் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள். அவர்களுடன் பத்துவயதிற்குட்பட்ட சிறுவனான லில் டைஸ்ஸும் செல்கிறான். நால்வரிடமும் கைத்துப்பாக்கிகள். சுடுவது மிரட்டுவதற்கு மட்டுமே தவிர, யாரையும் கொள்வதில்லை என்பது அவர்களுக்கிடையிலான தீர்மானம். மூவரும் கொள்ளையடித்து முடிந்ததும், காவலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுவன் லில் டைஸ் அவர்களுடன் செல்லாமல், தனியாக மோட்டல் உள்ளே நுழைகிறான். வெறித்தனமான சிரிப்புடன், எதிர்ப்பட்ட  எல்லோரையும் சரமாரியாகச் சுட்டுக் கொல்கிறான்.

போலீசுக்கு தகவல் தெரிந்து தேடி வருகிறது. கிளிப்பர் சேரியை விட்டுச் சென்று விடுகிறான். சாகி தன் காதலியுடன் தப்பிச் செல்ல முயற்சிக்கையில் போலீசால் சுட்டுக் கொல்லப்படுகிறான். கூஸ் தப்பிச் செல்லும் வழியில் சிறுவன் லில் டைஸிடம் பணம் எடுத்துச் செல்ல முயற்சித்து அவன் கையால் சாகிறான்.இப்போது ஏரியாவின் அடுத்த் தலைமுறை ரவுடி ஆகிறான் சிறுவன் லில் டைஸ்.வளர்ந்தபின் தனது பெயரை லில்சீ என மாற்றிக்கொள்கிறான். சிறுவயது முதலே அவனது உயிர் நண்பன் பென்னி.

பென்னியின் காதலி அன்ஜெலிகா. பென்னி இந்த வாழ்க்கையை விட்டு, ஒரு பண்ணையில் தனது காதலி அன்ஜெலிகாவோடு அமைதியாக வாழ ஆசைப்படுகிறான். பிரிந்து செல்ல விரும்புகிறான். லில்சீ தன் கூடவே இருந்த நண்பனைப் பிரியவும் மனமின்றி, அவனது விருப்பத்துக்கு மறுப்பும் சொல்லமுடியாமல் குழம்பிய நிலையில் இருக்கிறான். பென்னிக்கு ஒரு பெரியதோர் பிரிவுபசாரப் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிறான். இரவுக் களியாட்ட விடுதியொன்றில் அநேகமாக ஏரியாவிலுள்ள எல்லோரும் கலந்து கொள்கின்றனர்.


லில்சீ - சிறுவயது முதலே நண்பனான பின்னியுடன் சேர்ந்து, ஏரியாவிலுள்ள போதைப்பொருள் டீலர்களை சுட்டுத்தள்ளி, மிகப்பெரிய மார்க்கெட்டைத் தன்வசப்படுத்தியுள்ளவன். கொடூரமானவன். தற்போதைய கவலை - நண்பன் பென்னி பிரிந்து செல்வதாக முடிவெடுத்தது. 



பென்னி - இவனது சொல்லை மட்டுமே லில்சீ கேட்பான். லில்சீக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பவன்.எல்லோரோடும் சுமுகமாக அனுசரித்துப் போகின்றவன். எல்லோராலுமே விரும்பப்படுகிறவன்.

இப்போது - தன் காதலியுடனான் அழகிய வாழ்க்கை பற்றிய கனவுகளோடு,எல்லோரோடும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருக்கிறான்.

ரொக்கட் -லில்சீயினால் சுட்டுக் கொல்லப்பட்ட கூசின் தம்பி. ஒரு புகைப்படக் கலைஞனாக பத்திரிகையில் சேர்ந்து புகழ் பெறவேண்டுமென்பதே இவன் லட்சியம். கூடவே, ஒரு காமெரா சொந்தமாக வாங்குவது. அதற்காக நண்பனின் துணையோடு, அண்ணனின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, கொள்ளையடிக்க திட்டமிட்டு, அவன் நல்ல மனதின் காரணமாக பாதியில் முயற்சியைக் கைவிட்டவன்.உற்சாகமாக பார்ட்டியில் டி ஜே வாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.


நொக்கவுட் நெட் - நல்லவன். கொலை, போதை, கொள்ளை என்பவற்றுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவன். அமைதியும், அன்பும் மட்டுமே முக்கியம் எனக்கூறுகிறான். பேரூந்து நடத்துனராக வேலை செய்கிறான். ஒருமுறை லில்சீயால் தாக்கப்பட்டிருக்கிறான். காதலியுடன் பார்ட்டியில் கலந்துகொண்டு நடனமாடிக் கொண்டிருக்கிறான்.



காரட் - மிகப்பெரிய போதைப்பொருள் டீலர். இவனுக்கும் லில்சீக்கும் ஒத்து வருவதில்லை. பென்னியின் தலையீட்டினால்,லில்சீயினால் கொல்லப்படாமல் இருக்கிறான். எப்போதும் இவனுக்கு லில்சீ எதிரி.பார்ட்டியில் கலந்துகொள்ளாமல் தனது முகாமில் இருக்கிறான்.



பிளாக்கி - இவனும் ஒரு போதைப் பொருள் டீலர். இவனது மார்க்கெட், தங்குமிடம் எல்லாவற்றையும் லில்சீ பறித்துக் கொள்கிறான். காரட்டுடன் தொடர்பில் இருக்கிறான்.

தற்போது - லில்சீ மீது அடங்காத கோபத்துடன், பார்ட்டியில் லில்சீயைக் கொல்ல ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, காத்துக் கொண்டிருக்கிறான்.

நண்பன் விட்டுச் செல்கிறான் என்கிற வெறுமை, தன்னை எல்லோரும் உதாசீனப் படுத்துகிறார்களோ என எண்ணிக்குழம்பும்  பெண்கள் பக்கமே போகாத லில்சீ, ஒரு பெண்ணைத் தன்னுடன் ஆட அழைக்கிறான். அவள் மறுக்கிறாள். இதனால் கோபம் கொள்ளும் லில்சீ, அந்தப் பெண் நொக்கவுட் நெட்டின் காதலி என்று தெரிந்ததும் பலர் முன்னிலையில் அவனை அவமானப்படுத்துகிறான்.

பென்னி, தன் நினைவாக ரொக்கட்டுக்கு ஒரு காமெராவைப் பரிசளிக்கிறான். இனந்தெரியாத எரிச்சலில் இருக்கும் லில்சீ ரொக்கட்டிடமிருந்து காமெராவைப்பறிக்க, அவனுடன் வாக்குவாதப்படுகிறான் பென்னி. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பிளாக்கி,மின்னிக் கொண்டிருக்கும் டிஸ்கோ லைட்டில், தவறுதலாக பென்னியைச் சுட்டுவிடுகிறான். பென்னி இறந்துவிட, கதறுகிறான் லில்சீ.

காரட் தான் இந்தக் கொலைக்குக் காரணமென்று நம்பும் லில்சீ அவனைக் கொல்ல முடிவு செய்கிறான். தவறுதலாக பென்னியைச் சுட்டுவிட்டதாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் காரட்டிடம் ஓடிவந்து சொல்கிறான் பிளாக்கி.

"அநியாயமாக ஒரு Coolest Guy யைக் கொன்று விட்டாய்" எனக்கூறி, பிளாக்கியைச் சுட்டுக் கொல்கிறான் காரட். பழிவாங்கும் வெறியுடன் தன் கும்பலுடன் புறப்பட்டு வரும் லில்சீ வழியில் நொக்கவுட் நெட்டை காதலியுடன் பார்க்கிறான். அவனைத் தாக்கி அவன் முன்னிலையிலேயே காதலியைக் கொல்கிறான்.

திடீரென்று  லில்சீக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நொக்கவுட் நெட்டை ஏன் கொல்லாமல் விட்டோம்? என்று. உடனேயே அதைச் செயற்படுத்த வீடுதேடி வருகிறான். நொக்கவுட் நெட்டைக் காப்பாற்றும் முயற்சியில் அவன் தம்பி கொல்லப்படுகிறான்.

இதனால் லில்சீயை பழிவாங்க முடிவு செய்கிறான், வன்முறையின் பக்கமே அதுவரை சென்றிராத நொக்கவுட் நெட். 'அப்பாவிகளைக் கொல்லக் கூடாது' என்ற கோரிக்கையுடன் ஏற்கனவே லில்சீயின் எதிரியான காரட்டுடன் இணைந்து கொள்கிறான் நொக்கவுட் நெட்! ஆரம்பமாகிறது ஒரு பெரும் Gang War!

சிறிய மோதல்கள் ஆரம்பிக்க, இருதரப்பிலும் பெரும் மோதலுக்கான ஆயுதக் கொள்வனவு, ஆட்சேர்ப்பு எனத்தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்கள், சிறுவர்கள், குழந்தைப்பருவத்திலிருந்து இன்னும் வெளிவராதவர்கள் என பலரும் தங்கள் எதிரிகளை ஒழிப்பதற்காக, இணைந்துகொள்கிறார்கள். எல்லோருக்கும் அடிப்படியான உணர்வு பழிவாங்கல் மட்டுமே. காரணம், சொல்கிறார்கள் - 'நொக்கவுட் நெட் தலையில் கொட்டி விட்டான்', 'லில்சீ பின்புறத்தில் உதைத்துவிட்டான்'.


இதற்கிடையில் ரொக்கட் ஒரு பத்திரிகையில் புகைப்படப் பிடிப்பாளனாக   வேலைக்குச் செல்கிறான். நொக்கவுட் நெட் மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது அவனது புகைப்படம், பேட்டி பத்திரிகையொன்றில் வெளிவருகிறது. அதைப்பார்க்கும் லில்சீ, ரொக்கட் அழைத்து முன்னர் பின்னி கொடுத்த அதே கமெராவைக் கொடுத்து,  தங்கள் குழுவை படம் பிடிக்கச் சொல்கிறான். 'கமெராவை உன்னிடம் கொடுக்கவே பின்னி விரும்பினான்' என்று கூறி, அவனுக்குப் பரிசளிக்கிறான்.

ரொக்கட் தனது அலுவலகத்தில், அந்தப்   புகைப்படங்களைப் பிரிண்ட் எடுத்துவைக்க, அதைப்பார்த்த ஆசிரியர் பத்திரிகையில் பிரசுரித்துவிடுகிறார். அவ்வளவுதான் லில்சீயிடம் தொலைந்தோம் என்று பயந்துகொண்டிருக்கும் நிலையில்தான் ஆரம்பத்தில் சொன்ன காட்சி!

முடிவில் என்னவாகிறது? இந்தப் பிரச்சினைகளின் முடிவு எப்படித் தீர்மானிக்கப்படும்? சட்டம் எப்படித் தன் கடமையைச் செய்கிறது? துப்பாக்கி கொடுக்கும் போதை, ஒரு போதைக்டத்தல் கும்பல் எப்படித்தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது, ஒரு தலைவன் எப்படி உருவாகிறான், உருவாக்கப்படுகிறான், தமக்குள்ள அடித்துக்கொண்டு எஞ்சிப் பிழைத்து நிற்கும் வலுவான குமபலே நாட்டுக்குத் தேவை என்கிற அரசியல் போன்ற விஷயங்கள் போகிற போக்கில் சொல்லப்படுகின்றன.

ஒரு கதாபாத்திரத்தையும் முதன்மைப் படுத்தாமல் அவர்களின் பார்வையிலும்,  FlashBack இலும் படம் நகர்கிறது. - பெரும்பாலான இறுதிக் காட்சிகள் அவற்றைப் படம்பிடிக்கும் ரொக்கட்டின் பார்வையில் பதிவாகிறது.

சில இடங்களில் Documentary Film போலவுள்ள அதே சமயம் விறுவிறுப்பாகவும் செல்கிறது.

கதை சொல்லும் style, camera நகரும் விதம் எல்லாம் வித்தியாசமான அனுபவம். BAFTA உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. நான்கு Academy உள்ளிட்ட பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இயக்கம் - Fernando Meirelles
மொழி - Portuguese
நாடு - Brazil

Friday, November 19, 2010

மூக்குப்பேணி

மூக்குப்பேணி பார்த்திருக்கிறீர்களா? கேள்விப்பட்டாவது?

நம்முடைய தொலைந்து போன அடையாளச்சின்னங்கள் வரிசையில் அதுவும் சேர்ந்திருக்கலாம்!
சேர்ந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

சின்ன வயதில், எனது பாட்டி வீட்டில் இருந்தது.

இருபது வருடங்களுக்குமுன் யாழ்ப்பாணத்தில் அநேகமாக எல்லாப் பாட்டிகளும் வைத்திருந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

நாம் வீட்டில் உபயோகப் படுத்தும் சில்வர் கிளாசை (இப்போ அதுவும் போயிற்றா?) விட அளவில் பெரியதாக, பித்தளையில் செய்யப்பட்டிருக்கும். வாய்ப்பகுதியில் மூக்கு போல் நீண்டிருக்கும், சிந்தாமல் ஊற்றுவதற்கு வசதியாக.

                                   இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்?

அண்ணாந்து குடிப்பதற்காகத்தான் அப்படி உருவாக்கி பயன்படுத்தினார்களோ?

என்னமோ எனக்கு அதில் தேநீர் குடிப்பதில் அலாதிப் பிரியம். ஏதோ வித்தியாசமாக, சுவை அதிகமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு!

கனமாக இருப்பதாலோ என்னவோ, வெளியே அவ்வளவாக சூடும் தெரியாது.

சொந்த ஊரை விட்டு வந்தபின் எங்கும் கண்டதில்லை.
பாட்டி வைத்திருந்தது? அதை எடுத்து வரவில்லையா? மறந்துவிட்டார்களா? இல்லை அதன் பிறகு பாவித்ததில்லையா?

நானும் யாரிடமும் கேட்கவில்லை.

இப்போ யாரிடமாவது இருக்கிறதா?

யாழ்ப்பாணத்திலிருந்து பழமை வாய்ந்த பித்தளைச் சாடிகள், விளக்குகள், சிலைகள் எல்லாம் பெரும் விலை கொடுத்து, வாங்கி வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப் படுவதாகக் கூறுகிறார்கள்.

ஒரு வேளை இனி மூக்குப்பேணியையும் நாம் அங்கேதான் பார்க்க முடியுமா?

நீங்க பார்த்தா சொல்லுங்க!

Tuesday, November 16, 2010

மணிரத்னத்தின் அடுத்த 'அட்டாக்'?

மனதில் ஒரு சஞ்சலம்.

ஏதோ ஒரு இனம்புரியாத கலக்கம்

எப்போதுமே ஒரு குழம்பின மனநிலை
நான் குழம்பி என்னதான் செய்வது..?

தலைவர் சுஜாதா சொன்ன மாதிரி,' புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல'.
ஒழுங்காகத் தூங்கவும் முடியல..

என்னாச்சு எனக்கு..?.


நீங்க நினைக்கிறமாதிரி ஒண்ணுமில்லை!

மணிரத்னத்தின் அடுத்த 'அட்டாக்' பொன்னியின்செல்வன் என்றொரு சேதி (உபயம் -அண்ணன் கேபிள் சங்கர்).
அதைக் கேட்டதில இருந்துதான் இப்படி..
இதெல்லாம் ஓவர்ன்னு நீங்க நினைச்சா...என்னோட நண்பன் ஒருத்தன் நித்திரைல திடீர்னு முழிச்சு கத்துறானாம்!



சோழ சாம்ராஜ்யத்துக்குத் தான் எத்தனை சோதனைகள்! சமீபத்தில செல்வராகவ பாண்டியன் ஒரு பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டிருந்தார். அதில அவருக்குத்தான் பயங்கர இழப்புங்கிறதால ஒக்கே.

இப்போ மணி 'அட்டாக்' பண்ண போறாராம்.
தளபதி நல்லா இருந்தது!, ராவணன் எப்படியோ.....இருந்தது! அதெல்லாம் வடமொழிக்கதைகள். எதையாவது பண்ணிட்டு போறார்னு விட்டுடலாம். ஆனா தமிழ் என்று வரும்போது...!
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில...!

பொன்னியின் செல்வனை ரசித்துப் படித்தவர்களால் அந்தப் பாத்திரங்களோடு எந்த நடிகர்களையும் பொருத்திப் பார்க்க முடியாதென்பது எனது கருத்து.

ஏற்கெனவே முன்பு எம்.ஜி.ஆர். பொன்னியின் செல்வனுக்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை இயக்குனர் மகேந்திரனிடம் கொடுத்திருந்தாராம்.
நல்லவேளை! அவர் எழுதல!

எம்.ஜி.ஆர். வந்தியத் தேவேனாக நடிக்கிறதே பெரிய கொடுமை...அதைவிடப் பெரிய கொடுமை ஜெயலலிதாவோ, சரோஜாதேவியோ குந்தவையாக நடிக்கிறது! தப்பிச்சம்டா!

இருந்தாலும் சிவாஜி காமெடி பண்ணிய 'ராஜராஜசோழன்' ன்னு ஒரு படம் வந்திச்சாமாம்! சிவாஜி (சோழன்) கோபப்படுறாராம்னு, அவர் முகத்துல 'ரெட்' கலர் போகஸ் லைட்டெல்லாம் அடிச்சு....ஹய்யோ! செம்ம  காமெடி!

இப்போ மணி என்ன காமெடி பண்ணப் போறாரோ?
யாராவது தமிழே தெரியாத ஹிந்தி நடிகைதானே குந்தவை?

வசனம் சுஹாசினியா?
ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட ராவணன் வசனங்கள் இன்னும் காதில கேக்குது!

பிரகதீஸ்வரா காப்பாற்று!

Sunday, November 7, 2010

சுஜாதா இலக்கியவாதியே இல்லை!


சுஜாதா இலக்கியவாதி இல்லையாம், சொல்கிறார்கள் இலக்கியவாதிகள் என்று கூறப்படுகிற, கூறிக்கொள்கிற பலரும்.

இலக்கியத்திற்கென்று அவர் என்ன செய்தார்? அவர் என்னதான் சாதித்தார்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள் பலர்.

இதப் பற்றி நானும் உட்கார்ந்து யோசிச்சப்போ (!?) தான் ஒரு விஷயம் விளங்கிச்சு.

இலக்கியம்னா என்ன?
பள்ளியில் படிக்கும் போது தமிழ் இலக்கியம்னு ஒரு பாடம்.
அது அப்படி இருக்கும்?
தமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நமக்கே ஒரு ஆசிரியரின் துணை இல்லாமல் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பாடம்.

அப்பதான் புரிஞ்சுது இலக்கியம்னா விளங்கக்கூடாது!

சாதாரண ஆட்களுக்கு விளங்காத மாதிரி எழுதுறவன் தான் இலக்கியவாதி.
சுஜாதா தான் எல்லோருக்கும் விளங்கிறமாதிரி எழுதுவாரே!
விடலாமா?...அவனவன் உசுரைக்குடுத்து அடுத்தவனுக்கு விளங்காம எழுதுறான்!

சிலபேர் எழுதுவாங்க பாருங்க,  தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கும்... ஆனா வாசிச்சா எஸ்பஞோல்,ஹீப்ரு மாதிரி இருக்கும்.

எங்களுக்கே, எங்கள்மேல் சந்தேகம் வந்துவிடும் எங்களுக்கு தமிழ் தெரியுமா? நாங்கள் தமிழர்தானா? என்று.

எழுத்துக்கள் எப்பவுமே ஐம்பது வருஷம் பின்தங்கி இருக்கணும்.வாசிச்சா நமக்கும் நரை கூடி, கிழப்பருவம் எய்தின ஒரு உணர்வு வரணும். அதுதான் இலக்கிய எழுத்து!

ஆனா சுஜாதாவை பாருங்க, இந்தக்காலத்தில இளைஞர்கள் எப்படிக் கதைப்பார்கள், காதலிப்பார்கள்....அப்படியே எழுதினார்..என்றும் இளமையான எழுத்துக்கள்!

இலக்கியவாதின்னா ஒரு நூறு பேருக்கு மட்டும்தானே தெரிஞ்சிருக்கணும்? நிறையப் பேருக்கு தெரிஞ்சா அப்புறம் எப்பிடி?

இலக்கியவாதி எழுத்தை மட்டுமே தொழிலா கொண்டிருக்கணும்..அப்போ நிச்சயமா சோத்துக்கு சிங்கிதான்! நம்மவர்களின் வாசிப்பு பழக்கம்...தெரியுமே!
இவர் என்னடான்னா...எழுத்தை தனது ஆத்ம திருப்திக்காக....என்ன நியாயம் இது?

சரி, இதையெல்லாம் கூட போனா போகுதுன்னு விட்டுடலாம். ஆனா அவர் ஒண்ணு பண்ணினார் பாருங்க...

எத்தனை மேலை நாட்டு, உள்ளூர் இலக்கியவாதிகளையும், கவிஞர்களையும், சிந்தனையாளர்களையும் சும்மா போகிற போக்கில எங்களுக்கு அறிமுகம் செய்திருப்பார்? (சாதாரண கணேஷ்-வசந்த் கதைகளில் கூட, நீட்ஷே, சில்வியா பிளாத் போன்றவர்களை)

இதெல்லாம் ஒரு தமிழ் இலக்கியவாதி செய்கிற காரியங்களா? எந்த இலக்கியவாதியாவது செய்திருக்கிறார்களா? செய்யலாமா இப்படி?

இப்ப சொல்லுங்க.. சுஜாதா இலக்கியவாதி இல்லைத்தானே?